தமிழரும் சுமேரியரும்

கனி விமலநாதன் B.Sc



மனிதகுலத்தின் இன்றுள்ள அறிவியல் உயர்வுகள் அனைத்திற்கும் அடித்தளம் இட்டவர்கள், 8000 ஆண்டு முன்னர் மெசப்பத்தேமியாப் பகுதியில், யூபிரதீஸ், ரைகிறீஸ் நதிகளுக்கிடையில் வாழ்ந்த சுமேரியர் தானென்று இந்நாட்களின் அறிவியலாளர் பலரும் பொதுப்படையாகக் கூறுவர். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், வானவியல், நீர்ப்பாசனம், கட்டிடக்கலை, போக்குவரத்து, சமூக நிர்வாகம், மனிதகுலத்தின் வளர்ச்சி, சமயத் தத்துவங்கள் என எந்த விடயத்தை எடுத்தாலும், ஆரம்ப இடமாகச் சுமேரியாவைத்தான் சுட்டிக்காட்டுவர். இக்கட்டுரை சுமேரியர் பற்றிய சுவையான சில விபரங்களை நாங்களும் அறிந்து கொள்ள உதவும். மேலும் சில விடயங்களை எங்களுக்குத் தெளிவு செய்யும் என்ற நம்பிக்கையுடன் எனது பார்வையை விரிவாக்குகின்றேன்.

மனிதக் கூர்ப்புப் பாதையில் இற்றைக்கு 2 – 1.8 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னர் ஆதிமனிதராகிய கோமோ இரெக்சஸ் என்ற மனிதவினம் தோன்றுகிறது. 'கோமோ' என்பது மனித இனங்களின் பொதுப் பெயர். 'இரெக்சஸ்' என்பது 'நிமிர்ந்தவர்கள்' எனப் பொருள்படும். இந்த கோமோ இரெக்சஸ்கள் நெடுங்காலமாகப் புவியில் வாழ்ந்த காலத்தில் அவர்களில் இருந்து கூர்ப்படைந்து தோன்றிய பல மனித இனங்கள் ஒன்றுதான் 200,000 ஆண்டு முன்னர் 'புத்திசாலி மனிதர்' என்ற பொருள் கொண்ட 'கோமோ சேப்பியன்கள்' என்கிற எங்களின் இனம். எங்கள் மூதாதையினமான கோமோ இரெக்சஸ்சுகளிடம் இருந்து, குழுக்களாக வாழல், கூரான தடிகளையும் கற்களையும் ஆயுதங்களாகப் பாவித்தல், உணவிற்காக வேட்டையாடல், தீயினைத் தேவைகளுக்கு ஏற்பப் பாவித்தல் போன்ற பல வாழ்வியல் தேவைகள் எங்களுக்குக் கிடைத்திருந்தன. ஆயினும் சற்று மேம்பட்ட மிருகத்தனமே மனிதராகிய எங்களிடம் ஆரம்ப நாட்களில் இருந்தது.

எழுபதாயிரம் ஆண்டு முன்னர் எங்களின் முன்னவர்களுக்கு மூளைவிகாரம் ஒன்று ஏற்பட, அதன் காரணமாக, அவர்கள் மூளைவலுப் பெற்று அறிவுடை மக்களாக மாறுகின்றனர். இதனால் மனிதர்களின் தொடர்பாடல் வலு அதிகரித்து, குழுக்களிடையேயான தொடர்பாடலுக்கு வசதியான பேச்சு மொழி பிறக்கின்றது. இது குழுக்களுக்கான வலிமையை இன்னமும் அதிகரிக்கச் செய்ய, பெரிய பெரிய விளைவுகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. முதலில் தங்களுக்குப் போட்டியான மனித இனங்களான நியாண்டத்தல்கள், டினோவியன்கள்;, லுசோனென்சியஸ்கள், புளோறிசின்சிஸ் போன்ற மற்ற, மனித (கோமோ) இனங்களை இயற்கையுடன் சேர்ந்து அழித்து விடுகிறார்கள். பின்னர் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி, தங்கள் தங்கள் பகுதிகளில், தங்கள் தங்கள் தனித்துவங்களுடன் வாழத் தொடங்குகிறார்கள். இப்பொழுது போட்டியான கோமோ இனங்கள் இல்லாததினால் வௌ;வேறு குழுக்களிடையே சச்சரவுகளும் சண்டைகளும் அழிப்புகளும் நடைபெற்றுக் கொண்டு வரத் தெரடங்கின. நாங்கள், நான் என்ற முனைப்புக் குணமும், பரபம்பரை அலகுகளிற் கலந்திருந்த, தப்பித்தலுக்கான போர்க்குணமுமே மனிதரை இப்படியாக ஆக்கிக் கொண்டன, இன்னமும் மென்மேலும் ஆக்கிக் கொண்டும் வருகின்றன.

