21ஆம் நூற்றாண்டின் ஈழத்து தீன்தமிழ்ப் புலவர் புலவரான ஜமாலிய்யா  செய்யத் கலீல் மௌலானா

 

வாழ்க்கைச் சுருக்கம்

பிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவல்லம் அவர்களின் குல வழியில் 34ஆம் தலைமுறை வாரிசாக 1937 ஆம் வருடம் டிசம்பர் 20ஆம் திகதி யாஸீன் மௌலானா அவர்களுக்கும் அன்னை சஹர்வான் கண்ணே அவர்களுக்கும், ஈழமணித்தீவதன் தென்கரை தன்னிலே விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வெலிகாமம் எனும் ஊரில் வெலிப்பிட்டி எனும் கிராமத்திலே பிறந்தார்கள். அவர்கள் வெலிகமை அறபா சிரேஷ்ட வித்தியாலயத்தில் s.s.c. வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கற்றுத் தேர்ந்தார்கள். பின்னர் தமிழின் மேல் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆர்வத்தினால் மீண்டும் s.s.c தேர்வை தமிழிலும் எழுதி தேறினார்கள். பள்ளியில் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தும் தமிழ் மீது அவர்களுக்கிருந்த ஆர்வமிகுதியால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது சங்ககால ஏனைய நூல்களையும் தாங்களாகவே கற்றுக் கொள்வதில் பேராசைகொண்டு அதில் மகத்தான வெற்றியும் பெற்றார்கள். இதனால் நன்னூல்,தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், காக்கை பாடியம்  முதலான பன்னூல்களையும் மிக எளிதில் கற்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.   
 

சங்க இலக்கியங்கலான எட்டுத்தொகை பத்துப்பாட்டு, அகநானூறு, புறநானூறு, நளவெண்பா, கலிங்கத்துப்பரணி போன்ற நூற்களே அவர்கள் விரும்பிப் படிக்கும் நூற்களாக அமைந்தன.
 

ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் இளம் வயதிலேயே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக ஓதிமுடித்து விட்டார்கள். திருக்குர்ஆன் ஓத தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் அருமைத் தந்தையாரான ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானா அவர்களிடமே முறைப்படி கற்றுத் தேர்ந்தார்கள். ஜமாலிய்யா ஸெய்யித் யாஸீன் மௌலானா  அவர்களுக்கு நிகராக மார்க்க, உலக அறிவுகளைக் கற்ற, ஆய்வுகளை செய்து டாக்டர் பட்டங்களுக்கு நிகரான பட்டயங்கள் பெற்ற ஆசிரியர்களைக் காணல் அரிது. இவர்களின் தந்தை யாஸீன் மௌலானா அவர்கள் கற்றதைக் கசடறக் கற்றதோடு நில்லாமல் அதற்கு ஏற்றவாறு தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மாமேதையாவார்கள். அக்காலத்தில் இலங்கையிலும், இந்தியாவிலும் அவர்களின் கல்வித் திறமையை, ஆன்மீக பேரொளியைப் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நடமாடும் பல்கலைக்கழகத்திலேயே உள்ரங்க, வெளிரங்க அறிவுகளைக் கற்றதால் ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களுக்கு மார்க்க மெய்ஞ்ஞான அறிவுகளை கற்பதற்கு வேறு கலைநிலையங்களுக்கு போகவேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை.

 

அதே போன்று வாழ்க்கைப் பாடத்தையும் அவர்கள் தம் தந்தையாரிடமே முறையாகக் கற்றார்கள். அரபு மற்றும்  தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சம பாண்டித்தியம் பெற்றுள்ள சங்கைக்குரிய கலீல் அவ்ன் மௌலானா அவர்களை நடமாடும் பல்கலைக் கழகம் என்றால் அது மிகையாகாது. ஆகவே அவர்களுக்கு பட்டயம் எதுவும் தேவைப்படவில்லை. ஈழத்தின் ஒரு மூலையிலிருந்து கொண்டு ஆரவாரமின்றி அழகுதமிழ்ப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
 

