சிலநினைவுகளும் சிந்தனைகளும்



லெ.முருகபூபதி

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்தகௌரவிப்பு –பாராட்டுவிழ

கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30-06-2013 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பது பேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒருவிழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது.

நல்லசெய்தி
. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியானசெயல். இந்தச்செயல் இலங்கையில் ஒருமரபாக பின்பற்றப்பட்டுவருவதும் மகிழ்ச்சியானது.

பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்தநிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னர் ஒருகாலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்குவரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒருசங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட்லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடதுகம்யூனிஸ்ட்கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது.

அதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோசார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கியபெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார்யாரோ அதற்கு ஆசிரியரானார்கள். இலங்கையில் இந்தநிலைமை இருக்கவில்லை.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய பெருமை மறைந்த கே.கணேஷ், மற்றும் இலங்கையில் சிறிதுகாலம் வாழ்ந்த இந்தியரான கே.ராமநாதன் ஆகியோரைச்சாரும். இவர்கள் இணைந்து பாரதி என்ற இதழையும் சிறிதுகாலம் வெளியிட்டனர்.

சர்வதேசரீதியாக கம்யூனிஸம் பிளவுபட்டபோது, இலங்கையில் மாஸ்கோசார்பு, பீக்கிங்சார்பு இடதுசாரிக்கட்சிகள் தோன்றினாலும்கூட எழுத்தாளர்களின் முற்போக்குச்சங்கம் பிளவுபடவில்லை. இச்சங்கம் புதுமைஇலக்கியம் என்ற இதழை வெளியிட்டது. பின்னர் காலத்துக்குக்காலம் நடத்திய சங்கத்தின் மாநாடுகளையொட்டிய புதுமை இலக்கியம் சிறப்புமலர்களை வெளியிட்டது.

மாஸ்கோசார்பு எழுத்தாளர்கள் டொமினிக்ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி உட்பட சிலரும், பீக்கிங்சார்பு எழுத்தாளர்கள் டானியல், என்.கே.ரகுநாதன், செ.கணேசலிங்கன், நீர்வைபொன்னையன், இளங்கீரன், பேராசிரியர் க. கைலாசபதி உட்பட சிலரும் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் இச்சங்கத்தில் இணைந்தே இயங்கிவந்தார்கள். இவர்களில் ஜீவா, டானியலுடன் நெருக்கமான நட்புறவை பேணியவர்தான் எஸ்.பொன்னுத்துரை.

யாழ்ப்பாணத்தில் இவர்கள் எழுதப்புகுந்த காலத்தில் தமக்குத்தாமே சூட்டிக்கொண்ட புனைபெயர்கள்வருமாறு:-

டானியல்புரட்சிதாசன், பொன்னுத்துரைபுரட்சிப்பித்தன், ஜீவாபுரட்சிமோகன். இப்படி புரட்சி பேசியவர்கள் காலப்போக்கில் திசைக்கொன்றாய் பிரிந்துசென்றார்கள். அவர்களின் வாழ்வில் புரட்சி ஏதும் நடந்ததா என்பதும் தெரியவில்லை. சாகிராக்கல்லூரியில் 1960 களில் நடந்த மாநாட்டில் ஏற்பட்ட பிளவினால் பொன்னுத்துரையுடன் எஃப்.எக்.ஸி.நடராஜாவும் கனகசெந்திநாதனும் வ.. இராசரத்தினமும் வெளியேறினார்கள். இளம்பிறை ரஹ்மான் இவர்களைப் பின்தொடர்ந்தார்.

பொன்னுத்துரை முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்கு எதிர்வினையாக நற்போக்கு இலக்கிய முகாம் உருவாக்கினார். அதற்கான காரணத்தை எனக்கு விரிவாக ஒரு நேர்காணலும் தந்தவர் பொன்னுத்துரை. குறிப்பிட்ட நேர்காணல் இடம்பெற்ற எனது சந்திப்பு நூல்  1998 இல் வெளியாகியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்தியவிழாவில் நற்போக்குவாதிகளுக்கு கூழ்முட்டை வீசப்பட்ட சம்பவத்தையடுத்து பொன்னுத்துரை காலம்பூராகவும் முற்போக்கு இலக்கியமுகாமை கடும்வார்த்தைப் பிரயோகங்களினால் விமர்சித்தே வருகிறார்.  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நீண்டகாலமாக,  கனடாவுக்கு புலம்பெயரும் வரையில் பிரேம்ஜி செயலாளராகவே அரும்பணிகள் பல ஆற்றினார். கைலாசபதியை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக நியமிக்கும் விடயத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டது முற்போக்கு எழுத்தாளர்சங்கம்.

