அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 5

தவறிய இணைப்பு:

னிதக் கூர்ப்பின் பாதையில் 4600 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டுப் பாதையில் கடைசி இருநூறாயிம் ஆண்டுக்குள்தான் கோமோ சேபியன்களாகிய நாங்கள் தோன்றினோம் என்றாகிறது. 1859ம் ஆண்டு டார்வின் எழுதிய 'தியரி ஒவ் எவலூசன்' என்ற நூல் வருவதற்கு முன்னரே கூர்ப்புச் சிந்தனை பெரிய அளவில் மேற்கு நாடுகளில் வந்தாலும் அரிஸ்ரோற்ரிலின் உயர்விலங்குகள், தாழ்விலங்குகள்; என்ற பாகுபாட்டுச் சிந்தனை வெளிப்பட்ட காலத்தில் இருந்தே இச்சிந்தனை மெதுவாக வந்துவிட்டது எனலாம். ஆனால் மதச் சித்தாத்தங்கள் அச்சிந்தனையை அடக்கிவிட்டன. தொல்காப்பியத்தில் உள்ள உயிரினப் பகுப்புச் சூத்திரங்ம் கூட, கூர்ப்பின் அருமையான வெளிப்படுத்துதல் எனலாம்.

ஆபிரிக்காவில் ஆய்வாளர்களினால் சேகரிக்கப்பட்ட எலும்புகளின் தொகுப்பில் இருந்து, அதனை ஆதாரமாக் கொண்டே டார்வினின் கூர்ப்புக் கொள்கை வருகிறது. ஆனால் அவரின் கூர்ப்புக் கொள்கை வெளிவருவதற்கு முன்னர் 1851ல் இந்தத் தவறிய இணைப்பு என்ற பதம் வந்துவிட்டது. குரங்குகள், வாலில்லாக்குரங்குகள், மனிதர்கள் என்ற சிறப்புக் குடும்பக் கூர்ப்புப் பாதையில் அப்போது பலஇடங்களில்; வெற்றிடங்கள் இருந்தன. காலங்காலமான தேடுதல்களின் பயனாக அவற்றினை இட்டு நிரப்பிக் கொண்டு வந்தாலும், இன்னமும் குறிப்பாக, கோமோ இனம் தோன்றுவதற்கு முன்னராக, கோமினிட் என்ற உயிர்களில், இந்தத் தவறிய இணைப்பு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது, என்கிறார்கள். இன்றும் அத்தவறிய இணைப்பினைச் சிலர் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தத் தவறிய இணைப்பு, ஆய்வாளர்கட்கு பெரும் சவாலாகவுள்ளது. அதுமாத்திரமல்ல, கடவுட் கொள்கையாளர்களும், தவறிய இணைப்பு என்றால் என்ன என்பதை முற்றாக அறியாமலே அதனைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். எப்பொழுது இத்தவறிய இணைப்பை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கிறார்களோ, அப்பொழுதுதான் குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்பது முழுமையாக்கப்படும்.

இவ்விடயங்கள் இப்படியிருக்க, 1974ல் ஜோன்சன் என்பவரால் ஏத்தியோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 3.2 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு பழைமையான 3 அடி உயரமும் 7 அங்குல உயரமும் 64 இறாத்தல் நிறையும் கொண்ட ஒரு சிறிய பெண்ணாக அடையாளம் காணப்பட்ட அவ்வெலும்புக் கூட்டிற்கு லூசி (டுரஉல) என்று பெயரும் வைத்தார்கள். அருகில் இருப்பது லூசியின் மாதிரிப் படம். இந்த லூசியின் இனத்தவர்கள்தான் தவறிய இணைப்பினரோ என்று எண்ணித் தேடுதல்கள் நடந்த போதிலும் லூசியின் இனத்தவர்கள் எவரது எலும்புக் கூடுகளும் இதுவரை அகப்படவில்லை.

எழுபதுகளின் பிற்பகுதியில் இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியிலும் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருந்தது. இந்த எலும்புக்கூடானது மனிதரது எலும்புக்கூடுமல்ல, மனிதக் குரங்குகளின் எலும்புக்கூடுமல்ல. ஆனால் இரண்டு வகை எலும்புக்கூடுகளையும் ஒத்திருந்தது. மனிதரையும், மனிதக் குரங்குகளையும் ஒத்ததான அவ்வெலும்புக்கூட்டுக்கு 'பொலிமனிதன்'–
Boliman–எலும்புக்கூடு எனப் பெயரிட்டார்கள். இந்தப் பொலிமனிதன்தான், மனிதக் குரங்குகளுக்கும் மனிதருக்கும் இடையேயான தவறிய இணைப்பாக இருக்குமோ எனச் சில ஆய்வாளர்களைச் சிந்திக்க வைத்தது.

