புவி 2.0 (Earth 2.0)

கனி விமலநாதன் B.Sc
 

புவி 2.0 என்றதும் ஏதோ எந்திரன் 2.0 திரைப்படம் போன்றோ அல்லது விஞ்ஞானப் புதினம் ஒன்று பற்றிய விடயம் என்றே எண்ணிவிடாதீர்கள். புதுவிதமான ஆனால் அவசியமான, யாவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையான விஞ்ஞான விடயம் ஒன்றினை எடுத்துக் கொண்டுதான் இத்தலைப்பு வருகின்றது. மனிதரின் அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த மைல் கல்லினை புவி 2.0 என்ற இக்கட்டுரையின் ஊடாகப் பார்க்கப் போகின்றோம். அதன் வழியில் ஏராளமான விஞ்ஞான விபரங்களையும் தெளிவுகளையும் அறிந்திடப் போகின்றோம். 

புவியில் கூர்ப்பு வழியிலே புத்திசாலி மனிதர் எனப்படும் கோமோ சேப்பியன்களாகிய நாங்கள் தோன்றி இருநூறாயிரம் ஆண்டு ஆகியிருக்கும் என்கின்றனர் விஞ்ஞானியர். மனிதர் தோன்றிய காலத்தில் இருந்தே அவர்களின் தேடல்களும் ஏதேதோ காரணங்களுக்காத் தொடங்கி விட்டன. இத்தேடல்களின் விரிவு, வானையும் அளக்கத் தொடங்க, விண்வெளியில் ஒளிரும் உடுக்கள் (நட்சத்திரங்கள்) எல்லாமுமே ஒவ்வொரு கதிரவன் தான் என்ற வெளிப்பு ஏற்பட்டது. அவ்வுடுக்களும் தத்தமக்கென கோள்களைக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம், கதிரவனுக்கும் அப்பாலான வேற்றுக்கிரகங்கள், ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரக மனிதர் என்ற எண்ணங்களும் உண்டாகின. இவ்வெண்ணங்களின் அடிப்படையில், அவற்றிற்கான தேடல்களும் ஆரம்பமாகி முடுக்கி விடப்பட்டன. இந்தச் செயற்பாட்டின் விளைவுதான் புவி 2.0 ஆகும். 

தொடர்வதற்கு முன்னர் ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். 2005ம் ஆண்டில் 'வேற்றுக்கிரக மனிதர்கள்' என்ற நூலினை வெளியிட்டிருந்தேன். அந்நூலில் வேற்றுக்கிரகங்கள், வேற்றுக்கிரக மனிதர் என்பவற்றிக்கான பொருத்தப்பாடுகளைப் பற்றிக் கூறியிருந்தேன். அவற்றில் குறிப்பிட்ட ஒரு விடயத்தைப் பலரும் சுட்டிக் காட்டிக் கூறியிருந்தார்கள். நூலின் 97ம் பக்கத்தின் 2ம் பந்தியில் உள்ள அந்த விபரத்தைக் கீழே தருகிறேன். 

'பல நட்சத்திரக் குடும்பத்துள் சூரியன்-பூமித் தொகுதியை ஒத்த தொகுதியும் இருப்பதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. அவற்றில் ஒரு நட்சத்திரமும்-கோளும் இணைந்திருக்கும் நிலைகள் பூமியும் சூரியனும் இருக்கும் நிலைக்கு ஒத்த விகிதாசாரத்தில் இருக்கின்றது என்போம். அப்படி இருக்கையில் நமது பூமி சூரியனில் இருந்து பெறும் சக்தியளவை அக்கோள் பெறக் கூடியதாக இருப்பின் அக்கோளிலும் உயிரினங்கள் தோன்றுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு.' 

இப்படியான கோள் ஒன்றினை இனங்கண்டு அதற்குத்தான் புவி 2.0 என அடையாளம் இட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். எப்படி, எப்போது இக்கோளினை இனங்கண்டார்கள்? இதன் பின்னால் என்னென்ன செயற்பாடுகள் இருந்தன என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். அதற்காகச் சில அறிவியற் தகவல்களையும் தெரிந்து கொள்வோம். 

