ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

பேராசிரியர் இரா.மோகன்

ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாள்: 18.08.2015

மிழ் ஆர்வலர்களால் 'டி.கே.சி.' என்று சுருக்கமாகவும் நெஞ்சுக்கு நெருக்க-மாகவும் அழைக்கப் பெறும் ஆளுமையாளர் டி.கே.சிதம்பரநாத முதலியார் (1881-1954). அவர் இம் மண்ணுலகில் பிறந்த நாள் ஆகஸ்டு 18, ஆண்டு 1881; வாழ்ந்த காலம் 71 ஆண்டுகள் 6 மாதங்கள். பேராசிரியர் பூவண்ணன் குறிப்பிடுவது போல், '18.08.1881; இந்தத் தேதியும் கூட ரசனைக்கு உரிய ஓர் ஒழுங்கு முறை பெற்றுள்ளது. நாலெட்டுக் கொண்ட நாளில் பிறந்தவர் தமிழ்க் கவிதையின் எட்டாத உயரத்தை, ஆழத்தை, அகலத்தை, அதன் ஆத்மாவோடு அளந்து, அளைந்து, கலந்து, களித்து, தாம் கண்ட இன்பத்தைப் பிறரும் காணச் செய்தார்!'.

பி.எல். பட்டம் பெற்ற வழக்கறிஞர், சட்ட மன்ற மேலவை உறுப்பினர், இந்து சமய பரிபாலனக் குழுவின் ஆணையர், 'வட்டத்தொட்டி' என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர், 'இதய ஒலி', 'கம்பர் யார்?' முதலான நூல்களின் ஆசிரியர், 'கம்பர் தரும் ராமாயணம்', 'முத்தொள்ளாயிரம்' ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர், 'ஊரடவரசந' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் 'பண்பாடு' என்ற அழகிய சொல்லை உருவாக்கியவர் என்றாற் போல் பல்வேறு சிறப்புக்கள் - பரிமாணங்கள் - டி.கே.சி.க்கு உண்டு. எனினும் டி.கே.சி. என்றதுமே நம் நினைவுக்கு முதலில் வந்து நிற்பது அவரது ரசனை உள்ளமும் இயல்பான நகைச்சுவை உணர்வும் தான்!.

டி.கே.சி.யை நேரில் பார்த்திராத ஒருவர் - இளைய எழுத்தாளர் - முதல் தடவையாக டி.கே.சி.யின் படத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னது: 'அவருடைய கண்கள் சிரிப்பதைப் பார்க்கிறேன், மீசை சிரிக்கிறது, புருவங்கள் கூடச் சிரிக்கின்றனவே!' டி.கே.சி.யைச் சுற்றி எப்போதும் மகிழ்ச்சி என்னும் சீதேவி குடிகொண்டிருப்பதைத் தான் அவர் இப்படிச் சொல்லோவியமாக வரைந்து காட்டியிருக்கிறார்.

ஒரு முறை புதுதில்லிக்கு டி.கே.சி. சென்றிருந்த போது, பிரதமர் நேரு தம்முடைய வீட்டிற்கு விருந்தினராக வரும்படி டி.கே.சி.யை அழைத்தார். டி.கே.சி. நேருவின் வீட்டிற்கு ஓட்ஸ் சாதம் பொங்கிக் கொண்டு போனார். அதைப் பார்த்த நேரு, 'ஓ! நீங்கள் மிகவும் ஆசாரம் போலிருக்கிறதே?' என்று வியந்து கேட்டார்.

'இல்லை, நான் ஆசாரமே இல்லை. எனக்கு எல்லா வகையான ஆகாரங்களும் சாப்பிட வேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் என் வயிறு இருக்கிறதே, அது தான் ஆசாரம்!' என்றாராம் டி.கே.சி. தம்முடைய சக்கரை நோயைப் பற்றி டி.கே.சி. இங்ஙனம் நகைச்சுவையுடன் வெளியிட்ட பாங்கினை நேருவும் மற்ற விருந்தினர்களும் மிகவும் ரசித்து அனுபவித்துச் சிரித்தார்களாம்.

ரசிகமணியின் ரசிக உள்ளத்திற்குக் கட்டியம் கூறும் ஒரு சுவையான நிகழ்ச்சி:

ரசிகமணியின் வீட்டில் விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்தில் பாயசம் பரிமாறப்பட்டது. ரசிகமணியின் அருகில் அமர்ந்து உணவருந்திய நண்பர் ஒருவர், பாயசத்தை இலையில் விடாமல் ஒரு டம்ளரில் ஊற்றித் தரும் படி கேட்டார். உடனே, ரசிகமணி அவர்கள், 'நீங்கள் டம்ளரில் விட்டுச் சிரமப்பட வேண்டாம். புனல் இருக்கிறது. கொண்டு வரச் சொல்லுகிறேன். அதை வாயில் வைத்துக் கொண்டு பாயசத்தை ஊற்றினால் சொட்டுக் கூட நாக்கில் விழாமல் நேரே உள்ளே போய் விடும்' என்று கூறினார்.

