விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

முனைவர்.இரா.குணசீலன்

வாழ்வில் நாம் காணும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு ஏதோ ஒன்றை நினைவுபடுத்திச் செல்கின்றன.

இங்கு ஒரு தலைவன் தன் மனைவியையும் மகனையும் பிரிந்து பொருள் தேட வந்தான்.
வந்தவேலை நல்லபடியாக முடிந்தது.

மனமெங்கும் தன் மனைவியும், புதல்வனுமே இருக்கிறார்கள்.
அவர்களைக் காண மனம் துடிக்கிறது.
இடையில் கடக்க வேண்டிய தூரம் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது.
நினைத்தவுடன் நினைத்த இடத்துக்குச் சென்றுவிட மனத்தால் முடிகிறது..
உடலால்............?

கார்காலத்தில் வந்துவிடுவேன் அதுவரை காத்திரு என்று வந்தான் தலைவன். உரிய காலத்துக்குள் வந்த வேலையும் முடிந்துவிட்டது..
இக்காலத்தில் நான் வந்துவிடுவேன் என்று என் மனைவியும்,புதல்வனும் காத்திருப்பார்களே என்று தலைவனின் மனம் தவிக்கிறது.

அப்போது தலைவன் அந்நிலத்தில் கண்ட காட்சி அவன் மனதை மேலும் வாட்டுவதாக இருந்தது.அக்காட்சியைத் தன் தேர்ப்பாகனுக்குக் காட்டி தேரை விரைந்து செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறான். இதுவே பாடலின் சூழல் .

பாடல் இதோ.....


'இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
பொன் எனக் கொன்றை மலர மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
செல்க பாக நின் தேரே உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையடு இனன் இரிந்து ஓட
காமர் நெஞ்சமொடு அகலா
தேடூஉ நின்ற இரலை ஏறே'


வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன்
கார் கண்டு பாகற்குச் சொல்லியது

நற்றிணை
242 முல்லை - விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

பாகனே...

பழுத்த இலைகளை உதிர்த்த பிடவமெல்லாம் மெல்லிய மலர்கள் தோன்ற அரும்பிவிட்டன.

புதர்மேல்ப் பற்றிடும் முல்லைக் கொடிகள் யாவும் மலர்ந்தன.

பொன்னைப் போன்ற கொன்றை மலரும் மலர்ந்தது.

நீலமணி என்னும்படியான மலர்கள் காயவில் மலர்ந்தன.

இவ்வாறு பல மலர்களும் மலர்ந்து இது கார்காலம் என்பதை அறிவுறுத்தின.


இதோ பார்........
மடப்பத்தை உடைய பிணைமான் தன் குட்டியுடன் தன் கூட்டத்டதை விட்டுப் பிரிந்து செல்கிறது. அந்தக்குட்டியைப் பார் மருண்டு விழிக்கிறது.


அட!!!!
அதோ பார் அந்த பிணையையும் குட்டியையும் விரும்பிய ஆண்மான் அவை எங்கே..? என்று தேடுகிறது..


என்று தான் கண்ட காட்சியைப் பாகனுக்கு உரைத்த தலைவன்,

அந்த மான்களின் வாழ்வியலுடன் தன் வாழ்வியலை ஒப்புநோக்கிக்கொள்கிறான்.

ஆண்மானாகத் தன்னையும்
பெண்மானாகத் தன் மனைவியையும்
மான்குட்டியாகத் தன் புதல்வனையும் ஒப்புநோக்குகிறான்..


இப்பாடலில் 'விழிகட்பேதை' என்னும் சொல் மருண்டு விழிக்கும் மானின் குட்டியைக் குறிப்பதாகவுள்ளது.
இத்தொடரின் இனிமை கருதி இப்புலவர் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் என்ற பெயருடனே அழைக்கப்படலானார்.
இப்பாடல் வழி தலைமக்களின் அன்பியைந்த வாழ்வியலும்.
பிரிவு அன்பை அதிகப்படுத்தும் என்னும் உண்மையும் புலப்படுத்தப்படுகிறது.
அதோடு இப்புலவரின் பெயருக்கான காரணமும் அறியமுடிகிறது.




gunathamizh@gmail.com