வில்லக விரலினார்

முனைவர்.இரா.குணசீலன


சங்க காலத்தில் தலைவன் பரத்தையரிடம் செல்வது பெரும் தவறாகக் கருதப்படவில்லை. அதற்கு அக்காலச்சூழல் ஒரு காரணமாக அமைகிறது. தலைவனின் செயலால் தலைவி வருந்துவதுண்டு. அவ்வேளையில் தலைவி தலைவன் மீது ஊடல் (கோபம்)கொள்வாள், வாயில் மறுப்பாள் (தலைவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தல்) ஆயினும் தலைவனை ஏற்றுக்கொள்வாள். சில நேரங்களில் பரத்தையை நொந்துகொள்ளுதலும் உண்டு.

தலைவி தன்னைப் பழித்துப் பேசினாள் என்பதை அறிந்தாள் ஒரு பரத்தை. அதனால் தலைவி மீது கோபம் கொண்டாள். தலைவியின் உறவினர் கேட்குமாறு தனக்கும் தலைவனுக்குமான நெருங்கிய அன்பு நிலையைப் புலப்படுத்துகிறாள்.........


பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
குறுந்தொகை -370. (மருதம் - பரத்தை கூற்று)


வில்லகவிரலினார்.

பொய்கையிலிருக்கும் ஆம்பல் மலரானது, வண்டுகளின் வருகையை உணர்ந்து தன் இதழைத் திறக்கும். இத்தகைய குளிர்ச்சியான நிலத்தின் தலைவனோடு சேராது தனித்திருந்தால் தான் நானும் தலைவனும் இரு வடிவினை உடையவர்களாக இருப்போம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து அணைந்திருந்தால் வில்லோடு சேர்ந்த விரல் போல ஒருவராகத் தான் காட்சியளிப்போம். என்கிறாள் பரத்தை.

மலரினும் மெல்லிது காமம் என்பர் வள்ளுவர். அதன் செவ்வியை உணர்ந்து தலைப்படுபவர் சிலரே என்பது அவர்தம் கருத்து.

காமம் என்ற சொல்லை இக்காலக் கண்கொண்டு காண்பதை விட சங்க காலக் கண்கொண்டு காண்பது நலம் தருவதாக அமையும்.

கமம் என்ற சொல்லே காமம் என்றானது. கமம் என்ற சொல்லுக்கு நிறைவு என்பது பொருளாகும். சங்க இலக்கியத்தில் பயின்று வரும் காமம் என்ற சொல்லுக்கு அன்பின் நிறைவு என்பதே பொருளாகும்.

அத்தகைய மலரை விட மென்மையான அன்பின் முதிர்ச்சியைச் சுட்டும் காமத்தைத் தலைவனின் தேவையை உணர்ந்து அளிக்கத் தக்கவள் தானே என்கிறாள் பரத்தை.

ஆம்பலின் மலரானது வண்டின் வருகையை அறிந்து தன் இதழைத் திறக்கும் என்பதற்கு தலைவன் தான் தன்னைத் தேடி வருகிறான். தான் தலைவனைத் தேடி வரவில்லை என்ற பொருளும் நோக்கத்தக்கதாகவுள்ளது.

இப்பாடலில் பரத்தை தனக்கும் தலைவனுக்குமான உறவுநிலையை வில்லுக்கும் விரலுக்குமான உறவு நிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறாள். இத்தொடரின் சிறப்பினைக் கருதி இப்புலவர் வில்லக விரலினார் என்று அழைக்கப்படலானார்.




gunathamizh@gmail.com