ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்

பேராசிரியர் இரா.மோகன்


'
ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான அழகு, கம்பீரம்' என ஹைகூ கவிதையின் திறத்தினைப் பறைசாற்றுவார் கவிஞர் தமிழ்நாடன். தமிழ்க் கவிதை உலகில் புதுக்கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக 1984-ஆம் ஆண்டில் தொடங்கிய ஹைகூ பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றதுளூ வாழையடி வாழையெனப் புதுப்புதுக் கவிஞர்கள் தோன்றி, ஹைகூவின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்கி வருகின்றனர். நெல்லை சு.முத்துவின் பார்வையில்,

'மூன்றடிச் சொற்செட்டு
நேரடி அனுபவ வெளிப்பாடு
மூன்றாவது அடி மின்தாக்கு'


-என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை ஆகும். பாடுபொருளாலும் பாடும்முறையாலும் சிறந்து விளங்கும் ஒரு சில ஹைகூ கவிதைகள் குறித்து ஈண்டுச் சுருங்கக் காண்போம்.

விலகி இருக்கும் மனித உறவுகள்

'வெறுங்கை என்பது மூடத்தனம் - விரல்கள் பத்தும் மூலதனம்' என்னும் எழுச்சி மிகு வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. அவரது உடன்பிறப்பு மலர்மகன்ளூ அவரும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் ஆவார். 'தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்...' என்பது அவர் அண்மையில் வெளியிட்டுள்ள ஹைகூ கவிதைகளின் தொகுப்பு. அதில் இடம் பெற்றுள்ள ஓர் அருமையான ஹைகூ இது:


'தொடர்பு
எல்லைக்கு அப்பால் -
உறவுகள்'


இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் மனிதனால் தொடர்பு கொள்ள முடிகின்றதுளூ தொடர்பியல் அந்த அளவிற்கு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தொடர்பு எல்லைக்குள் வாழும் மனித உறவுகளோ விலகி இருக்கின்றனளூ குடும்ப உறுப்பினர்கள் இடையே இடைவெளியும் விரிசலும் மிகுந்து காணப்படுகின்றன. இதனைத் தம் ஹைகூ கவிதையில் 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' என்பதன் வாயிலாக நயமாகப் பதிவு செய்துள்ளார் மலர்மகன்.

அறிவின் விளையாட்டும் உணர்ச்சி மீட்டலும்


எஸ்.ஷங்கர நாராயணன் ஒரு தேர்ந்த சிறுகதை ஆசிரியர் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். 'கவிதை எனக்கு வழிபாடு, மொழிப்பாடு... கதைகள் எழுதப்-படுகின்றன. கவிதைகள் தம்மை எழுதிக் கொள்கின்றன' என மொழியும் அவர், ஒரு திறமான கவிஞரும் ஆவார். 'கூறாதது கூறல்', 'ஞானக் கோமாளி', 'ஊர்வலத்தில் கடைசி மனிதன்', 'திறந்திடு சீஸேம்!', 'கடவுளின் காலடிச் சத்தம்' என்னும் ஐந்து கவிதை நூல்களையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது ஒரு சிறப்புத் தகவல் ஆகும். 'கவிதைக்கு / மெய்யழகு / ஹைகூ' என்பது அவர் ஹைகூ குறித்துப் படைத்துள்ள ஓர் அழகிய ஹைகூ.


'சாகச் சொல்லும் வாழ்க்கை
வாழச் செல்லும் மரணம்
என்ன செய்ய?'

என்பது எஸ்.ஷங்கரநாராயணனின் முத்திரை பதித்த ஹைகூளூ இது அறிவின் விளையாட்டும் உணர்ச்சி மீட்டலும் சரி விகிதத்தில் கலந்து அமைந்த ஒன்றாகும்.

