சோஷலிசத்திற்கான பாதை பற்றி பேராசிரியர் கைலாசபதி

லெனின் மதிவானம்


பேராசிரியர் கைலாசபதி மறைந்து சுமார் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அவரது வயதினையொட்டி (14-ஏப்-1933) பார்க்கின்றபோது இவ்வாண்டு வெள்ளி விழாவுக்கான ஆண்டாக காணப்படுகின்றது. இவ்வேளையில் கைலாஸின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களில் இன்றைய நாளில் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்ஸிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கிய கதியில் கைலாசபதியின் ஆக்கங்கள் செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.

இவ்வாறாக கைலாசபதி குறித்த ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் காணலாம். இது ஒரு புறமிருக்க கைலாசபதியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றான தேசிய சர்வதேசிய அரசியல் குறித்த அவரது பார்வையும் சோசலிசத்துக்கான பாதையில் அவரது பங்களிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளிவராமை துரதிஸ்டமான ஒன்றே. அமரர் சுபைர் இளங்கீரன் அவர்கள் 'கைலாசபதியின் அரசியல்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார் என்ற போதிலும் அது ஒரு அறிமுக கபட்டுரையாகவே அமைந்திருந்தது என்ற வகையில் இவ்விடயம் குறித்து எழுத வேண்டியது சமகால தேவையாகும்.

கைலாசபதியின் ஆறாவது நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய கலை இலக்கிய பேரவை நான்கு நூல்களை வெளியிட்டது. (பன்முக ஆய்வில் கைலாசபதி - கட்டுரை தொகுதி, கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் - சி.கா செந்திவேல், பேராசிரியர் கைலாசபதியின் நினைவுகளும் கருத்துக்களும் - சுபைர் இளங்கீரன், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (
1979 - 1982) - க.கைலாசபதி) இவற்றுள் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி (1979 - 1982) என்ற நூல் கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வையை அறிந்து கொள்வதற்கு துணையாக அமைந்துள்ளது. சோசலிஷத்திற்கான பாதை பற்றி கைலாசபதியின் பார்வையை தெளிவாக்கிக் கொள்வதற்கு அன்றைய சூழலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்த ஸ்தாபன பிரச்சனைகள் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகின்றது.

உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மார்ஸியம்
19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன், கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது.

அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது அந்த வகையில் மார்க்ஸிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்க்ஸியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. இது தொடர்பில் ஏங்கல்ஸின் பின்வரும் கூற்று முக்கியமானதொன்றாகும்.

|18ம் நூற்றாண்டின் பொருள் முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாய் இருந்தது. ஏனென்றால், அக்காலத்தில் இயற்கை விஞ்ஞானங்களை காட்டிலும் இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் அதாவது பூமண்டலத்தை சேர்ந்த கனபொருட்களின் இயந்திர இயக்க விஞ்ஞானம் (சுருங்கச் சொன்னால் பூமியின் ஆகர்ஷ்ண சக்தியை பற்றிய ஒரு இயந்திர இயக்க விஞ்ஞானம் ஒன்று தான் திட்டமான முடிவுக்கு வந்து சேர்ந்திருந்தது. அக்காலத்தய இரசாயன விஞ்ஞானம் குழந்தை பருவத்தில் தான் இருந்தது. எரியும் காற்று என்று வர்ணிக்கப்பட்ட ''பிளாஜிஸ்தான்'' தத்துவரூபத்தில் அன்று இரசாயனம் இருந்து வந்தது.

உயிரியல் விஞ்ஞானமோ கட்டில் குழந்தையாய் கிடந்தது. தாவர மிருக ராசிகளை ஏதோ மேலோட்டமாக பரிசீலித்து வந்தார்கள், அவ்வளவு தான். இயந்திர இயக்கத்தின் காரணமாகத்தான் இவை (தாவர மிருகராசிகள்). உயிர் பெற்று ஜீவிக்கின்றன என்று விளக்கினார்கள். தெகார்த்தோவுக்கு மிருகங்கள் எவ்வாறு இயந்திரங்களாகத் தென்பட்டனவோ அதே மாதிரி
18ம் நூற்றாண்டின் லோகாயதவாதிகளுக்கு மனிதன் ஒரு இயந்திரமாக தென்பட்டான்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் கருத்துக்கள் தோன்றிய காலம் முதலாளித்துவம் தமது வாலிப வயதை எட்டியிருந்த காலப்பகுதியாகும். அக்காலப் பகுதியானது மார்க்ஸிய சிந்தனை பிறப்பெடுத்து அது தன்னை ஸ்தாபனமாக நிலைநிறுத்திக் கொள்கின்ற ஆரம்ப காலப்பகுதியாக காணப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்த காலப்பகுதியில் மார்க்ஸிய சித்தாந்தமானது உலக வரலாற்று செல்நெறியில் பிரதான தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் அது சமூக மாற்றத்திற்கான பலமான சித்தாந்த தளத்தினையும் ஸ்தாபன அமைப்புகளையும் உருவாக்கியிருந்தது.
1917 ஆம் ஆண்டு இரசிய புரட்சியானது உலக வரலாற்றில் உழைக்கும் மக்களுக்கும், அவர்களை சார்ந்து நின்ற நேச சக்திகளுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும். அவ்வாறே சீன புரட்சியானது உலகில் பெருந்தொகையான மக்களை புரட்சிகரமான அரசியல் ஆளுமைக்குள் கொண்டுவந்தது. இதனையொட்டி உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோட்பாடுகளும் போராட்டங்களும் அதனடியாக எழுகின்ற ஸ்தாபன அமைப்புக்களும் அல்போனியா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா, லாவோஸ், தென் யேமன், நீக்கரகுவா ஆகிய நாடுகளில் புரட்சிகர அரசியல் ஆளுகையின் கீழ் வந்தது. இது மனிதனையும், சமுதாயத்தையும் புதிய கோணத்தில் இட்டுச்சென்றது.

