தனிமகனார்

முனைவர்.இரா.குணசீலன்

தனிமை கொடுமையானது. அதிலும் அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் மிகமிகக் கொடுமையானது. தனிமை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.

சிலர் தனிமை வரம் என்பார்கள்
சிலர் தனிமை சாபம் என்பார்கள்

தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி ஒருத்தியின் தனிமைப் புலம்பல் நற்றிணைப்பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவனின் பின்னே சென்ற தன்நெஞ்சம் மீண்டும் திரும்பி வரவில்லை..
உடலுக்கு உயிர் இங்கு காவலாக இருக்கிறது.
அந்த உயிரும் உடலில் தங்கும் அளவாவது உணவு உட்கொள்வதால் தான் தங்கியிருக்கிறது.எப்போது தன்னை விட்டு நீங்கும் என்பதும் தெரியாது..

இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன்  என்பதாகும். இது இவரின் இயற்பெயர் அல்ல..
இப்பாடலில் சிறந்த தொடரைக் கையாண்டதால் பெற்ற பெயர்.
தனிமகன் என்னும் பெயருக்கான காரணத்தைப் பாடல் வழி காண்போம்.


'குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே


                                                               
  153 பாலை - தனிமகனார்

'பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது'

திருமணத்துக்கு இடையிலான தலைவனின் பிரிவைத் தலைவியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

தன் உடலில் உயிர் நீங்கிச் சென்றது போல வருந்தினாள்.

மழை பொழிந்த மேகம் தெற்கே சென்றது போல என் நெஞ்சம் தலைவனின் பின்னே சென்று விட்டது.பின் அங்கே தங்கி என்னை மறந்துபோனது.

என் உடலோ போருக்கும் பின்னர் மக்கள் நீங்கிய ஊரில் காவல் செய்யும் தனி மனிதன் போல வருந்தியது என்றாள் இதுவே பாடலின் பொருள்..


கீழைக் கடலில் நீரை முகந்த மேகம் மின்னல் மின்னி இடிமுழக்கத்துடன் மழையாகப் பொழிந்தது. பின்னர் தெற்குதிசையில் சென்று மறைந்தது. அதுபோல என் நெஞ்சம் என்னை நீங்கித் தலைவனிடம் சென்று அவனிடமே தங்கியது.
என்உடலோ,

போர்நடந்த ஊரில் மக்கள் வெளியேறிய பின்னரும் காவல் புரியும் தனிமகன் போல தனித்து வருந்தியது. உடலில் உயிர் தங்கும் அளவு உணவு உண்பதால் என் உடலில் உயிர் இன்னும் தங்கியுள்ளது என்கிறாள் தலைவி....

இப்பாடலில் தலைவியின் நெஞ்சம் தலைவனுடன் சென்ற பின்னர் தன் உடல் மக்கள் நீங்கிய ஊரைத் தனித்துக் காவல் செய்யும் தனிமகன் போல வருந்தியது என்று சுட்டப்படுகிறது..
இதில் தனிமகன் என்னும் தொடரினிமை கருதி இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன் என்றே வழங்கப்பட்டது.



gunathamizh@gmail.com