ஆந்திரக் கைக்கிளை

 

அனலை ஆறு இராசேந்திரம்

 

மிழிலக்கியம் கூறும் கைக்கிளை என்பது ஒருதலைக் காதலாகும். 'கைக்கிளையுடையது ஒருதலைக் காமம் என்று நம்பியகப் பொருள் கூறும், தலைவன், தலைவி என்னும் இருவரும் ஒருவரை யொருவர் மனமொத்துக் காதலிக்கும் ஒழுக்கம் ஐந்தினை எனப்படும். இரு பக்கமும் காதல் அமைந்து நிறைகாதல் என்னும் உயர்ந்த நிலைபெறுதலின், இது அன்பின் ஐந்தினை எனச்சிறப்பித்துப் போற்றப்படும். இஃது அன்புக் குறைபாடில்லாத ஒழுக்கம் என்பது அதன் சிறப்பினால் விளங்கும். தலைவன் தலைவி என்னும் இருவரில் ஒருவர் மட்டும் மற்றவரைக் காதலிப்பது கைக்கிளை எனப்படும். இங்கே ஒரு பக்கம் காதல் அமைந்து. மறுபக்கம் காதல் அமையாது போதலே இயல்பாதலின், இது குறைகாதல் என்னும் சிறுமை பொருந்திய ஒழுக்கமாகிறது.' கைக்கிளை என்பதற்கே சிறுமை கொண்ட உறவு என்பது பொருளாகும். (கை-சிறுமை: கிளை-உறவு)

 

நம் அகத்துறை நூல்கள் போன்றே ஆந்திரநாட்டு அகநூனூறு எனப் போற்றப்படும் 'காதாசப்த சதி' தொகை நூலினும் கைக்கிளைப் பாடல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பிராகிருத மொழியில் எழுதப்பட்டு, பேராசிரியர் இரா.மதிவாணன் அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்த 'காதா சப்தசதி' நூலின் கைக்கிளைப் பாடல்களை நம்; கைக்கிளைப் பாடற் போக்கோடு ஒப்பிட்டு மதிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

கைக்கிளை ஆண்பாற் கைக்கிளை என்றும், பெண்பாற் கைக்கிளை என்றும் இரு வகைப்படும். ஆண்பாற் கைக்கிளை,

 

'காட்சி ஐயம் துணிவே உட்கோள்

பயந்தோர்ப் பழிச்சல் நலம்பா ராட்டல்

நயம்புற் றிரங்கல் புணரா இரக்கம்

வெளிப்பட இரத்தல்'

 

என ஒன்பது துறைகளால் வெளிப்படுத்தப்படும் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும்.

 

'காண்டல் நயத்தல் உட்கோள் மெலிதல்

மெலிவொடு வைகல் காண்டல் வலித்தல்

பகல்முனி வுரைத்தல் இரவுநீடு பருவரல்

கனவின் அரற்றல் நெஞ்சோடு மெலிதல்'

என்னும் பத்து துறைகளால் பெண்பாற் கைக்கிளை நடக்கும்.

 

புறநாறூற்றிற் காணப்படும் மூன்று கைக்கிளைப் பாடல்கள் (83,84,85) செந்தமிழ்ப் புலமைச் செல்வியாகிய நக்கண்ணையார் என்னும் புலவர் போரவைக் கோப்பெருநற் கிள்ளி என்னும் மன்னன்பாற் கொண்ட ஒருதலைக் காமத்தைக் காட்டுகின்றன.

 

அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென்

தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே

அடுதோள் முயங்க அவைநா ணுவலே

என்போற் பெருவிதுப் புறுக என்றும்

ஒருபாற் படாஅ தாகி

இருபாற் பட்டவிம் மைய லூரே 

                                                                            (புறம்,83)

 

கிள்ளிபால் ஒருதலைக் காதல் கொண்டிருந்த நக்கண்ணை பசப்பு அடைந்ததும், வளைகள் கழன்று வீழ்ந்தமையால் தாய்க்கு அஞ்சியதும், அவனைத் தழுவிட எண்ணிய வேளையெல்லாம் ஊருக்கு அஞ்சியதும், இருவர்தம் உறவுக்குத் துணையாகியும் பகையாகியும் என்றும் இரண்டு கூறாகி நிற்கும் இவ்வுலகோர் தன்னைப்போல் துயருறுக எனத் திட்டியதும் இங்கே தெரிகிறது.