இப்படியாக இருக்ககையில் 8000 ஆண்டு முன்னராக தென்மெசப்பத்தேமியாவின் யூப்பிரதிஸ், ரைக்கிறீஸ் நதிகளுக்கு இடையில் கேட்பாரற்று வளமாக இருந்த பகுதிக்கு ஒரு குழுவினர் வந்து சேர்கின்றனர். சிலர், 10,000 ஆண்டு முன்னராக இவர்கள் வந்திருக்க வேண்டும் எனக் கணித்துக் கூறுகின்றனர். ஆயினும் பெரும்பாலான ஆய்வாளர்கள் இவர்களது காலத்தின் ஆரம்பமான கி.மு. 4000 என்றே கொள்கிறார்கள். இவ்வுலக மக்களின் வாழ்வியல் முழுவதையுமே மாற்றுவதற்கான அடித்தளத்தை அவர்கள் அங்கே இடப் போகின்றார்கள் என்பதை அறிந்திராத அங்கிருந்த சுதேசிகள், புதிதாக வந்தவர்களை, அவர்களின் மேனியின் நிறத்திக்கு ஒப்பாக 'இருள்நிற மேனியர்' என்ற பொருள் கொண்டு, சுமேரியர் என அழைத்தார்கள். இற்றைக்கு 2600 ஆண்டு முன்னர் இப்பகுதியை ஆண்ட பாரசீகர்கள், 'கருநிற முக மனிதர்' எனத் தமது நாட்களில் சுமேரியரை, அவர்கள் இல்லாத காலத்திலும் நினைவு கொண்டிருந்தார்கள்.

இந்த சுமேரியர் இந்நாட்களில் ஈராக், ஈரான் உள்ள பகுதிகளுக்கு வெறும் நாடோடிகளாக அன்று வந்து சேரவில்லை. மேலே குறிப்பிட்டபடியான பெரும் அறிவியற் செல்வங்களின் அடிப்படைகளுடன் வந்த சுமேரியர், ஊர், ஊருக், நிப்பூர், உம்மா, கிஸ் போன்ற 200க்கும் அதிகமான குடியிருப்புகளை கிராமங்கள், நகரங்கள் மாநகரங்கள் என அமைத்து வாழத் தொடங்கினர். முதலில் கிராமங்களை அமைத்துப் பின்னர் அவற்றைப் படிப்படியாகப் பட்டினங்களாக, நகரங்களாக, மாநகரங்களாக மாற்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

கிராமமாயினும் சரி, மாநகரமாயினும் சரி நல்ல கட்டுக்கோப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். சுட்ட செங்கற் கட்டிடங்களால் கோட்டைகள், குடிமனைகள் நிர்வாக இடங்கள் போன்றவற்றை அமைத்து அக்காலத்திலேயே மனித வாழ்க்கைக்கான மிகச் சிறந்த ஒழுங்கமைப்பினைக் கொண்டிருந்தார்கள்.

