கவிமணி கவிதை: கற்பகப் பூஞ்செண்டு

பேராசிரியர் இரா.மோகன்

கவிமணியின் பிறந்த நாள்: 27.07.1876

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பக்தி உலகில் சிறப்பித்துப் பேசப்படும் நால்வர் ஆவர். அது போல் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்களும் நால்வர் ஆவர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு; மேலோங்கி நின்ற தனித்தன்மை உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார் (1882-1921). இவர் தேசியக் கவிஞர்; குறுகத் தறித்த குறள் போல 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட பாரதிதாசன் (1891-1964); பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்; 'புரட்சிக் கவிஞர்' எனப் பெயர் பெற்றவர். கவிமணி சி.தேசிக விநாயகம் பிள்ளை (1876-1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்; தமிழில் குழந்தைப் பாடல் என்னும் இலக்கிய வகையைத் தொடங்கி வைத்த பெருமை இவருக்கு உரியது; எனவே, 'குழந்தைக் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயர் இவருக்கு வாய்த்தது. பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் பின்னவரான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) இம் மண்ணுலகில் 84 ஆண்டுக் காலம் வாழும் வாய்ப்பினைப் பெற்றார்; தமிழ் கூறு நல்லுலகம் 'காந்தியக் கவிஞர்' என இவருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்ந்தது.

பாரதியும் கவிமணியும்

பாரதிக்கு நிகரான சொல்லாற்றல் படைத்தவராகக் கவிமணி விளங்கினார்; எனினும், இருவருக்கும் இடையே பெரியதொரு வேறுபாடும் இருந்தது. அறிஞர் சி.தில்லைநாதனின் கருத்து இங்கு நோக்கத் தக்கது: 'பாரதியின் சொற்கள் பகைவர்களைத் தாக்கும் போர் வீரர்களைப் போலவோ வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளைப் போலவோ செயலாற்றுகின்றன. கவிமணியின் சொற்கள் சாத்வீக நெறியில் சேவை செய்யப் புகுந்த தொண்டர்களைப் போல அமைதியாகவும் சாந்தமாகவும் தம் பணியைச் செய்கின்றன'.

'மாதர் தம்மை இழிவு செய்யும், மடமை தன்னைக் கொளுத்துவோம்' என்றும், 'தனியொருவனுக்கு உணவிலை எனில் - ஜகத்தினை அழித்திடுவோம்' என்றும், 'வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும், வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்' என்றும் தன்மைப் பன்மை நடையில் கடுமையாகவும் வேகமாகவும் கடிந்தும் சாடியும் பாடுவது பாரதியாரின் தனிப் பாணி.

கவிமணியோ எந்த ஒரு கருத்தினையும் மென்மையான சொற்களைக் கையாண்டு அமைதியாகவும் சாந்தமாகவுமே பாடுவார்; 'ஐயா', 'அப்பா', 'அம்மா' என்பன போன்ற சொற்களே அவரது மொழி நடையல் பயின்று வரும். 'பாடுபடுவர்க்கே இந்தப் பாரிடம் சொந்தம் ஐயா!' என்றும், 'ஏழை என்று ஒருவர் உலகில் இருக்கல் ஆகாது ஐயா!' என்றும், 'மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டும், அம்மா!' என்றும், 'ஊக்கம் உடையவர்க்குத் - துன்பம், உலகில் இல்லை அம்மா!' என்றும் பாடுவது கவிமணியின் முத்திரைப் பண்பு; தனித்தன்மை.