 

'என்போற் பெருவிதுப் புறுக' என்றும்ஒருபாற் படாஅ தாகி 'இருபாற் பட்டவிம் மையலூரே' என்னும் அடிகளில் நக்கண்ணையார் ஒருதலைக்காதலின் வெம்மைத் துயர் நன்கே தெரிகிறது.

 

ஒரு தலைக்காதல், அதன் நிலையினின்று அன்பின் ஐந்திணைக் காதல் என்னும் நிலைக்கு உயர்ந்தாலொழிய, எதுபயனும் விளைக்காது. இக்கருத்தைத் தாதா சப்த சதிப் பாடலொன்று கவிக் கூற்றாய்ப் பதிவு செய்திருக்கிறது.

 

'ஏழையின் கனவு நிறைவேறாதது போல

நீ அவள் மீது வீசிய பார்வை

காதலாகக் கனியாததால்

பயன் விளைக்காத தாயிற்று'

 

என்று அப்பாடல் பேசுகிறது.

 

கைக்கிளைக் காதல் ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் துன்பத்தையுமே தரவல்லது. நினைந்து நினைந்து துயருறும் போக்கே இவ்வகைக் காதலுக்கு ஆளான மங்கையரிடம் காணப்படும்.

 

'நெஞ்சே நீயே அவரை விரும்பினாய்,

அவர் விரும்புகிறாரா என்பது அறியாமல்

உன் நெஞ்சை அவரிடம் போக்கி

ஏனோ வருந்துகிறாய்' எனும் காதா சப்த சதிப்பாடல் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் நெஞ்சோடு மெலிதல் என்னும் துறையின் பாற்பட்டதாகும். மேலைக் கவிதைகள் இரண்டும் கைக்கிளைக் காதலின் தன்மையையும் பயனின்மையையும் கூறுவனவாயுள்ளன.

 

தலைவியின் மேனி அழகில் ஈடுபட்டு ஒருதலைக் காதலுற்ற தலைவன் அவள் மேல் மயங்கி நின்றதாகப் பாடுவான் வள்ளுவன்.

 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

 

                                                                     (திருக்குறள்)

 

காதா சப்தசதி அவனிடம் மயக்கத்தினால் ஏற்பட்ட மாறுபட்ட செயற்பாட்டைக் காட்டுகிறது.

 

'அந்த இளைஞன் வயல் வழியாகத்

தன் கணவன்மார்க்கு உணவு எடுத்துச் செல்லும்

இளமகளிரைப் பார்த்த மயக்கில்

ஏரில் எருதுகளைப் பூட்டத் தொடங்கிய

தும்பை அவிழ்த்து விடுகின்றான்'

 

                                                                              (கா..சதி)

 

திருக்குறள் காட்டிய தமிழ் இளைஞன் தலைவியைப் புரிந்து கொள்ள முடியாது சிந்தை தடுமாறி நிற்க, ஆந்திர இளைஞனோ தடுமாற்றத்தின் விளைவாய்த் தன்வினைக்கு எதிராகவே செயற்பட ஆரம்பிக்கிறான். உருவிலும் அழகிலும் மயங்கி நிற்பதாகக் காட்டும் இப்போக்கு ஐயம் என்னும் துறையாகும்.

 

 

அழிபடர் எவ்வம் கூர ஆயிழை

பழிதீர் நன்னலம்; பாராட் டின்று

 

                                                 (புற.வெ.மாலை)

 

நினைவில் எழுந்து துன்பம் செய்யும் தலைவியின் முகவழகைச் சிறப்பித்துப் பேசுவது நலம் பாராட்டல் ஆகும்.