ஓவ்வொரு பகுதியும் தலைவன் அல்லது அரசனின் ஒருவனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அரசர்கள்; தமது பெயர்களுடன் தமது இடத்தின் பெயரினையும் சேர்த்துக் கூறும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். தலைவனுக்கு உதவியாக, வழிகாட்டியாக ஒரு மதகுரு அல்லது மந்திரி இருந்திருக்கிறார். இவர்கள் தமது தெய்வங்களாக என்கி, அனு, நிபு, மௌதி என்போரை வணங்கினர் என்ற குறிப்புகள் உள்ளன. இவர்களது பகுதிகளில் சட்டம் ஒழுங்கு என்பன கடைப்பிடிக்கப்பட்டடிருந்தன. வணிகம்தான் இவர்கள் குடியிருப்புகளிடையே முக்கிய தொடுப்பாக இருந்தது. சுட்ட செங்கற்கள் கொண்டு திட்டமிட்ட முறையில் கட்டுக் கோப்பான குடியிருப்புகளை ஆக்கிய இவர்கள்தான் மனித வரலாற்றிலேயே முதன்முதலில் பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்தியவர்கள் என்ற சிறப்பையும் பெறுகிறார்கள். ஏற்கனவே நதியோரங்களில் பயிரிட்டுப் பயன்களைப் பெற்று வந்த சுமேரியர்கள் கால்வாய்கள் அமைத்துத் தரைப் பகுதியினுள் நதி நீரைக் கொண்டு வந்து பயிர்களுக்கும், விலங்குகளுக்கும் தங்களுக்குமான நீர்த் தேவைகளையும் முழுமைப்படுத்தினர். மரத்தினாலான கலப்பைகளை (ஏர்) செய்து விலங்குகளின் உதவியுடன் மண்ணை பண்படுத்தி கோதுமை போன்ற பயிர்களையும் பயிரிடத் தெரிந்திருந்தனர்.

தங்களின் குடியிருப்புப் பகுதிகளுள் போக்குவரத்துத் தொடர்புகளையும் வைத்திருந்தனர். போக்குவரத்துகளுக்கு வண்டிகளைச் செய்து பாவித்திருக்கிறார்கள். உலகினருக்கு சுமேரியர்கள் தந்த மாபெரும் கொடை வண்டிச்சில்லுகள் எனகின்றனர். வண்டிகளே பொதுவாகவே உள்ளூர்களுக்கும் அண்மையில் இருந்த இடங்களுக்குமான வணிகக் கொடுக்கல் வாங்கல்களுக்கு அதிகம் பாவிக்கப்பட்டன. பிற்காலத்தில் இவர்கள் தங்களது தொடர்புகளை வெளியிலே, அருகில் இருந்த ஈழம், தூரமாக இருந்த எகிப்து, சிந்துநதிப்பகுதிகள் போன்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியிருந்தனர். அவற்றிக்கான பயண வசதிகளையும் தங்களுக்குள் ஆக்கியிருந்தனர்.

சுமேரியர் உலகினருக்குக் கொடுத்த இன்னொரு, குறிப்பிடப்படக் கூடிய ஒன்றாக இருப்பது மொழிகளுக்கான எழுத்துகளாகும். இவர்கள் வருகையில் தங்களுடன் எழுத்து வடிவங்களையும் கொண்டு வந்தனர், இலக்கணச் செறிவுள்ள தமது மொழியிற்கு எழுத்து முறையினையும் அவர்கள் பாவித்திருந்தனர். படங்களின் வடிவில் அமைந்த அந்த எழுத்துக்கள்தான் உலக மாந்தரின் முதலாவது எழுத்து வடிவம் என்கிறார்கள், மொழி வல்லுனர்கள். களிமண் தகடுகளில் எழுதப்பட்ட இந்த சித்திர எழுத்துகளை, அவற்றின் வடிவம் காரணமாக, 'ஆப்பெழுத்துகள்' எனக் கூறுவார்கள். மேலே காட்டப்பட்ட படத்தில் சுமேரியரின் ஆப்பெழுத்து வடிவினைக் காணலாம். இவ்வெழுத்துகளில் தங்களின் வரலாறு, நிர்வாகக் குறிப்புகள் போன்றவற்றை எழுதிப் பத்திரப்படுத்தியிருக்கிறார்கள். இதனடிப்படையில் கி.மு. 3400 ஆண்டு பழமையான 'குசிம்' (முரளாiஅ) என்ற சுமேரியப் பெயரினை வல்லுனர்கள் வாசித்தறிந்துள்ளனர். இப்பெயர்தான் உலகின் முதலாவதாக அறியப்பட்ட மனிதனின் பெயர்க் குறிப்பு எனக் கூறுகின்றர்.

