புறநானூறு காட்டும் பரிசிலர் வாழ்க்கை

மா.உலகநாதன, முனைவர் பட்ட ஆய்வாளர், (வரலாறு)
 

"உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே
புலவர் தொழில்"
                           குறள்
40

நாடாளும் மன்னர்களின் வீரம,ஈரம்,கொடை இன்னோரன்ன பிற பண்புகளைப் போற்றிப் பாடி பரிசில் பெறுவது புலவோர் வழக்கம்.வறுமையும் புலமையும் சேர்ந்தே இருப்பது என்ற ஒரு திரைப்பட வசனத்தை மறந்து விட முடியாது. அத்தகு புலவர்களின்  புலமைத் திறனையும்,மன்னர்களின் கொடைத்திறனையும் சிந்திக்க விழைகிறது இக்கட்டுரை.

கோவூர் கிழார்:

இவர் வேளாண் மரபினர்.சோழ பரம்பரையோரால் ஆதரிக்கப்பெற்றவர்.கனாநூல்,சோதிட நூல்,இசை நூல் வல்லார் :உவமை கூறுதலிலும் உற்றுழி உதவுவோரின் குணங்களைப் பாராட்டுதலிலும் வீரச்சசெயல்களை விளக்குதலிலும் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்.அஞ்சா நெஞ்சினர். ஒரு சமயம் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூருக்கு வந்த இளந்தத்தனேன்னும் புலவனை ஒற்றுவந்தானென்று நெடுங்கிள்ளி கொல்லத் தொடங்கியவிடத்து, அப்புலவனை உய்வித்தற்பொருட்டுப் பொதுவாகப் புலவர்களின் இயல்பை விதந்து கூறுவதைப் பார்ப்போம்.

தம்மைப் புரப்போரை முதலாகக்கொண்ட இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீமை செய்தறிந்ததில்லை:புலவர் வாழ்வு கல்வியில் மிகுந்து இனிது ஒழுகுவதன்றி:உயர்ந்த

புகழுடைய மன்னராகிய நும் போலும் தலைமையையும் உடையது.

வள்ளல்களிடம் பெறும் பரிசிலைக் கொண்ட வாழ்க்கையுடைய இரவலர்தான் நாங்கள்:ஆயினும்,எம்மால் முடிந்தபடி பாடி,பெற்ற பொருள் பிற்காலத்துக்கு உதவுமே எனப் பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல் ஒம்பாது உண்டு கூம்பாது வீசி எங்கள் வாழ்க்கை உம் போன்ற அரசரது வாழ்வு போன்றே பெருமையுடையது என்று பெருமிதம் பேசுகிறார்:

வள்ளியோர்ப் படர்நது புள்ளின் போகி
நெடிய
எண்ணாது சுரம்பல கடந்து
வடியா
நாவின் வல்லாங்கு பாடிப்
பெற்றது
மகிழ்ந்து சுற்றம் அருந்தி
ஒம்பாது
உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு
வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந்த்ன்றோ இன்றே திறப்பட
நண்ணார்
நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது
ஒழுகின் அல்லது ஓங்குபுகழ் மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர்
அன்ன செம்மலும் உடைத்தே.

                                              புறநானூறு-47,1-10

பெருஞ்சித்திரனார்:

அன்பில்லாதவர்கள் எவ்வளவு செல்வமுடையவர்களாக இருப்பினும் அவர்களை இவர் மதிப்பவரல்லர். ஊற்றமும் ஊக்கமும் உடையவர்.குமணனுடைய வள்ளன்மையை புலப்படுத்துதல் முகமாக கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் இவராற் கூறப்பட்டுள்ளன.(புறம்-158)

இவர் தன் தாய்,மனைவி,சுற்றத்தார் ஆகியோர் பசியால் வருந்துவதைக் குமணனுக்குக் கூறும் பகுதிகள் கன்னெஞ்சையும் கரையச் செய்யும்: அவர்கள் மகிழும்படி பரிசில் தரவேண்டுமெனவும்.ஆயினும் ,முகம் மாறுபட்டுத் தரும் பரிசில் யானையாக இருந்தாலும் கொள்ள இயலாது எனவும் மகிழ்ந்து கொடுப்பது அதைத் தான் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு
பெறினும்