இவர்கள் மீதுள்ள காழ்ப்பினால் இவர்களையும் பொன்னுத்துரை விட்டுவைக்கவில்லை. மடாதிபதி பிரேம்ஜி, பீடாதிபதி கைலாசபதி என்றும் எள்ளிநகையாடினார்.

1975 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை ஏற்பாடு செய்தபொழுது, டானியல், என்.கே.ரகுநாதன், சில்லையூர்செல்வராசன் மற்றும் புதுவைரத்தினதுரை உட்பட பலர் திருகோணமலையில் ஒரு எதிர்வினை மாநாட்டை நடத்தினார்கள்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 12 அம்சத் திட்டத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளுடனும் தொடர்ச்சியாக உரையாடியது.  அப்பொழுது பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் மாநாட்டில் அதனை கையளித்தது. தேசிய இனப்பிரச்சினை இனவிடுதலைப் போராட்டமாக வெடிக்காத அந்தக் காலப்பகுதியில் அந்தத் திட்டத்தை அன்றைய அரசு கிடப்பில் போட்டது.

1972
இல் மல்லிகையில் எழுதத் தொடங்கியிருந்த நான், மல்லிகைஜீவாவினால் பிரேம்ஜிஞானசுந்தரன், இளங்கீரன், முருகையன், சிவத்தம்பி, கைலாசபதி, சோமகாந்தன், தெணியான் ஆகியோருக்கு அறிமுகமாகியிருந்தேன். மாநாட்டின் பணிகளில் ஈடுபட்டு உழைத்தேன். சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் நீர்கொழும்பு, மற்றும் கொழும்புக்கிளைகளின் செயலாளராகவும் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வரும்வரையும் இயங்கினேன்.

சங்கத்தின் மாதாந்தக் கருத்தரங்கு, சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு, பாரதி நூற்றாண்டு விழாக்கள், எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம்….. என்று பல பணிகளை சங்கம் முன்னெடுத்தது. என்னை ஒரு முழுநேர ஊழியராகவும் மாதம் 150 ரூபா ஊதியத்தில் நியமித்தது. வீரகேசரியில் இணையும்வரையில் இந்தப்பணியிலிருந்தேன். பின்னரும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் இணைந்திருந்தேன்.
இறுதியாக 1986 ஆம் ஆண்டு இறுதியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர்மண்டபத்தில் சங்கம் நடத்திய மாநாட்டிலும் கலந்துகொண்டேன். 1987 இல் நான் புறப்பட்டதை சங்கம் ஒரு இழப்பாகவே கருதியது.

1972
முதல் 1987 வரையில் முற்போக்கு இலக்கிய வட்டாரத்துடன் பின்னிப் பிணைந்திருந்தமையால் கொழும்பில் கௌரவிக்கப்பட்ட ஒன்பது பேருடனும் எனக்கு அன்று முதல் உறவும்நட்பும் தொடருகிறது. இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் சந்திக்க முடிந்தவர்ளையும் சந்திப்பேன்.

சுமார் 11 வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பியவேளையில் (1998 இல்) நண்பர் சோமகாந்தன் இல்லத்தில் எனக்கு வரவேற்பு தேநீர்விருந்துபசாரத்தை சங்கம் நடத்தியது. சோமகாந்தன் இறக்கும்வரையில் சங்கத்தை கட்டிக்காப்பாற்றினார். எதிர்பாராதவிதமாக பிரேம்ஜியும் கனடா புறப்பட்டார். ராஜஸ்ரீகாந்தனும் மறைந்தார்.

சங்கம் செயல் இழந்தது. பிரேம்ஜி மீண்டும் இலங்கை வந்து சங்கத்தை புனரமைக்க முயன்று, திக்குவல்லை கமாலை செயலாளராக்கினார். ஆனால் சங்கம் அன்று நின்றஇடத்திலேயே நின்றது. நகரவே இல்லை.

நீர்வைபொன்னையன் சங்கத்தை இயக்க முயன்றதாக அறிகின்றேன். ஜீவாதனது கவனத்தை மல்லிகையில் மாத்திரம் செலுத்தினார். சங்கத்தின் ஏடாகபுதுமை இலக்கியம் தொடர்ந்து வெளியாகாது போனாலும் அந்த வெற்றிடத்தை ஜீவாவின் மல்லிகை நிரப்பியது. தற்போது மல்லிகையும் நின்றுவிட்டது. பிரேம்ஜியும் என்.கே.ரகுநாதனும் கனடாவில். காவலூர்ராஜதுரை அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார். செ.கணேசலிங்கன் நீண்டகாலமாக சென்னைவாசியாகி விட்டார். டொமினிக் ஜீவாவும் நீர்வைபொன்னையனும் முகம்மதுசமீமும் கொழும்பில். பேராசிரியர்நுஃமான்கண்டியில். . இக்பால் பேருவளையில். இந்த இலக்கிய நண்பர்களுக்கு கொழும்பில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் கௌரவிப்புவிழா நடக்கவிருக்கிறது என்ற தகவலை ஊடகங்கள் ஊடாக அறிந்துகொண்டதும், அவுஸ்திரேலியாவில் நான் தொடர்ச்சியாக இலக்கியம், அரசியல், சமூகம், திரைப்படம் தொடர்பாக உரையாடும் நண்பர் நடேசனிடம் சொன்னேன்.

