முனைவர் பூ.மு.அன்பு சிவாவின் 21 ஆம் நூற்றாண்டு நவீனக் கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்)


கவிஞர்.அகிலா



21 ஆம் நூற்றாண்டு நவீனக் கவிதைகளில் புதியப் போக்குகள் என்னும் தலைப்பில் ஆய்வுக்காக எடுத்த கட்டுரைகளை நல்லதோர் நூலாக்கி இருப்பதற்கு முனைவர் பூ.மு அன்புசிவா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

2001 – 2005 வரை உள்ள காலகட்டத்தில் உள்ள புதுக்கவிதைகளை, அவற்றிலுள்ள நவீனத்துவப் போக்குகளை இதில் ஆய்வுக்காக எடுத்து தொகுத்துள்ளார். அதில் ஆதவன் தீட்சண்யா, அழகுநிலா, இரத்தின புகழேந்தி, தேவதேவன், மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி, கனிமொழி, குகை மா புகழேந்தி, மகுடேஸ்வரன், பிரான்சிஸ் கிருபா, தமிழரசி, இளம்பிறை இவர்களின் கவிதைகளை எடுத்திருக்கிறார்.

புதுக்கவிதை என்பது மரபு கவிதையின் செவ்வியல் முறையை உடைத்து உருவானதுதான் என்பது நம் எலோருக்கும் தெரியும். புதுக்கவிதையை மேற்கத்திய பாணியில் கு.பா.ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, சி.சு செல்லப்பா, க.நா.சு போன்ற நம் கவிஞர்கள் எழுதத் தொடங்கிய காலத்தில், மரபு உடைத்து சிறு சிறு சொற்களைச் சுமந்து சின்ன அடிகளாய் படித்தவுடன் புரிந்துக் கொள்ளக்கூடியதாய் மட்டுமல்லாமல் அதில் சிறிதாய் சமூக சிந்தனையையும் புகுத்தி எழுதிக் கொண்டிருந்தனர்.

சமூகம் சார்ந்த கவிதைகள் அதன் ஆரம்ப காலத்தை அதிகமாய் ஆக்கிரமித்திருந்தன எனலாம். நித்திலன், அக்னிபுத்திரன், ஞானி, மேத்தா, அறிவன், போன்ற எத்தனையோ கவிஞர்களைக் கொண்டவானம்பாடி இயக்கம் எல்லாம் புதுக்கவிதை மரபில், சமூக சிந்தனையை தூண்டிய வகையில் வந்ததுதான்.

வாழ்வியலையும் மனதில் நிறுத்தி இந்த வானம்பாடி கவிஞர்களால் வடிக்கப்பட்ட இந்த கவிதைகள் புதுக்கவிதைகளாய் மட்டும் பரிணமிக்காமல் சமூக கவிதைகளாகவும் எழுச்சிப் பெற்றிருந்திருக்கின்றன ஒரு காலத்தில்.

மேத்தாவின் ‘சமாதானம்’ என்னும் கவிதை,

வியட்நாம் அலைவரிசையில்
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிவடைகிறது
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதே பாடல்கள்
தொடரும்வரை
நேயர்களுக்கு
வணக்கம் கூறி
விடைபெறுவது....


தலைப்புக்கு ஏற்றவாறே எழுத்துக்களும் அதன் வாசிப்பும் சமாதானமாகவே செல்கிறது. ஆனால் கவிதையின் ஆழம் எங்கே என்று பார்த்தால், அவர் கொடுத்திருக்கும் குறியீடுகளில் தான் இருக்கிறது. வியட்நாம் என்பதும் வேதனை பாடல்கள் என்பதும் தான் அவை. எக்காலக்கட்டத்துக்கும் பொருந்தும் எழுத்துக்கள் இவையெல்லாம்.

தமிழன்பன் அவர்களின்,

மாங்கல்ய மகிமையை
மனைவி அரிவாள்
மணாளன் அறிவான்
இவர்கள் இருவரைவ்ட
மார்வாடி அதிகமாய் அறிவான்


நகைச்சுவை உணர்வுடன் அதுக்குள்ளே எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருக்கிறது என்றும் சொல்லி செல்கிறது. இவ்வாறு சிறிதாய் இருந்தாலும் சட்டென்று ஒன்றை ஆணியடித்தாற் போல் சொல்ல முடியுமென்றால் அது புது கவிதையால் முடியும்.

