பாவேந்தர் பாரதிதாசனின் காதல் சித்திரிப்பு

பேராசிரியர் இரா.மோகன்

 

பாரதிதாசனின் நினைவு நாள்: 21.04.2018
பிறந்த நாள்: 29.04.2018

“நம் பிறப்போடு ஒட்டியது, உலகப் பிறப்பை அருளுவது, யாண்டும் பரந்தது, உணர்ச்சியுள் வலியது, ஐம்புலன் இன்பமும் ஒருங்கு தருவது, எண்ணம் சொல் செயல் எல்லாம் இனிப்பது எது? காதல், காதல், காதல். இக் காதலே – இயல்பான பாலுணர்ச்சியே – அகத்திணை இலக்கியத்தின் பாடற் பொருளாம். உலகியலில் வாழ்வியலைக் கண்ட தமிழினத்தின் தனியிலக்கியத்துக்கு வேறு எவ்வுணர்ச்சி பாடுபொருளாக இருக்க முடியும்? இவ்வுணர்ச்சிக்குத் திணையும் வகுத்துத் தனியிலக்கியம் காணும் எண்ணம் வேறு எவ்வினத்துக்குத் தோன்ற முடியும்?” எனக் காதலின் மேன்மையை – காதலை இலக்கியமாக வளர்த்த தமிழினத்தின் தகைமையை – விதந்து கூறுவார் பேராசிரியர் வ.சுப.மாணிக்கம். இனிதினும் இனிதான இக்காதல் உணர்வு காலங்காலமாகத் தமிழ் இலக்கியங்களில் ஓர் இன்றியமையாத பாடற்பொருளாய் இடம்பெற்று வந்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசனும் காதல் பாடல்களை நிரம்பப் பாடியுள்ளார். மொழியுணர்வுக்கு அடுத்து, காதல் உணர்வு அவரது பாடல்களில் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ளது.

மரபைப் போற்றல்

திருக்குறள் காமத்துப்பாலில் வரும் ஒரு தலைவி,

“செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை”

எனத் தன் பிரிவாற்றாமை உணர்வை உணர்த்துவாள் (குறள்: 1151). பாரதிதாசன் படைக்கும் காதலியோ,

“இருப்பதாய் இருந்தால் என்னிடம்
சொல்க – நீ
போவதாய் இருந்தால் என் கட்டைக்குச்
சொல்”

என்கிறாள். திருவள்ளுவரின் தலைவி, ‘நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை’ எனக் குறிப்பாகப் பேச, பாவேந்தரின் காதலியோ கறாராக – வெட்டு ஒன்று துண்டு இரண்டாக – முடிந்த முடிபாக – ‘நீ போவதாய் இருந்தால் என் கட்டைக்குச் சொல்’ என வெளிப்படையாக உடைத்துப் பேசுகிறாள்; ‘பிரிந்த மறுகணமே இறந்து விடுவேன்’ என்பதை ‘என் கட்டைக்குச் சொல்’ எனக் குறிப்பிடுவதன் மூலம் உணர்த்தி விடுகிறாள்.
பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்தவர் பாரதிதாசன் என்பது காதல் சித்திரிப்பிலும் பொருந்தி வருகின்றது. பாரதியார் ‘பெண்மை’ என்ற கவிதையில்,

“காற்றில் ஏறிஅவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே”

என்று காதற் பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு உள்ள தனி ஆற்றலைப் பாடுவார். பாரதியாரை அடியொற்றிப் பாரதிதாசனும் தம் ‘சஞ்சீவி பர்வத்தின் சார’லில்,

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்”

என்று காதல் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியுள்ளார்.

இங்ஙனம் முன்னையோர் காதல் மரபைப் பின்பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ள இடங்கள் பலவாகும்.

மரபை வளர்த்தல்

கலிங்கத்துப் பரணியில் ஒரு சுவையான காட்சி. போருக்குச் சென்ற தன் கணவன் திரும்பி வந்திருப்பான் என்று எதிர்பார்த்து வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள் மனைவி; கணவன் வராமல் போகவே, வீட்டுக் கதவை அடைக்கிறாள். இந்தத் திறப்பும் அடைப்பும் மாறி மாறி நிகழவே, வீட்டு வாயிற் கதவின் குமிழ்கள் இங்கும் அங்கும் அலைந்து தேய்ந்து போகின்றன.

“வருவார் கொழுநர்எனத் திறந்தும்
        வாரர் கொழுநர்என அடைத்தும்
திருகும் குடுமி விடிவளவும்
        தேயும் கபாடம் திறமினோ!”

என்பது கலிங்கத்துப் பரணி காட்டும் சுவையான காதல் ஓவியம்.