கவிமணியின் வாழ்க்கை அமைதி, இனிமை, இரக்கம், எளிமை, கருணை, பொறுமை ஆகிய நற்பண்புகள் பொருந்தியது. அவர் பாடிய கவிதைகளிலும் அமைதி, அடக்கம், இனிமை, இரக்கம், எளிமை, கருணை என்னும் இப் பண்புகள் கொலுவிருக்கக் காணலாம். கவிமணியின் வாழ்வையும் வாக்கையும் உளப் பகுப்பாய்வு நோக்கில் ஆராய்ந்தால் தெரிய வரும் ஓர் உண்மை உண்டு. கவிமணி தம் வாழ்நாளில் நீண்ட காலம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பணியாற்ற நேர்ந்தது. இதுவே கவிமணியின் ஆளுமையில் குடிகொண்டிருந்த மென்மைக்கும் மேன்மைக்கும் அடிப்படையான காரணமாக அமைந்தது. 'நீண்ட காலமாகப் பெண்கள் கலாசாலையில் ஆசிரியராக இருந்தமையால் இக் குணங்கள் சிறந்து விளங்குவதற்கு இடமிருந்தது. ஆவேசம், பரபரப்பு முதலியன சிறிதளவும் கிடையாது. கவிமணியோடு நாற்பது ஆண்டுகளாகப் பழகியுள்ளேன்; என்றாலும் ஒரு முறையாவது யாரோடும் அவர் கோபங்கொண்டதை நான் பார்த்ததே இல்லை' எனக் குறிப்பிடுவார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை.

'உள்ளத்தில் உள்ளான் இறைவன்!'

மிகவும் முற்போக்கான சீர்திருத்தக் கருத்தினையும் எளிய இனிய வடிவில், அழகிய தெளிந்த நடையில் படைத்துத் தரும் வல்லமை கைவரப் பெற்றவராகக் கவிமணி விளங்கினார். 'கோயில் வழிபாடு' என்னும் கவிதை ஒன்றே போதும், இக் கருத்தினை நிலைநாட்ட, இரு பெண்களுக்கு இடையே நிகழும் உரையாடல் பாங்கில் கவிமணி இக் கவிதையைப் புனைந்துள்ளார்.

'கோயில் முழுதும் கண்டேன் - உயர்
       கோபுரம் ஏறிக் கண்டேன்,
தேவாதி தேவனை யான் - தோழி!
       தேடியும் கண்டிலனே'


எனத் தொடங்கும் அக் கவிதை, அற்புத மூர்த்தியினை – ஆபத்தில் காப்பவனை – கோயில் முழுவதும் பல இடங்களில் தேடி அலைவதைச் சொல்லிச் செல்கிறது. தெப்பக் குளத்திலோ, சுற்றித் தேரோடும் வீதியிலோ, சிற்பச் சிலையிலோ, நல்ல சித்திர வேலையிலோ இறைவனைக் காண முடியவில்லையாம்; தூபம் இடுதல், தீபம் சுற்றி எடுத்தல் ஆகியவற்றிலும் இறைவனைத் தரிசிக்க இயலவில்லையாம். 'கண்ணுக்கு இனியவற்றைக் கண்டு – மனத்தைக் காட்டில் அலையவிட்டுப் பண்ணிடும பூசை'யாலும் பயன் ஒன்றும் விளையவில்லையாம். பின், இறைவன் உண்மையில் எங்கே தான் இருக்கிறான்? அவனை எப்படித் தான் காண்பது? இவ்வினாக்களுக்கு நறுக்குத் தறித்தாற் போன்ற நடையில் கவிமணி இக் கவிதையின் நிறைவுப் பகுதியில் தரும் விடை இது தான்:

'உள்ளத்தில் உள்ளான், அடி! - அது நீ
     உணர வேண்டும் அடி,
உள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்
    உள்ளேயும் காண்பாய், அடி!'


'இறைவன் உண்மையான அன்பு கொண்ட அடியவர்களின் உள்ளத்தில் உள்ளான்; இந்த அடிப்படையான உண்மையை உணர்ந்து கொண்டால் போதும்; உள்ளத்தில் இறைவனைக் காணக் கற்றுக் கொண்டால், கோயில் உள்ளேயும் அவனைக் கண்டு கொள்ளலாம்' என்ற மிக முற்போக்கான ஆன்மிகச் சிந்தனையை இங்கே எவ்வளவு அழகிய, இனிய, எளிய தமிழில் தௌ;ளத் தெளிவாகச் சொல்லி விட்டார் கவிமணி என்று பாருங்கள்!

