எண்ணிய எண்ணியாங்கெய்தும்
எண்ணியர் திண்ணியராகப் பெறின்

 

ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா

 

ஆம், முருகபூபதி அவர்களை நினைக்கும் போது எனக்கு மேலே சொன்ன குறள் ஞாபகம் வருவதுண்டு.

 

எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், பேச்சாளர், ஆய்வாளர், கட்டுரையாளர் எனப் பன்முக ஆளுமை நிறைந்த இவர் எண்ணியவை, சாதித்தவை அதிகம். அவை யாவும் பெருமளவில் சமூகத்தின் நலனைத்தான் அடிநாதமாகக் கொண்டுள்ளன.

 

யூலை 13ம் திகதி அறுபதாம் ஆண்டில் தடம் பதிக்கப்போகும் முருகபூபதி அவர்கள்   ‘கனவுகள் ஆயிரம்’ என்ற கதை மூலம்  ‘மல்லிகை’ ஊடாக 1972 ல் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் என வேறுபட்ட பல பங்களிப்புக்களைத் தொடர்ந்து செய்து வரும் இவர் இதுவரை 17 நூல்களை எழுதி இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்திருந்த போதும் தன்னை ஒரு நல்ல வாசகனாக வளர்த்துக் கொள்வதே தனக்கு மிக மன மகிழ்வைத் தருகிறது என்கிறார்.

 

நீர்கொழும்புப் பிரதேச மக்களின் மொழி வழக்குடன் அவர்களின் வாழ்வுக் கோலங்களைச் சித்தரிக்கும் இவரின் ’சுமைகளின் பங்காளிகள்’ என்ற சிறுகதைத்தொகுதிக்கும் ஈழத்தின் போர்காலச் சூழலினால் இடம் பெயர்ந்த மக்களைப் பற்றியும், தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்த மக்களைப் பற்றியும் அதன் விளைவான துயரங்களையும் பதிவு செய்துள்ள இவரின் ’பறவைகள்’ என்ற நாவலுக்கும் இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது. 

 

இலக்கிய உலகில் தடம் பதித்த அதே காலப்பகுதியில் வீரகேசரியின் நீர்கொழும்புப் பிரதேச நிருபராகவும் அறிமுகமான முருகபூபதி அவர்களை 1977 – 87 காலப் பகுதியில் தனது ஒப்பு நோக்காளராகவும் துணை ஆசிரியராகவும் உயர்வுபடுத்தி வீரகேசரி தனக்கும் சிறப்புத் தேடிக் கொண்டது.

 

நாட்டு நிலைமைகள் உயிருக்கான புகலிடத்  தேடலைத் தேடும்படி அவரை நிர்ப்பந்தித்த போது அவுஸ்ரேலியா அவரை வாழவைக்க முன்வந்தது. முரண்பாடல்களை மேவி, தேடலை நோக்கிய ஒரு விழாவாக - அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிய முயற்சித்தல் என்ற  அடிப்படைக் கோட்பாட்டுடன் இவர் 2001ம் ஆண்டு முதல் நடத்திவரும் வருடாந்த எழுத்தாளர் விழாக்களில் எழுத்து, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, இசை, நடனம், ஓவியம், கைவினை போன்ற அனைத்துத்துறை சார் கலைஞர்களையும் ஒன்று கூட்டி கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது. புது எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன் முதுபெரும் எழுத்தாளர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்.  இளம் சந்ததியினரின் இலக்கிய ஈடுபாடு வளர்க்கப்படுகிறது அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களும் பங்கு கொள்ளும் கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன.

 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1988 ம் ஆண்டிலிருந்து இவர் நடத்தி வரும் இலங்கை வாழ் அனாதை மாணவர்களுக்காக கல்வி நிதியம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு பெரும் உதவி செய்கிறது.  இந்த மேலான சேவைச் செய்யும் இவர் இதற்காக தன்னை என்றுமே விளம்பரப்படுத்திக் கொண்டதோ, பொன்னாடைகள், மாலைகள் எனத் தேடி அலைந்ததோ கிடையாது. நலன் விரும்பிகளிடம் மாதம் 20 டாலர்களை பெற்று இந்தக் கல்வி நிதியாக அனுப்பும் முருகபூபதி அவர்கள் இதனால் பயன்பட்டுக் கொண்டிருப்பவர் யார் என்ற விபரத்தை உதவி வழங்குபவருக்கும் தனது கல்விக்கு உதவுபவர் யார் என்ற விடயதை கற்பவருக்கும் தெரிவிக்கிறார். இதனால் அவர்களுக்கிடையே ஓர் உறவு உருவாகவும் சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது.