இக் காதல் ஓவியத்தின் வளர்ச்சி நிலையாகக் ‘கதவு பேசுமா?’ என்ற தலைப்பில் ஓர் அழகிய காதல் ஓவியத்தை உருவாக்கியுள்ளார் பாரதிதாசன். தன் காதல் துணையைப் பிரிந்து சென்ற வேல்முருகன் காதலுணர்வு துரத்தக் கடிது வருகிறான்; ஏதும் பேசாமல் இரு விரலை மட்டும் தனது வீட்டுக் கதவில் ஊன்றுகிறான். ‘திறந்தேன்!’ என்று ஒரு சொல் வரக் கேட்கிறான். ‘ஆஆ!, மரக்கதவும் பேசுமா?’ என்று வியப்பு மேலிடுகிறது அவனுக்கு. ‘என்ன புதுமை!’ என அவன் மருண்டு நிற்க, மறுநொடியில் சின்னக் கதவு திறக்கிறது. அவன் தன் அருமைக் காதலியின் தாவு மலர்க் கையை நுகர்கிறான்; அவள் முகத்தில் புன்முறுவல் கண்டு உள்ளம் பூரிக்கிறான்; ‘என்னேடி, தட்டு முன்பு தாழ்திறந்து விட்டாயே?’ என்று வியப்படங்காமல் கேட்கிறான். அவனுக்கு மறுமொழியாக,

“விட்டுப் பிரியாதார் மேவும் ஒரு பெண் நான்;
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்
கருமரத்தால் செய்த கதவு”

என்று கூறுகிறாள் அவனது உள்ளங்கவர் காதலி.

கலிங்கத்துப்பரணி, கணவனின் வருகைக்காக விடியவிடிய வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஒரு பெண்ணுள்ளத்தால் அலைபுரண்டு தேயும் வீட்டுக் கதவின் குமிழினைச் சொல்லோவியமாக்கியது. பாவேந்தர் பாரதிதாசனின் எழுதுகோலோ பிரிந்து சென்ற கணவன் வரும் வரையில் வீட்டுக் கதவாகவே மாறி, வழிமேல் விழி வைத்து எப்போதும் காத்திருக்கும் ஓர் உயிருள்ள பெண்ணோவியத்தை உருவாக்கிக் காட்டியுள்ளது. இங்ஙனம், கலிங்கத்துப்-பரணி காட்டியுள்ள காதல் உணர்வினை ஒருபடி கூடுதலாக வளர்த்துத் தம் கவிதையில் உயிரோட்டமாகச் சித்திரித்துள்ளார் பாரதிதாசன்.

மரபை மாற்றல்

சங்க அக இலக்கியம் சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் காதலைப் பாடியது; அடியோர் (குற்றவேல் செய்வோர்), வினைவலர் (ஏதேனும் ஒரு தொழில் வல்லுநர்) ஆகியோர் காதலுக்கு இடம் தரவில்லை; அன்னோர் காதலைக் கைக்கிளை, பெருந்திணைக்குக் கொண்டு சென்றது. பாவேந்தர் பாரதிதாசன் தம் காதல் பாடல்களில் இம்மரபினை மாற்றியுள்ளார். மாடு மேய்ப்பவன், வண்டிக்காரன், உழவன், தறித் தொழிலாளி, ஓவியக்காரன், குறவன், கோடாலிக்காரன், கூடை முறம் கட்டுவோன், ஆலைத் தொழிலாளி, சுண்ணாம்பு இடிக்கும் பெண், பாவோடும் பெண், பூக்காரி, உழத்தி முதலான ஏழை எளியோரின் காதலுக்கு ஏற்றம் தந்துள்ளார். கவிஞரின் ‘இசையமுது’ என்னும் நூலில் காதல் பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

“கட்டி வெல்லத்தைக் கசக்குது என்றாள்; அவன்
கட்டாணி முத்தம் இனிக்குது என்றாள்”

என்பது சுண்ணாம்பு இடிக்கும் பெண் ஒருத்தியின் காதல் மொழி.

“அதோ பாரடி, அவரே என் கணவர்; அதோ பாரடி
புதுமாட்டு வண்டி ஓட்டிப் போகின்றார் என்னை வாட்டி!”

என்பது ஒரு வண்டிக்காரன் மனைவியின் வாய்மொழி.

இங்ஙனம் ஏழை எளிய மக்களின் காதல் வாழ்வுக்குத் தலைமை இடம் தந்து பாரதிதாசன் பாடியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க மரபு மாற்றம் ஆகும்.