2009ம் ஆண்டு மார்ச் 7ம் திகதி நாசா ஆய்வு மையத்தினர் கெப்பிளர் விண்வெளித் தொலைகாட்டி என்ற ஒன்றினை விண்வெளியிற்கு அனுப்பினார்கள். 17ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த யொகானஸ் கெப்பிளர் (Johannas Kepler)  என்ற வானவியலாளரை மதிக்கும் விதமாக இத்தொலைகாட்டியிற்கு அவரின் பெயரை வழங்கியிருந்தார்கள். (அருகில் கெப்பிளரின் படம் இணைக்கப்பட்டுள்ளது.) புவியில் நின்றும் கிட்டத்தட்ட 152 மில்லியன் கிலோமீற்றர் உயரத்தில், புவியைச் சுற்றிக் கொண்டே விண்வெளியை ஆய்வு செய்வதற்காகவே கெப்பிளர் விண்வெளித் தொலைகாட்டி விண்ணிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இது மில்கிவே எனப்படும் எங்களின் பால்வழி கலக்சியில் உள்ள Cygnus, Lyra, Draco என்ற பகுதிகளின் ஒரு குறிப்பிட்ட சிறிய பகுதியை மட்டும் பார்வைப் புலமாகக் கொண்டிருந்தது. இப்பகுதியில் உள்ள விண்மீன்களை மட்டும் தொடர்ச்சியாகக் கெப்பிளர் தொலைகாட்டி படம் எடுத்து நாசாவினருக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும் வண்ணமாக தொலைகாட்டி அமைக்கப்பட்டிருந்தது.  

கலக்சி (Galazy) என்பது பில்லியன் கணக்கில் விண்மீன்களைக் கொண்டிருக்கும் விண்மீன் தொகுதியாகும். வுpண்வெளியில் இப்படியான பில்லியன் கணக்கில் டிலக்சிகள் உள்ளன. கலக்சி என்பதைப் 'பேரடர்' என எங்களின் அறிஞர் சிலர் கூறுவர்.  

கெப்பிளர் தொலைகாட்டி அனுப்பும் படங்களை ஆய்வு செய்வதில் இருந்து பால்வழியின் அச்சிறிய பகுதியில் உள்ள விண்மீன்களை எண்ணிடலாம். இவ்வெண்ணிக்கையின் அடிப்படையில் பால்வழி பேரடரில் உள்ள மொத்த விண்மீன்களின் எண்ணிக்கையை ஒரு குத்துமதிப்பாகக் கணித்திடலாம் என்பது வானவியலாளர்களின் கருத்து. ஏற்கனவே பால்வழிப் பேரடரின் திணிவினைக் கணித்து, அதிலிருந்து பால்வழியில் 300 பில்லியன் விண்மீன்களாவது இருக்க வேண்டுமெனக் கணித்து வைத்திருக்கிறார்கள். 

நாசாவினர் விண்ணிற்கு அனுப்பிய கெப்பிளர் விண் தொiலைகாட்யின் படத்தினை அருகிற் காண்கிறீர்கள். 

பால்வழியில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கையைக் கணிப்பதுடன் இன்னொரு விடயத்திற்காகவும் கெப்பிளர் அனுப்பப்பட்டிருந்தது. அது அண்டவெளியில் புவியினைப் போன்ற வேறு கோள்களும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுமாகும். இது எவ்விதமெனில், கெப்பிளர் அனுப்பிக் கொண்டிருக்கும் விண்மீன்களின் படங்களைத் தொடர்ச்சியாக அவதானிப்பது. அப்படி அவதானிக்கையில் அந்த விண்மீன்களில் ஏதாவதொன்றில் அதன் ஒளிர்செறிவின் குறுக்காக இருள் போன்ற ஒன்று தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட காலஇடைவெளியில் ஓடிக் கொண்டு இருந்தால் அங்கு அவ்விண்மீனின் கோள் ஒன்று அவ்விண்மீனைக் கடந்து செல்கின்றது எனத் துணிந்திடலாம். இது இப்போது நாங்கள் வானிலே காண்கின்ற சந்திர, சூரிய கிரகணங்களுக்கு ஒப்பானது. இந்த உத்தியைப் பாவித்தே கதிரவன் தவிர்ந்த மற்ற விண்மீன்களின் கோள்கள் சிலவும் புவியில் இருந்தும் தொலைகாட்டிகளினால் இனங்காணப்படுகின்றன.  