 

 

என் நினைவிற் றோன்றும்

உன் அழகிய முகத்தின் காட்சி

இன்னும் எத்துணை காலம் வரை

இத்துயரத்தில் நீடித்திருக்கச் செய்கிறதோ

தெரியவில்லை

                                                    (கா..சதி)

 

கைக்கிளைக் காதலுக்கு ஆளான தலைவன், அதனாற் காணும் பயன் தலைவியின் தோற்றத்தை எண்ணி எண்ணி மகிழ்தலும் ஈற்றில் அவள் எட்டாக் கனியாய் நிற்கும் திறம் கண்டு வருந்துவதுமேயாகும்.

 

ஒருதலைக் காதல் கொண்ட தலைவியை காமன் கணைகள் குத்திக் குதறின. அவள் உள்ளம் தலைவனைக் கூட விரும்பியது. காதலை அறியாதவனாயும் நிலையைப் புரிந்து கொள்ளாதவனாயும் விளங்கினான் அவன். இந்நிலையில், காமதேவனிடம் தன்னைப் போலத் தலைவனும் காமத் தீயின் வேதனையில் வாட அருள் புரியுமாறு வேண்டுகிறாள் தலைவி.

 

காமனே

மறுபிறப்பிலும் என் உயிரை

உன் திருவடியில் வைத்து வழிபடுவேன்

எனக்குச் செய்யும் பேருதவியாக நினைத்து

ஒரே ஒரு செயலை மட்டும் செய்வாயா? என்மேற்பெய்யும்

மலரம்புகளை

அவர் மேலும் ஏவ மாட்டாயா

                                                     (காதா..சதி)

 

இருபக்கமும் காதலுணர்வு தோன்றி ஐந்திணை நிலைக்கு உயர்ந்தபோதுதான் இன்பம் கிட்டும் என்னும் கொள்கை இங்கே புலப்படுத்தப்படுகிறது.

 

சிறுபருவம் தொட்டுத் தலைவியை அறிந்திருந்த தலைவன், அவள் மேற் காதல் கொண்டான். அவள் உடல் வளர்ச்சி அவன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிறியனவாயிருந்த கொங்கைகள் வளர்ந்து நன்கு பெரிதாகியிருந்தன. ஆனால், அவளோ அவனிடத்தே காதல் கொண்டிலள். இந்நிலையில் அடைதற்கு அருமையுடையனவான அவள் கொங்கைகளை நயந்து, நெஞ்சம் குலைகிறான் தலைவன்.

 

கண்ணன் வாமனனாகச் சிறுவடித்தில் தோன்றி

மதுவென்னும் அரக்கனையும்

விண்ணும் மன்ணும் அளந்த

நெடுமாலாகத் தோன்றி

மாவலி மன்னையும் கொன்றார்

அதேபோல் இவள் கொங்கை

முதலிற் சிறிதாக இருந்து

இப்போது பெரிதாக வளர்ந்திருக்கிறது!

                                                                                   (கா..சதி)

 

இது நயப்புற்றிரங்கல் என்னும் துறையாகும். இதற்குப் புறப்பொருள் வெண்பா மாலை தரும் எடுத்துக்காட்டுப் பாடல் கீழே வருவதாகும்.

 

பெருமட நோக்கிற் சிறுநுதற் செவ்வாய்க்

கருமழைக்கண் வெண்முறுவல் பேதை திருமுலை

புல்லும் பொறியி லேனுழை

நில்லாதோடும் என்நிறையில் நெஞ்சே

 

இவ்வாறு, காதா சப்த சதிப் பாடல்கள் புறப்பொருள் வெண்பா மாலை அகத்திணையிற் கைக்கிளைப் பாடல் விதிகளுக்கும் எடுத்துக் காட்டுச் செய்யுள்களுக்கும் ஒப்பவே செல்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது.

 

 

 

 

 

 www.tamilauthors.com