 

மனிதர்களில் உள்ள நல்ல பண்புகளை மட்டும் கருத்தில் கொண்டு எல்லோருடனும் நண்பராகப் பழகும் இவரின் மேல் தம் சுயநலத்துக்காகவும், தமது பெயருக்காகவும் சேறு போடும் புல்லுருவிகளும் எமது சமூகத்தில் இல்லாமல் இல்லை, முருகபூபதி அவர்கள் நல்ல மனதுடன் செய்யும் முயற்சிகளை, தம்மை சமுதாயச் சிற்பிகள் எனச்சொல்லிக் கொள்பவர்கள்  தடுக்க முனையும் கதை இன்றும் தான் தொடர்கிறது.  அந்த வழியில் இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த சர்வதேச மகாநாட்டினையும் குழப்ப குறிப்பிட்ட சிலர் முயன்று தம் சுயரூபத்தைக் காட்டிக்கொண்டனர்.

யாத்ரா சஞ்சிகையின் பிரதம ஆசிரியர், அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்த மகாநாடு பற்றி இப்படிச் சொல்கிறார்,  ”இரண்டு சமூகங்களுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த மாநாடு கணிசமான பங்காற்றியுள்ளது. இரண்டு சமுதாயத்தின் எழுத்தாளர்களுக்கும் இடையிலிருந்த இடைவெளி இல்லாமல் போயுள்ளது. பலரது திறமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியச் சூழலில் சங்கங்களாகவும் குழுக்களாகவும் ஈகோ மனநிலையினாலும் பிரிந்து கிடக்கும் எழுத்தாளர்களை ஒன்றிணைப்பதைப் போல் சிரமமான ஒரு பணி வேறு எதுவும் கிடையாது, அந்த வகையில் ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது . மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் கலை இலக்கிய உலகம் போரின் காரணமாக ஸ்தம்பித்தது. . இந்த மாநாட்டின் பின் மீண்டும் ஒரு ஆர்வம் துளிர்விட்டிருக்கிறது. சொல்வதானால் மொத்தமாகச்  தமிழ் எழுத்துச் சூழலில் ஒரு புத்தெழுச்சி என்று சொல்வேன்”

”நிரந்தர பலமான ஆத்ம பலத்தை வளர்த்துக கொள்ளும் எனது இயல்பும், நண்பர்களுடன் உள்ளத்தால் உறவாடும் எனது மனப்பாங்கும் நிறையவே நல்ல பணிகளைச் செய்ய உதவுகின்றது. அதை விட ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தைக் குறித்த வியடங்களுக்கென ஒதுக்கி உள்ளேன்” எனச் சொல்லும் முருகபூபதி ஒரு இலக்கியவாதி, பத்திரிகையாளர் என்பதையெல்லாம் விட அவர் ஒரு சமூக நலனில் அக்கறையுள்ள ஒரு நல்ல மனிதன் என்பது தான் அவர் மேல் மதிப்பையும் நேசத்தையும் உருவாக்க காரணங்களாகின்றன. அவரின் சாதனைகளுக்கு மேலாக ஓங்கிநிற்கும் அவரின் நல்ல மனிதப் பண்புகளுக்காக அவரை நினைவு கூருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

 வெளியான நூல்கள்:

 

     1.சுமையின் பங்காளிகள்  ( சிறுகதை )       --- 1975

2. சமாந்தரங்கள்        (  சிறுகதை)       --- 1988

3. சமதர்மப்பூங்காவில்  (சோவியத் பயணக்கதை)  --- 1989 

4. நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் ( கட்டுரை )  --- 1995

5. பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம்) --- 1997

6. சந்திப்பு             (நேர்காணல்)        --- 1998

7. வெளிச்சம்           (சிறுகதை)          --- 1998

8. எங்கள் தேசம்        (சிறுகதை)         --- 2000

9. இலக்கிய மடல்       ( கட்டுரை )         --- 2001

10. கடிதங்கள்           ( கடித இலக்கியம்)   --- 2001

11. மல்லிகை ஜீவா நினைவுகள் ( கட்டுரை )      --- 2001

12. பறவைகள்             ( நாவல் )        --- 2001

13. எம்மவர்               ( கட்டுரை )      --- 2003

 14. அம்பி வாழ்வும் பணியும்  ( ஆய்வு )        ---  2003

        15. ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் ( கட்டுரை)       ---  2005