பாயசம் என்பது கையில் எடுத்துச் சுவைத்துச் சாப்பிட வேண்டிய ஒன்று. டி.கே.சி.யின் பார்வையில் பாயசத்தை எப்படி ரசித்துச் சாப்பிட வேண்டுமோ - அனுபவித்துச் சாப்பிட வேண்டுமோ - அது போலத் தான் கவிதையையும் ரசித்து, அனுபவித்து, பாடி இன்புற வேண்டும். டி.கே.சி. மேற்கொண்ட திறனாய்வு முறைக்குப் பெயரே, 'ரசனை முறைத் திறனாய்வு' என்பது தான்! இத்தகைய ரசனை முறை உரையாடல்களை டி.கே.சி. தம் நண்பர்கள் குழாத்தோடு நிகழ்த்pய இடத்திற்கு 'வட்டத்தொட்டி' என்று பெயர்.

எதிர்த்துச் சுடச்சுடப் பதிலிறுக்கும் கலையை ஆங்கிலத்தில்
‘Retort’ எனச் சுட்டுவர். இக் கலையிலும் வல்லமை படைத்தவராக விளங்கினார் ரசிகமணி. இதனை மெய்ப்பிக்கும் உண்மை நிகழ்ச்சி ஒன்று:

டி.கே.சி. கிறித்தவக் கல்லூரி மாணவர். அந்தக் கல்லூரியில் பழைய மாணவர் விழா ஒன்று நடந்தது. அதற்கு டி.கே.சி.யை அழைத்திருந்தார்கள். கூட்டத்தில் டி.கே.சி.யின் பக்கத்தில் ஒரு ஸ்காட்லாண்ட் பாதிரியார் உட்கார்ந்திருந்தார். அவரிடம் டி.கே.சி.யை அங்குள்ளவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பாதிரியாரோ இந்தியர்களைப் பற்றி அவ்வளவு நல்ல எண்ணம் கொண்டவர் அல்லர். அவரிடம் பல பொருள்களைப் பற்றி டி.கே.சி. பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், 'ஸ்காட்லாண்ட் தேசத்தவர்களாகிய எங்களுக்கு மரங்கள் என்றால் நிரம்பப் பிரியம். இந்தியர்களாகிய உங்களுக்கு எப்படியோ?
(We love trees, Do you?) என்று டி.கே.சி.யிடம் கேட்டார் பாதிரியார். இதற்கு டி.கே.சி. உடனடியாகப் பாதிரியாரிடம் சொன்ன பதில் இதுதான்:

'மரங்களிடத்தில் எங்களுக்குப் பிரியம் கிடையாது, பக்தியே செலுத்துகிறோம்'
(We do not love trees but we worship them).  இதற்கு மேலும் ஒரு படி சென்று, 'எங்கள் தமிழ்நாட்டிலே ஒவ்வொரு கோயிலும் ஒரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. அதனையே நாங்கள் தல விருட்சம் என்கிறோம்' என்று டி.கே.சி. விளக்கம் கூறியதைக் கேட்ட ஸ்காட்லாண்ட் பாதிரியர் அரண்டே போனார்.

டி.கே.சி. தம் கண்டனத்தைக் கூட நகைச்சுவையோடு தான் வெளிப்படுத்துவார். அதை எல்லோராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத் தான் அவரது கூற்றின் உட்பொருள் தெளிவாக விளங்கும்.

ஒருமுறை டி.கே.சி. திடீரென்று தமது அருகில் இருந்தவரைப் பார்த்து, 'மதுரை எங்கிருக்கிறது தெரியுமா?' என்று கேட்டார்.

நண்பர் புரியாமல் விழித்தார். அப்பொழுது டி.கே.சி.யே தம் கேள்விக்கான பதிலைச் சொன்னார்;; 'மதுரை லண்டனில் இருக்கிறது!' என்று ஓங்கிய குரலில் சொன்னார்.

சுற்றிச் சூழ்ந்திருந்த அனைவரும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, டி.கே.சி.யே அந்த நகைச்சுவைப் புதிரைத் தமக்கே உரிய பாணியில் அவிழ்த்தார்:

'கொஞ்ச நாளைக்கு முன்பாக, மதுரையில் நம்முடைய தமிழ்ப் பெரும் புலவர்கள் ஒன்று கூடினார்கள். கம்பரைப் பற்றியும், கம்ப ராமாயணக் கவிதைகளைப் பற்றியும் பேசினார்கள்...' இப்படிச் சொல்லிச் சிறிது இடைவெளி விட்டு அந்த இடைவெளியைச் சரி செய்ய இரண்டு பங்கு வேகத்துடன் முத்தாய்ப்பு வைப்பது போல் தெளிவாக, 'அங்குப் பேசியவர்கள் அனைவரும் இங்கிலீஷில் பேசினார்கள்' என்று முடித்தார்!.