அவரும் தகவல்களை ஊடகங்களில் பார்த்திருக்கிறார். கௌரவிக்கப்படுபவர்களில் சிலரை அவருக்கும் நன்கு தெரியும்.

அவர் என்னிடம் கேட்ட கேள்வியும் இந்தப்பத்தியை எழுதுமாறு தூண்டியது எனவும் சொல்லமுடியும்.

அதென்ன முற்போக்கு எழுத்தாளர்கள் மாத்திரம் கௌரவிக்கப்படுகிறார்கள். ஏனைய மூத்த முன்னோடிகள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள். எழுத்தளர்களை முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு, அந்தப்போக்கு… .இந்தப்போக்கு என்று ஏன் பிரித்துப் பார்க்கிறார்கள்? பிரதேசவாதம் போன்று இதுவும் ஒருவகையில் புறக்கணிப்பு வாதமாகிவிடுமே ஆக்க இலக்கியம் மற்றும் விமர்சன இலக்கியத்தில் தேர்ந்த ரஸனைகளை உருவாக்கிய ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள். தேசிய, சர்வதேசப் பார்வைகளை பதிவுசெய்தவர்கள் இலங்கையில் இருக்கிறார்களே…? ஏன் அவர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள்?
நடேசனுக்கு நீண்டவிளக்கம் சொல்ல நேர்ந்தது. ஆனால் இன்னும் முடியவில்லை.

இலங்கையில் வடபுலத்தில் புரையோடிப்போயுள்ள சாதிப்பிரச்சினை, பொருளாதாரரீதியில் நலிவுற்றமக்கள், ஏற்றதாழ்வுகள், சுரண்டல், பாரபட்சம், புறக்கணிப்பு முதலானவற்றை கருப்பொருளாகக்கொண்டு எழுதப்பட்டபடைப்புகள், பிரதேசமொழி வழக்குகளை அறிமுகப்படுத்திய நாவல், சிறுகதைகள், கவிதைகள் என்பன விமர்சனத்திற்குள்ளான தருணத்தில் எதனை மக்கள் ஏற்கவேண்டும் எதனை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தியல் தவிர்க்க முடியாமல் தோன்றிவிட்டது. இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி தொடர்பாக பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றையெல்லாம் படித்தால் உங்களது கேள்விக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு இந்தப்பத்தியை எழுதத் தொடங்கினேன்.

ஒரு திருமண நிகழ்வுக்கோ அல்லது பொது நிகழ்வுக்கோவரும் அனைவருமே கோபதாபமற்றவர்கள் என்றோ, முரண்பாடுகள் இல்லாதவர்கள் என்றோ நாம் கருதமுடியாது என்பது எளிய உதாரணம். கௌரவிக்கப்பட்ட ஒன்பது பேருமே மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள்தான். ஏன் சிலர் ஒருவரோடு ஒருவர் முகம் கொடுத்தும் பேசுவதில்லை. டொமினிக்ஜீவாவும் நீர்வைபொன்னையனும் எப்பொழுது இறுதியாக சந்தித்துப் பேசிக்கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

சென்னைவாசியாகியுள்ள கணேசலிங்கனும் டொமினிக்ஜீவாவும் 1970 களில் சுமுகமான நட்புறவுடன் இருக்கவில்லை. ஆனால் பின்னாட்களிலும் தற்பொழுதும் நிலைமைமாறிவிட்டது. ஜீவாவினால் தொகுக்கப்பட்ட நூல்கள் கணேசலிங்கனின் சென்னை குமரன் பதிப்பகத்தினால் தான் வெளியானது. நான் 2001 இல் எழுதிய மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும் கணேசலிங்கன் தான் அச்சிட்டுத்தந்தார். அத்துடன் மல்லிகைப்பந்தல் வெளியீடாகவந்த எனது பாட்டி சொன்ன கதைகள் நூலையும் அவரே அச்சிட்டுத்தந்தார். காலம் காயங்களை மாற்றும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சிறு உதாரணம். பிரேம்ஜி முற்போக்கு எழுத்தாளர்சங்கத்தின் ஊடாக எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தை தோற்றுவித்தபோதும் கூட தனது ஒரு நூலையாவது இந்த அமைப்பின் ஊடாக வெளியிடவே இல்லை. நீண்ட காலத்திற்குப் பின்னர், பிரேம்ஜியின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளியானது. அதனை கணினியில் பதிந்தவர் மற்றுமொரு முற்போக்கு எழுத்தாளரான தெணியானின் தம்பி கனடாவில் வதியும் நண்பர் நவம்.