 மூன்றரை வருடங்களுக்கு மட்டும் வானிற் சுற்றிக் கொண்டு படங்களை அனுப்பக் கூடியதான முறையில் அனுப்பப்பட்ட கெப்பிளர் தொலைகாட்டி, செப்டெம்பர் 30, 2018 வரையில், அதாவது மொத்தம் 9 வருடம் 7மாதம் 23 நாட்கள் தனது வேலையைச் செய்திருந்தது. தனது காலத்தில் தனக்குக் குறிக்கப்பட்டிருந்த வானின் மிகச் சிறிய பகுதியில் மொத்தம் 530,506 விண்மீன்களையும் 2,662 கோள்களையும் உலகத்தவருக்கு இனங்காட்டியிருந்தது. பொதுவாகபே இந்த 2,662 கோள்களும் எங்களின் புவியையும் விட மிகவும் பெரியனவாக இருப்பதனால் அவற்றை 'இராட்சதப் புவி'கள் என வானவியலாளர்கள் கூறிக் கொள்வார்கள். 

பொதுவாகக் கெப்பிளர் தொலைகாட்டி இனங்கண்ட விண்மீன்கள் கெப்பபிளரின் பெயருடன் 1, 2, 3, ...... என இலக்கமிட்டு அடையாளப்படுத்தப்படும். இனங்காணப்பட்ட, அவ்விண்மீன்களின் கோள்களை அந்த விண்மீனின் பெயருடன் a, b, c,…போன்ற ஆங்கில எழுத்துக்களை இணைத்து பெயரிட்டுக் கொள்வார்கள். இவ்வண்ணமாக இனங்காணப்பட்ட கோள்களில், கெப்பிளர்-452 என்ற விண்மீனின் கெப்பிளர்-452டி என்ற கோள்தான் புவி 2.0 ஆகும். இனி, புவி 2.0 பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வோம். 

கெப்பிளர்-452 விண்மீன் எங்களது கதிரவனைப் போன்ற ஒரு விண்மீன். விண்வெளியில் உள்ள எண்ணற்ற விண்மீன்களில், இயல்பில் கதிரவனைப் போன்ற விண்மீன்களை பு2 வகை விண்மீன்கள் என்று வானவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளர். இந்த கெப்பிளர்-452 விண்மீன் எங்களின் புவியில் இருந்து 1400 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதாவது ஒளியின் வேகத்தில் இங்கிருந்து சென்றதல் அங்கு போய்ச் சேர்வதற்கு 1400 வருடங்கள் எடுக்கும். இந்த விண்மீன் 6 பில்லியன் ஆண்டு முன்னதாகத் தோன்றியது. அதாவது எங்கள் கதிரவனை விடவும் 1500 வருடங்கள் வயதில் மூத்தது. இது கதிரவனை விடவும் சற்றுப் பெரியது. இதனது விட்டம் கதிரவனின் விட்டத்தை விடவும் 40 வீதம் பெரியது. அத்துடன் கதிரவனை விடவும் 20 வீதம் அதிகளவு வெளிச்சமானது.  