இந்தச் சிந்தனையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை மிக மிகக் குறைவு. ஏனெனில் பொலிமனிதன்தான் மனிதக் குரங்குகளுக்கும் மனிதருக்கும் இடையிலான (தவறிய) இணைப்பாக இருந்தால் ஏன் இதுவரையில் ஒரே ஒரு எலும்புக்கூடு மட்டும்தான் கிடைத்திருக்கவேண்டும்? நியாயமான கேள்விதான். எனவே ஒரு பொலிமனித எலும்புக்கூட்டினை தவறிய இணைப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளமுடியாது. இது கூர்ப்புக் கொள்கைக்கு முரணாக அமைந்துவிடுகிறது. ஆனால் ஒரு சிந்தனை விரிவாக்கம் எழுகின்றது.

ஏனஸ்ர் ஹக்கல் என்பவர் இந்தத் தவறிய இணைப்புப் பற்றிய சுவையான கருத்தொன்றைக் கூறுகிறார். மனிதருக்கான கூர்ப்புப் பாதையில் 24 படிநிலைகள் உள்ளன. அதில் 23வது படிநிலையானது அறியப்படவில்லை. அதனைத்தான்; அவர் தவறிய இணைப்பு என்கிறார். மேலும், அந்த 23வது படிநிலையிற்கான தடயங்களை எங்களால் அறிய முடியாது என்கிறார். ஏன் என்பதைப் பாருங்கள். அவர், மனிதவினம் தோன்றியது ஆபிரிக்கா இல்லை, ஆசியா என்கிறார். இங்கிருந்துதான் மனிதவினம் ஆபிரிக்காவிற்கு புலம் பெயர்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், இன்று இந்து மாகடலில் கடலில் மூழ்கி இருக்கும் லெமூரியாவில்தான் மனிதக் கூர்ப்பின் 23ம் படிநிலையும், 24ம் படிநிலையும் நடந்தது என்கிறார். மனிதக் கூர்ப்பின் படிநிலை வளர்ச்சியில் 23ம் படிநிலையான ஹோமினிட்
(hominid) என்பது முற்றாகவே இப்போது இந்து மாகடலின் அடியில் அடங்கிப் போய் விட்டது என்கிறார்.

உலக வரலாற்றில் மனிதத்தை தெளிவாக அடையாளப்படுத்தக் கூடியதாக பார்வை இவரது ஆய்வில் இருந்த போதும் மேலை நாட்டவர்களால் இது பெரிதாக கருத்திற் கொள்ளப்படுவதில்லை. காரணத்தை நான் கூறத் தேவையில்லை. இன்று பல ஆய்வுகளும் முடிவுகளும் லெமூரியாவைத் தவிர்த்து வைத்து விட்டே பார்க்கப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.

நியாண்டதல்கள்

சில ஆய்வாளர்கள் தவறிய இணைப்பாக நியாண்டதல்களைக் கூறுகின்றார்கள். நியாண்டத்தல்கள் பற்றி இள்ளமும் கொஞ்சம் தெளிவாகப் பார்ப்போம். நியாண்டதல்கள் மனிதரைப் போன்றவர்கள். இருநூறாயிரம் ஆண்டு முன்னராக ஐரோப்பியப் பகுதிகளில் பெரும் திரளாக வசித்து வந்தவர்கள். கிட்டத்தட்ட 15000, 20000 வருடங்கள் முன்னராக முற்றாகவே அழிந்து போய்விட்டார்கள். எங்களைப் போலவே பெரும்பாலும் இருந்த இவர்களை பெரும்பாலான ஆய்வாளர்கள் எங்களது சகோதர இனம் எனக் குறிப்பிடுகின்றார்கள். மனிதர்கள் வாழ்ந்த காலப் பகுதியிலேயே, மனிதர்களுடன்; இவர்களும்; ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்காசியா போன்ற பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றார்கள். தற்போது பெரும் பரபரப்புடன் இந்த நியாண்டரல்கள் பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

(படம் நியாண்டத்தலகளைக் காட்டுகிறது)