1953 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே தமிழ்க் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்ட அவர்கள் இலங்கை தினகரன் பத்திரிகையில் அவ்வப்போது தங்௧ள் கவிதைகளை வெளியிட்டு வந்தார்கள். இவ்வாறு தங்களை வெளியுலகுக்கு அதிகம் அறிமுகம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் வெளிவந்த கவிதைகளின் உள்ளடக்கம் தமிழறிந்தவர்களால் வியந்து பேசப்பட்டது. s.s.c. தேர்வுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள். பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார்கள்.
 

 ஆசிரியர்  பயிற்சி 1962 இல் முடிய, 1963 ஆம் ஆண்டில் அவர்கள் ஊரிலேயே உள்ள அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் அமர்ந்தார்கள். அங்கு  10 ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். ஆரம்பப் பள்ளி வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பித்துள்ளார்கள். அதன் பின்  1972 ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிபராக பதவியுயர்வு கிடைக்கப்பெற்று குருநாகல் என்னும் ஊரிலுள்ள பண்டாரகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு ஒரு வருடம் சேவை செய்தார்கள். பின்னர் அங்கிருந்து வட்டாரக் கல்வி அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார்கள்.
 

1973ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலம் சிலாபம், புத்தளம் வாட்டரங்களில் (CEO) ஆகப் பணிபுரிந்தார்கள். பின்னர் 1978 ஆம் ஆண்டு அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு  E.O. (Educational Officer) ஆக பதவி உயர்வு கிடைத்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அங்கு கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தும் அவர்களுக்கு மாற்றம் கிடைக்காத காரணத்தால் பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.
 

அன்று முதல் ஆதியிறை, அவர்களை ஆன்மீகப் பணிக்கு முற்றிலுமாகத் திருப்பி விட்டது போலும். தம் தந்தையார் முன்னெடுத்துச் சென்ற மெய்ஞ்ஞான வழியை தம் தந்தையின் மறைவுக்குப் பின்னர் அப்பணியை பொறுப்பேற்று ஞான வேட்கை கொண்டு மெய்ஞ்ஞான அறிவைத்தேடும் பல பக்தர்களுக்கு மெய்ஞ்ஞான அறிவுடன் கூடிய மானுடப்பண்பை போதித்து வருகிறார்கள். இவர்களின் பக்தர்கள் இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், மலேசியா, குவைத், கத்தார்,  சிங்கை, பிரித்தானியா போன்ற  உலகின் பல இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.


சேவை  

ஏகத்துவ மெய்ஞ்ஞான அறிவைப் போதிக்கும் முகமாக “ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை” என்ற பெயரில் ஒரு ஆன்மீக அமைப்பை தோற்றுவித்து இன்று வரை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  முழுக்க முழுக்க ஞானத்தையே கருப்பொருளாகக் கொண்டு “மறை ஞானப் பேழை” எனும் மாத இதழையும் ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நடாத்திச் செல்கிறார்கள்.
 