இந்த விண்மீனைச் சுற்றி வருகிற மூன்று கோள்களை விஞ்ஞானியர் இனங்கண்டனர். புவி 2.0 என்பது அவற்றில் ஒன்று. இந்தப் புவி 2.0 இன் சிறப்புகளை ஒவ்வொன்றாகப் புவியுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இது எங்களின் புவியை விடவம் 60 வீதம் பெரியது. கொஞ்சம் பெரியதுதான் இல்லையா! இக்கோளிற்கும் கெப்பிளர்-452 என்ற இதனது தாய் விண்மீனுக்கும் இடையில் உள்ள தூரம் புவியிற்கும் கதிரவனுக்கும் இடையில் உள்ள தூரத்தையும் விடவும் 5 வீதம் அதிகமானது. இன்னமும் இக்கோள் தனது விண்மீனைச் சுற்றி வருவதற்கு 385 நாட்களை எடுக்கும் எனக் கணித்துள்ளனர். இது, எங்களின் புவி கதிரவனைச் சுற்றி வருவதற்கு 365 நாட்களைவிட 5 வீதம் அதிகம் என்கின்றனர். இதனுடைய திணிவினை (பாரத்தைக்) இன்னமும் கணிக்காத போதிலும் கோள் கெப்பிளர்-452டி என்பதையும் எங்களது புவியினைப் போன்ற ஒரு பாறை உலகம் என்றே விஞ்ஞானியர் ஊகிக்கின்றனர்.

சரி இனி முக்கியமான விடயத்துக்கு வருவோம். கெப்பிளர்-452 விண்மீனும் கெப்பிளர்-452டி கோளும் தனித்தனியாக எங்களது கதிரவனையும் புவியையும் விடப் பெரியனவாக இருப்பினும் ஒட்டுமொத்த ஒப்பீட்டில் இவையிரண்டும் இணைந்த அமைப்பானது புவி-கதிரவன் அமைப்புப் போன்றே உள்ளது. இன்னமும் கெப்பிளர்-452டியும் கதிரவத்தொகுதியில் புவி இருப்பது போன்றே, விண்மீன்-452த் தொகுதியில் habitable zone எனப்படும், உயிரினங்கள் வாழத் தகுதியான பகுதிக்குள்தான் இருக்கின்றது. Habitable zone ஏனப்படும் உயிரினங்கள் வாழத் தகுதியான பகுதி என்பது திரவ நீர் (தண்ணீர்) காணப்படக் கூடிய பகுதியாகும்.  

இவ்விடயங்களை நாசா விஞ்ஞானியர் கணித்தறிந்த வேளையில் அடைந்த பரபரப்பிற்கு அளவேயில்லை. மகிழ்ச்சியிற் துள்ளிக் குதித்தார்கள். கோள் கெப்பிளர்-452டிற்கு புவி 2.0 என்ற பெயரையும் கொடுத்து விட்டார்கள். அத்துடன் உடனடியாகவே ஊடகங்களை அழைத்து தங்களது கண்டுபிடிப்பை உலகினருக்குத் தெரியப்படுத்தினர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட புவி 2.0 சங்கதியானது வேற்றுக்கிரக மனிதர்களைத் தேடியலையும் ளுநுவுஐ போன்ற அமைப்பினரை உசுப்பி விட்டது. மிகவும் உற்சாகத்துடன் தங்களது பார்வையை கெப்பிளர்-452டி அதாவது புவி 2.0 பக்கமாக அதிக கரிசனையுடன் திருப்பிக் கொண்டார்கள். தொடரும் கட்டுரையில் புவியினையும் புவி 2.0ஐயும் வேறுபடுத்தி அறியும் வசதியிற்காக, புவி 2.0 என்பதைப் புவி2.0 என இணைத்தே எழுதுகிறேன். 