200,000 ஆண்டு காலங்களுக்கும் மேலாக ஐரோப்பப் பகுதிகளிலும், மத்திய கிழக்காசியப் பகுதிகளிலும் இவர்கள் வசித்து வந்ததற்கான தடயங்கள்; ஏராளமாக உள்ளன. இஸ்ரேல், ஈராக், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இவர்களது எச்சங்களும் தடயங்களும் அதிக அளவிற் காணப்படுகின்றன. நியாண்டதல்கள் முற்றாகவே அழிந்தொழிந்து போனாலும் அவர்களது மரபணுச் சுவடுகள் மனிதர்களினது மரபணுக்களில் கலந்திருக்கின்றன. தற்கால ஆய்வுகளின்படி, எங்களது DNA இல் 4 வீதமான பகுதியில் நியாண்டதல்களின் DNA கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களது அழிவிற்கு பெரும்பாலும் இயற்கையும், சிறுபகுதியாக மனிதர்களின் போட்டி மனப்பாங்கும் காரணமாக இருந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களினது கணிப்பு,

தவறிய இணைப்பாக நியாண்டதல்களைக் கருத முடியாது. ஏனெனில் மனிதக் கூர்ப்புப் பாதையில் ஹோமோ சேபியன்கள் என்கிற மனித இனத்திற்குச் சமாந்தரமாக, கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியல், ஹோமோ இரெற்ரிஸ் என்ற ஒரே வேரில் இருந்து கிளைவிட்டுப் பிறந்த இன்னொரு பரிணாமக் குடும்பம்தான் நியாண்டதல்கள். மனிதர்கள் போன்றே, குடும்பமாக வாழும் இயல்பைக் கொண்டிருந்த இவ்வினம், தங்களுக்குள் சில சொற்களைக் கூட தொடர்பாடலுக்காய் கொண்டிருந்திருக்காலாம் என்பது ஆய்வுகளின் மூலமாகத் தெரிகின்றது. மேலும், மனிதர்கள், சில சொற்களையோ அல்லது ஒலி வடிவங்களையே இவர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் எனக் கூறுபவர்களும் உண்டு. சிலை வடிவங்கள் அமைத்தல், சித்திரங்கள் வரைதல், ஆயுதங்கள் செய்து அவற்றைக் கையாளல், வேட்டைக்கான சிறப்பான உத்திளைப் பாவித்தல்; என்பன இவர்களிடம் இருந்திருக்கின்றன. இதுவரையிற் கிடைக்கப் பெற்ற ஆகப் பழைமையான சிற்பம் நியாண்டதல்களினது தானென்பது குறிப்பிடத்தக்கது.. குடும்பக் கட்டுமானங்கள் கூட அவர்களிடம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். குகைகளில், வாழ்ந்த நியாண்டரல்கள் நெருப்பையும் பாவித்திருக்கின்றார்கள்; என்பது தெரிகின்றது. ஒப்பீட்டளவில் அக்காலத்தில் மனிதர்களையும் விட முன்னேற்றமானவர்களாகத்தான் தமது காலத்தில் இந்த நியாண்டரல்கள் இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றும் அளவிற்கான விபரங்களை ஆய்வாளர்கள் வெளிக் கொண்டு வந்திருக்கின்றனர். மனிதர்கள் பல ஆரம்ப விடயங்களை இவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்றும் அடித்துக் கூறும் ஆய்வாளர்களும் உள்ளனர்.

இனி வித்தியாசமான இன்னொரு பார்வையைக் கூறுகின்றேன். கடவுட் கொள்கையாளர்களும் பரிணாமக் கொள்கையாளர்களும் தவறிய இணைப்பினையிட்டு மோதிக் கொண்டு இருக்க, இன்னொரு சாரார் தவறிய இணைப்பென்று ஒன்றுமே இல்லை என்கின்றார்கள். எவ்வளவுதான் முயற்சித்தாலும் இல்லாத ஒன்றினை எங்ஙனம் தேடிப் பிடிப்பது என்கின்றார்கள். அதற்காக கடவுள் கொள்கையை இவர்கள் முற்றாக ஆதரிக்கின்றார்கள் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். மாறாக, கூர்ப்புக் கொள்கையை முற்றாகவே ஏற்றுக்கொள்ளும்; இவர்கள் குரங்குகளுக்கும் மனிதருக்குமிடையேயான பரிணாம வளர்ச்சிப் பாதையில் ஒருபடியே இல்லை என்று மட்டும்தான் கூறுகின்றார்கள். அடடா! இது என்ன புதுக்கதை ஒன்று வருகின்றது எனப் பார்க்கின்றீர்களா? அப்படியாயின் மில்லியன் வருடங்களின் முன்னர் எவ்விதம் பூமியில் மனிதர்கள் தோன்றினார்கள் என்று கேட்கின்றீர்களா? இவர்கள் கூறும் சுவாரசியமான விளக்கத்தினை அடுத்த தடவையிற் பார்ப்போம்.

அந்த விபரத்தை அடுத்த தடவையிற் பார்ப்போம்.



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்