புகைத்தல் என்னும் பூதம்!

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A

 
சர்வதேசப் புகைத்தல் எதிர்ப்புத் தினம் மே-31

'இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.'
(குறள் 879)என்பது வள்ளுவர் வாய்மொழி.

முள்ச்செடியை முளையிலேயே அழிக்க வேண்டும். முற்றியபின் நீக்க முயன்றால், அது நீக்குபவரின் கையையே காயப்படுத்தும். அதுபோலத்தான் புகையிலை எமது மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மக்களுக்கு இது புரியவில்லை. இப்போது 'கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்பது போல வந்து விட்டது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்காக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டமானதுடன் பொழுது போக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகப் பிரபலமானது. அதனால் இது ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இது ஒரு பணப்பயிராக இருந்ததுடன் மருத்துவப் பொருளாகவும் இருந்தது. அதனால் ஒரு பணப்பயிராகவே ஏனைய நாடுகளிலும் பிரபலமடைந்து, விளைவிக்கப்பட்டது. அரசாங்கமே முன்னின்று அதனை விளைவிக்கச் செய்தது. இப்போது கட்டுக்கு மீறிவிட்டது. எதுவும் செய்யமுடியாது தவிக்கின்றனர், மக்கள், அரசுகளும் கூடத்தான். வள்ளுவரின் வார்த்தை எப்பவும் பொய்க்காது.

பகையைக்கூட புகையாய் ஊதித்தள்ளிவிடும் மனிதன் இந்தப் 'புகை என்னும் பகையை' பகைக்க முடியாது திணறுகிறான், திண்டாடுகிறான். ஒரு பழக்கம் வழக்கமாகிவிட்டால் அதனை விலக்குவது கடினம். ஒரு பழக்கத்தைப் பழகுவது எளிதானது. ஆனால் அந்தப் பழக்கத்தை நிறுத்துவது என்பது கடினமான செயல். அதிலும் தீய பழக்கமாக இருந்து விட்டால் மிகவும் சிரமம். அப்படியான ஒரு தீய பழக்கமே புகைப் பிடித்தல். இதனால் உடலுக்குக் கேடு ஏற்படும் என்பது நன்கு தெரியும். அதிலும் அதிலுள்ள நிக்கோட்டின் உடலில் அதிகமானால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு நுரையீரலும் பாதிப்படையும் என்பது நன்கு தெரிந்ததே. உண்மையில் புகைத்தலை ஏன் பலராலும் நிறுத்த முடியாது இருக்கிறது? புகைத்தலினால் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது? இது ஆராயப்பட வேண்டியது. புகைப்பவர்கள் புகையிலைப் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. இதனால்த்தான் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வேலை செய்து களைப்பு எற்பட்டவுடன், 'ஒரு முறை ஊதிவிட்டு வருகிறேன்' என்று புகைபிடிக்கச் செல்லுவர். மூளையில் மனநிலையை மாற்றும் செல்லுக்கு நிக்கோட்டீன் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற ஒரு மாயை தோற்றுவிக்கப் படுகிறது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள், பிரச்சனைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு நிலையில் இருப்பதாக எண்ணுகிறார்கள். இதனால் புகைப்பவர்கள் மனத்தாலும் உடலாலும் நிக்கோட்டினை விருந்தாளியாக ஏற்றுக் கொள்ளும் ஒரு தேவையில்லாத பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கத்தால் இரத்தத்தில் நிக்கோட்டின் அளவு சிறிதளவு குறைந்தவுடனேயே அவர்களுக்குப் புகைக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகின்றது. இதன்காரணமாகப் பலர் பணத்தையும் விரயமாக்கி அரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள். இதனைத் தெரிந்தும் உணர்ந்தும் வெளியே வரமுடியாமல், புகைத்தலைக் கைவிட முடியாமல்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். புகையிலையில் நிக்கோடின் என்னும் நச்சுப் பொருளுடன் வேறும் இரசாயனக் கூட்டுப் பொருட்கள் சேர்ந்துள்ளன. இவற்றுள் சில மனித குலத்திற்கே பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய அதி சக்தி வாய்ந்தவைகளாகும். இவற்றைத்தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர். போதைக்கு உள்ளாகின்றனர்.