ஆன்மீகப் பணியின் பக்கம் தன்னை விடுத்துக் கொண்டாலும் தமிழ் மொழிக்கு தன்னாலான சேவையை இன்றுவரை செய்து வருகிறார்கள். இதன் விளைவே 2012 இல்  இவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “குறிஞ்சிச் சுவை“ எனும் தமிழ் இலக்கிய  நூலாகும். இதில் வரும் செய்யுள்கள் சங்ககால தமிழ் பாக்களை ஒத்திருப்பது நூலாசிரியரின் தமிழாற்றலைப் புலப்படுத்துகிறது. இது மட்டுமின்றி தென்னிந்தியாவைச் சேர்ந்த  ஒருவர்  மௌலானா அவர்களை சந்தித்தபோது, தாங்களின் தமிழ்க் கவிதைகள் மரபுக்கவி அமைப்பையே கொண்டிருப்பதன் காரணம் என்ன? இக்காலத்தில் இப்படியெல்லாம் எழுதினால் இதனைப் படிப்பவர்கள் யார்? இது பயனில் பணியன்றோ? என்று வினவினர். அதற்கு  மௌலானா அவர்கள் அளித்த பதில் பிரமிக்கத்தக்கதாகும். அது, “பழமையைப் பாதுகாக்க வேண்டுமள்ளவா?” என்பதே! வரிகளை மடக்கி மடக்கி, மேலும் கீழும் பிரித்து புதுக்கவிதை எனச் சொன்னாள். அதையே தொடர்ந்து கவிஞர்களும் எழுதி வந்தால் மெல்லத் தமிழ் இனிச் சாகும் தானே!  உரைநடைபற்றிப் பேச்சு வரும்பொது அன்னைத் தமிழ் மொழியை அருந்தமிழில் எழுதுவதே தங்களுக்கு எளிதாக இருப்பதாக அடிக்கடி பகர்வார்கள். சாதாரண நடையில் எழுதுவதற்கு தங்களின் நிலையிலிருந்து சற்று கீழிறங்கி வந்து எழுதவேண்டியிருப்பதாக கூறி புன்னகைப்பார்கள்.  “தமிழ் எம் உயிர் ; அதில் தவறு செய்பவரை மன்னிக்கமாட்டோம்.” என்று கூறும் இவர்கள் தமிழ் மொழி  மீது கொண்டுள்ள அன்போ வார்த்தைகளால் வடிக்க முடியாது.  தமிழில்  இலக்கணப்  பிழைகள் மிகைத்து அதன்  தனித்துவம் குன்றிப்போகும் இக்காலத்தில், தமிழ் இலக்கணத்தின் பிரதான நூலான நன்னூலை மக்கள் இலகுவில்   படித்து விளங்கி இலக்கணப் பிழையின்றி தமது படைப்புக்களை படைக்க  நன்னூல் இலக்கண விளக்கம்” எனும் பெயரில் விளக்கவுரை  ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
 

ஜமாலிய்யா ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா அவர்களால், 1976 ஆம் ஆண்டு கொழும்பு ரோயல் கல்லூரியில் மண்டபத்தில் நாவாலியூர் சோ. நடராசா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் “ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர் ” எனும் தலைப்பில் வாசிக்கப்பட்ட கவிதை இலங்கை சாகித்திய மண்டலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது இது நூலுருப்பெற்று வெளிவந்துள்ளது. 
 

யாப்பிலக்கண கட்டுக்கோப்பு மீறாமல் அமைந்த இவர்களின் தமிழ்  ஆக்கங்களில் சங்ககால புலமையை காணலாம். தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதிய பிரபந்தத்தையே இவர்களின் "நாயகர்  பன்னீரு பாடல்" எனும் கவிதை நூல்  வழங்கியது.
 

நாயகத்திருமேனி அவர்களைப் பற்றி எழுதுவதிலும் கூட ஒரு புதுமை இருக்க வேண்டும். பெருமானாரின் சிறப்பு அதில் புலப்பட வேண்டுமென ஒரு புதுமையான அமைப்பில் இந்நூலை யாத்தார்கள்.   நபிகள் நாயகம் அவர்கள் பிறந்தது ரபியுல் அவ்வல் பிறை 12 இல் அதே போன்று அவர்களின் மறைவும் ரபியுல் அவ்வல் பிறை 12 , அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்டதும் அதே பிறை பன்னிரண்டிலாகும், இதனை மையமாகக் கொண்டு  பன்னிரண்டு தலைப்புக்களில்  ஒவ்வொரு  தலைப்பின் கீழும் 12 அடிகளைக்   கொண்ட கவிதையைத்  தொகுத்துள்ளது தமிழ் உலகுக்கு இவர்களால்   அளிக்கப்பட புதிய ஒரு பிரபந்த வகை யாகும் என்று  பேராதனை பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் சு.வித்தியானந்தன் அவர்கள்  குறிப்பிட்டிருப்பது  கவனிக்கத்தக்கதாகும்.
 