என்.கே.ரகுநாதன் டானியலின் மச்சான்.டானியலின் தங்கையை மணம் முடித்தவர். அவர்களின் குடும்பங்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டதனால் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டவர்கள். தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் குடும்பத்துடன் நின்றிருக்க வேண்டும். அதனை இலக்கிய உலகத்திற்கும்பறைசாற்றியது தவறு.

டானியலைப் பற்றி அங்கதக் கவிதை எழுதும் அளவிற்கு தன்னைத் தாழ்த்திக்கொண்ட ரகுநாதன், ஒருகாலத்தில் எழுதிய நிலவிலேபேசுவோம் என்ற சிறுகதை இன்றளவும் பேசப்படுகிறது. அந்தக்கதை கைலாசபதியை வைத்துத்தான் எழுதப்பட்டதாக நம்பியவர் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். ஆனால், அதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் ரகுநாதனே வாக்குமூலம் தந்தார்.

கைலாசபதியை தாக்குவதற்கு அந்தக்கதையையும் வெங்கட்சாமிநாதன் ஒரு ஆயுதமாக பிரயோகித்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று, பொன்னுத்துரையும் வெங்கட்சாமிநாதன் பக்கம் நெருங்கினார். செ.கணேசலிங்கனின் செவ்வானம் நாவலுக்கு நீண்ட முன்னுரை எழுதியவர் கைலாசபதி. பின்னர் அதனை விரிவாக்கி தமிழ்நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலை எழுதினார் கைலாசபதி. அதற்கு நடை இதழில் எதிர்வினையாற்றினார் வெங்கட்சாமிநாதன். . அதன் தலைப்பு மாக்சீய கல்லறையிலிருந்து ஒருகுரல். நடை இதழ் இலங்கையில் தேர்ந்த இலக்கியவாசகர்களுக்கு பரவலாக கிடைக்கவில்லை. ஆனால் பூரணி குழுவினருக்கு கிடைத்தது. பூரணியின் ஆசிரியர் குழுவிலிருந்த என்.கே.மகாலிங்கம், மு.தளையசிங்கத்தின் சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டவர். தளையசிங்கம் மாக்சீய சிந்தனைகளுக்கு எதிர்வினையாற்றியவர். அன்றையகால கட்டத்தின் (1972இல்) தேவைகருதி பூரணி இதழ் வெங்கட்சாமிநாதனின் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.

கைலாசபதியின் மாணாக்கரும் மாக்சீய விமர்சகருமான நுஃமான் அதனைப் பார்த்துவிட்டு சும்மா இருப்பாரா? உடனே வெங்கட்சாமிநாதனின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றி ஒருதொடரை மல்லிகையில் எழுதினார். அதில் சிலபந்திகளை ஜீவா நீக்கிவிட்டதாக நுஃமான் என்னிடமும் இளங்கீரனிடமும் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்திடமும் குறைப்பட்டார்.

அந்தத்தொடர் முடிவுற்றதும் மு.தளையசிங்கத்தின் தம்பி மு.பொன்னம்பலம் மல்லிகையில் அதற்கு எதிர்வினையாற்றினார். ஆனால் இன்றுவரையில் அதற்கு எந்தவொரு முற்போக்குவாதியும் பதில் கொடுக்கவில்லை. ஏன் மு.பொன்னம்பலத்தின் கட்டுரைக்கு மல்லிகை களம் கொடுத்தது என்று ஜீவாவை கடிந்து கொண்ட முற்போக்காளர்களைத்தான் நான் பார்த்தேன். அதனால் ஜீவாவுக்கும் மு.பொ.வுக்கும் இடையே நிழல்யுத்தம் தான் தொடர்ந்தது.

இந்தப் பின்னணிகளுடன் தான் நான் நண்பர் காவலூர்ராஜதுரையை பார்க்கின்றேன். சுருக்கமாகச் சொன்னால் எந்த வம்புதும்புக்கும் போகாத ஒரு அப்பாவி மனிதர். இவர் எவரையும் பகைத்ததும் இல்லை. எவரும் இவரை பகைத்ததும் இல்லை. கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் ஹட்சன் வீதியில் இருந்த இவரது வீட்டின் முகவரிதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகவரியாக பயன்பட்டது. பின்னர் அந்த முகவரி சோமகாந்தனின் அண்டர்ஸன் தொடர்மாடிக் குடியிருப்புக்கு மாறியது. முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்விடங்களும் சிந்தனைகளும் இடம்பெயர்ந்தது போன்று சங்கத்தின் முகவரியும் காலத்துக்குக்காலம் இடம்பெயர்ந்தது.