இல்லற வாழ்வின் பதிவு

இன்று குடும்ப உறவுகளில் - குறிப்பாக, கணவன்-மனைவி உறவில் - சிக்கலும் போராட்டமும் எழுவதற்குக் காரணம் தன்முனைப்பே (நுபழ). 'நீயா? நானா?' என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் உகந்ததாக இருக்கலாம்: ஆயின், இல்லற வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண், ஒருவர்க்காக மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவது தான் முக்கியம். 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்னும் ஆன்றோர் அமுத மொழி இங்கே நினைவுகூரத் தக்கது. தங்கம் மூர்த்தி தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் இல்லற வாழ்வின் இன்றியமையாத பக்கம் குறித்துத் தம் ஹைகூ ஒன்றில் இங்ஙனம் பாடியுள்ளார்:

'பட்டிமன்றம் முடிந்து
தாமதமாய் வீடு திரும்பினேன்
வழக்காடு மன்றம்'

பட்டிமன்றம் முடிந்து தாமதமாய் வீடு திரும்பியதும் வழக்காடு மன்றம் - ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டுவதும், வசை மாரி பொழிவதும் ஆன படலம் - தொடங்கி விட்டதாம்! 'பட்டிமன்றம்', 'வழக்காடு மன்றம்' என்னும் இரு வேறு இலக்கிய நிகழ்வுகளின் பெயர்களைக் கவிஞர் தம் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது சிறப்பு.

குழந்தை உலகின் இயல்பான படிப்பிடிப்பு

கள்ளங்கரவு கொஞ்சமும் இல்லாத - சூதுவாது சிறிதும் அறியாத - வஞ்சமோ சூழ்ச்சியோ துளியும் தெரியாத - குழந்தைகள் உலகினைப் பற்றிய அற்புதமான ஹைகூ கவிதைகளின் தொகுப்பு வசீகரனின் 'குட்டியூண்டு.' கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே கவித்துவம் கொலுவிருக்கக் காண்கிறோம். குழந்தைகள் உலகினை நடப்பியல் பாங்கில் வசீகரன் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டியுள்ள ஒரு ஹைகூ:


'தனித்து நின்ற குழந்தையிடம்
யார்நீ என்றதும் சொன்னது:
'எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!''


குழந்தையின் குரலில் தான் எத்தனை இயல்பு! எத்தனை மிடுக்கு! எத்தனை பெருமிதம்!

ஹைகூவின் உயிர்ப் பண்பு

ஹைகூவுக்கு வலிமையையும் வளத்தையும், வண்ணத்தையும் வனப்பையும் சேர்ப்பது அதன் ஆற்றல் சான்ற ஈற்றடியே. ஹைகூ கவிதையின் உச்ச நிலை - உயிர்ப் பண்பு - அதன் ஈற்றடியிலேயே அமைந்துள்ளது எனலாம். இதனை, 'படுத்துக் கொண்டே படித்தேன், தூக்கி நிறுத்தியது, ஹைகூவின் கடைசி வரி' என ஒரு ஹைகூ வடிவிலேயே படம்பிடித்துக் காட்டுவார் தெ.வெற்றிச்செல்வன். பதச்சோறு ஒன்று:

'சுதந்திர தினம்
மனதிற்குள் துக்கம்
வந்தது ஞாயிற்றுக்கிழமை'

வைத்த குறி தப்பாமல் அம்பினை எய்யும் ஒரு கைதேர்ந்த வில்லாளியைப் போல் நவதிலக் இங்கே நன்றாக குறிபார்த்துத் தமது இலக்கினை நோக்கி அடித்துள்ளார். பின்னே, சுந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை அல்லவா இல்லாமல் போகும்? மனத்திற்குள் துக்கம் பொங்கி வராதா என்ன? இல்லாவிட்டால் கவிஞர் மீராவும் காதலியைக் குறித்து, 'கிழமைகளில் அவள் ஞாயிறு' என்று பாடி இருப்பாரா? தமிழனின் விடுமுறை மோகத்தினை மென்மையாகச் சாடும் கவிதை இது!