இன்னும் அற்புத அகில நாதர் எனும் தலைப்பில்  நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் நடைபெற்ற அற்புதங்களை  அழகு தமிழில் கவிதை வடிவில் தந்துள்ளார்கள். இது தற்போது துள்ளிக் குதிக்கும் ஓசை வடிவில் பாடலாக வந்துள்ளது. இதை கேட்போர்கள் மெய்மறந்து நாயகத்தின் மீது ஆராக் காதல் கொள்ள வைக்கிறது .

அரபு மொழியிலும் தமிழ் மொழியிலும் இவர்களுக்குள்ள புலமையை இவர்களால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து விளங்க முடிகிறது. 
 

இஸ்லாமிய தமிழ் உலகுக்கு சீராப்புராணத்தைத் தொடர்ந்து இதுவரை பெரிய புராணம் எதுவும் வெளிவர வில்லை. இந்தக் குறையை நீக்க இவர்கள், நபிகள் நாயகத்தின் தோழரான உமர் கத்தாப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “உமர் (ரலி) புராணம்“ எனும் பெயரில் ஒரு புராணத்தை யாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

இன்னும் இஸ்லாமிய  நாகரீகம் தொடர்பான ஒரு நூலையும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையொன்றும் இவர்களால் எழுதப்பட்டு வருகின்றது.    கிட்டத்தட்ட இருபத்து ஐந்து நூல்களை எழுதியிருக்கிறார்கள். இவைகளில் அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களும், இஸ்லாமிய இலக்கியம், தமிழ் இலக்கியம், இஸ்லாமிய மெய்ஞ்ஞான நூல்களும் அடங்கும். தனது எழுபத்தாறாவது வயதிலும் தமிழ் இலக்கியத்துக்கும் ,  இஸ்லாமிய இலக்கியத்துக்கும்,தன்னையறியும் மெய்ஞ்ஞானத்துக்கும் அரும்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 

மௌலானா அவர்களால் எழுதப்பட நூற்களின் விபரம் பின்வருமாறு.
 

·      மகானந்தாலங்கார  மாலை – (சித்திரக் கவிதை)

·      ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர். (இலங்கை சாகித்திய மன்றத்தில் பரிசு பெற்றது)

·      பத்று மௌலிது (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு)

·      பர்சன்ஜி மௌலித் (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு)

·      துஹ்பதுல் முர்ஸலா (அரபு மூலம் தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்.)

·      றிஸாலத்துல் கௌதிய்யா (தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்கமும்.)

·      ஹகாயிகுஸ் ஸபா (பரமார்த்தத் தெளிவு )

·      பேரின்பப் பாதை  (ஞான விளக்கம் தமிழில்)

·      மனிதா! (அமுத மொழித் தொகுப்பு)

·      கஸீததுல் அஹ்மதிய்யா (அரபு தமிழ் வாரிதாது பாக்கள்)

·      தாகிபிரபம்  (ஞான விளக்கம்)

·      இறையருட்பா (ஞானக் கவிதைகள்)

·      அற்புத அகில நாதர் (கவிதை)

·      நாயகர் பன்னிரு பாடல் (கவிதை)

·      அவன் நாயகர் அருள் மொழிக் கோவை (ஆங்கிலம்,தமிழ்)

·      மருள் நீக்கிய மாநபி

·      நபி வழி நம் வழி

·      ஒளியை மறைக்க துணியும் தூசு

·      இறைவழி ஸய்யிது முஹம்மது மௌலானா  (கவிதை)

·      உண்மை விளக்கம்

·      குறிஞ்சிச் சுவை

வெளிவர இருப்பவை

·      நன்னூல் இலக்கண விளக்கம்  

·      உமர் (ரலி) புராணம்

·      இஸ்லாமிய நாகரிகம்

·      திருக் குர்ஆன் விரிவுரை

 

 

 

 www.tamilauthors.com