உலகின் ஏனைய பாகங்களை பொறுத்த மட்டில் இக்காலப்பகுதியில் முதலாளித்துவத்திற்கு எதிரான பலமான ஸ்தாபனங்கள் உருப்பெற்று வந்தன. ஆஸ்திரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் பாஸிசப் போக்குகளை எதிர்த்து
1934 ஆம் ஆண்டிலே மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் இயக்கங்களும் நடாத்தியது. ஸ்பெயின் தேசத்திலே 1936ல் உள்நாட்டு யுத்தத்தை கட்டவிழ்த்து விட்ட பாஸிச சக்திகளுக்கெதிரான போராட்டத்தையும் வெகுஜன முண்ணணியையும் கட்டி எழுப்புவதில் ஸ்பானிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மும்முரமாக உழைத்து வந்தது. எமது தலைமுறையில் வியட்நாம் எவ்வாறு உலக மக்களது மனச்சாட்சியை உலுப்பி ஜனநாயக வாதிகளையும் தேசபக்தர்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் ஒரு முகப்படுத்தியதோ அதே போன்று முப்பதுகளில் சின்னஞ்சிறிய ஸ்பெயின் உலகின் நல்லோரை நாலா திசைகளிலிருந்தும் ஈர்த்தது. எழுத்தாளர்கள் இலட்சிய பற்றுடன் ஸ்பானிஷ் குடியரசை ஆதரித்தனர்.

இக்காலகட்டம் அரசியல் விழிப்புணர்வை இலட்சக்கணக்கானோருக்கு ஏற்படுத்திய காலப்பகுதியாகும். ஸ்பானியப் போரில் சர்வதேசப் படைப்பிரிவு ஒன்றின் தளபதியாய்ச் சமர் செய்த பி.அலெக்சாந்தர் கூறியிருப்பது போல, இக்காலப்பகுதியிலே, தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலும் போராட்டங்களிலும் எத்தகைய பரீச்சயமும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோர் கூட திடீரென அரசியல் தெளிவும் செயல் ஊக்கமும் பெற்றவராய்ப் பாஸிஸத்துக்கு எதிரான மகத்தான போர்களத்தில் லட்சிய வெறியுடன் குதித்தனர்.

1930 களைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பாதையிலிருந்து நீங்கி, பிறிதொரு வர்க்க நலனை பிரதிபலிப்பாக மாறியது. உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் நலனையும் பிரதிபலிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களின் மேல் அமர்ந்து ஆணையிடும் கட்சியாக தோற்றம் பெற்றது. சோவியத் ரஷ்யாவால் வீழ்சியுற்ற முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளே இக்கால சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இருந்தனர். இதன் உடன் விளைவாக புரட்சியை அடுத்த சோசலிஸ சமூக வலையமைப்பில் சுரண்டப்படும் வர்க்க அமைப்பை முற்று முழுதாக ஒழிப்பதற்காக பிரயோகிக்கப்பட வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மக்கள் மேல் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அதிகாரமாக மாறியது. மாவோ இத்தகைய போக்குகளை விமர்சனத்திற்கு உட்படுத்தியதுடன் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எவ்வாறு பொது எதிரிக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தமது எழுத்துக்களின் ஊடாக எடுத்துக்காட்டியுள்ளார்.

புரட்சிக்கு பின்னர் சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்களும் குருசேவ் முதல் கொர்பக்சோ வரையில் முன் வைக்கப்பட்டு வந்த தீவிரவாத சிந்தனைகள் யாவும் சோவியத் ரஷ்யாவின் ஆட்சி தொழிலாள வர்கத்தின் கையிலிருந்து மாறி பூர்சுவா வர்கத்திற்கு மாறியதன் உடன் விளைவாக தோன்றியதே சோவியத் சமூக ஏகாத்தியமாகும்.

1962 ஆம் ஆண்டை தொடர்ந்து சோவியத் ரஷ்யாவால் ஏற்பட்ட சமாதான முறையில் பாராளுமன்றத்தை கைப்பற்றல் என்ற நிலைப்பாடானது சர்வதேச தொழிலாள வர்க்கம் குறித்த எவ்விதமான அக்கறையும் இன்றி வெறுமனே தளம் தேடி அலைய முற்பட்ட சோவியத் ரஷ்யாவின் சுயரூபத்தை காட்டி நிற்கின்றது. இது தற்செயல் நிகழச்சியல்ல, வர்க்க முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சர்வதேச ரீதியான கம்யூனிஸ்டுகளின் தியாகங்களையும், உறுதிமிக்க போராட்டங்களையும் கூட நாம் உலக சரித்தத்தில் காணலாம். ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த காலகட்டமும், சீனாவின் புரட்சிகர அரசியல் நிலைப்பாடுகள் தக்க எடுத்துக்காட்டுகளாகும். இவ்வணியினர் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் மீது அக்கறை கொண்டு, அதன் பிண்ணயில் உழைக்கும் மக்கள் தான் சார்ந்த பதாகையை சர்வதேச ரீதியில் முன்னெடுத்து செல்வதற்காக தத்துவார்த்த ஸ்தாபன வேலைத்திட்டங்களை முன் வைத்தனர்.