சுமேரியர்களின் அறிவு என்பது எண்ணிப் பார்த்திட முடியாத அளவு மேம்பட்டிருந்தது. வானியலில் பற்றிப் பல ஆச்சரியமான விபரங்களை தங்களது களிமண் தகடுகளிற் பதிந்து வைத்திருந்தனர். உலகமே தட்டையானது எனக் கருதிய காலத்தில் கதிரவத் தொகுதி பற்றிய படங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். அதிலே, கதிரவனைச் சுற்றிப் பத்துக் கோள்கள் வலம் வருவதைக் காட்டியிருக்கிறார்கள். அதன் மூலம்தான் இன்று சர்ச்சைகளுக்குள் இருக்கும் கதிரவனின் பத்தாவது கோள் நிபுரு, வேற்றுக்கிரகிகளான நிபுருவினர் புவிக்கு வந்தது, நிபுருவினரின் கைவரிசையில் தோன்றியர்கள் அல்லது மெருகூட்டப்பட்டவர்கள்தான் இன்றிருக்கும் மனிதராகிய நாங்கள், அனுனாக்கிகள் என்பவை எல்லாம் வருகின்றன.

அருகில் காட்டப்பட்டடிருக்கும் சுமேரியக் கடவுள் ஒருவரின் படத்தைப் பாருங்கள். இது நிபுருவில் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசி ஒருவரைக் காட்டுகிறது என 'அந்நாள் அந்நியர்' ஆய்வாளர்கள் கூறுகிறனர். இப்படததில் ஆச்சரியமான தகவல்கள் பல பொதிந்துள்ளன. இக்கடவுளின் கையில் ஒரு கைப்பை உள்ளது. சிறகுகள் கொண்ட இக்கடவுளின் வலது கையில் கைக்கடிகாரம் போன்ற ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. சுமேரியர்கள் வாழ்ந்த பகுதியில் அவர்களது காலத்துச் சிலை எனக் கருதப்படும் இச்சிலை, சுமேரியர்கள் பற்றியும், மனிதர்கள் பற்றியும் பற்பற ஊகங்களையும் வேற்றுக் கிரக மனிதர்கள் பற்றி ஆராய்பவர்கள் கூறுகின்றனர்.

கணிதத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் சுமேரியர் இருந்திருக்கிறார்கள். இரண்டு வகையான எண்திட்டத்தை இவர்கள் கையாண்டிருக்கின்றனர். ஒன்று 1, 6, 36, 60, 360 எனச் செல்லும் 6 ஐ அடிப்படையாகக் கொண்டது. அதனடிப்படையில் வந்ததுதான் 360 பாகை கொண்ட வட்டமும் கதிரவனின் முழுமைச் சுழற்சிப் பாதையம். இதனடிப்படையில் ஒரு வருடத்தில் 360 நாட்களையும் இவர்கள் னொண்டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்றது 10 ஐ அடிப்படையாகக் கொண்டது. வணிகத்தை மையப்படுத்திய பெரிய கணக்குகளுக்கு இவ்வெண் திட்டத்தைப் பாவித்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