மிகச் சிறந்த குழந்தைப் பாடல்

கவிமணி குழந்தைகளுக்கு என்றே பல பாடல்களை எழுதியுள்ளார். அவை 'குழந்தைச் செல்வம்' என்ற பெயரில் தனி நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. கவிமணியின் குழந்தைப் பாடல்களில் மிகச் சிறந்தது 'பசுவும் கன்றும்' என்னும் பின்வரும் பாடல்:

'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே
     துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி.

அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன்
      அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.

நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை
      நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.

முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு – மடி
      முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.'


'குழந்தைப் பாடலின் கூறுகளான எளிமை - இனிமை - தெளிவு என்னும் மூன்றையும் முழுமையாய்ப் பெற்ற பாடல் இது' எனப் புகழாரம் சூட்டுவார் முனைவர் பூவண்ணன். இதில் கடினமான சொல் ஒன்று கூட இல்லை. பாடலின் தொடக்கமும் முடிவும் அற்புதமாக அமைந்துள்ளன. எல்லா வரிகளுமே எளிய சந்தமும் இனிய ஓசையும் உடையனவாக விளங்குகின்றன. 'வெள்ளைப் பசு' என்னும் தொடரும் 'கன்றுக் குட்டி' என்னும் தொடரும் நான்கு முறை திரும்பத் திரும்ப வருவது இப் பாடலின் சிறப்பு.

மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பு

கவிமணி மொழிபெயர்ப்புத் துறைக்கும் நிலையான பங்களிப்பினை நல்கியுள்ளார். 'ஆசிய ஜோதி'யும் 'உமார் கய்யாம் பாடல்க'ளும் அவரது மொழி பெயர்ப்புத் திறனுக்குக் கட்டியம் கூறி நிற்பனவாகும். பதச்சோறு ஒன்று:

'வெய்யிற் கேற்ற நிழலுண்டு;
     வீசும் தென்றல் காற்றுண்டு;
கையில் கம்பன் கவியுண்டு;
     கலசம் நிறைய மதுவுண்டு;
தெய்வ கீதம் பலவுண்டு;
     தெரிந்து பாட நீயுமுண்டு;
வையந் தரும்இவ் வனமன்றி
     வாழும் சொர்க்கம் வேறுண்டோ?'


கவிமணியின் கைவண்ணத்தில் உருவான இத்தகைய பாடல்களைப் படிக்கும் போது மொழிபெயர்ப்பு, தழுவல் என்ற எண்ணங்களே தோன்றாது; தமிழ் மொழியின் சிறந்த கவிதைகளைப் பாடி இன்புறுவது போன்ற உணர்வே ஏற்படும். இதுவே மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் கவிமணி பெற்ற இமாலய வெற்றி ஆகும். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால், 'கவிமணி மூலமாக நமது நாட்டில் உமார் கய்யாம் ஓர் அற்புதமான மறுபிறவியை எடுத்துள்ளார்' எனலாம்.

வெண்பாவிற்கோர் கவிமணி

வெண்பா இயற்றுவதிலும் வல்லவர் கவிமணி. அவரது வெண்பாக்களின் நடையும் எவ்வகையான சிக்கலும் இல்லாமல், உணர்ச்சியும் ஓசையும் கருத்தும் கற்பனையும் கை கோத்துச் செல்லும்; படிப்பவர் நெஞ்சில் நேரடியாகச் சென்று, தெளிவாகப் பதியும். ரசிகமணி டி.கே.சி.யின் ஒரே மகனான தீபன் என்னும் தீக்காரப்பன் தமது 32 வயதிலேயே மறைந்த போது கவிமணி, டி.கே.சி-க்கு எழுதி அனுப்பிய வெண்பா இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது:

'எப்பாரும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா! என்
அப்பா! அழகியசெல் லையா! - இப்பாரில்
சிந்தை குளிரச் சிரித்தொளிரும் நின்முகத்தை
எந்தநாள் காண்பேன் இனி?'