இந்தக் காலச்சூழலில் ஏற்பட்ட தத்துவார்த்த முரண்பாடுகள் ஏனைய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பாதிக்க தொடங்கின. அதன் வெளிப்பாடாக தோன்றியதே மொஸ்கோ, சீன சார்பு முரண்பாடுகளாகும். அதன் எதிரொலியை நாம் இலங்கையிலும் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கை பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட ஆழமான அரசியல் தத்துவார்த்த வாதங்கள் காரணமாக பொதுவுடைமை இயக்கம்
1964 இல் பிளவடைந்தது. இதன் விளைவாக அன்றைய சூழலில் முற்போக்கு அணியை வீறுடன் முன்னெடுத்த அறிஞர்களான பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, அகஸ்தியர் போன்ற சமாதான வழியில் பாராளுமன்ற பாதை என்ற தத்துவார்த்த நிலைப்பாட்டை முன்வைத்து. மொஸ்கோ சார்பை ஆதரித்து நின்றனர்.

சர்வதேச ரீதியில் உழைக்கும் மக்கள் அரசியலிலும் கலை இலக்கியத்திலும் பல சவால்களையும் போராட்டங்களையும் எதிர்நோக்கி நின்ற இன்றைய நாளில் இந்த முரண்பாட்டை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பல கருத்து மாறுபாடுகள் தோன்றின. இந்த சூழலானது பல புத்திஜீவிகளை அறிவு தடுமாற்றத்திற்குட்படுத்தியது. இவ்வாறானதோர் சூழலில் இத்தகைய சர்வதேச அரசியல் சித்தாந்த முரண்பாடுகளை கைலாசபதி அவர்கள் எவ்வாறு அணுகினார். சோஷலிசத்திற்கான பாதை குறித்து அவர் எத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்தார் என்பது முக்கியமானதோர் வினாவாகும். கைலாசபதியின் பெரும்பாலான சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள்
1979 - 1982 ஆண்டுகளின் காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும்.

அன்றைய நாளில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதனுடன் இணைந்த பிற்போக்கு சக்திகளும் உலக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அக்காலச் சூழலில் சோஷலிச வேடமணிந்து சோவியத் ரஷ்யாவும் உலக மேலாதிக்கத்திற்கெதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் சோவியத் ரஷ்யா குறித்த கைலாசபதி அவர்களின் பார்வை பின்வருமாறு பிரவாகம் கொண்டிருந்தது.

'கடந்த சில வருடங்களாக உலகின் பல பாகங்களிலே சோவியத் யூனியன் ஊடுருவல் செய்து, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. சில இடங்களிலே தனது சூத்திர பாவைகளான கியூபா, கிழக்கு ஜேர்மனி, வியட்நாம் முதலிய நாடுகளின் படைகளையும் ஆலோசனைகளையும் யுத்த தளபாடங்களையும் பயன்படுத்தி தனது செல்வாக்கினை ஸ்திரப்படுத்தி வந்திருக்கின்றது. மிக அண்மையில் ஆப்கானிஸ்தானில் தனது ஆதிக்கத்தை ரொம்பவும் அப்பட்டமாக, எதுவித ஒழிவு மறைவுமின்றி நடத்தி வருகிறது. பல நாள் ஏறிய குதிரை ஒருநாளைக்கு சறுக்கும் என்பது போல, இப்போது ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் பரிதாபகரமான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் சிறிது சிறிதாக ஆரம்பித்த சோவியத் எதிர்ப்பு நாளுக்கு நாள் வேகமடைந்து தற்சமயம் தலைநகரான காபூலுக்கே சென்றுவிட்டது.

தொடக்கத்திலே எதிர்ப்பு காட்டியவர்களை பிற்போக்குவாதிகள் என்றும், மதவாதிகள் என்றும் அலட்சியமாக தாக்கித் தலைமையில் உள்ள பொம்மை அரசாங்கம் வர்ணித்தது. எல்லைப்புற மாவட்டங்களிலே பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் சீனாவும் கிளர்சியாளருக்கு உதவி வழங்குவதாக பழி சுமத்தியது. ஆனால் அந்த அபாண்டப் பழி எடுபடவில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானிய நகரங்களிலும், கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய தேச பக்தர்கள் நெஞ்சுரம் மிக்க மலைவாழ் மக்கள், தராக்கி ஆட்சியையும் அதற்கு பக்கபலமாக உள்ள சோவியத் யூனியனையும் முழுமூச்சாக எதிர்க்கத் தொடங்கினர். அங்குள்ள சோவியத் ராணுவ ஆலோசகர்கள் அதிகாரிகள் பற்றி முன்னர் அப்பகுதியில் கூறியிருக்கின்றோம். சில நாட்களுக்கு முன் தலைநகரான காபூலிலேயே பட்டப்பகலில் சண்டை நடந்திருக்கின்றது.