காவலூர்ராஜதுரை மிகவும் அமைதியானவர். ஆர்ப்பாட்டமற்றவர். அண்மைக்காலமாக சுகவீனமுற்று அவுஸ்திரேலியா சிட்னியில் ஓய்வில் இருக்கிறார். அவரை எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவித்திருக்கிறது. அவரது பொன்மணி திரைப்பட வேலைகள் யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருந்த தருணத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் அவரது ஒருவகை உறவு கதைத்தொகுப்பை வெளியிட்டது.

வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ள முடியாதளவுக்கு காவலூர், பொன்மணி படத்தயாரிப்பில் பிஸியாக இருந்தார். வசூழில் இந்தப்படம் தோல்வி என்றாலும் இலங்கையில் வெளியான தமிழ்ப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது. தர்மசேனபத்திராஜா இயக்கிய பொன்மணி படத்தில் சர்வமங்களம் கைலாசபதி, மௌனகுரு, சித்திரலேகா மௌனகுரு, டொக்டர் நந்தி ஆகியோரும் நடித்தனர்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டு நின்ற டானியல், சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் ஆரோக்கியமான நட்பை அவர்கள் மறையும் வரையில் தொடர்ந்தவர்தான் காவலூர்ராஜதுரை. டானியல் தமிழகம் சென்று தஞ்சாவூரில் மறைவதற்கு முன்னர் காவலூர் வீட்டிலிருந்துதான் புறப்பட்டார். அங்குதான் ஒரு மாலை நேரத்தில் நான் டானியலுக்கு விடைகொடுத்தேன். அவர் எழுத்தாளர் இளங்கோவனுடன் தமிழகம் புறப்பட்டார்.  அதுவே இறுதிச்சந்திப்பு,

சிலநாட்களில் டானியலின் மறைவுச்செய்தியை எனக்குச் சொன்னவர் சில்லையூர்செல்வராசன். கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொழும்புக்கிளை டானியலுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது.

அவுஸ்திரேலியாவில் நான் அங்கம் வகித்த அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட பாரதிவிழாவுக்கு பொன்னுத்துரையை சிட்னியிலிருந்து வந்து பேசுவதற்கு அழைத்து, விழாவில் நடத்திய நாவன்மைப் போட்டியில் ஒரு பிரிவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாணவனுக்கு எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட தங்கப் பதக்கத்தை பொன்னுத்துரையிடம் கொடுத்தே அணிவித்தேன். பின்னர் அவர் மனைவி சகிதம் கொழும்பு சென்றபோது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச் சேர்ந்த பிரேம்ஜி, ராஜஸ்ரீகாந்தன், அந்தனிஜீவா உட்பட சிலர் இன்முகத்துடன் வரவேற்க ஒரு பாலமாக இயங்கினேன். பகை மறந்த செயற்பாடுகள் என்று ராஜஸ்ரீகாந்தன் இந்தச் சம்பவங்களை குறிப்பிடுவார்.

முகம்மது சமீம் கம்பளை சாகிராக் கல்லூரி அதிபராகவும் பின்னர் மட்டக்களப்பில் கல்விப்பணிப்பாளராகவும்; அதேசமயம் இலக்கியத் திறனாய்வாளராகவும் இயங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஆறுமுகநாவலரின் நூற்றாண்டு விழாக்களில் கருத்தாழமிக்க உரைகள் நிகழ்த்தியவர். கொழும்பில் ஒரு பதிப்பகத்தை நிறுவி பல நூல்களை வெளியிட்டவர்.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றுள்ள சமீம் அவர்களை எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இல் நடைபெற்றவேளையில் நண்பர் பாலசிங்கம் ஸ்ரீதரசிங்குடன் சென்று பார்த்தேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியில் இவருக்கும் கணிசமான பங்குள்ளது.

நீர்வைபொன்னையனையும் அவரில்லம் சென்றுபார்த்து மாநாட்டுஅழைப்பிதழைக் கொடுத்தேன். தான் அதற்கு வரமாட்டேன் என்று சொன்னார். இத்தனைக்கும் 2010 ஜனவரியில் நடந்த மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்தவர்தான் நீர்வைபொன்னையன். மாநாட்டின்அமைப்புக்குழுவின் தலைவராக இயங்கிய ஞானம் ஆசிரியர் ஞானசேகரன், நீர்வைபொன்னையன் சார்ந்த முற்போக்கு முகாமில் இல்லை.

