தாய் மொழியின் சிறப்புகளும் செம்மொழித் தன்மைகளும்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது. ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக்கலை, சிற்பக்கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும் செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி அழைக்கப்பட வேண்டுமானால் அம்மொழி தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாக அதற்கென ஒரு தனித்த பண்பாடு உடையதாக, அந்தப் பண்பாடு எதனோடும் தொடர்பற்றதாக, வளமையான இலக்கியச் செழுமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஜார்ஜ் ஹர்ட். இவ்வளவில் சிறப்பு பெற்ற உலகச் செம்மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் போன்ற பல மொழிகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு தற்போது தமிழும்  செம்மொழியாக ஏற்கப் பெற்றுள்ளது.தமிழ் தொன்மையானதாக, தனித்த பண்பாடு உடையதாக, இலக்கிய வளம் மிக்கதாக இருப்பதனோடு வாழும் மொழியாகவும் அது திகழ்ந்து வருகின்றது. பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீக்கி விட்டன. மக்களிடம் அவை பேச்சு மொழியாகக் கூட இல்லை. குறிப்பாக சமஸ்கிருதம், பாலி, எகிப்து போன்ற இவ்வகைப்பட்டனவே ஆகும். ஆனால் தமிழின் தொன்மைச் சிறப்பு. மரபு பண்பாடு போன்றன மாறாமல், சிதறாமல் இன்னமும் காக்கப் பெற்று வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் என்ற மொழியின் கட்டமைப்பு மட்டுமே ஆகும். தமிழ் என்பதை மன்னர்கள், புலவர்கள், மக்கள் வளர்த்தாலும்அவர்கள் மறைந்தபோதும் மறையாமல் தமிழ் காப்பற்றப்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது சிறப்பிற்கு உரியதாகும்.

செம்மொழித் தகுதிகள்       

1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை 8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு. இப்பதினொன்றும் தமிழுக்கு உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று திருக்குறளுக்குக் காலம் வகுக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பது தெளிவு. செம்மொழித்தன்மைகள் பதினொன்றுக்கும் உரியதாகத் தமிழின் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இதன் காரணமாக தமிழின் செம்மொழித் தன்மை உடைய இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன என்பது உறுதியாகின்றனது.

தமிழின் செம்மொழித் தன்மையை அறிந்து உணர்த்திய தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர்கள்

பரிதிமால் கலைஞர் பாவாணர் கால்டுவெல் போன்ற பலர் ஆவர். இவர்களின் செம்மொழிப் பற்றிய கருத்துக்கள் பல திறத்தன. இவர்கள் தரும் அனைத்து வரையறைகளும் தமிழுக்கு உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழித் தன்மை பெற்றுள்ளது என்று கருதுகின்றார்.

செம்மொழித் தன்மைகள்  

தமிழ்மொழி பழமைச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் தனக்கான தனித்த இலக்கிய மரபினை உடையது. தமிழ் மொழியின் செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்ற செம்மொழிகளின் இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கத்தக்கவை. இந்தியப் பண்பாடு மரபுகளின் தனித்துவம் உடையதாக தமிழ்ச் செவ்விலக்கியங்கள் விளங்குகின்றன. இந்த நான்கு கருத்துக்களை அவர் எடுத்துக் கூறியதோடு மட்டுமில்லாமல் அதற்கான சான்றுகளையும் எடுத்துக் கூறி தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டினர்.  உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2795) என தமிழ் வரலாறு எனும் நூலில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. நம் தமிழ் மொழி பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் பாவாணர்.

1.தொன்மை 2.முன்மை 3.எண்மை (எளிமை) 4.ஒண்மை (ஒளிமை) 5.இளமை 6.வளமை 7.தாய்மை 8.தூய்மை 9.செம்மை 10.மும்மை 11.இனிமை 12.தனிமை 13.பெருமை 14.திருமை 15.இயன்மை 16.வியன்மை என்ற பதினாறு தன்மையும் தமிழுக்கு இருப்பதாகப் பாவாணர் கருதுகின்றார். இதன் காரணமாகவும் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது என்பது அறியத்தக்கதாகும்.

கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் தன்மை பற்றிப் பேசுகின்றார். " திராவிடம் சமஸ்கிருத்தில் இருந்துப் பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையினராய மொழிநூல் வல்லுநர்க்கு ஏற்புடைத்தாய் விளங்கினும் இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது என்பது இவரின் கருத்தாகும். இவ்வகையில் பல அறிஞர்கள் தமிழின் செம்மொழித் தன்மையைத் தகுதியை உலகம் உணரும் அளவிற்கு எடுத்துரைத்துள்ளனர். தொடர்ந்த இந்தச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ் தற்போது செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது.

தமிழின் செம்மொழித் தன்மையைத் தற்போது உலகிற்கு உணர்த்தியவர் உணர்த்தி வருபவர் கலிபோர்னியாவில் வாழும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார். தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருப்பதற்கான காரணங்களாக நான்கினை அவர் முன்னிறுத்துகிறார்.

முத்தி தருபவன் அவனே; ஞானம் தருபவன்அவனே; ஞானமாய் விளங்குபவனும் அவனே, பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்" எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது "முத்தமிழாகவும் விளங்குகிறான்" எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.

"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "
- திருமந்திரம்.

வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும்அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார்.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."


இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்றனர். பொருளிலக்கணம் பிறந்த முறையினை ‘இறையனார் அகப்பொருள்
எனும் நூல் வழி அறியலாம். மேலும் அகத்திண ஏழும் புறத்திணை ஏழும் பகுத்துத் தந்தது தமிழ்.

மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத் தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன. வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம் தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கின்றன. இன்றைய உலக மொழியான ஆங்கிலத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் இலக்கியங்கள் தோன்றி இலக்கிய வளம் ஏற்பட்டது.

இனிமையும் நீர்மையும் தமிழென லாகும் - பிங்கலந்தை என்னும் நிகண்டு நூல் தமிழ் என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். பெரும்பாலான வட இந்திய மொழிகளில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து வருக்கங்களில் ஒவ்வொரு ஒலிக்கும் நான்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. மேற்கூறப்பட்ட எழுத்துகளுள் தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரே எழுத்துதான். ஒலி வேறுபட்டபோதும் எழுத்து ஒன்றுதான். அதிக எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதால் தமிழைக் கற்பது மிக எளிமையாகிறது

தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மிக இயற்கையாக எளிமையாக அமைந்திருப்பதால் எவ்வித இடர்பாடுமின்றி ஒலிகளை ஒலிக்க இயலும். தமிழைப் பேசும்போது குறைந்த காற்றே வெளியேறுகிறது. எடுத்துக் காட்டாக சமஸ்கிருத மொழியை பேசும் பொழுது அதிகமான காற்று வெளியே செல்வதால் உடல் உறுப்புகளுக்கு அதிக தேய்மானம் ஏற்படுவதாக மொழியியலர் கூறுகின்றனர். இதைச் சோதனையாக சமஸ்கிருத மொழியை கற்கும்போது அனுபவித்து உணர்ந்தவர் மறைமலையடிகள்.

தமிழில் ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளையும் சிறப்பெழுத்துகள் என நற்றமிழ் இலக்கணம் எனும் நூலில் டாக்டர் சொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். இவ்வைந்து எழுத்துக்களைத் தவிர்த்து தமிழிலுள்ள பிற எழுத்துகள் வட மொழியிலும் உள்ளவை; இரண்டிற்கும் பொதுவானவை.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துகளூள் ‘ழவைத் தவிர்த்து பிற நான்கும் பிற திராவிட மொழிகளிலும் உலக மொழிகளிலும் காணப்படுகின்றன. ‘ழ கரம் தமிழைத் தவிர்த்து திராவிட மொழியான மலையாள மொழியிலும் உலக மொழிகளுள் பிரெஞ்சு மொழியிலும் மட்டுமே உள்ளது.

பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாலம், துளு ஆகிய மொழிகள் வட மொழியின் துணையின்றி தனித்தியங்கும் வல்லமை கிடையாது. அம்மொழிகளில் வட மொழியினை நீக்கிவிட்டால் அம்மொழிகள் உயிர் அற்றதாகிவிடும். வட மொழியின் அடிப்படையிலே அவை கட்டப்பட்டுள்ளன. திராவிட மொழிகளில் தமிழ் மட்டும்தான் வட மொழியின் துணையின்றி தனித்து இயங்கவல்லது

தமி வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும். ஆனால் தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும் குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. எனவே தமிழ் இலக்கியத்தின் உயிர்ப் பொருளை பிற மொழிகளில் மொழி பெயர்க்க இயலாதது; முடியாதது.

தொன்மை மொழிகளான இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் ஆகியன பேச்சு வழக்கிழந்து ஏட்டளவில் மட்டுமே வாழ்கிறது. சமஸ்கிருதமோ ஏட்டளவிலும் குறைந்த எண்ணிக்கையினர் பேசுகின்ற கோயில் மொழியாக இருக்கின்றது. கடினமான மொழியான சீனம் ஒரே எழுத்துரு கொண்டிருப்பினும் பல்வேறு கிளைமொழிகளாகப் பிரிந்து விட்டது.

தமிழ்மொழி இன்றளவும் பேச்சளவிலும் ஏட்டளவிலும் உள்ள கன்னித் தமிழாக அழியாமல் இருக்கின்றது. தமிழின் இனிமையை பாராட்டாத இலக்கியங்களே இல்லை. கம்ப இராமாயணம்,

என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”

எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்

                                            என்று புகழ்கின்றது.

தமிழ் விடுதூது,
              
           

இருந்தமிழே யுன்னால் இருந்தேன் இமையோர்
விருந்த மிழ்தம் என்றாலும் வேண்டேன்


என்று வானோர் அமிழ்தத்தைவிடச் சிறந்தது தமிழே என்றுரைக்கின்றது.

தற்கால தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான பாரதி இவ்வாறு தமிழைப் புகழ்ந் துரைக்கின்றார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
பாரதிதாசன்,
தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்

                         என்று நெஞ்சார நெகிழ்கிறார்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்
என்று பொறிக்கச் செய்தார்.

திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே. - பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்.

ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பினை கொண்டிருக்கும். ஆங்கிலம் வாணிக மொழியென்றும், இலத்தீன் சட்ட மொழியென்றும், கிரேக்கம் இசை மொழியென்றும், பிரெஞ்சு தூது மொழியென்றும், தமிழ் பத்தி மொழியென்றும் உலகோரால் வழங்கப்படுகின்றது. தமிழில்தான் பத்திச் சொற்களும், பத்தி பாடல்கல்ளும் அதிகம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.


முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீ காடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர் -
641 007
பேச
:098438 74545.