நகரின் எல்லையில் உள்ள பல - ஹிசார் கோட்டையில் நிலை கொண்டிருந்த அரசாங்க இராணுவப்படையினர் சில பிரிவுகள் கிளர்ச்சி செய்ததாகவும் அதற்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுந்ததாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் கூறுகின்றன. கோட்டையிலிருந்த கிளர்ச்சி படைகளை மடக்கி அடக்குவதற்காக சோவியத் மீ
-24 ஹெலிகெப்டர்கள் றொக்கெற்றுக்கள் தாக்கினவாம். அதே சமயத்தில் சோவியத் டாங்கிகள் கோட்டை மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தின. சுமார் நான்கு மணிநேரம் நடந்த கடும் சண்டையின் பின் கிளர்ச்சியாளர்கள் அகப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இரு தரப்பில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

இன்று சோவியத் யூனியன் சிதைந்து சின்னாபின்னமாகியதற்கு அது கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளே காரணமாகும். சோஷலிச போர்வையில் ஏகாதிபத்திய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்தது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில், ஆசிய ஆபிரிக்க நாடுகளில் சோவியத் ரஷ்யா தமது மேலாதிக்க நலனை முன்னிறுத்துவதற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ செயற்பட்டு வந்தமையை கைலாசபதி சிறப்பாகவே அடையாளம் காட்டியிருக்கின்றார். இது அவரது மார்க்ஸிய லெனினிய மாசேதுங் சிந்தனை வழிப்பட்ட தெளிவை எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு காலச் சூழலில் சோவியத் ரஷ்யாவின் மேலாதிக்க தன்மையானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விஞ்சு நிற்கும் அளவிலும் மாறியது. தோழர் மாசேதுங் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் பயங்கரத் தன்மையை சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் அன்று தற்காப்பு நிலையிலும் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தாக்கும் நிலையிலும் அதாவது தனது உலக மேலாதிக்கத்தை விரிவுபடுத்தும் போக்கிலும் வேகம் காட்டி நிற்பதாக கணித்துக் கொண்டார். அதன் அடிப்படையில் சோவியத் யூனியனது அபாயத்தை உலக மக்கள் புரிந்து கொள்ளும் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய சமூகக்கடமை மார்க்ஸிய புத்திஜீவிகளை எதிர்நோக்கியிருந்தது. கைலாசபதியின் சர்வதேச நிகழ்வுகள் பற்றிய அரசியல் விமர்சனங்கள் மேற்கூறிய நோக்கின் அடிப்படையிலேயே அன்று அமைந்திருந்தமை அக்கட்டுரையின் வாயிலாக இனங்கண்டு கொள்ள முடிகின்றது.

கம்பூச்சியா போன்ற நாடுகளின் விடுதலைப் போரின் அவசியம் குறித்து எழுதிய கைலாசபதி அவர்கள் அந்நாடுகளில் சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதற்கு கைக்கூலிகளாக தொழிற்பட்ட நாடுகளும் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான மிலேச்ச தாக்குதல்களை அந்நாடுகளில் நிகழ்த்தின என்பது குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

இந்தோசீனத்தில் வியட்நாம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கிய காலமுதல் அதாவது கம்பூச்சியாவிலும் லாவோசிலும் சீனாவின் எல்லைப் புறங்களிலும் இராணுவ தாக்குதல்களை நடத்த தொடங்கிய நாள் முதல் ஒரு செய்தி அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதுதான், வியட்நாம் புதியரக நச்சுப் புகையையும் ஒருவிதமான கதிர்வீச்சையும் பயன்படுத்துகிறது என்பதாகும். வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க ஏகாதிபத்திய படைகளும் நச்சு திராவகக் குண்டுகளையும் பயிர் அழிப்பு விஷங்களையும் பெருமளவில் பயன்படுத்தின. அது பற்றி அறிந்த உலக மக்கள் மகா பாதகமான அச்செயலை கண்டித்தனர்.

அமெரிக்கா பயன்படுத்திய நச்சு திராவகங்கள் தென் வியட்நாம் வீழ்சியுற வட வியட்நாமிய படைகள் வசம் சேர்ந்தன. அவற்றையும் வியட்நாமியர் அப்போது கம்பூச்சியா லாவோஸ் ஆகிய நாடுகளில் தேச பக்தி படைகள் தங்கியிருக்கும் பிரதேசங்களை அழிப்பதற்கும் பிரயோகிக்கின்றனர். வியட்நாமிய எல்லை பிரதேசங்களில் தற்பாதுகாப்பிற்காகச் சீன படைகள் பதிலடி கொடுக்க முற்பட்ட பொழுதும் இப்புதிய விஷக் கருவிகளை வியட்நாமியர் பரீட்சித்துப் பார்ததாகக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் கவனமாக அலசி ஆராய்ந்த மேற்கு நாடுகளின் நிருபர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வியட்நாமியர் மூலமாக சோவியத் ராணுவத்தினர் சில நவீன நவீன கருவிகளை தென்னாசிய மக்கள் மீது பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

இந்தோனேசியா, விஷக் கருவிகளின் பரிசோதனை களமாக ஆக்கப்பட்டுள்ளதா என சோவியத் யூனியனின் எதேச்சிகார போக்குகளை தெளிவாக அடையாளம் காட்டியதுடன் சோவியத் ஆலோசனையின் பேரில் வியட்நாம் போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்ட பொருளாதார திட்டம் குறித்தும் அதன் தோல்வி குறித்தும் வெளிப்படுத்துகின்ற கைலாசபதி இந்நாடுகளில் ஆமலாதிக்க பேரரசை ஸ்திரப்படுத்துவதற்காக 'இந்தோ சீனா சமஸ்டி' என்ற பெயரில் ஏனைய நாடுகளை அடக்கி வைப்பதற்காக பெரியதோர் இராணுவப்படையை உருவாக்க நேர்ந்ததையும், அதன் பிண்ணணியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், பின் தங்கிய சமூகத்தில் பலவந்தமாக சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறித்தும் அமெரிக்காவில் சி.ஐ.ஏ எவ்வாறு தமது மேலாதிக்க பணிகளுக்கு ஏதுவாக இருந்ததோ அதே போன்று சோவியத் ரஷ்ய ரகசிய ஒற்றர் சேவையும் (கே.ஜி.பி) சோவியத் அடக்குமுறைக்கு ஏதுவாக அமைந்திருந்தது பற்றியும் எழுதியுள்ளார். இவை யாவற்றிற்கும் மேலாக இந்நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் வெளியேற்றப்பட்டமை பற்றியும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

