தமிழ் மொழிக்கு ஒன்று கூடுவோம்

முனைவர் நா.அமுதா தேவி

முன்னுரை:

கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் பாரதிதாசன். இவர் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும். பாரதியின் மீது தான் கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரை பாரதிதாசன் என மாற்றி அமைத்துக் கொண்டார். புரட்சிக்கவி என்ற அடைமொழியால் அழைக்கப்படும் சிறப்பிற்கு உரியவர். இவர் பாண்டியன்பரிசு, தமிழச்சியின்கத்தி, உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். தமிழ் இயக்கம் என்னும் கவிதையின் வாயிலாக தமிழ் மொழியின் சிறப்பினை யாரெல்லாம் எடுத்துரைக்க வேண்டும், எப்படி எல்லாம் தமிழ்மொழியை உயர்த்த வேண்டுமென நமக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடலை வடிவமைத்திருக்கிறார். தமிழ் மொழியின் சிறப்புக்களை இக்கவிதையின் வாயிலாகக் காண்போம்.

பெண்களே ஒன்று கூடுங்கள்:

பெண்கள் என்றாலே பொதுவான பார்வையில் அவர்கள் விவாதங்களில் ஈடுபடுவார்கள் என்ற நிலையில் அல்லாமல் பாரதிதாசன் அவர்கள் பெண்களை ஒற்றுமையுடன் இருந்து தேசத்திற்காகவும் அதுவும் தாய் மொழிக்காகவும் ஒன்று கூட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார். பல்வேறுபட்ட பண்பு நலன்களை உள்ளடக்கிய பெண்கள் வாழும் இச்சமுதாயத்தில் மொழியின் சிறப்பினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறவும் மொழியைப் பாதுகாக்கவும் பெண்களால் இயலும் என்று உரக்கக் கூறுகிறார்.

தாய்மொழியின் மீது பிறர் கூறுகின்ற பழிச்சொல்லை தீர்ப்பதற்காக ஒன்று கூட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இதனைத்

திருவான செந்தமிழின்

சிறுமையினைத் தீர்ப்பது

என எழுக! ( தமிழ் இயக்கம் –பாரதிதாசன்)

என்ற வரியின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். மொழியில் உள்ள குறைகளை நீக்கி மொழியை வளப்படுத்தி மொழியின் சிறப்புகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல நாம் ஒன்று கூட வேண்டும். இப்படி மொழிக்காக நாம் ஒன்று கூட வில்லை என்றால் வானில் ஒளியைத் தருகின்ற நிலவு கூட தம்முடைய ஒளியை நானத்தால் சுருக்கிக் கொள்ளும். எனவே தமிழ்மொழியின் மானம் காப்பதற்காக பெண்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என்கிறார் .மொழியின் சிறப்புகளை எடுத்துக் கூறவில்லை என்றால் நம் மனமும் உதடும் வாட்டம் எய்தும் என்கிறார் .

இன்று பெண்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் பணி நிமித்தமாக செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அப்படியான சூழல்களில் எல்லாம் நம் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும். செம்மொழியான நம் தமிழ் மொழியின் மீது சரியான புரிதல் இல்லாமல் பிறர் பழி சுமத்துகிறது அப்பழிச் சொல்லை நீக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். எனவே அப்பழிச் சொல்லை நீக்கும் வகையில் மொழியின் சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டியது பெண்களின் கடமையாகும்.

முதியோர் கடமை:

தமிழ் தொண்டு ஆற்றினால் முதுமைப் பருவம் மாறி இளமைப் பருவம் எய்தும் வகையில் மொழி சிறப்பிற்கு உரியது. எனவே முதியோர்களும் தம்மால் இயன்ற தமிழ் பணியைச் செய்ய வேண்டும்.வயதை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு நாம் தமிழ் பணியிலிருந்து நம்மை விலக்கி வைக்காமல் நம்முடைய அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் வேண்டும். இதன் வாயிலாக மொழியில் இருக்கின்ற இலக்கியங்கள் அவை உணர்த்துகின்ற அறங்கள்  ஆகியவற்றை உணர்ந்து இளம் தலைமுறையினரும் இலக்கியத்தை சுவைக்க முன்வருவர். அகத்திய முனிவர் பொதிகை மலையில்அமர்ந்து பல நூல்களை எழுதியதாகச் சொல்வர். இன்று அத்தகைய நூல்களை எல்லாம் இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு மூத்த தமிழ் அறிஞர்களுக்கு உள்ளது. எனவே மயில் போல துள்ளி வந்து மொழியினுடைய சிறப்புகளை எடுத்துரைக்க வேண்டும். தமிழ்த் தாய்க்கு வந்திருக்கின்ற குறையைத் தீர்ப்பதற்கு முதியோர்கள் ஒன்று திரண்டு தம்மால் இயன்ற தமிழ் பணியைச் செய்தல் வேண்டும். பிரம்பு  போன்ற வளையும் ஆற்றலுடைய உடலை உடலையும் மனதையும் உடையவர்களே உங்கள் உடலிலும் உயிரிலும் கலந்த மொழிக்கு இழுக்கு நேராதவாறு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரங்கு நிலைகொண்ட மொழியின் சிறப்பினை உலகம் முழுவதும் எடுத்துரைத்துப் பார்புகழும் மொழியாக தமிழ் மொழியினை கொண்டு சேர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதனைப் பாரதிதாசன்,

  நரம்பெல்லாம் இரும்பாகி

 நனவெல்லாம் உணர்வாகி

 நண்ணீ டிரோ? ( தமிழ் இயக்கம் –பாரதிதாசன்)

என்ற வரிகளின் மூலம்   இரங்கு நிலைகொண்ட தமிழ் உற்ற குறை தவிர்த்திட எழுச்சி கொள்வீர் என்கிறார். தமிழ் அன்னையினை எதிர்க்கின்றவர்களுக்கும் அவள் சிறப்பினை மறந்தவர்களுக்கும் மொழியின் அருமையை உணராதவர்களுக்கும் பார்வையற்றவர் தம் கண்களுக்கு ஒளி கிடைத்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோல மொழியின் சிறப்புகளை அறியாமல் இருக்கின்ற அவர்களுக்கு மொழியின் சிறப்பினை எடுத்துரைத்து அவர்கள் பயன்பெறும் வகையில் செய்வது நம்முடைய கடமையாகும். எறும்புகள் தம் இலக்கினை நோக்கி செல்வது போல முன் வைத்த காலை பின் வைக்காமல் வளர்ச்சிப் பாதையை நோக்கி மொழியை நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நிறைவுரை:

மொழியில் இருக்கும் எண்ணிலடங்காத சிறப்புகளை எல்லாம் பிறரிடம் எடுத்துரைத்து மொழியின் பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமையாகும். தமிழ் மொழி இன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஓலைச்சுவடியிலும் கல்வெட்டிலும் கணினியிலும் புத்தகத்திலும் என எல்லா வடிவங்களுக்கு ஏற்பவும் மொழி தன்னைத் தகவமைத்துக் கொண்டு உள்ளது. இப்படியான மொழியின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல முதியோர்கள் பெண்கள் தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று இணைந்து நம் கடமையைச் செவ்வனே செய்து மொழியை உயர்த்துவோம்.




           
                  
முனைவர் நா.அமுதா தேவி
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
இரத்தினம்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோவை


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்