மரபை மீறல்


பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியம் காட்டும் தலைவி தன் காதல் வேட்கையைத் தலைவன் முன்னே வெளிப்படையாக எடுத்துரைக்க மாட்டாள். புதுமண் கலத்திலே ஊற்றிய நீர் புறத்தே பொசிந்து காட்டுவது போல், தலைவன் குறிப்பாக உணரும்படி காட்டுவாள் அவள். பாரதிதாசன் படைக்கும் காதலி ஒருத்தியோ இவ் விதியினின்றும் சிறிது மீறிப் பத்து வழிகளில் தன் காதலை வெளிப்படுத்துகிறாள்; அக்காதலி இடம்பெறும் கவிதைக்குக் ‘கைப்புண் நோக்கக் கண்ணாடியா வேண்டும்?’ எனத் தலைப்பிட்டுள்ளார் கவிஞர். காதலி முன்னே வருகிறாள்; தன் உடை திருத்துகிறாள்; தன் மின்னிடை குலுக்குகிறாள்; அருகே வந்து தோளால் காதலனை இடித்துக் கொண்டு போகிறாள்; வீட்டின் பின்னே காதலன் போகும்போது கொஞ்சும் கருங்குயில் போலே மெல்ல மெல்லப் பாடுகிறாள்; காதலனின் நாய்க்குட்டிக்கு அவன் கண்ணெதிரே முத்தம் கொடுக்கிறாள்; சின்னச் சிட்டுக்களின் கூடல் கண்டு, காதலைனைப் பார்த்து அழுகிறாள்; காலம் கடத்தக் கூடாதென்று கையொடு பிடிக்கிறாள். ‘என் மேல் ஆசை இல்லாவிட்டால் அவள் இப்படியெல்லாம் நடந்து கொள்ளுவாளா?’ என்று நினைத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறான் காதலன்.

கவிஞரின் ‘எதிர்பாராதா முத்தத்தி’ல் வரும் பூங்கோதையும் பொன்முடியும் காதலர்கள். பொன்முடியின் அத்தை மகள் பூங்கோதை; ஆனால் இரு குடும்பமும் பகைமையில் மூழ்கிப் பிளவுண்டு வாழ்கின்றன. இதற்கிடையில் ஒரு நாள் எதிர்பாராத விதமாகக் காதலர் இருவரும் சந்திக்கின்றனர். ‘அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன்’ என்கிறாள் பூங்கோதை. பொன்முடியோ உணர்ச்சி மிக வெடுக்கென்று அவளை அணைக்கிறான். ‘விடாதீர்’ என்கிறாள் பூங்கோதை. ‘கை இரண்டும் மெய்யிறுக, இதழ் நிலத்தில் கனஉதட்டை ஊன்றி, முத்தம் விதைக்கிறான்’ பொன்முடி. இங்ஙனம் ஒரு காதலியை உணர்ச்சி வயப்பட்ட நிலையில் பாரதிதாசன் பேச வைத்திருப்பது மரபு மீறல் ஆகும்.

மரவை உருவாக்கல்

‘குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்னும் கருத்துக்கு இலக்கியமாகப் பாவேந்தர் பாரதிதாசன் படைத்துள்ள நூல் ‘குடும்ப விளக்கு’. குறள் ஓவியமான இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் ஐந்தாம் பகுதி ‘முதியோர் காதல்’ இன்னது என மொழிவதாகும். அதில் வரும் மணவழகருக்கு வயது 105; அவரது துணைவி தங்கத்திற்கு வயது 100. இருவரும் நல்ல முதுமை பெற்றவர்கள்; மக்களையும் பேரர் பேத்திமாரையும் கண்டவர்கள்; நரை திரை மூப்பு உற்றவர்கள்; ஆயிரம் பிறை கண்ட அன்னோர் இப்போது ஆடிய பம்பரங்கள். ‘ஒருவருக்காகவே மற்றவர்’ என உருவாக்கப்பட்ட அம் முதியோரின் காதல் மாட்சியை மணவழகரின் கூற்றின் வாயிலாக நெஞ்சை அள்ளும் வகையில் புலப்படுத்து-கின்றார் பாரதிதாசன்.

“புதுமலர் அல்ல, காய்ந்த
       புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்,
       தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு,
       வறள் நிலம்; குழிகள் கண்கள்!
எதுஎனக்கு இன்பம் நல்கும்?
       இருக்கின்றாள் என்ப தொன்றே!”

முதியவரின் நெஞ்சில் அவரது நலமான வாழ்க்கைத் துணையான முதியோளே வாழ்கின்றாள். அதே போல முதியவளின் நெஞ்சில் தேன் மழையாக இனிக்கின்றார் – இருக்கின்றார் – முதியவர்; ஓய்தலின்றிச் சறுக்கின்றி ஒன்றை ஒன்று பற்றிச் சலிக்காது இன்பம் கொள்ளும் இரண்டு மனப் பறவைகளைக் ‘குடும்ப விளக்’கின் இறுதிப் பகுதியில் சொல்லோவியமாக்கியுள்ளார் பாரதிதாசன்.

முடிவுரை:

பாவேந்தர் பாரதிதாசன் காதலைக் குறித்து நிரம்பப் பாடியிருக்கிறார்; காதலை நுணுக்கமாக, சுவையாகப் பாடியிருக்கிறார்; முன்னைப் பழமைக்கும் பழமையான காதலைப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாகப் பாடியிருக்கிறார். சுருங்கச் சொன்னால், பாவேந்தர் பாரதிதாசன், முன்னோர் மரபைப் போற்றியும் – வளர்த்தும் – மாற்றியும் – மீறியும் – புதுப்பித்தும் – தம் காதல் பாடல்களைப் பாடியுள்ளார். சுருங்கக் கூறின், நுணுக்கமறிந்து, சுவை கெடாது காதற் கவிதைகளைப் பாடுவதில் பாரதிதாசனார்க்கு நிகர் அவரே எனலாம்.


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்