கைலாசபதியின் சர்வதேச அரசியல் குறித்த பார்வைகளில் முக்கியமானது இந்தியா பற்றியதாகும். சோவியத் யூனியன் - இந்திய உறவுகள் பற்றியும் அதனடியாக எழுகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்குகள், அதனால் உருவாக போகின்ற தீய விளைவுகள் பற்றியும் கைலாசபதியின் பார்வை பிரதானமானதாகும். உலக அரங்கிலே இந்தியா சோவியத் யூனியனின் ஊதுகுழலாக செயற்படுவதை உலகம் அறிந்துள்ளது. சர்வதேச மாநாடுகளில் ஏனைய மூன்றாவது உலக நாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து இந்திய நிலைப்பாடு வேறுபடுவதும் சோவியத் செல்வாக்கினாலேயாகும். இதற்கு அடிப்படை பொருளாதார பிடியே என்பது பலரும் அறிந்ததே. அத்துடன் இராணுவத்துறையில் சோவியத் யூனியனே இப்பொழுது முதலாம் நம்பர் சப்ளையராக விளங்குகின்றது.

அண்மையில் இந்திய விமானப்படை சோவியத் யூனியனிலிருந்து முதலாவது தொகுதி மிக்
-23 ரக விமானங்களைப் பெற்றுள்ளது. அவற்றுடன் ரஷ்யாவில் பயிற்சி பெற்ற விமானிகளும் திரும்பி உள்ளனர். பல கோடி பெறுமதியான மிக்-23 ரக விமானங்களை இந்தியா அடுத்த சில வருடங்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கு உடன்பாடாகியுள்ளது. பிற நாடுகளிலுள்ள தளங்களை தாக்கவல்ல இவ்விமானங்கள் ரஷ்யர்களின் ஆலோசனைப்படி பெறப்பட்டன. இந்திய விமானப்படை இப்பொழுது முற்று முழுதாக ரஷ்ய விமானங்களை கொண்டதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கழுத்துப் பிடிப்புகளினாலேயே இந்தியாவின் குரல் உலக அரங்கில் ரஷ்யாவின் எதிரொலியாக இருப்பதை பலரும் அவதானித்துள்ளனர்.

நடுநிலைமை பற்றி திருமதி இந்திரா காந்தி எவ்வளவு தான் உரக்க கூறினாலும் இந்தியா ரஷ்யா பக்கம் சார்ந்திருப்பதை மூன்றாவது மண்டல நாடுகள் நாளுக்கு நாள் உணர்ந்து வருகின்றன என விபரித்து விளக்குகின்ற கைலாசபதி இந்தியாவில் சோவியத் யூனியன் மேற்கொண்டுள்ள அரசியல் வலிந்து தாக்குதலை இந்தியாவில் உருவாகிவந்த இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் எவ்வாறு இனங்கண்டு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

சோவியத் ரஷ்யாவின் சமூக ஏகாதிபத்தியம் குறித்து விமர்சிக்கின்ற கைலாசபதி அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் குறித்து விமர்சிக்க முற்படுவது அவரது தீட்சாண்யமிக்க பார்வையை எடுத்துக் காட்டுகின்றது. கைலாசபதி சோவியத்-அமெரிக்க மேலாதிக்க போட்டியால் யுத்த ஆபத்து குறித்து பின்வருமாறு எழுதுகின்றார்.

அமெரிக்கா தனது இராணுவச் செலவுகளை என்றுமில்லாதவாறு திடீரென அதிகரித்துள்ளது. இவ்வாண்டு ஆயிரத்து எழுநூற்று எண்பது கோடி டொலர் அமெரிக்க பாதுகாப்புக்குச் செலவிடப்படும். அடுத்த வருடம் இரண்டாயிரத்து இருநூற்று இருபது கோடி டொலர் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீதத்தில் சென்றால் ஐந்து வருடத்தின் பதின்மூவாயிரம் கோடி டொலர் இராணுவத்திற்கு செலவிடப்படும்.

ஏற்கனவே வலதுசாரி அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் நாடுகளில் கூட இராணுவ ஆட்சிகளை நிறுவுவதற்கு அமெரிக்கா முனைந்துள்ளது. தென் கொரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, எல்சல்வடோர் முதலிய நாடுகளில் அமெரிக்காவின் கைங்கரியங்களைக் காணக்கூடியதாய் இருக்கின்றது. அணிசேரா நாடுகளின் ஒற்றுமையை குலைத்து தனக்கு வால்பிடிக்க கூடிய சில தேசங்களை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்க ரஷ்யா பெரும்பாடு படுகின்றது. இந்தியா, சிரியா, வியட்நாம், கியூபா முதலிய வால்பிடிகள் இதற்கு ஒத்தாசை புரிகின்றன.