இந்த ஆய்வை பொறுத்தவரை ஐந்தாக பிரித்திருக்கிறார். சமுதாயம், பெண்ணியம், காதல் மற்றும் நவீனக் கவிதைகளின் உத்திகள் எல்லாமே அதற்குள் அடங்குகின்றன.

சமூதாயம் என்னும் இயலில், சமூகத்தின் கூட்டுவாழ்வு முறை குறித்தும், பிளேட்டோ, வால்ட்டர், கார்ல்மார்க்ஸ், சம்னர் போன்றவர்களின் கருத்துகள் குறித்தும் விவரித்துள்ளார்.

நமது தமிழின் தொன்மையில் முதுகண்ணன் சோழன் நலங்கிள்ளியிடம் கூறியது, திருவள்ளுவரின் அன்பும் அறனும் முதல், இப்போதைய காலகட்டத்தில் அறிஞர்கள் சொன்னவை வரையிலான கருத்துகள் இதில் பகுத்தாயப்பட்டிருக்கின்றன.

பெண்ணியம் குறித்த விஷயங்களை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். திருமணம், வரதட்சனை, கற்பு, பாலியல் கொடுமைகள், கணவன் மனைவி உறவு, சகிப்புத்தன்மை என்பது போன்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அதில் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

அழகுநிலா அவர்களின்,

55 வயதில்
அகால மரணமடைந்த தாத்தா
12
வருடங்களாகியும் கூட
பாட்டி இட்டு வருகிற்றால் குங்குமம்
தாத்தாவின் நெற்றிக்கு


இக்கவிதையில், சட்டென்று சாட்டையடியாய் கடைசி வரி. ஏதோ செய்கிறது மனதை. இன்னும் வயதானவர்கள், நம் பாட்டிகள் இப்படியேதான் இருக்கிறார்கள். கிராமங்களில் ஊர்ப்புறங்களில் இருக்கும் பாட்டிகள் வெள்ளை சேலையைக் கூட மாற்றுவதில்லை. இதுதான் நிஜம்ன்னு அவங்க ஒரு முகத்திரையே போட்டிருக்காங்க.

இப்போது பெண்கள் இந்த அளவுக்கு இல்லை. நிறைய வாழ்க்கை விஸ்தரிப்புகள் இருக்கின்றன. தன்னுடைய தன் பிள்ளைகளுடைய கனவுகளை நோக்கி பயணப்பட நிறைய சுதந்திரங்கள் அவர்களுக்கு இருக்கின்றன.

சமூகத்தில் சுதந்திரம் இருக்கிறது. யாரால், எந்த பெண்ணால் அதை எடுக்கமுடிகிறதென்று பார்க்கவேண்டும். பேச்சுக்களை புறம் தள்ளும் பெண்களால் மட்டுமே தன் வாழ்க்கையையும் நிலைநிறுத்தி, தன் குழந்தைகளையும் சுமந்துக்கொண்டு பயணிக்க முடிகிறது.

அவன் போனபிறகு அவ சரியில்லம்மா என்ற சொற்களை பெண்களே சொல்ல கேட்கிறேன். பெண்ணைக் குறித்த நோக்கு பெண்களிடமும் சற்று மாறவேண்டும் என்பதே நிதர்சனம்.

பிரபல பெண் பாடலாசிரியர் ஒருவரின் வழக்கு சம்பந்தமாக நிறைய விஷயங்களை பிளாஷ் படுத்தும் செய்திகளைக் குறித்து அந்த துறையில் இருக்கும் ஒரு தோழமையிடம் கேட்டபோது, அவரின் பதில் மிக நுணுக்கமானது.

பெண் என்பவள் ஆணின் மூளையில் அப்பட்டமாய் இருக்கும் ஒரு போதை பொருள். அவள் குறித்த எதையும், அது அவளின் வெளி தோற்றமாகட்டும், அவளின் சந்தோஷமாகட்டும், அவளின் பிரச்சனையாகட்டும், கண்ணீராகட்டும் அவளின் குடும்பமாகட்டும் எதுவாகினும், அந்த இடத்தில் அவள் மட்டுமே பிரதானமாய் தெரிகிறாள். இந்த சமூகத்தில் பெண் குறித்த இச்சை எந்த இடத்திலும் தொடங்குகிறது ஒரு ஆணுக்கு.அதைதான் செய்திகளும் பிரதானப்படுத்துகின்றன. அதுதான்பெண் குறித்த விஷயங்கள் prominancy க்கு வரக்காரணம் என்றார். இன்னும் சமூகம் முழுதாய் மாறவில்லை என்பதே இதிலிருந்து பெறப்படும் கருத்து.