16. கங்கை மகள்          ( சிறுகதை )      --- 2005

17. நினைவுக்கோலங்கள்     (சிறுகதை)       --- 2006

 

தொகுப்பு ஆசிரியராகவிருந்து பதிப்பித்த மலர்-நூல்கள்:

 

1. நம்மவர் (மலர்)

2. உயிர்ப்பு ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைத்தொகுப்பு)

3. வானவில் ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு)

4.    Being Alive ( அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு தொகுப்பு)

5. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பு மலர்

6. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு கட்டுரைக்கோவை

.

பெற்ற விருதுகள்:

 

1. சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுதிக்காக 1976 ஆம் ஆண்டு    இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.

2. பறவைகள் நாவலுக்காக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.

3. அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில ஈழத்தமிழ்ச்சங்கம் 1998 இல் வழங்கிய மகத்தான இலக்கியப்பணிக்கான விருது.

4. அவுஸ்திரேலியா தினமன்று (யுரளவசயடயை னுயல)  விக்ரோரியா மாநில டெரபின் மாநகர சபை வழங்கிய 2002 ஆம்     ஆண்டிற்கான  சிறந்த பிரஜைக்கான விருது.

5. அவுஸ்திரேலியா மெல்பன் தமிழ்ச்சங்கம் 2004 இல் வழங்கிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விருது.

6. இலங்கை நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு 2004 இல் வழங்கப்பட்ட முதல் மாணவனுக்கான விருது.

(குறிப்பு : குறிப்பிட்ட பாடசாலை விவேகானந்த வித்தியாலயம் என்றபெயரில் 1954 இல் தோன்றியபோது முதலாவது மாணவனாகச்சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1963 வரையில் அங்கு கற்றபின்பு புலமைப்பரிசில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் சென்று யாழ். ஸ்ரான்லி கல்லூரியில் ( இன்றைய கனகரத்தினம் மத்திய கல்லூரி) கற்றார்.

 

  இலங்கையில் முருகபூபதி அங்கம் வகித்த அமைப்புகள்:

 

1.         நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ( ஸ்தாபகர் - முன்னாள் செயலாளர் )

2.         நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம்

            (ஸ்தாபகர்- முன்னாள் செயலாளர் ) 

3.         நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ( ஆயுள்கால உறுப்பினர்- முன்னாள்   செயலாளர்)

4.         இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ( தேசிய சபை உறுப்பினர் கொழும்புக்கிளையின் முன்னாள் செயலாளர்)

5. பிரதம அமைப்பாளர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 (கொழும்பு, இலங்கை)

 

அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அங்கம் வகித்த / வகிக்கும் அமைப்புகள்.

 

1.         ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம்.

2.         ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலியாவில் 24 வருடகாலமாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம். (இதன்      தற்போதைய துணை நிதிச்செயலாளர்.)

3.         ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம்.

4.         ஸ்தாபக உறுப்பினர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ( இச்சங்கம் அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் நடத்திவருகிறது).

5.         ஸ்தாபக உறுப்பினர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்.

 

அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அங்கம் வகித்த தமிழ் இதழ்கள்.

 

1.         மக்கள் குரல் 

2.         அவுஸ்திரேலிய முரசு

3.         உதயம் ( கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளியாகிய உதயம் இருமொழி (தமிழ்-ஆங்கிலம்) மாத பத்திரிகையில் துணை ஆசிரியர். (தற்போது இந்த இதழ்கள் நின்றுவிட்டன.)

 

இதுவரையில் பயணித்து தமது பயண இலக்கிய படைப்புகளில் பதிவு செய்த நாடுகள்:

 

இந்தியா (தமிழ்நாடு), சோவியத்நாடு (மாஸ்கோ), அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, கனடா, கியூபா, இங்கிலாந்து.

 

 

 

sri.vije@gmail.com