அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 4

புவியில் மனிதர்கள்:

(சென்ற தடவையின் தொடர்ச்சி!) சுமாராக 3600 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னரே ஒருகல உயிரினங்கள் புவியிற் தோன்றி விட்டன. காலஞ் செல்லச் செல்ல இவை தம்முள் இணைய, பல கலங்களினாலான உயிரினங்கள் தோன்றின. இவ்வுயிரினங்கள் சும்மா இருக்கவில்லை. சூழலை தங்கள் வசமாக்கி, சூழலுக்குத் தக்கதாய் தம்மை ஆக்கி கூர்ப்புகள் அடைந்து வளர்ச்சியடைந்து கொண்டே வரலாயின. முதலில் நீரிற் தோன்றிய உயிரினங்கள் பின்னர் நிலத்திற்கும் இடம்பெயர்ந்து, அங்கேயும் தம்மைப் பெருப்பிக்க, பல்லாயிரம் உயிரினங்கள் புவியை ஆளத் தொடங்கின. அவ்வகையில் ஒருகாலத்தில் டைனோசர்கள் என்கிற பூதகரமான உயிரினங்கள் புவியெங்கும் நிறைந்திருந்தன, புவியின் சூழலும் அதற்கு ஒத்திசைவாக இருந்தது.

இப்படியிருக்கையில் 66 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னர் புவியின் சூழலில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. விண்கல் வந்து புவியுடன் மோதியதோ அல்லது தொடர் எரிமலைக் கொந்தளிப்புகள் ஏற்பட்டதுவோ தெரியவில்லை, புவி பெரும் தூசுப்படையால், 6 மாதங்கள், ஒரு வருடமென மூடப்பட, அதன் விளைவுகள் மேலும்; இரண்டு வருடங்களுக்குத் தொடர, கிட்டத்தட்ட புவியின் எல்லா உயிரினங்களுமே அழிந்து விட்டன. தப்பிப் பிழைத்த ஒருசில குட்டிக் குட்டி உயிரினங்களில் இருந்து சூழலுக்குத் தப்பித்தலுக்கு எற்ற வகையில் மாற்றமடைந்தல் என்ற கோட்பாடுக்கு அமைய, முன்னர் இல்லாத உயிரினங்கள் தோன்றிப் பல்கிப் பெருகத் தொடங்கின.

இந்த மாற்றங்களின் போது தோன்றிய பல்வகை உயிரினங்களுள், 63 மெய்யிரம் ஆண்டு முன்னர் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தில் இருந்து, ஈரலிப்பமன மூக்குடைய உயிரினங்கள், உலர்ந்த மூக்குடைய உயிரினங்கள் என இரண்டு வகையான உயிரினங்கள்; தோன்றின. இந்த உலர் மூக்குடைய உயிரினங்களில் இருந்து கூர்ப்புப் பாதையில் வந்தவைதான் லெமூர் என்கிற உயிரினம். லெமூர், லெமூரியா, குமரிக்கண்டம் என்பவை தமிழர்கள் மனதில் இருந்து அழிக்க முடியாதவை அல்லவா. இந்த உலர் மூக்கு உயிரினங்களில் இருந்து 30 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னர் 'புதிய உலகக் குரங்குகள்'
(new world monkey) தோன்றி தென் ஆபிரிக்காவில் தங்கி விட்டன. இவற்றின் ஆண்கள் நிறக் குருடுகள் ஆக இருந்தன. இந்த வகைக் குரங்குகளில் இருந்து மனிதர்கள் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவை பல்வேறு வகையான குரங்குகளாக இன்று இருக்கின்றன.

இனி, ஈரலிப்பான மூக்கு உயிரினங்களில் இருந்து 25 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னர் இரண்டு கிளைகள் வந்தன. ஓன்று 'பழைய உலகக் குரங்குகள்'
(Old world monkey),  மற்றது APE என்கிற வாலில்லாக் குரங்குகள். இவ்விரு உயிரினங்களினதும் சூழலுடனான உயிர் வாழல் முயற்சியில் புறோக்கொன்சல் (Proconsul) என்ற புதிய உயிரினம் தோன்றியது. இந்தப் புதிய இனத்தின் சிறப்பு என்னவென்றால், பழைய உலகக் குரங்குளினதும் வாலில்லாக் குரங்குகளினதும் இயல்புகளைக் கொண்டிருந்ததுதான். இந்த இனத்தின் பரிணாம மாற்றத்தில் இருந்துதான் மனிதக் குரங்குகளும் சிம்பன்சிகளும் கூடவே மனிதத்திற்கான ஆரம்பங்களும் தோன்றின. அதாவது, காலத்தின் ஊடான இத்தொடர் மாற்றங்களினால் மனிதம் என்று கூறக் கூடிய HOMO குடும்பம் என்கிற மனிதர்களின் முன்னோடிகள் தோன்றுகின்றார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. பொதுவாகவே மனிதக் குரங்குகள், சின்பன்சிகள் என்பவற்றில் இருந்து கூர்ப்படைந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்ற கருத்து நம்மிடையே உள்ளது. இது பெருந்தவறு. மனிதர்கள், மனிதக் குரங்குகள், சிம்பன்சிகள் என்ற மூன்று உயிரினங்களும் புறோக்கொன்சல் என்ற ஒரு உயிரின வேரில் இருந்து வந்த வௌ;வேறான உயிரினங்கள் என்பதே உண்மை. 15 மெய்யிரம் ஆண்டு முன்னராகப் புவியிற் சஞ்சரித்த, ஹொமினிடை
(Hominidae) என்ற, இந்த மூன்றும் இணைந்த தொகுதியை சுப்பர் குடும்பம் (Super family) என்பார்கள்.