அருகில் உள்ள படத்தில் எங்கள் புவியும் புவி2.0வும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 

SETI யினரின் வேற்றுக்கிரக மனிதர்களின் தேடலில் அறிவியல் வழியில் நாங்களும் சிறிது மூக்கை நுழைத்துக் கொள்வோம். அதற்காகப் புவி2.0ல் உயிரினங்கள் இருப்பதற்குத் தேவையான விடயங்களை நாங்களும் எங்கள் பாங்கிற்; சிந்தித்துப் பார்ப்போம். உயிரினங்கள் வாழ்வதற்கான அடிப்படைப் காரணிகளைப் புவி2.0 கொண்டிருப்பினும் கூடவே இன்னமும் சில பௌதீகத் தேவைகளும் பொருத்தமாக அமைய வேண்டியுள்ளன. அதுவும் எங்களது புவியின் உயிரினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு அக்கோளின் மேற்பரப்பில் போதுமான அளவில் காபன் என்ற இரசாயனத் தனிமம், அதாவது மூலகம் இருக்க வேண்டும். அப்படியிருப்பின் மட்டுமே புவியினை ஒத்த காபன்-சார்பு உயிரினங்கள் புவி2.0விலும் காணப்படலாம். ஒருவேளை காபனுக்குப் பதிலாக சிலிக்கன் என்ற தனிமத்தின் செல்வாக்கு அங்கு அதிகமாக இருப்பின் உருவத்தில் சிறியதான உயிரினங்களையே புவி2.0ல் காண முடியும். 

இது மட்டுமல்ல, இன்னமும் சில விடயங்களும் ஒவ்வ வேண்டி இருக்கின்றன. புவியில் உயிரினத் தோற்றத்தில் எங்களது சந்திரனின் பங்கு அளப்பரியது. சந்திரன் மட்டும் இல்லாமற் போயிருந்தால் எங்களது உடலில் உள்ள கலங்கள் தோன்றியிருக்கவும் முடியாது, நாங்களும் தோன்றியிருக்க மாட்டோமென உயிரியல் விஞ்ஞானம் கூறுகின்றது. எனவே, எங்களது சந்திரனின் ஈர்ப்பு விளைவினைக் காட்டக் கூடியதான துணைக்கோளினை, அதாவது தனது சந்திரனை புவி2.0 கொண்டிருக்க வேண்டும். அப்படியான சந்திரன் ஒன்று புவி2.0வைச் சுற்றுகிறதாவெனக் கண்டறிவதற்கான தொழில்நுட்பம் இப்போது எங்களிடம் இல்லை. இன்னமும் புவி2.0ன் மேற்பரப்பில் அதனது ஈர்ப்பின் விளைவும் எங்களின் புவியின் ஈர்ப்பின் விளைவிற்கு ஒப்பான அளவிலும் இருக்க வேண்டும். 

மொத்தத்தில், புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு (அல்லது தோற்றுவிப்பதற்கு) கதிரவனின் ஆற்றல், சந்திரனின் அமைப்பு, புவிமேற்பரப்பின் இரசாயன மூலகங்கள், புவிமேற்பரப்பில் ஈர்ப்பின் விளைவு, புவியைச் சுற்றியுள்ள காற்று, காந்த அமைப்புகள் போன்றவையும் மற்றும் சில தேவைகளும் புவியிற்குப் பொருத்தமான அளவிற் தேறியிருப்பது போன்றே, புவி2.0 இலும் சேர்ந்திருந்தாலே அங்கு புவியில் உள்ளன போன்ற உயிரினங்கள் தோன்றியிக்கலாம். அல்லாதுவிடின், புவி2.0ல் நீரின் செல்வாக்கு இருக்கலாம் என்பதால், எங்களது புவியில் உள்ளன போலில்லாத, வேறுவிதமான உயிரினங்கள் கூட அங்கு இருக்கலாம்.  