வாசகரும் கூட்டுப் படைப்பாளி

'கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அதுதான் ஹைகூ' என்பர் அறிஞர். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், 'ஹைகூ ஓர் உணர்வு நிலை, வாசகனைக் கவிஞனின் நிலைக்கு உந்தி உயரத் தள்ளும் மிகச் சிறந்த வடிவம் அது.' இவ்விலக்கணத்திற்குக் கட்டியம் கூறும் பா.உதயகண்ணனின் ஹைகூ ஒன்று:

'காரைத் துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்.'

இங்கே காரைத் துடைத்து விட்டுக் காசு கேட்பது ஒரு குழந்தைத் தொழிலாளி என்று தெளிவாகத் தெரிகின்றது. ஆயின், 'எட்டிப் பார்த்தது நாய்' என்னும் ஈற்றடியில் இடம் பெறும் 'நாய்' என்பது அஃறிணையா? உயர்திணையா? புதியவர் எவரையேனும் கண்டால் குரைப்பது நாயின் இயல்புளூ அது போல், தான் கேட்கும் சிறுவனிடம் தனது வெறுப்பை உமிழும் - விரட்டி அடிக்கும் - காரின் உரிமையாளரும் ஒரு வகையில் பார்த்தல் 'நாய்' தான்! கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் கவிதையில் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் புலனாகின்றது.

'புதிய மக்களாட்சி முறை'

'எவரும் பாடலாம், எதையும் பாடுபொருள் ஆக்கலாம்!' என்னும் புதிய மக்களாட்சி முறையில் அமைந்த ஒரு கலை வடிவமே ஹைகூ. ஓர் எடுத்துக்காட்டு: எட்டடுக்கு மாளிகை போல் நெடிது உயர்ந்த வீட்டினைப் பார்த்துக் கண்ணேறு (திருஷ்டி) படுவது இயல்புளூ ஆயின், இன்று வீடுகளின் முகப்பில் தொங்கும் திருஷ்டிப் பொம்மைகளுக்கே திருஷ்டி பட்டு விட்டதாம்ளூ அதனால் அவை விற்கவே இல்லையாம்.

'எவன் கண்பட்டது
விற்கவே இல்லை
திருஷ்டி பொம்மைகள்'

என்பது வித்தியாசமான பாடுபொருளைத் தன்னகத்தே கொண்ட செ.ஆடலரசனின் ஹைகூ. 'திருநெல்வேலிக்கே அல்வா' என்பது போல், 'திருஷ்டி பொம்மைகளுக்கே' திருஷ்டியாம்!

காலத்திற்கு ஏற்ற பாடுபொருள்

ஹைகூ கவிதையின் தனித்தன்மை - சிறப்புக் கூறு - காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக, இந்த நூற்றாண்டிற்கே உரிய பாடுபொள்களைக் கையாளுவதாகும். அவற்றுள் ஒன்று விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் கொடுமை ஆகும்ளூ பச்சைப் பசேல் எனத் திகழ்ந்த நெல் வயல்கள் எல்லாம், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாறிவிட்டன. இதனை இரத்தினச் சுருக்கமான மொழியில் பதிவு செய்துள்ளது செந்தமிழினியனின் ஹைக்கூ:

'விளை நிலங்கள்
விலை நிலங்களாயின
வீடுகள்'

விளை நிலங்கள் ஒ விலை நிலங்கள்: இங்கே கவிஞரின் ஆற்றல் மிக்க சொல்லாடலைக் காண்கிறோம்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்?

'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்பது பல்லாண்டுக் காலமாக அரசியலார் முதலாக தமிழ் ஆர்வலர்கள் வரை அனைவரும் அயராது பறைசாற்றி வரும் ஒரு கொள்கை முழக்கம்ளூ உயரிய கனவு. ஆயினும், நடைமுறையில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை. கல்விக் கூடங்களில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லைளூ நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ் இல்லைளூ கோயிலில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லைளூ அரசியலில் ஆட்சி மொழியாகவும் தமிழ் இல்லை. பாவேந்தர் பாரதிதாசன் நெஞ்சு பொறுக்காமல் பாடியது போல், தமிழ்நாட்டின் தெருக்களிலே தமிழ் இல்லைளூ தமிழ்க் குழந்தைகளுக்கோ தமிழ்ப் பெயர்கள் இல்லை! இந்த அவல நிலையை - கசப்பான உண்மையை - அய்யாறு ச.புகழேந்தி தம் ஹைகூ கவிதை ஒன்றில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றாற் போல், காரசாரமாகப் பதிவு செய்துள்ளார்:

'எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
இல்லை'

இக் கவிதையின் ஈற்றடியில் வெளிப்படும் கவிஞரின் உள்ளக் குமுறல் அழுத்தமானது.