இனி, தொடர்ந்த கூர்ப்புகளின் விளைவாக, 2.5 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னராக கோமோக்கள் என்கிற மனிதம் தோன்றுகிறது, பரிணாம மாற்ற வளர்ச்சிப் பாதையில். தங்களில் ஏற்பட்ட உயிரியல், இரசாயன மாற்றங்களினால் கோமோக்கள் பெற்றக் கொண்ட சிறப்புத் தன்மைகளைப் பார்ப்போம். கோமோக்கள் சிந்திக்கக் கூடிய உயிரினங்களாக வந்து விட்டார்கள். இந்த ஆற்றல் இவர்கள் வந்த பாதையில் இருந்த உயிரினமான கோமினிஸ்கள் என்பவற்றில் இருந்து பெறப்பட்டதாயினும் அதனை அதிக அளவிற் பாவிக்கத் தொடங்கியவர்கள், மனிதர்கள் எனப்படக் கூடிய கோமோக்களே. இவர்களைத்தான் எங்களது ஆரம்ப முன்னவர்கள் என்கிறார்கள்.

கோமோ குடும்பத்தில் முதலாவது உயிரினமாகக் கருதப்பவது கோமோ ஹபிலிஸ்கள்
(Homo Habilis).   இவர்கள் கற்களால் ஆன பொருட்களைப் பாவிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்;. இந்த ஹபிலிஸ்களின் வாரிசுகளாக, 1.9 மெய்யிரம் ஆண்டு முன்னராக கோமோ இரெக்ரஸ் (Homo Erectus) தோன்றுகிறார்கள். கோமோ இரெக்ரஸ்சுகள் அறிவுநிலையில் இன்னமும் கொஞ்சம் முன்னேறிவிட்டார்கள். கூட்டங்களாக வாழ்வது, வேட்டையாடுவது போன்ற குமுக அமைபபை ஏற்படுத்திக் கொண்டார்கள். நெருப்பை உண்டாக்கவும் அதனைக் கையாளவும் அறிந்;து கொண்டார்கள். இவர்கள் ஒரு மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு காலம் ஆபிரிக்கா முழுவதும் பரவியிருந்தார்கள். கிட்டத்தட்ட 1.3 மெய்யிரம் ஆண்டு கழிய, அதாவது, இற்றைக்கு 500,000 ஆண்டு முன்னராக இந்த மூதாதையர் இன்னொரு கோமோ இனமாக மாறுகிறார்கள். ஆந்தப் புதிய இனத்தால் அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 200,000 வருடங்களுக்குள் அவ்வினத்தில் இருந்து கோமோ நியான்டதல்ஸ் (Homo Neanderthals), கோமோ சேபியன்கள் (Hpmo Sepiens)>  கோமோ டெனிசோவன் (Homo Denisovan) என்ற மூன்று வகையான, இன்னமும் மேம்பட்ட மனிதத் தன்மையான (மனித)இனங்கள் தோன்றுகின்றன. இந்த மூன்றிலும், கோமோ சேபியன்கள்தான் நாங்கள். கோமோ சேபியன்கள் என்றால் இலத்தீனில் புத்திசாலிகள் என்ற அர்த்தமாம்.

இந்த மூன்று உயிரினங்களும் ஆபிரிக்காவுக்குள் மட்டும் அடங்கி இருக்கவில்லை. புலம்பெயரத் தொடங்கி, உலகின் பலபகுதிகளுக்கும் பரவி விட்டார்கள். மேலும், இந்த மூன்று இனங்களும் ஒரே பகுதிகளிலும் கூட வாழ்ந்தும் வந்திருக்கின்றனர். அதனால், இவர்களிடையே வாழ்க்கைப் போட்டிகள் ஏராளமாக இருந்ததை அறியக் கூடியதாக உள்ளது. இருப்பினும் இவர்களிடையே கலப்புகளும் ஆங்காங்கு நடைபெற்றும் இருந்தன. அதற்கான உடலியல் ஒத்திசைவும் இருந்ததது. ஆனால் புதிய இனமொன்று தோன்றவில்லை. ஈற்றில் 200 ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக ஐரோப்பா முழுவதும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் பரந்து வாழ்ந்த நியாண்டதல்கள் 40ஆயிரம் வருடங்களின் முன்னர் அழிந்து போகத் தொடங்கி, சுமார் இருபதினாயிரம் ஆண்டு முன்னர் முற்றாகவே அழிந்து போயினர். இவர்களது அழிவுக்கு காரணமாக காலநிலை இருந்தாலும், சகோதர இனமாகிய கோமோ சேபியன்காகிய நாங்களும் ஒரு காரணமாக இருந்தோம் என்கிறார்கள். மூன்றாவது மனித இனமான டெனிசோவன் என்ற இனத்தின் சுவடுகள் 2010ம் ஆண்டுப் பகுதியில்தான் அறியப்பட்டது. அவர்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