சரி, எல்லாம் பொருத்தமாக அமைந்து, புவி2.0வில் உயிவினங்களும் உள்ளனவென ஒரு நேர்த்தன்மையிற் கூறுவோம். அப்படியாயின் எமது புவி வாழ்வின் அனுபவத்தின் ஊடாக புவி2.0ன் உயிரினங்கள் பற்றி ஓரலசலைச் செய்து பார்ப்போம். கிட்டத்தட்ட 4.6 பில்லியன் வருடங்களின் முன்னர் தோன்றிய புவியில் பௌதீக, இரசாயன, உயிரியற் கூர்ப்புகளின் வழியில் 200,000 ஆண்டு முன்னரே கோமோ சேப்பியன்கள் என்கிற அறிவுடை மனிதவினமான நாங்கள் தோன்றி இருக்கின்றோம். இந்த இருநூறாயிரம் வருடங்களில் கோமோ சேப்பின்களாகிய எங்களின் அறிவியல்-தொழில்நூட்ப அறிவு வளர்ச்சியானது செவ்வாய்க் கோள்; வரையும் பயணப்பட எண்ணக் கூடிய தைரியத்தைத் தந்துள்ளது. மேலும் எங்களது விண்கலங்கள் விண்வெளியிற் தொலைதூரங்களுக்கு பறந்தும் செல்கின்றன. இப்படியாகப் புவியில் உயரறிவான உயிரினமொன்று (மனிதர்) இன்றுள்ள நிலைக்குத் தேறுவதற்கு புவியைப் பொறுத்தளவில் ஏறக்குறைய 4.5 பில்லியன் வருடங்கள் எடுத்துள்ளது. 

இதே கொள்கையை எங்கள் புவியினை ஒத்த புவி2.0 விற்குப் பாவிக்கையில் நாங்கள் ஒரு ஆச்சரியப்படும் முடிவு ஒன்றினைப் பெறுகிறோம். புவி2.0 தோன்றி 6 பில்லியன் வருடங்கள் என்பதால், அங்கே உயிரினங்கள் கோன்றி, மனிதரை ஒத்த அறிவுடை உயிரினம் ஒன்றும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவ்வண்ணமாக மனிதரை ஒத்த உயிரினம் ஒன்று அங்கே தோன்றியிருப்பின், அவை வேற்றுக்கிரக மனிதரேதான். இனி, புவி2.0ன் வயது எங்கள் புவியின் வயதை விட 1.5 பில்லியன் வருடங்கள் அதிகம் என்பதால், அங்கு வாழும் வேற்றுக்கிரகிகள் அறிவியல்-தொழில்நுட்பம் என்பவற்றில் எங்களை விடவும் 1.5 பில்லியன் வருட முன்னேற்றம் கண்டவர்களாக இருப்பார்கள். அதனால் வான்பரப்புகளில் எங்களை விடவும் அதிக வலிமையுடன் பறந்து செல்வக் கூடியவர்களாகவும் இருப்பர். அத்துடன் அவர்கள் எங்களது (Star Trek)  திரைப்படதில் உள்ளது போன்று வேற்றுக் கிரக மனிதர்களை, வேறு உலகங்களில் தேடித் திரிபவர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களின் தேடல்களில் ஒருவேளை எங்களது புவியும் தென்பட்டு, அவர்கள் எங்களை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பவர்களாகக் கூட இருக்கலாம்.

இப்படியான காரணங்களினால், ஒருவேளை எங்களிற் சிலர் காணுகின்ற பறக்கும் தட்டுகள், வேற்றுக்கிரக மனிதர் என்பவற்றின் காரணர்களும் இந்தப் புவி2.0ன் அறிவுடை உயிரினங்களாகவும் இருக்கலாம். வேற்றுக் கிரக மனிதர்கள் பற்றிய பல தெளிவுகளை நான் இங்கு கூற முடியாது. அது பற்றி ஒரு நீண்ட தொடரினை தமிழ்ஆதேர்ஸ் டொட் கொம்மிலும் எழுதியுள்ளேன் என்பதால் வேற்றுக்கிரக மனிதர் பற்றி அதிகம் கூறாது நிறுத்திக் கொள்கிறேன். அத்துடன் புவி2.0 பற்றிய உங்களது மேலதிக தேடல்களுக்காகவும் இக்கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி!

அன்புடன்,

கனி.

குறிப்பு: கெப்பிளர் 452டி இனைப் போன்று வேறும் சில கோள்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ளவர்கள் கூகுளில் அவை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

 

கனி விமலநாதன் B.Sc                                    


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்