அவிர்ந்துவிடு
பரிசில் கொள்ளலென் உவந்து
நீ

இன்புற
விடுதி யாயின் சிறிது
குன்றியும்
கொள்வல் கூர்வேற் குமண

                                                                  புறம் -159,22-25

மோப்பக்குழையும் அனிச்சமாக சித்திரனார் விளங்கியிருக்கிறார்:என் இல்லத்தில் வறுமை தாண்டவமாடுகிறது.என்தாய் ஆண்டுகள் பல கழிந்துவிட்டதால் வயது முதிர்ந்து தன் உயிரையும் கோலையும் கையில் பிடித்துக்கொண்டுள்ளாள்:என் மனைவியோ வெளிறிய மேனியுடன்,பிள்ளைகளுக்குப் பாலுர்ட்டாக்கூட இயலாத வாட்டம் கொண்ட பாலூட்டிகளை உடையவள்.அவள்,குப்பையில் தானே முளைத்த கீரையில்,முன்னம் கிள்ளிய கணுக்களில் முளைத்த இளந்தளிரைப் பறித்து வந்து உப்பில்லாமலும் மோர் இல்லாமலும் உண்பவள்:பெற்ற தாயையும் பேணும் மனைவியையும் உயர்வு நவிற்சியில் பாடுகிறார். மனைவியின் மாண்பைச் சொல்லவந்த புலவர் அறம் பழியாத் துவ்வாள் (புறம்-159.13)என்கிறார் வறுமையால் கணவனைப் பழிக்க வேண்டியவள் அவனைப் பழிக்காமல் அறத்தைப் பழி;த்தாளாம்.இந்த இருவர் உள்ளமும் மகிழும்படியும் நீ உவந்து.நான் இன்பம் அடைய பரிசினைத் தந்தாயானால் அப்பரிசிலானது குன்றிமணியளவு சிறியதாயினும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வேன்:என்னே பெருஞ்சித்திரனாரின் பீடுயர் கொள்கை!

பொருந்தில் இளங்கீரனார்:

இவர் பொருந்தில் என்னும் ஊரினர் என்பதால் ஊரின் பெயரோடு இணைத்து அழைக்கப்பட்டார்.

'செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த
கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' எனக் கபிலருடைய கல்விகேள்விகளை இவர் புகழ்ந்திருத்தலால் இவருடைய நற்குணம் புலனாகிறது.(புறம்-53) சேரமான் இரும்பொறையிடம் ,பொருந்தில் இளங்கீரனார்.

பொறைய! நின் புகழ்,விரிப்பின் பெருகும்,தொகுப்பின் எஞ்சும்,மயக்க நெஞ்கினையுடைய எம்மனோர்க்கு ஒருதலையாகப் பாடுதற்கியலாது.பொருட்செறிவுடைய செய்யுளைச் செய்யும் நாவினையும்,மிக்க கேள்வியினையும ,விளங்கும் புகழினையுமுடைய கபிலன் இன்றுளனாயின்,நன்றாகும் என்று கபிலரின் புலமையைப் போற்றுதலைக் காண்கிறோம்.வரையில்லாத இரும்பொறையின் பெருமைகளைச் சொல்ல முயன்றால் நாங்கள் தோற்றுப்போவோம்.தொழில்.போட்டி இல்லாத நல்உளப்பாங்கு உடையவராகவே இளங்கீரனாரைப் பார்க்கமுடிகிறது.

முடிவுரை: வறுமைக்கும் புலமைக்குமிடையில் ஏற்படும் சவால்களை புலவர்கள் சாமர்த்தியமாகச் சந்தித்துள்ளனர்.சிலர் மன்னர்களிடம் அகலாது அணுகாது ஒழுகி பரிசி;ல் பெற்றள்ளனர்.சிலர் பிரிந்த அரச குடும்பங்களை தத்தம் அனுபவத்தாலும் புலமையாலும் ஒன்று சேர்த்திருக்கின்றனர்.சிலர் பெரும்போர்களை தடுத்துள்ளனர்.எஞ்சியோர் தம் புலமையால் தமிழுக்குத் தகும் தொண்டாற்றியுள்ளவர்கள்: பரிசிலர் வாழ்க்கை என்பது கலையோடு கண்ணியத்தையும் வளர்த்துள்ளது என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது.

 

மா.உலகநாதன், முனைவர் பட்ட ஆய்வாளர்,(வரலாறு)
திரு
.வி..அரசினர் கலைக்கல்லூரி,
திருவாரூர்
-3.
worldnath_131149@yahoo.co.in