சரி, சகோதர இனங்கள் அழிந்து போக எப்படி கோமோ சேபியன்களாகிற எங்கள் இனம் தப்பித்துக் கொண்டது என்று ஆய்வாளர்கள் கூறுவதைப் பார்ப்போம். இயல்பிலேயே மற்ற இனங்களைவிடச் சற்றுக் கூடிய புத்திசாலிகளாக இருந்த கோமோ சோபியன்களாகிய எங்கள் மூதாதையருக்கு 55 ஆயிரம் ஆண்டு முன்னராக, ஒரு மூளை விகாரம்
(Brain Mutation) ஏற்பட்டிருக்கின்றது. அதன் காரணமாகக் கோமோ சேகியன்கள் இன்னமும் புத்திசாலிகளாக மாற, சூழலின் மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து வாழக் கூடிய தன்மையைப் பெற்றதினால், இன்றும் வாழ்கிறோம், என்று விஞ்ஞானம் கூறுகின்றது.

இதுதான் புவியில் மனிதர் வந்து சேர்ந்து, தப்பிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு. எல்லாமே பரிணாம மாற்றங்களின் ஊடாக நடந்து கொண்டவை. இவற்றுள் பல சுவையான உயிரியற் சங்கதிகள் இருக்கின்றன. எங்களின் நோக்கம் அந்நியர்களும் அறியப்படாத வானவூர்த்களும் என்பதால் அந்த உயிரியல் மாற்றங்களைவிட்டு பரிணாம மாற்ற விளைவுகளையே கூறினேன். அடுத்த தடவையில் எங்களின் ஏலியன் பயணத்துள் நுழைவோம், அதற்கு முன் சின்னவொரு இடைச்செருகல். இடையிடையே மெய்யிரம் என்ற சொல் வந்ததல்லவா. அந்த மெய்யிரம் பற்றி அறிவோம்.

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.'

என்ற குறளை உங்கள் நினைவுக்கு கொண்டு வாருங்கள். தமிழர்கள் எண்ணிலும் எழுத்திலும் வல்லவராக இருந்து, நன்றாகவே அவற்றைக் கையாண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அந்நியச் செல்வாக்குகளினால், எமது சீர்கள் கலைந்து போயின. அவற்றில் முக்கியமானது எண்கள். எங்களின் எண்வரிசையில் இலக்கம் என்கிற இலச்சம், கோடி என்பவை இருக்கவில்லை. வடவர்களின் செல்வாக்கினால் அவை எங்களின் எண்திட்டத்துள் நுழைந்து விட்டன. அவற்றைந் சீர்செய்யும் வண்ணத்தில் எனது இலக்கக் குறிப்புகள் இருக்கின்றன. எமது எண்வரிசையில் ஒருபகுதியை எழுதுகினே;, உங்களின் வசதிக்காக.

ஓன்று, பத்து, நூறு, ஆயிரம், மெய்யிரம், கொள்ளூண், ஈகியம்.......எனத் தொடர்கிறது. ஆயிரத்தை இடுத்து, பத்தாயிரம், நூறாயிரம், ஆயிரமாயிரம் என அடுக்கு வரிசைகள் வருகின்றன. ஆயிரமாயிரம் என்பது மெய்யிரம் எனப்படுகிறது, தமிழில். இதனைத்தான் ஆங்கிலத்தில் மில்லியன் என்கிறார்கள். இந்த வரிசையில் பத்தின் இடுக்கு வரிசையில் இன்னமும் பல உள்ளன. அவற்றைத் தொலைத்து விட்டதினால்தான் இன்று வேறு மொழிகளின் எண்களைப் பாவனையில் வைத்து, பல சிக்கல்களைப் பெறுகின்றோம். எண்ணாய்வு என்ற அறிவியற்பகுதியினுள் எங்களது பாதை இல்லாதிருப்பதாலும், அடிக்கடி மெய்யிரம் என்ற எண் பற்றிக் குறிப்பிடப் போகிறேன் என்பதால், இவ்வளவுடன் அதனை நிறுத்திக் கொண்டு மீண்டும் எங்கள் பாதைக்கு அடுத்த தடவையில் இருந்து வருவோம்.

அந்த விபரத்தை அடுத்த தடவையிற் பார்ப்போம்.



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்