வெறும் ஜடப்பொருளாக, நுகர் பொருளாக கருதி பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் சமூகப்போக்கை கண்டித்திருக்கிறார் தோழர். அதில் குகை மா புகழேந்தியின் கவிதையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

கடைசி ஏவாள்
பிறப்புறுப்பில்லாமல்
பிறந்தாள்
அப்போதும்
உலகம் தடவிப்பார்த்தது


என்கிறது புகழேந்தியின் கவிதை. வேதனைகளை பெண்ணின் வலியை இதைவிட நேர்த்தியாய் முகத்தில் அறையும் வண்ணம் சொல்லிவிடமுடியாது.

பெண்களை பெண்களின் வலியை எழுதாத பெண் கவிகள் இல்லை. மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, சல்மா, தமிழச்சி, திலகபாமா இப்படி சொல்லிகிட்டே போகலாம். தோழர் சிவா அவர்கள் இதையெல்லாம் ஆய்வுக்குள் தொகுத்திருக்கிறார்.

உடல் அரசியலை அழகாய் எடுத்துரைக்கும் சுகிர்தராணியின் கவிதைகள் எப்போதுமே பெண் சமூகத்துக்கு உரியவை.

துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?


அசத்தலாக ஒரு கேள்வியை வைக்கிறார் கவிதையில்.

இம்மாதிரியான பெண் கவிஞர்களின் எழுத்துகள் சில நிஜங்களை உலகுக்கு கொண்டு வந்திருக்கின்றன. சற்று மாற்றங்களையும் உண்டு செய்திருக்கின்றன எனலாம்.

மாலதி மைத்ரியின் முதிர்கன்னிகள் குறித்த கவிதையொன்று.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக


இதற்கான காரணங்கள் ஆயிரம் சொல்லலாம். ஒரு பெண்ணின் பிறப்பு வளர்ப்பு திருமணம் குழந்தைகள் எல்லாமே பெரும்பாலும் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன் என்று உறவாய் சுற்றியிருக்கும் ஆணினத்தாலேயே அவர்கள் புகுத்தும் சாதி இனம் சார்ந்த கட்டுபாடுகளாலே frame செய்யப்பட்டிருக்கின்றன .

இன்னும். கிராமங்களில், ஊர்ப்புறங்களில் திருமண விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திரம் ஓடிப்போகுதல் மட்டுமே. அந்த தவறையே மீண்டுமாய் செய்யும் நிலை பெண்களுக்கு என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இன்றும் திருமணத்திற்கு முன்னான தன் தவறுகளை மறைக்க, பெண்ணை குற்றவாளியாக்கிப் பார்க்கும் ஆணின் பார்வைகள் அதிகம் எனலாம். இதை குறிக்கும் என் கவிதை ஓன்று,

முடிந்த முதலிரவுக்குப்பின்
புள்ளி போட்ட படுக்கை விரிப்பில்
தேடிக்கொண்டிருக்கிறான்
இரத்தத்தின் சுவடுகளை,
புதிது புதிதாய்
நிறமற்ற விந்தினை
உருவாக்குபவன்..


இலக்கியமும் சமூகத்துக்கு தன்னால் இயன்றதை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்னும் படிமங்களின் மூலமாய் கொண்டு வந்திருக்கின்றன. வந்துக் கொண்டும் இருக்கின்றன. அதில் இம்மாதிரி ஆய்வுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

தேடிப்பிடித்து சிலபல கவிதைகளை, அது அழகியலை, மொழியியலை, சமூக சிந்தனைகளை பெண்ணியத்தை எதை பேசினாலும் சரி, தொகுக்கும் போது, அந்த கவிதையின் சாராம்சம், எழுதிய கவிஞரின் உணர்வுகள், அதன் அழுத்தம் எல்லாமே ஆய்வின் வழி வெளிப்படுகிறது எனலாம். அதை சார்ந்த ஆய்வுகளாலும் கட்டுரைகளாலும் நம் சமூகத்துக்குத்தான் பலன் கிடைக்கிறது.

என்றுமே எழுத்தும் பேச்சுமே சமூகத்தின் அடக்குமுறைகளை பழைய கட்டமைப்புக்களை உடைத்திருக்கின்றன. தொடரட்டும் இம்மாதிரியான ஆய்வுகள்.