இரு மேலாதிக்க வல்லரசுகளின் போட்டியின் காரணமாக மூன்றாம் உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு கலாச்சார ஊடுருவல் குறித்து எழுதுகின்ற பேராசிரியர் அவை மனித குலத்தையே அழிக்க கூடியதோர் விசமியாக மாறியுள்ள அபாயத்தையும் எடுத்துக் காட்டுகின்றார். அத்துடன் இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியானது எவ்வாறு மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்ககூடிய அபாயத்தை கொண்டுள்ளது என்பது பற்றியும் அதனை முறியடிக்கக் கூடிய மக்கள் இயக்கங்கள் எவ்வாறு உலகளாவிய ரீதியில் தோன்றி வருகின்றன என்பது பற்றிய அவரது பார்வை விசாலமானது.

இந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் இவ்வல்ரசுகளுக்கிடையில் சிக்காமல் தமக்கான பொருளாதாரத்தையும் சுதந்திரத்தையும் தாமே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதனையும் தமது கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளார். இது தொடர்பில் கைலாசபதியின் ஈரான், ஈராக் யுத்தம் தொடர்பான பார்வை முக்கியமானது. சுருங்க சொன்னால் அமெரிக்க ரஷ்ய (சோவியத்) போட்டா போட்டி ஈரானை வெகுவாக பாதிக்கிறது. அதிதீவிரமான மதவாதியாக தோற்றமளித்தாலும் அயதொல்லா கொமெனி நடைமுறையில் பல விசயங்களில் நடுநிலைமை வகித்து வந்திருப்பது கவனிக்க்க்கூடியது. நாட்டின் ஸ்திரப்பாட்டில் கொமெனிக்கு மிகுந்த கவனம் உண்டு. அவர் தான் முரண்படும் சக்திகளையும் குழுக்களையும் பிரிவுகளையும் ஒருவாறு இழுத்து வைத்துக்கொண்டிருக்கின்றார். பலர் நினைப்பது போல கொமெனி அராஜகவாதியல்ல. தான் தந்திரம் மிக்க அரசியல் தலைவர் என்பதை கொமெனி தக்கவாறு காட்டியுள்ளார்.

ஆனால் ஈரானின் பிரச்சனைகளை முழுமையாக எதிர்நோக்கவும் நாட்டை முன்னெடுத்து செல்லவும் கொமெனி மாத்திரம் போதாது. அவரது மதியழகும் இராஜதந்திரமும் மாத்திரம் போதாது என்ற வகையில் ஈரான் மேலாதிக்க வல்லரசு போட்டியில் சிக்காது சுதந்திரமாக செயற்பட்டு வந்தமையையும் ஈராக் அவற்றினால் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்துள்ளதையும் அதன் இறுதி விளைவாக வளைகுடா யுத்தத்தை ஆதரிக்க நேர்ந்ததையும் கைலாசபதி தீட்சயணத்துடன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இதே காலப் பகுதியில் இவ்விரு வல்லரசுகளின் நடைமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பிறப்பெடுத்த மக்கள் இயக்கங்களையும் அதன் உறுதிப்பாட்டையும் கைலாசபதி அடையாளம் காட்டத் தவறவில்லை. உதாரணமாக சீனா எத்தகைய தடைகளையும் தாண்டி பாட்டளி வர்க்க அரசியல் நலன்சார்ந்த பதாகையை எவ்வாறு முன்னெடுத்து செல்கின்றது என்பது குறித்தும், அரசியல் ஸ்தாபன நடைமுறையில் எத்தகைய நிதானத்தை கடைப்பிடித்து வருகின்றது என்பது பற்றியும் அழகுற விளக்குகின்றார். அத்துடன் சீனா தன்னை இழந்து கொள்வதாக வகையில் அமெரிக்காவுடன் எத்தகைய உறவுகளை வைத்திருந்தது பற்றியும் அது எத்தகைய நிதானமான தன்மையினை கொண்டிருந்தது பற்றியும் அவரது 'சீனாவின் அமெரிக்க உறவு நிதானமானது' என்ற கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும். அதாவது நம்மில் பல புத்திஜீவிகள் தமது சூழலில் காணப்படும் பிரச்சனைகளிலிருந்து விலகி தொலைதூர தீர்வுகளுக்குள் ஒதுங்கி அதன் பிண்ணணியில் தமது கம்பீரத்தில் வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடிக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவர்களின் போக்கில் சர்வதேசியம் என்பது தமது சமகால சூழலிலிருந்து தப்பியோடுகின்ற போக்காகவே காணப்பட்டது. அதனால் கைலாசபதியை பொறுத்தமட்டில் சர்வதேச அரசியல் குறித்த தெளிவான பார்வையை கொண்டிருந்ததுடன் அவை எவ்வாறு இலங்கை அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது என்பது பற்றி தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றார்.

1977 ம் ஆண்டு நடுப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்தது. அதற்கு முன் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு இழைத்த மக்கள் விரோத தவறுகளை காரணமாக கொண்டும், உள்நாட்டு, வெளிநாட்டு பிற்போக்கு சக்திகளின் பலத்த ஆதரவுடனும் அக்கட்சி அதிகாரத்திற்கு வந்தது. விதேசிய சார்பும் உள்நாட்டு உயர்வர்க்கத்தினருக்கு பயன்மிக்க பொருளாதார அரசியல் கொள்கைகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. அவ்வகையில் 1977இல் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த நாள் முதல் மேற்குறித்த இந்த போக்கு இலங்கை அரசியலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதனை கைலாசபதி அவர்கள் இன்று இந்து சமுத்திரத்தில் குறிப்பாக தென் இந்தியாவில் இலங்கை முக்கியமான பகடைக்காயாக அமெரிக்காவால் உருட்டப்படுகின்றது.