உறுப்பு தானம்

இரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் ஆகியன பற்றிய விழிப்புணர்வு இன்று சமுதாயத்தில் பெருகி வருகின்றது. 'இருக்கும் போது இரத்த தானம், இறந்த பிறகு கண்தானம்' என்ற குறிக்கோள் முழக்கமும் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இளவல் ஹரிஹரனின் ஹைகூ ஒன்று இலக்கிய நயத்துடன் உடல் உறுப்புக்களின் தானத்தைப் பாடுபொருள் ஆக்கியுள்ளது.

'இறந்தும்
உயிர் வாழ்தல் வேண்டின்
உறுப்பு தானம்'

'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்...' என்னும் திருக்குறள் தொடர், இங்கே கவிஞர் தம் கருத்தினை வலிமையோடு புலப்படுத்துவதற்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. இனிமேல், மருத்துவ மனைகளிலும் மக்கள் பலரும் கூடும் பொது இடங்களிலும் இந்த ஹைகூவினைக் கல்வெட்டுப் போலப் பொறித்து வைக்கலாம் எனத் தோன்றுகின்றது.

வாழ்வியல் பதிவு

'ஒரு பொழுதும் வாழ்வது அறியார், கருதுப கோடியும் அல்ல பல' என்பார் வள்ளுவர். ஆம், மனிதன் ஒரு பொழுது கூட வாழ்வது பற்றி அறியமாட்டான், ஆனால், அவன் காணுகின்ற கனவுகளோ, தீட்டுகின்ற திட்டங்களோ, கூறுகின்ற சூளுரைகளோ கோடிக் கணக்கில் இருக்கும்ளூ ஏன், அதற்கு மேலேயும் இருக்கும். எட்டு மணி நேரம் தூங்கும் மனிதன் - எட்டு மணி நேரம் உழைக்கும் மனிதன் - ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாழ்கிறான் என்று கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியாது. இந்த வாழ்வியல் உண்மையைப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைக்கிறது இ.பரிமளாவின் ஹைகூ ஒன்று:

'வாழ்நாளில்
வாழ்ந்த நாள்?
விரல்களுக்குள்'

'வாழ்நாளில் வாழ்ந்த நாள் எவ்வளவு?' என்று ஒவ்வொருவரும் தமக்குத் தாமே - தமக்குள் தாமே - கேட்க முன் வந்தால், மனிதனின் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் அழகும் தானாகவே வந்து சேரும் என்பது உறுதி.

கருணை மனம்

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மென்மையான கருணை மனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஹைகூ கவிஞர்கள். பஞ்சு நெஞ்சு படைத்த அவர்கள், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்காகக் கூட அழுகின்ற இயல்பினர் ஆவர். இவ் வகையில் நினைவுகூரத் தக்க ரமா ராமநாதனின் ஹைகூ இதோ:

'அடித்துத் துவைக்க
மனமில்லை
சட்டையில் பூக்கள்!'

'மலரினும் மெல்லிது ஹைகூ கவிஞரின் மனம்!' என்பதே இக் கவிதையைப் படித்து முடித்ததும் நம் உள்ளத்தில் தோன்றும் உணர்வு ஆகும்.

நிறைவாக ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல், 'தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது, தமிழால் வளம் பெறுகிறது.' அவரது இக் கூற்று இன்றைய ஹைகூ கவிதைக்கும் பொருந்தி வரும் ஓர் உண்மையே ஆகும்.




eramohanmku@gmail.com