மங்கையும் மந்தியும்

கல்பனா சேக்கிழார்


சங்க இலக்கிய குறுந்தொகைப் பாடல் ஒன்றில் விலங்குகளின் அன்பு வாழ்கையினைக் கூறி வாழ்வியல் கருத்தினைப் புலப்படுத்துகின்றார் கடுந்தோட் கரவீரன் என்னும் புலவர். இந்த பாடலைப் படிக்கும் போது விலங்குகள் இவ்வளவு அன்புடைவனா என்று தோன்றும்.கள்ளம் கபடம் இல்லாத உண்மையான அன்பு.

நிலமோ குறிஞ்சி.குறிஞ்சி என்றால் மலைப் பகுதிதானே.அந்த மலைகள் எங்கும் குரங்குகள் நிறைந்து காணப்பெறுகின்றன.குரங்களின் இயல்பு ஆணும் பெண்ணும் இணைந்து கூட்டங் கூட்டமாக மரங்களுக்கு மரம், கிளைக்குக் கிளை, பாறைக்குப் பாறை தாவுவது. இப்படி தாவி விளையாடிக் கொண்டு இருக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா?

சில நேரங்களில் தவறி விழுந்துவிடுவதும் உண்டு.அப்படி ஒருநாள் ஒரு ஆண் குரங்கு தவறி விழுந்து இறந்து விடுகிறது. உடனே அதன் மனமொத்த அன்பிற்கினிய காதலியாகிய பெண்குரங்கு கண்ணீர் வடிக்கிறது.கத்துகிறது கதறுகிறது.காதலனைப் பிரிந்த துன்பத்தைத் தாங்க முடியாமல் துடிக்கிறன்றது.

தன் துணையில்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது என முடிவெடுக்கின்றது.ஐயோ என் குழந்தை இருக்கிறது என் செய்வேன் என எண்ணுகிறதுஅடுத்த கணம், தன் குழந்தையை நன்கு பேணி வளர்த்து ஆளாக்குவார் யாரென ஆய்து தனது இளம் குட்டியைத் சொந்தகளிடைம் ஒப்படைக்கின்றது.

ஒப்படைத்துவிட்டு என்ன செய்தது தெரியுமா? செங்குத்தான மலைப் பகுதியை நோக்கிச் செல்லுகின்றது. தனது இன்னுயிர் காதல் கணவனை மனதுள் நினைத்து, மலையில் இருந்து குதித்து இவிழுந்து, தனது உயிரை மாய்த்துக் கொள்ளுகிறது.
இந்த விலங்குகளின் அன்பு வாழ்க்கையினைத் தோழி தலைவனிடம் எடுத்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

தோழி தலைவனிடம் மலைநாட்டுக்குச் சொந்தமானவனே மலையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நீ பார்த்திருப்பாய்.பார்த்திருந்தும் இரவு நேரத்தில் மலைகளைக் கடந்து தலைவியைக் காண வருகிறேன் என்று வம்பு பண்ணுகிறாயே .நீ வரும் மலைப் பகுதியில் உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் தலைவியின் உயிர் அல்லவா பிரிந்து விடும்.
நீங்கள் நெடுநாள் வாழவேண்டியவர்கள் அல்லவா! அதனால் இரவில் வருகிறேன் என்று கூறாதே! என்கிறாள் தோழி.

இப்பொருளினைப் படித்துவிட்டு இப்பொழுது இப்பாடலைப் படித்துப் பாருங்களேன்.எத்தனை சுவையாக உள்ளதென்று. சுவைத்துப் பாருங்கள் சங்க இன்பம் காணுங்கள்.


கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட!நடுநாள்
வாரல் வாழியோ!வருந்துதும் யாமே!
                            
 (குறுந்தொகை,
69)