ரசிகமணி டி.கே.சி. அவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அமெரிக்காவுக்குப் புறப்பட்டாள். புறப்படுவதற்கு முன்னால் டி.கே.சி. அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு போக அந்தப் பெண் வந்தாள்.

அவள் வணங்கிவிட்டு எழுந்து நின்ற போது டி.கே.சி. அவளை இப்படிச் சொல்லி வாழ்த்தினார்: 'அமெரிக்கா போவது பற்றி ரொம்ப சந்தோஷம். அங்கே உள்ளவற்றை எல்லாம் 'பார்த்து' விட்டு வர் 'படித்து'க் கொண்டு வந்துவிடாதே!' ரசிகமணி அவர்களுக்கே உரிய முத்திரைச் சிரிப்புடன் கூடிய அந்த வாழ்த்தினை, நண்பரின் புதல்வி உட்பட அனைவரும் ரசித்து மகிழ்ந்தார்கள்.

பெருகச் சிரித்தல் - வாய்விட்டுப் பலமாகச் சிரித்தல் - மட்டுமே நகைச்சுவை அன்று; அளவே சிரித்தலும் முறுவலித்தலும் கூட நகைச்சுவையின் வகைகளில் அடங்கும். 'கேலி' என்பது நகைச்சுவையில் ஒரு வகை. கேலியுடன் நெருங்கிய தொடர்புடையது கிண்டல்; கேலியும் கிண்டலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல. எதையும் கேலி செய்து பேசுவதில் வல்லவர் டி.கே.சி. அவர் தமது மீசையைப் பற்றியே கேலி செய்து இப்படிச் சொல்லுவார்:

'மீசையான மீசையா இது? ஒரு அண்டா வெந்நீர் போடலாமே இதை வைத்து!'
தமிழ் உலகத்தில் கடித இலக்கியத்தை வளர்த்த பெருமக்களின் வரிசையில் டி.கே.சி.க்கும் ஓர் இன்றியமையாத இடம் உண்டு. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், 'ரஸிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்' என்னும் தலைப்பில்
1961-ஆம் ஆண்டில் ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். டி.கே.சி.யின் கடிதங்களில் ஆங்காங்கே மெல்லிய நகைச்சுவை உணர்வு களிநடம் புரிந்து நிற்கும் இடங்கள் உண்டு. பதச் சோறாக, அருமை நண்பர் ஏ.கே.கோபால பிள்ளை அவர்களுக்கு டி.கே.சி. 01.11.46-இல் எழுதிய கடிதத்தி;ல் இருந்து ஒரு சுவையான பகுதி வருமாறு:

'பம்பாயில் நான் இருப்பது அதிசயமாய் இருக்கலாம் தங்களுக்கு. உண்மையில் அதிசயந்தான். நானாக இங்கு வரவில்லை. ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரி திருச்சியில்
20.10.46 அன்று நடந்தது. அதற்காக என்னை அழைத்தார்கள். நானும் போனேன். கச்சேரி முடிந்ததும் ரயிலில்த் தூக்கிப் போட்டார்கள் எம்.எஸ்.ஸும் சதாசிவமும். மறுநாள் காலை 7 மணிக்கு சென்னை சென்றோம். அப்படியே 10 மணிக்கு ஆகாய விமானத்தில் தூக்கிப் போட்டார்கள். சாயங்காலம் 4 மணிக்கு பம்பாயில் இறக்கினார்கள். இதுதான் பம்பாய்க்கு வந்த கதை...'

மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 'மாந்தருள் ஒரு அன்னப் பறவை' என்னும் நூலில் ரசிகமணி டி.கே.சி.யைக் குறித்து எழுதி இருக்கும் வைர வரிகள் இவை:

'கவிதைகளை மட்டுமல்ல, வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறது, அனுபவிக்கிறது என்று கற்றுத் தந்தார். அது தான் ரொம்ப விசேஷமாகப் படுகிறது எனக்கு... என்னுடைய சின்ன வயசில் அன்னப் பறவையைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். தண்ணீர்; கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி உண்டுவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடுமாம். டி.கே.சி.யும் ஒரு அன்னப் பறவையே. நல்லதுகளையும் சிறந்ததுகளையும் எடுத்துக்கொண்டார். அதைப் பற்றியே பேசினார்; பாராட்டினார்... தமிழகத்துக்கு இப்படி இன்னொரு அன்னப் பறவை கிடைக்குமா?'

ஒன்று மட்டும் உண்மை. உலகில் ரசனையும் நகைச்சுவையும் இருக்கும் வரை 'மாந்தருள் ஒரு அன்னப் பறவை'யாம் டி.கே.சி.யும் நிலைத்து இருப்பார்!.

 

பேராசிரியர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.