இப்படியாகச் சிறப்புகள் பெற்ற சுமேரியர்கள் கி.மு. 2000 ஆண்டளவில் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொடர்ச்சியான படையெடுப்புகளால் முற்றாகவே அழிக்கப்பட்டார்கள். குறிப்பாக சேகன் (segan) என்ற அக்காடியப் பேரரசனின் பெரும்வலிப் படையினால் சுமேரியப் பகுதி முற்றாவே பிடிக்கப்பட்டதில் இருந்து அடுத்தடுத்து வந்த அசீரிய, பாபிலோனிய, எபிரேய அரசுகளின் எழுச்சியான படையெடுப்புகளினால் சுமேரியர்கள் முற்றாகவே அழிந்து போனார்கள். இருப்பினும் அவர்களின் சுமேரிய மொழியானது செல்வாக்குகள் பெற்ற அந்தந்த அரசுகளின் தொடர்பாடல் மொழியாகவும் மத விவகாரங்களுக்கான மொழியாகவும் கி.பி.1ம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கின்றது. உலகின் இந்நாள் அகரங்களின் பிறப்பிற்கும் சுமேரியரின் ஆப்பெழுத்துகளும் காரணமாக இருந்தன என்கின்றனர் வல்லுனர்.

இவ்வளவு விபரங்களும் சுமேரியர் பற்றிய மிகமிகச் சுருக்கமான விபரங்களே. இதிலே எங்கே தமிழர் வருகிறார்கள் எனக் கேட்கிறீர்களா? சுமேரியர்கள் பற்றி இன்னமும் கொஞ்சம்தெரிந்து கொள்வோம்.

ஆய்வாளர்களின் எவ்விடத்தில் இருந்து சுமேரியர் மெசப்பத்தேமியாவிற்கு வந்திருப்பார்கள் என்ற தேடலில், உறுதியான ஒரு இடத்தைப் பொருத்தமாக அவர்களினாற் கூறமுடியவில்லை. சிலர், இந்நாளின் ஈராக்கின் மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்களே கீழிறங்கி வந்து இந்த மாபெரும் கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் எனக் கூறுகின்றனர். வேறு சிலரோ லெபனான் பகுதியில் இருந்து வந்தவர்கள்தான் சுமேரியர்கள் என்கின்றனர். இக்கருத்துகளுக்குச் சுமேரியரின் மேனியின் நிறம் ஒத்துவராதது பெரும் தலையிடியாக இருந்தது. இன்னதும் சிலர், இவர்கள் ஆபிரிக்கப் பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் எனக் கூறுகைளில் உடல் நிறம், உடல் அமைப்பு என்பவை ஓரளவுக்கு ஒத்து வந்தாலும், இவர்கள் கொண்டு வந்த அறிவியற் தடங்கள் எதுவும் ஆபிரிக்கப் பகுதியிற் கிடைக்கவில்லை. இன்னமும் சிலரோ பொதுப்படையாக இவர்கள் இந்தியப் பகுதியின் குடிகளாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் ஒருசில தமிழ் வல்லுனர்களைத் தவிர, மற்றவர்கள் எவருமே சுமேரியருக்கும் தமிழருக்கும் தொடர்புகள் இருந்திருக்கும் எனக் கருதவேயில்லை. அது பற்றிய ஒரு பார்வையை நாமாவது விரித்துக் கொள்வோம்.

இற்றைக்கு 12000 ஆண்டு முன்னர் கடைசிப் பனிக்கால முடிவில் பனியுருகி, கடல் மட்டம் சடுதியில் உயர்ந்தததை ஆய்வாளர்கள் கூறுகின்றர். சுராசரியாக 500 அடி உயரத்திக்கும் மேலாக மேலெழுந்த கடல்மட்டத்தால், தமிழரின் குமரிக்கண்டம் கடலுள் போகின்றது. தப்பிய குமரிக்கண்டத் தமிழர் உலகின் மற்ற வளமான பகுதிகளுக்கு ஓடிப் போகின்றனர். அப்படிப் போன ஒரு குழுவினர்தான் சுமேரியரென எண்ணிடப் பல காரணங்கள் உண்டு. முதலாவது சுமேரியரின் கருநிற மேனியுடனான உடல்வாகு. இது தமிழராகிய எங்களுடன் பெருமளவில் ஒத்துப் போகின்றது. இரண்டாவது, சுமேரியர் எடுத்துச் சென்ற எழுத்து வடிவம். முதலாம் சங்க காலத்திலேயே தமிழர் பட எழுத்துக்களைப் படைத்து விட்டார்கள் என்று நம்பப்படுகிறது. அந்தப் படவெழுத்துகள்தான் கடல்கோள்களின் பின்னர் சுமேரியா, சிந்துவெளி, எகிப்து, ஈஸ்ரர்தீவுகள் போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். சென்றடைந்த இடங்களின் சூழல், சென்றடைவதில் ஏற்பட்ட கால இடைவெளிகள் என்பன அப்பட எழுத்துகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் படங்களின் மூலமாகப் பேசுதல், பதிவுகளைப் பதிந்து கொள்ளல் என்ற அடிப்படை இயல்பில் மாற்றமில்லை என்பதைக் கவனிக்கலாம். தமிழர்கள் ஏடுகளுடன் களிமண் தகடுகளிலும் தங்களது பதிவுகளைப் பதிந்திருக் வேண்டும் என்ற கருத்தும் ஆய்வாளரிடையே உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

