பாவை நேயமும் பறவையின் நேயமும்

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


"பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்றார் கண்ணதாசன். காகம் இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு. குயில் குரலினிமையைக் கொண்டு வரும். கிளிப்பிள்ளை சொன்னதைத் திருப்பிச் சொல்லும். காலம் கருதியிருக்கும் கொக்கு, மயில்கள் அழகிய தோகை விதித்தாடும். புறாக்கள் கோயில் புகுகின்றன.

கூகை என்னும் ஒரு வகைப் பறவை (பருந்து) யின் மாந்த நேயச் செய்தியொன்றைப் பார்ப்போம்.

ஆய் எயினன் என்பான் பறவை விரும்பி. (இப்போதெல்லாம் நாம் வளர்ப்புப் பிராணி வைத்திருக்கிறோமே, அதுபோல) இவன், பாழிப் போரில் மிஞலி என்பவனால் கொல்லப்பட்டபோது, அவன் உடலைச் சுடுவெயில் படாது. பிறபறவைகள் சிறகை விரித்து அவனுக்கு நிழலைச் செய்தன. கூகை என்ற இனப்பறவை மட்டும், எனக்கு பகலில் கண்தெரியவில்லையே! மற்ற பறவைகளோடு கூடி ஆய் எயினனுக்கு நிழற் தந்து நன்றி சொல்ல என்னால் முடியவில்லையே என்று நாணுகிறதாம்.

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.  
                         குறள் -
481

கூகை பகல் குருடானாதால் காகம் கூட கூகையைப் பகல்பொழுதில் வென்றுவிடும் என்கிறார் வள்ளுவர்.

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் ஞமிலியொடு பொருது, களம்பட்டென
காணிய செல்லாக் கூகை நாணிக்
பார்த்தீர்களா?
பறவைக்கும் மனம் உண்டு. அந்த மனதில் இரக்கமும், நன்றியும் ஊற்றெடுக்கும் செய்தியினைப் பரணர் என்ற புலவர் பாட்டாக வடித்துள்ளார்.

பாவையர் பலவிதம்: ஒவ்வொருவரும் ஒரு விதம்!

தலைவன் களவொழுக்கத்தை மேற்கொண்டிருந்தான். அப்போது வீட்டில் காவல் கடுமையானது. அதனால், தோழி, தலைவன் தலைவியை விரைவில் மணந்து கொள்ள வேண்டுகிறாள். அவ்வாறு, நீ மணம் செய்ய விரும்பினால் பகலில் வராமல், இரவில் வருக என்கிறாள்.
இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே : அதனால்
மாலை வருதல் வேண்டும் சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலை முதல் அடுக்கத்த சிறுகல் ஆறே. 
     அகம் -
148 : 10-14

இந்த இலக்கியச் செய்திகள் அகநானூற்றிலிருந்து காணக்கிடைக்கின்றன.

அகம் என்ற சொல்லுக்கு மனம், வீடு, உள்ளிடம், ஆகாயம், உலகம், எண்ணம் என்று பல பொருள்கள் உள்ளன.

அகநானூற்றைத் தொகுக்கச் செய்தவர் மன்னன் பாண்டிய உக்கிரப்பெருவழுதி, தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்.

தொல்காப்பியர் காலத்தில் இலக்கிய அடிப்படையாக அகம், புறம் என்ற இரண்டு நிலைகளில் அமைந்தன. ஆனால், திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலைகளில் இலக்கிய அடிப்படை வளர்ந்தது. பின்னாளில் அறம், பொருள், இன்பம், வீடு என பாரதிதாசனும் அறம் பொருள் இன்பம் வீடு அடைதற் நூற்பயனே என்கிறார்.

அதிர்ந்திடும் இளமைப்போதில் ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந்தன்னில் மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்பமேதும் இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டுநெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு!
      - பாரதிதாசன்

முடிவுரை :
பாவையோ பகலில் வராதே! என்கிறாள் பறவையோ பகலில் குருடாக, இருக்கிறோமே, இயங்க முடியவில்லையே, ஆய் எயினனுக்கு நன்றி பாராட்ட முடியவில்லையே என்று ஏங்குகிறது. பறவைக்கும் பாவைக்கும் தத்தம் தலைவன் மீது எத்தகைய நேயம்?
அம்மம்மா! இலக்கிய கடலுக்குள் இத்தனை முத்துக்களா? வியக்கிறேன்!.





worldnath_131149@yahoo.co.in