ஆனால், ஞானசேகரன் முற்போக்கு முகாமைச் சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நீண்ட நேர்காணலை ஞானத்தில் தொடராக வெளியிட்டதுடன் அதனை நூலாகவும் பதிப்பித்து, சிவத்தம்பியை கௌரவித்து விழாவும் எடுத்தவர். சிவத்தம்பியின் அந்திம காலங்களில் அவரை அடிக்கடி சந்தித்தவர் தான் ஞானசேகரன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூண்களில் ஒருவராக விளங்கிய சிவத்தம்பியுடன் அவருக்கு மிகவும் நெருக்கமான முற்போக்கு எழுத்தாளர் தெணியான் அந்திமகாலம் வரையில் தொலைபேசித்தொடர்பிலும் இருந்தார். அவரைப்பற்றி நீண்ட தொடரையும் தினக்குரலில் எழுதினார். குமரன் கணேசலிங்கன் அதனை நூலாக வெளியிட்டார். சிவத்தம்பி இலங்கை முற்போக்கு இலக்கியவாதிகளினால் ஓரம் கட்டப்பட்டதற்கு சிவத்தம்பியின் சந்தர்ப்பவாதமும் ஒரு காரணம் எனக்கூறப்பட்ட வேளையில் அவரை தம்வசம் நெருங்க வைத்துக்கொள்வதில் ஞானசேகரன் ஓரளவு வெற்றியும் கண்டார்.

நீர்வை பொன்னையன் இறுதியாக எழுதிய நினைவலைகள் என்ற நூல் முற்போக்கு வட்டாரத்தில் அதிர்வுச் சிற்றலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டானியல், ஜீவா, மற்றும் சண்முகதாசன் குறித்து நீர்வை வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய சலசலப்பு அவுஸ்திரேலியாவிலிருந்த எனக்கும் கேட்டது. இந்த ஆண்டு முற்பகுதியில் நீர்வைபொன்னையன் சிட்னிக்கு மகளிடம் வந்தபொழுது தொலைபேசியில் தான் உரையாட முடிந்தது. பொன்னையன் ஒரு மூத்தஎழுத்தாளர். எமது மாநாட்டில் பங்கேற்ற இளம்தலைமுறையினரின் கருத்துக்களை அறிவதற்காவது வந்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்குண்டு.

பேராசிரியர் நுஃமான் கொழும்பில் அல்ஹிதாயாவில் ஆசிரியராக பணியாற்றிய 1973 காலம் முதல் அறிவேன். கொள்ளுப்பிட்டியில் அவர் ஒரு அறையில் தங்கியிருந்த காலத்தில் அவரை சந்திப்பேன். எழில்வேந்தன், சண்முகம் சிவலிங்கம் மு.நித்தியானந்தன் ஆகியோரும் அவரது அறையில் சந்தித்து உரையாடுவோம். நான் மிகவும் மதிக்கும் நல்லநண்பர். அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்கு விரிவுரையாளராக சென்றபின்பும் மட்டுமல்ல இன்றுவரையில் அவருடனான நட்பு எந்தவிக்கினமும் இல்லாமல் தொடருகிறது. காரணம் அவரது இயல்புகள்தான்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நாவல் நூற்றாண்டு கருத்தரங்கை கைலாசபதி இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரன் அழைக்கப்பட்டார். அவர் திரும்பிச்செல்லும் வரையில் அவரை நுஃமானே பார்த்துக்கொண்டார். குரும்பசிட்டியில் நோய் உபாதைகளுடன் வாழ்ந்த இரசிகமணி கனகசெந்திநாதனை பார்க்க அசோகமித்திரனை அழைத்துச் சென்றார். இத்தனைக்கும் கனகசெந்திநாதன் முற்போக்குமுகாமில் இல்லை.

அண்மையில் நுஃமான் தமக்கு அளிக்கப்பட்ட விளக்குவிருதின் ஏற்புரையை, எமது இலக்கிய ஜாம்பவான்கள் அவசியம் படிக்க வேண்டும். காலச்சுவடு இதழில் மட்டுமன்றி தேனீ உட்பட பல இணையத்தளங்களிலும் வெளியானது. நானும் அதனை பிரதி எடுத்து சில இணைய இதழ்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன். கொழும்பு கம்பன் விழாவில் மங்கள விளக்கேற்ற வருபவர்கூட மேடையில் ஒருவார்த்தையும் பேசாமல் பொன்னாடை கௌரவம் பெற்றுச்செல்லும் அருங்காட்சியை பார்த்திருக்கிறேன்.

எமது எழுத்தாளர்கள் ஒரு சாதராண நூல் வெளியீட்டிலும் பொன்னாடை, பூமாலை சகிதம் மாப்பிள்ளை கோலத்தில் நிற்கிறார்கள். அவற்றை எதிர்பார்ப்பவர்களும் அதற்காக நேரம் ஒதுக்குபவர்களும் அவசியம் பேராசிரியர் நுஃமானின் விளக்குவிருது ஏற்புரையை ஒருதடவை படிக்கவேண்டும்.

விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் 48 மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட போது நுஃமானும் தமது குடும்பத்துடன் வெளியேறினார்.

நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழத்தை ஏற்கமுடியாது என்று சொன்னவர்தான் கனடாவிலிருக்கும் நண்பர் சேரன்.

புலிகள் தமிழ் மக்களை நந்திக்கடலில் விட்டுவிட்டு போய்விட்டார்கள் என்று காலச்சுவடு இதழில்நுஃமான் நேர்காணல் வழங்கியதையும் சிலஉள்ளுர், புலம்பெயர் புலி ஆதரவு எழுத்தாளர்களினால் ஜீரணிக்க முடியவில்லை.

கவிஞர் ஏ.இக்பால், துணிச்சல் மிக்கபடைப்பாளி என்று அழைக்கப்படுபவர். தமது 16 வயதிலேயே இலக்கியப்பிரவேசம் செய்தவர். ஆசிரியராகவும் ஆசிரியபயிற்சி விரிவுரையாளராகவும் பணியிலிருந்தவர். தம்மிடம் கற்ற பல மாணவர்களுக்கு இலக்கிய பிரக்ஞையை ஊட்டியவர். தாம் பணியாற்றிய பாடசாலைகளில் கையெழுத்து சஞ்சிகைகளை அறிமுகப்படுத்தியவர். இஸ்லாமிய இலக்கியங்கள் தொடர்பாக திறனாய்வு செய்தவர். பல நூல்களின் ஆசிரியர்.

திக்குவல்லைகமாலும் இக்பாலின் மாணவர்தான்.

ஒருசமயம் ஒரு இஸ்லாமிய இலக்கிய நூலை மல்லிகைஜீவாவிடம் கொடுத்து மல்லிகையில் அந்த நூலை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு ஜீவா, “இந்த நூலைப் பற்றி எழுதுவதற்கு ஒரு இஸ்லாமியரைத்தான் தேடவேண்டும் என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார். அதனால் கோபமடைந்த இக்பால் பலகாலம் மல்லிகையில் எழுதவில்லை. எனினும் திக்குவல்லைகமால் இக்பாலுக்கும் ஜீவாவுக்கும்  இடையே பாலமாக நின்று உறவை தொடரச்செய்தார். 2003 இல் இக்பாலின் படத்துடன் மல்லிகை வெளியானது. கமால்தான் அவரைப் பற்றி எழுதினார். மல்லிகை பல முஸ்லிம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி களம் வழங்கியிருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு,  “மல்லிகை என்ன முஸ்லிம் சஞ்சிகையா….?” என்று ஜீவாவிடம் நேரடியாகக் கேட்டவர்களுக்கு ஜீவா புன்னகையால் பதில்தந்தார்.

பொன்னுத்துரை, காலம்பூராகவும் சிவத்தம்பி, கைலாசபதி, டானியல், ஜீவா உட்பட பல முற்போக்கு எழுத்தாளர்களை வசைபாடிய போதிலும் அவர்கள் அதற்காக பொன்னுத்துரைக்கு பதிலே கொடுப்பதில்லை.  மௌனமாகவே இருந்து விடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்… “மலக்கும்பத்தை மிதித்தாலோ அடித்தாலோ அதனால் யாருக்கு நட்டம் என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், இக்பால் அப்படியல்ல. பொன்னுத்துரை தொடர்பாக எழுதியவர். பேசியவர். 1970 களில் அறிஞர் அஸீஸ் ( கொழும்பு சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் செனட்டராகவும் பதவிவகித்தவர். இவரது மாணாக்கர்கள்தான் சிவத்தம்பி,  தினகரன் முன்னாள் ஆசிரியர் சிவகுருநாதன், எச்.எம்.பி. மொஹிதீன்)  மறைந்த பின்னர் அவரது நினைவுகளை தொடராக தினகரன் வாரமஞ்சரியில் எழுதி பகிர்ந்து கொண்டார் எச். எம்.பி.மொஹிதீன். பின்னர் அதனை நூலாக வெளியிட்டார்.

அந்த நூலுக்கு எதிர்வினையாற்ற முன்றுபேர் இணைந்தார்கள். அவர்கள் எம்.எஸ்.எம்இக்பால், எம்.எச்.எம்ஷம்ஸ், . இக்பால். சிவத்தம்பியின் முன்னுரையுடன் அந்தநூல் வெளியானது. கமால்தீன், பொன்னுத்துரை உட்படசில முற்போக்கு எழுத்தாளர்களும் அந்தநூலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தனர். வழக்கம் போலவே முற்போக்காளர்கள் அதற்கும் பதில் அளிக்கவில்லை.

