நீதிபதி மூ.புகழேந்தியின் வெள்ளத் தாண்டவம் நூல் மதிப்புரை

நூல் மதிப்புரை: முனைவர் அ.கோவிந்தராஜூ

ண்ணாண்ட மன்னர்களில் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு காவியம் படைக்கப்படும் மரபை மாற்றியமைத்த முதற் பாவலர் இளங்கோ அடிகள். அவர் குடி புரந்தோம்பும் மன்னனைக் காவிய நாயகனாகப் படைக்காமல், குடிமக்களில் ஒருவனான கோவலனைக் காவிய நாயகனாகப் படைத்ததனால் புரட்சிப் பாவலர் எனப் பாரதியாரால் போற்றப்படுகிறார்.

இறைவன் அல்லது ஒரு தனி மனிதர் சந்தித்தச் சிக்கல்களைப் பற்றிய படப்பிடிப்பாகவே காவியம் அமையும் என்பதை மாற்றி, பொதுமக்கள் சந்தித்தச் சிக்கல்களைக் காவியத்தின் பாடுபொருளாக அமைத்துக் காவியம் கண்டுள்ள நீதிபதி கவிஞர் புகழேந்தி அவர்களும் என் பார்வையில் ஒரு புரட்சிப் பாவலராகவே தோன்றுகிறார்.

ஒன்று அழிவதும் அதனைத் தொடர்ந்து மற்றொன்று ஆவதும் இயற்கை நியதி. அந்த வகையில் சென்னைப் பெருவெள்ளத்தின் பேரழிவைத் தொடர்ந்து வெள்ளத் தாண்டவம் என்னும் பெருங்காவியம் தோன்றியுள்ளது. காவியத்தின் கருப்பொருளாக அமைவது மனித நேயமாகும். சாதி, மத, இன மற்றும் பொருளாதார வேறுபாடுகள் ஒழிந்து மனிதம் மட்டுமே தழைக்க வேண்டும் என்னும் கருத்தை மணியிடை இழையாக வைத்துக் காவியத்தைப் பாவியமாய்ப் புனைந்து அளித்துள்ளார் நீதிபதி புகழேந்தி அவர்கள்.

காவியத்தை வெண்பாவில் தொடங்கி விருத்தப் பாவில் முடிக்கிறார். மொத்தம்
644 பாடல்களைப் புனைந்துள்ளார். தென்றலெனத் தவழும் பாக்கள் சில; புயலென வீசும் பாக்கள் சில; ஆனால் வெற்றெனத் தொடுத்தல் எங்கும் இல.

நாவல் எழுதுவதில் வல்லவரான இந் நூலாசிரியர் தலவன், தலைவி, அவர்களிடையே முகிழ்க்கும் காதலைத் தனக்கே உரிய தனித் தன்மையோடு படம்பிடித்துக் காட்டுகிறார். காதல் கதை என்றால் ஒரு வில்லன் கட்டாயம் இருக்க வேண்டுமே. வெள்ளத்தைதான் இவர் வில்லனாகக் காட்டுகிறார். இந்த வில்லனால்தான் காதலர் பிரிகிறார்கள்; அதே வில்லனால்தான் கடைசியில் இணைகிறார்கள்.

இக் காவியத்தில் பேசப்படும் நிகழ்வுகள் கற்பனை அல்ல. எல்லாவற்றிற்கும் செய்தித்தாள் ஆதாரங்களை நூலின் பின்னிணைப்பாகத் தந்துள்ளார். இது இந் நூல் குறித்த ஆய்வுகளுக்குப் பெரிதும் பயன்படும்.

ஒரு படைப்பாளி சிக்கலை மட்டும் சொன்னால் போதாது; சிக்கலக்குரிய காரணத்தையும், தீர்வையும் சொல்ல வேண்டும். இது சமூகப் பொறுப்புள்ள எழுத்தாளனின் கடமையாகும். இந் நூலாசிரியர் வெள்ளம் வந்ததற்கான காரணங்களையும், வருங்காலத்தில் வெள்ளம் ஏற்படாமல் இருப்பதற்குரிய தீர்வுகளையும் சொல்வதன் மூலம் தன் சமூகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
உவமைக் கவிஞர் சுரதாவுக்கு இணையாக உவமைகளைக் கையாள்கிறார். அதேபோல அணி நயங்களுக்கும் பஞ்சமே இல்லை. தண்டியலங்காரம் கூறும் காப்பிய இலக்கணத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாய் இக் காவியம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

எனக்குத் தெரிந்த வகையில் சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளம் தொடர்பாக இப்படியொரு பெருநூல் வெளி வந்ததாகத் தெரியவில்லை. இதுவே முதற் பெருங் காவியமாக இருக்கலாம். இது காலத்தால் அழியாத காவியமாக நிலைத்து நின்று ஆசிரியரின் புகழ் பாடும்.

உச்ச நீதி மன்ற மேனாள் நீதியரசர் ச.மோகன் அவர்களின் அணிந்துரை ஒன்று போதும் இந் நூலின் பெருமையைப் பறைசாற்ற. கவிஞர் பொன்னடியாரின் ஆய்வுரையும், முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கனின் வாழ்த்துரையும், மருதூராரின் பாராட்டுரையும் உரைகற்களாய் விளங்குகின்றன.

ஆங்கிலத்தில்
Master Piece, Magnum Opus என்றெல்லாம் சொல்கிறார்களே அப்படிப்பட்ட தலைசிறந்த படைப்பாக வெள்ளத் தாண்டவம் அமைகிறது.

இது தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும் இருக்க வேண்டிய மிகச் சிறந்த நூலாகும். திருமணம், பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்கு ஏற்ற நூலாகும்.


நூலின் பெயர்: வெள்ளத் தாண்டவம்
நூலாசிரியர்: நீதிபதி மூ.புகழேந்தி
வெளியீடு: செல்லம்&கோ, சென்னை. பேசி:
044-2225 2500
பக்கம்:300 விலை:ரூ
300/-