சுமேரியப் பகுதியில் இருந்த இடங்களின் பெயர்களைப் பாருங்கள், எங்களது இடங்களின் பெயருடன் ஒத்துப் போவதை ஆச்சரியமாகப் பார்த்திருப்பீர்கள். மேலும், இன்னொரு ஒத்துப் போகிற இயல்பாக, பெயர்களுடன் தங்களின் ஊரின் பெயரினைத் தமிழர்கள் அந்தநாள் முதல் இந்தநாள் வரை பாவிக்கும் பழக்கமுள்ளவர்கள். வேறும் எந்த இனத்தவரிடம் இவ்வியல்பு இருப்பதாகத் தெரியவில்லை. நான் முன்னரே குறிப்பிட்டபடி, சுமேரிய மன்னர்கள் தங்கள் பெயருடன் தங்களது இடத்தின் பேயரினையும் இனைத்து வைத்திருப்பதைக் காணலாம். இன்னொரு விடயமாக, சுமேரியர்களிடம் இருந்து அந்தப் பகுதி மக்களுக்குச் சென்ற 'ஜலப்பிரளயம்' என்ற நீரினால் உலகில் ஏற்பட்ட பேரளவு. நீரினால் ஏற்பட்ட இந்தப் பேரழிவு பற்றிய புராணக் கவிதைகள், கதைகள் என்பன சுமேரியரின் குறிப்புகளில் உள்ளன. அவைதான் பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த, பாபிலோனியர், எபிரேயர், அசீரியர் போன்றவர்களிடம் அவரவர் பண்பாட்டு, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் கடத்தப்பட்டு இன்று பைபிளிலும் நோவாவின் பிரளயம் என்ற பெயரில் உள்ளது எனக் கருதிட இடமுண்டு, சிலர் அப்படித்தான் கூறுகின்றனர். மனுவின் கதையும் இதனடிப்படையில் வந்ததுதான் எனக் கூறுவதற்கும் இடமுள்ளதை நீங்கள் உய்த்தறிந்திடலாம்.

இப்படியாக இன்னமும் பல தமிழர்-சுமேரியர் தொடர்புகள் இருப்பினும், இவையெல்லாம் உலகியல் ஆய்வாளர்கள் கண்களில் பெருமளவில் தட்டுப்படவில்லையோ அல்லது ஏதோ காரணங்களினால் தவிர்க்கப்பட்டுள்ளனவோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகின் ஆரம்ப மனித நாகரிக தேடலுக்கான ஒரு பொறிதான் இது. எல்லாம் சரி,....

நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏனக்குத் தெரியும், நீங்கள் இன்னமும் ஆழமாகப் போகப் போகின்றீர்கள், உண்மையான உண்மைத் தேடி. நன்று மிக நன்று! வாழ்த்துக்கள்!

புரிதற் தொடர்புகளுக்கும் உற்சாகப்படுத்தல்களுக்கும் தமிழ்ஆதேர்ஸ்டொட்கொம் உடனோ அல்லது என்னுடனோ (647 782 2827) தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி,


அன்புடன்,
கனி விமலநாதன்.
தமிழ்ஆதேர்ஸ்டொட்கொம் டிசெம்ப 2019 பதிவிற்காக எழுதப்பட்டது.






 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்