சோசலிஷ வாடையே இல்லாமல் இந்நாட்டை உருமாற்றி அமைக்கும் பரிசோதனையை உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் இலங்கையில் இப்போது மேற்கொண்டு வருகின்றார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் தோற்றத்தை முற்றாக மாற்றாமலும், தென்கொரியா, தாய்லாந்து போல ராணுவ சர்வாதிகார ஆட்சிமுறைகளை புகுத்தாமலும் நாசூக்காக தனியார்துறை மேலாதிக்கம் செய்யும் பொருளாதார அமைப்பையும் ஜனாதிபதி தனிசெல்வாக்கு வகிக்கும் பாராளுமன்ற முறையையும் வைத்துக்கொண்டு இலங்கையை அமெரிக்க ஏகாதிபத்திய வட்டத்திற்குள் இறுக்கமாய் பிடித்துக்கொள்வதே மேற்கூறிய பரிசோதனையின் குறிக்கோளாகும் என இலங்கை அரசியலில் எவ்வாறு விதேஷ நலனும் உள்நாட்டு உயர் வர்க்கத்தினரின் நலனும் பேணப்பட்டு வந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

இவ்வாறே அன்று இலங்கை அரசியலில் துளிர்விட்டு கிளைகளாக மாறிக்கொண்டிருந்த ட்ரொட்ஸ்கியவாதம், சேகுவராவாதம், நவீன திரிவுவாதம் முதலிய தத்துவார்த்த ஸ்தாபன நடவடிக்கைகளின் அம்மணமான சந்தர்ப்பவாதத்தையும் அதிகார பதவி மோகத்தையும் தமது அரசியல் கட்டுரைகளின் ஊடாக தெளிவுபடுத்தியதுடன் மாறாக மார்க்ஸிய லெனினிய மாசேதுங் சிந்தனையின் அடியாக எழக்கூடிய அரசியல் போக்கினையும் அதன் மக்கள் சார்பு பண்பினையும் தமது ஆய்வுகள் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஆக கைலாசபதியின் தேசிய சர்வதேசிய அரசியல் பார்வை குறித்து நோக்கின்ற போது சமகால சர்வதேச அரசியல் பற்றிய அவரது பார்வையானது நவீன திரிபுவாதமாக உருவாகியிருந்த சோவியத் யூனியனது நிலைப்பாட்டில் நின்றோ அல்லது திருடி வாழும் பண்பு நீங்கலாக சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மார்க்ஸிய கல்லறைக்கு சென்றுவிட்டது என்ற விரக்திமயப்பட்ட கோட்பாட்டை அமெரிக்க சிந்தனையின் பின்னின்று முன்வைக்கவோ அவர் முனையவில்லை. மாறாக இந்த நெருக்கடியான சூழலை விமர்சனத்துக்குள்ளாகி அதனூடு மார்சிய லெனினிய மாசேதுங் தத்துவார்த்தை அதன் ஸ்தாபன நடைமுறையுடன் அணுகி தீர்வுகளை முன்வைக்கின்றனர். இப்பின்னணியிலே கைலாசபதி சீனச் சார்பு அரசியல் பாதையை முன்னெடுத்தனர். அந்த வகையில் அன்று உழைக்கும் மக்கள் நலன் சார்ந்து நின்ற மக்கள் அரசியலுக்கான பலமான அடித்தளத்தை வழங்கியவர் கைலாசபதி என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

இத்தகைய நிலைப்பாட்டினை கொண்டிருந்த கைலாசபதி கம்யூனிஸ்டுகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். எனினும் அவர் தன்னை பகிரங்கமாக எந்தவொரு கட்சி சார்ந்த நபராகவும் காட்டிக் கொள்ளவில்லை. அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் கூட புனைபெயர்களில் தான் எழுதப்பட்டன. அன்றைய சூழலில் அவர் அவ்வாறான நிலைப்பாட்டினை கொண்டிருந்தமையும் காலத்திற்கு பொருந்துவனவாகவே இருந்தது. அவரது பங்களிப்பு குறித்து நோக்குவதற்கு சீன புரட்சிக்கு லூசுனின் பங்களிப்பு குறித்து மாசேதுங் கூறிய வரிகளை இங்கொரு முறை குறித்து காட்டுவது அவசியமான தொன்றாகும். லூசுன் கட்சியில் இல்லாத ஒரு கம்யூனிஸ்ட். அவர் சீன கலாசார இயக்கத்திற்கு மாபெரும் பங்களிப்பு வழங்கியவர். அவர் சிறிய காற்றுக்கு வளைந்து முறியும் புல் போன்றல்லாது பெரும் புயல் காற்றுக்கு ஈடுகொடுத்து நிற்கக்கூடிய பெருவிருட்சம் போன்றவர். லூசுனிடம் காணப்பட்ட இந்த தெளிவு அர்ப்பணிப்பு பெரும்பாலும் கைலாசபதியின் ஆய்வுகளில் காணப்படுகின்றன.

சீனத்தரப்பு அரசியலை முன்னெடுத்த அவர் மக்களிலிருந்து விலகி நின்ற வரட்டு தத்துவவாதியாக காணப்படவில்லை. அரசியல் துறையில் எவ்வாறு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமோ அவ்வாறே இலக்கிய துறையில் அத்தகைய ஐக்கிய முண்ணணியை வழிநடத்தியவர். இலங்கையில்
1940,1950 களில் பொதுவுடைமை இயக்கம் செல்வாக்கு பெற்றதன் விளைவாக தோன்றியதே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். முற்போக்கு கலை இலக்கிய கொள்கையை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்காற்றிய இவ்வியக்கமானது 60 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சர்வதேச சித்தாந்த போராட்டத்தின் போது அதில் தலைமை வகித்த முன்னணி நண்பர்களை பலர் சோவியத் யூனியனின் நவீன திரிவுவாதத்தை ஏற்றிருந்தமையினால் தத்துவார்த்த ஸ்தாபன ரீதியான சிதைவுக்குள்ளாகியது.