ஆனால், அதற்காக பொன்னுத்துரை சும்மா இருப்பாரா?
இரவோடு இரவாக இஸ்லாமும் தமிழும் என்ற நூலை எழுதி சில வர்த்தகப் புள்ளிகளின் ஆதரவுடன் வெளியிட்டார்.

இரண்டு இக்பாலும் ஷம்ஸ_ம் இணைந்திருந்தமையால் அந்தக்கூட்டணியை இக்குவால்ஷ் என்று வர்ணித்து வசைபொழிந்து அந்த நூலை எழுதினார் பொன்னுத்துரை.

இவ்வாறு பல்வேறுபட்ட இலக்கிய சச்சரவுகளுடன்தான் இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாம் இணைந்தும் பிளவுபட்டும் வளர்ந்திருக்கிறது.

மல்லிகை இதழ்களில் நீர்வை பொன்னையன் தவிர்ந்த ஏனைய முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரையும் பற்றிய அட்டைப்பட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. குறிப்பிட்ட கட்டுரைகள் பின்னர் அட்டைப்பட ஓவியங்கள், மல்லிகைமுகங்கள், முன்முகங்கள்,  அட்டைப்படங்கள் முதலான பெயர்களில் வெளியாகியுள்ளன. இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாமுக்கும் சிங்களதமிழ்முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் மல்லிகை அளித்த விரிவானகளம் விதந்து போற்றுதலுக்குரியது. ஏராளமான சிங்களச்சிறுகதைகளை தமிழ் வாசகர்களுக்கு மல்லிகை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இன்று பரவலாகப் பேசப்படும் இணக்க அரசியலுக்கு எப்பொழுதோ கால்கோளிட்டது மல்லிகை. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தது. ஆனால் பேரினவாதிகளும், குறுகியதமிழ்த் தேசியம் பேசியவர்களும் மல்லிகையினதும் ஜீவாவினதும் சேவையை கவனத்தில் கொள்ளவேயில்லை என்பதுதான் காலத்தின் சோகம். சிங்கள இலக்கிய மேதை மார்டின்விக்கிரமசிங்காவின் அட்டைப்படத்துடன் மல்லிகை வெளியானதை பொறுக்க முடியாமல் ஒரு தீவிரத்தமிழ்க்கொழுந்து, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு முன்பாக ஜீவாவை வழிமறித்து குறிப்பிட்ட மல்லிகை இதழை வாங்கிகிழித்துவிட்டு ஜீவாவின் முகத்திலே வீசிவிட்டுச்சென்றார்.
தற்பொழுது அந்தத்தமிழ்க்கொழுந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். ஆனால், ஜீவா யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தெருத்தெருவாக அலைந்து தமிழ் இலக்கியத்தை இலங்கையில் வளர்த்தார்.

இணக்க அரசியல் பேசப்படும் இன்றைய இலங்கையில், இலக்கியத்தின் ஊடாக இணக்க அரசியல்பேசிய மல்லிகை இதழ் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம்தான்.

செல்வி திருச்சந்திரன் தலைமையில் இலங்கை முற்போக்கு கலைமன்றம் கொழும்பில் நடத்திய மூத்த முற்போக்கு இலக்கிவாதிகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு, பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்தினால் இலங்கையில் நீடித்த போரினால் ஏற்பட்ட இலக்கிய தேக்கத்தை களைவதற்கும் உந்துசக்தியாக அமையும் என்று கருதுகின்றேன். அத்துடன் இளம்தலைமுறை எழுத்தாளர்கள், தாம் கடக்கவிருக்கும் பாதை குறித்தும், கடந்து சென்றவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் உதவும். பிரேம்ஜி, ரகுநாதன், கணேசலிங்கன், காவலூர்ராஜதுரை,  நுஃமான், டொமினிக்ஜீவா ஆகியோர் தவிர்ந்து ஏனைய மூவரும் .இக்பால், முகம்மதுசமீம், நீர்வைபொன்னையன் ஆகியோர் மாத்திரம் இந்த நிகழ்விற்கு வருகை தந்தனர் என்றும் விழாவில் கணிசமானோர் கலந்துகொண்டதாகவும் அறிந்துகொண்டேன். இவர்கள் குறித்த உரைகளை சமர்ப்பித்தவர்கள் பேராசிரியர்கள் தில்லைநாதன், சபா.ஜெயராசா, செ.யோகராசா, கலாநிதி ரவீந்திரன், டொக்டர் எம்.கே.முருகானந்தம், திக்குவல்லைகமால், மேமன்கவி. தேவகௌரி லெனின்மதிவாணன் ஆகியோர். மிகவும் பொருத்தமானவர்களையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள். தொலைவில் இருந்தாலும் இந்தப் பேச்சாளர்களையும் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளையும் திரும்பிப் பார்க்கின்றேன். நினைத்துப் பார்க்கின்றேன்.

                                                  
letchumananm@gmail.com