இவ் வெண்பாவைப் படித்து உள்ளம் உருகிய ரசிகமணி, 'தங்கள் உள்ளத்தின் கனிவு வெண்பாவில் தெளிந்து கிடக்கிறது. தமிழுலகில் இந்த வெண்பா எழுத ஒருவர்தான். அது தாங்கள் தான்... கவிக்கு உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லுவது நம்மவர் மரபு. தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது... தமிழ்ப் பாஷை தங்களுக்கு அருமையாய்த் துணைபுரிகிறது. தாங்களும் தமிழுமாகச் சேர்ந்து எவ்வளவோ ஆறுதலைத் தருகிறீர்கள்' எனக் கவிமணிக்கு மறுமொழி எழுதினார். 'இப்படி ஒரு அற்புதமான கவிதை தமிழுக்குக் கிடைக்குமானால், உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்' என ரசிகமணியைச் சொல்ல வைத்த அற்புதமான வெண்பா இது!

'மக்களுக்கு நல்வாழ்வு வாழும் வழிகள்எல்லாம்
சிக்கலறக் காட்டும் தினமலர்நீ – எக்கணமும்
வாடாது தெய்வ மலர்போல வாழ்ந்திடுக
நீடாழி சூழும் நிலத்து'


என்பது 'தினமலர்' இதழை வாழ்த்திக் கவிமணி படைத்துள்ள அழகிய வெண்பா.

'மருமக்கள் வழி மான்மியம்' என்பது கவிமணியின் நையாண்டிக்கும் முற்போக்கு மனப்பான்மைக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்கும் அங்கத இலக்கியம் ஆகும். இந்நூல் நாஞ்சில் நாட்டு மக்களின் வழக்கத்தை அங்கத நோக்கில் எடுத்துரைக்கும் நூல். இசை அரங்குகளில் பாடக் கூடிய நல்ல கீர்த்தனைகளையும் கவிமணி இயற்றியுள்ளார்.

பன்முக ஆளுமை

'மருமக்கள் வழி மான்மியம்' என்பது கவிமணியின் நையாண்டிக்கும் முற்போக்கு மனப்பான்மைக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாக விளங்கும் அங்கத இலக்கியம் ஆகும். இந்நூல் நாஞ்சில் நாட்டு மக்களின் வழக்கத்தை அங்கத நோக்கில் எடுத்துரைக்கும் நூல். இசை அரங்குகளில் பாடக் கூடிய நல்ல கீர்த்தனைகளையும் கவிமணி இயற்றியுள்ளார்.

இவை தவிர, கட்டுரை வடிவிலும் கல்வெட்டுத் துறையிலும் கவிமணி தம் புலமையை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மை தெரிந்து உரைப்பது கவிதை

'எது கவிதை?' என்ற வினாவுக்குக் கவிமணி தரும் இரத்தினச் சுருக்கமான விடை இது:

'உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்
     உருவெ டுப்பது கவிதை;
 தெள்ளத்  தெளிந்த தமிழில் - உண்மை
     தெரிந்து உரைப்பது கவிதை'


கவிமணி கவிதைக்கு இங்ஙனம் வரைவிலக்கணம் வகுத்துத் தந்ததோடு நின்றுவிடவில்லை; அதன் படியே, 'தௌ;ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்து உரைக்கும்' கவிதைகளைப் படைத்துத் தந்து, நம் உள்ளத்தில் நிலைத்த இடத்தினைப் பெற்றார். 'தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம்; ஆயுள்நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு' என்னும் ரசிகமணி டி.கே.சி.யின் பாராட்டு உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை. நிறைவாக, மூதறிஞர் வெ.சாமிநாத சர்மா குறிப்பிடுவது போல் 'தேசிக விநாயகர், எட்ட நின்று பார்த்தோருக்குக் கவிஞராகப் புலப்பட்டார். கிட்ட நின்று கண்டோருக்கு மனிதனாகத் திகழ்ந்தார். இவரிடம் ஊறிக்கிடந்த மனிதப் பண்புகள் தான் கவிதைகளாக மலர்ந்தன. உலகில் மனிதப் பண்புகளுக்கு மதிப்பு இருக்கிற வரையில் இவருடைய கவிதைகள் மணம் வீசிக் கொண்டிருக்கும்'.



 



முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.