கைலாசபதியை பொறுத்தமட்டில் இந்தச் சீரழிவை கோட்பாட்டு ரீதியாக உணர்ந்திருந்தார் என்ற போதிலும் அவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்புபட்டிருந்த பலரை சரியான மார்க்கத்தில் வென்றெடுப்பதற்காக தொடர்ந்து அவ்வியக்கத்தில் அங்கம் வகித்தார். அவ்வாறே மல்லிகை சஞ்சிகையிலும் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்தார். அவ்வகையில் இந்த ஐக்கிய முண்ணணிக்கான சிந்தனை கைலாசபதியிடம் காணப்பட்ட அதேசமயம் அவர் எக்காரணம் கொண்டும் தமது கொள்கைபிடிப்பில் இருந்து விலகியவராக அவர் காணப்படாமையே அவரது சிந்தனையின் பலமான அம்சமாகும்.

அவ்வகையில் கைலாசபதி என்பது ஒரு நாமம் அல்ல அவர் ஒரு இயக்க சக்தி. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் நலன் சார்ந்த கம்யூனிஸ்ட் இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு தத்துவார்த்த பங்களிப்பினை வழங்கியதுடன் நேர்மையுடன் செயற்பட்ட இடதுசாரி இயக்கங்களுடன் எத்தகைய தொடர்புகளை கொண்டிருந்தார் என்பதனை சுபைர் இளங்கீரன், சி. கா. செந்திவேல் முதலானோரின் கட்டுரைகள் வெளிக்கொணர்ந்துள்ளன.

தொகுத்து நோக்குகின்ற போது அன்றைய சூழலில் பொதுவுடைமை இயக்கங்களில்; சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பிளவு உலகின் ஏனைய நாடுகளில் உருவாகியிருந்த பொதுவுடைமை இயக்கங்களை பாதிக்க தொடங்கியது. மார்க்ஸிஸம் அதன் புணர் நிர்மாணம் குறித்து விவாதத்திற்கான சூழலை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மார்க்ஸிஸ இயக்கங்கள் தொடர்பில் மீண்டு ஒரு புனரமைப்பிற்கான தத்துவார்த்த ஸ்தாபன நடைமுறை குறித்த பார்வை அவசியமானதொன்றாகியது, இந்த பிண்ணணியில் மக்கள் நலன் சார்ந்த இயக்கமொன்றினை கட்டியெழுப்புவதற்காக மார்க்ஸிஸத்தில் தம்மை அர்ப்பணித்து கொண்ட புத்தி ஜீவிகள் யாவரையும் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவும் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியன் உட்பட புரட்சியை வென்றெடுத்த நாடுகளில் ஏற்பட்ட சமூக மாற்றமும்,வர்க்க மாற்றமும் குறித்த ஆய்வுகள், ஏகாதிபத்தியத்தின் இன்றைய தோற்றம் அதன் ஊடுருவல், இதன் பிண்ணணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த தெளிவு, சர்வதேச அரங்கில் இரு வல்லரசுகளாக தோற்றம் பெற்றிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும்,சோவியத் சமுக ஏகாதிபத்தியம் முதலிய வல்லரசுகள் குறித்தும் ஏனைய நாடுகளின் அதன் ஊடுருவல் குறித்த தெளிவு, மாறாக உலகளாவிய ரீதியில் இதற்கு எதிராக மக்கள் இயக்கங்களும் போராளிகளும் எவ்வாறு பிரசன்னம் கொண்டு வருகின்றனர் என்பது பற்றிய பார்வை, அவற்றின் பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கம் இது தொடர்பில் செய்ய வேண்டியவை - செய்யக்கூடியவை பற்றிய ஆய்வுகள் காலத்தின் தேவையாக உள்ளன. இந்த ஆய்வுக்கான அடித்தளத்தையிட்டவர் கைலாசபதி ஆவார்.

அடிக்குறிப்புகள்:-

1. செந்திவேல் சி.கா மேற்கோள்,(1992) கைலைசபதியின் சமுக நோக்கும் பங்களிப்பும்,சவுத் ஏசியன் புக்ஸ்-சென்னை. பக்- 3

2. ஏங்கல்ஸ்(1997) லுத்விக்போயர்பார்க்கும் மூலச்சிறப்புள்ள ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவும், மொஸ்கோ பக் -36

3. கைலாசபதி (1986) திறனாய்வுப்பிரச்சனைகள், சென்னை புக்ஸ், சென்னை, பக் 14,15

4...................(1992) சர்வதேச அரசியல் நிழ்வுகள்(1979 - 1982) புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் - சென்னை பக் - 21,22

5. அதே நூல், பக் - 31

6. அதே நூல், பக் - 90, 91

7. அதே நூல், பக் - 96, 97

8. உதயன்(கைலாசபதியின் புனைபெயர்), (1981) செம்பகதாகை இதழ் யாழப்பாணம்

9. கைலாசபதி க. மேற்படி நூல் (சி.கா. செந்திவேல் எழுதிய முன்னுரை)

10...................(ஜனமகன் என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை.) செப்பாதாகை - 1981.

11. செந்திவேல் சி.கா மேற்படி நூல். பக் - 68





leninmathivanam@gmail.com