புகைப்பிடிப்பது உடலுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியாமல் பலர் இருக்கின்றனர். சிலர் இந்தமாதிரியான கெட்டபழக்கத்தை நிறுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும் நீண்ட நாட்கள் தொடர்ந்து பிடித்த புகையிலையிலுள்ள நிக்கோட்டின் உடலிலேயே தங்கியிருக்கும். இது நீண்ட நாட்கள் உடலில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே அதனை உடலிலிருந்து வெளியேற்றச் சில உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அவற்றை உட்கொண்டால் உடலிலுள்ள நிக்கொட்டின் வெளியேறிவிடும். பொதுவாக புகைப் பிடித்தால் உடலிலுள்ள சில குறிப்பிட்ட உயிர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். இவை நுரையீரலைப் பாதுகாப்பவை. ஆகவே இந்தச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் உடலிலுள்ள நிக்கோட்டீனை வெளியேற்றி விடலாம்.

ப்ராக்கோலியில் வைட்டமின் 'சி' மற்றும் 'பி5' சத்துக்கள் அதிகமாக உள்ளன. புகை பிடிப்பதால் உடலிலுள்ள வைட்டமின் 'சி' சத்துக் குறைந்துவிடும். எனவே இதனை அதிகம் சாப்பிட்டால் வைட்டமின் 'சி' குறைபாட்டைத் தவிர்க்கலாம், அதோடு நிக்கோட்டினின் அளவும் குறையும், உடல் எடையும் குறையும்.

ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் 'சி' அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்த சாப்பிட்டால், உடலின் மெராபாலிசம் அதிகரிப்பதோடு மனஅழுத்தமும் குறையும்.

ஒரு முறை புகைப் பிடித்தால், அதிலுள்ள நிக்கோட்டின், மூன்று நாட்களுக்கு உடலில் இருக்கும். தொடர்ந்து புகைப் பிடிப்பவராக இருந்தால், சருமம் பாதிப்படைவதோடு சருமத்தின் பொலிவு கெட்டுவிடும். அவ்வாறு பாதிப்படையும் சருமப் பொலிவை 'கரட்' சாற்றிலுள்ள வைட்டமின்கள் 'ஏ, பி, சி' மற்றும் 'கே ' சத்துக்கள் மீட்டுத் தரும். மேலும் உடலிலுள்ள நிக்கோட்டீனையும் முற்றிலும் வெளியேற்றிவிடும்.

பச்சை இலைக் காய்கறிகளில் அதிக வைட்டமின்கள் இருப்பதோடு போலிக் அசிட்டும் அதிகம் உள்ளது. அவற்றுள் பசலைக்கீரை மிகவும் சிறந்தது.

மாதுளை இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும். கிவி பழத்தில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பெர்ரி பெர்ரிப் பழங்களான ஸ்ரோபெரி நிக்கோட்டினை வெளியேற்றுவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் டாக்சின்களையும் வெளியேற்றிவிடும்.

காய்ந்த மூலிகைகள் உடலிலுள்ள நிக்கோட்டின் அளவை குறைத்துவிடும். ரோஸ்மேரி, பார்ஸ்லி, சீரகம், ஏலக்காய், பூண்டு மற்றும் பல மூலிகைப் பொருட்களில் வைட்டமின் 'ஏ,ஈ' அதிகம் உள்ளன. மேலும் அதிகமாகப் புகைப் பிடித்தால் உடலில் வறட்சி ஏற்படுவதோடு நிக்கோட்டின் அளவும் அதிகமாகும். ஆகவே அதிக அளவு தண்ணீர் குடித்தால் எந்த ஒரு நச்சுப் பொருளையும் உடலில்த் தங்க விடாது தடுக்கலாம்.

எனினும் புகைத்தலை நிறுத்துவது அவசியமானது. புகைத்தலை நிறுத்துவதால் இதயத்தில் வரும் நோய்கள் தடுக்கப்படுகின்றன. புற்று நோய் வருவதற்கான காரணிகள் குறைக்கப்படுகின்றன. மூச்சு வாங்கல், இருமல், வாய்மணம் இல்லாமல்ப் போவதுடன் பற்கள் பழுப்ப நிறம் நீங்கி வெண்மை பெற்றுவிடும். புகைப்பதை நிறுத்திவிட்டால் ஒரு காலகட்டத்தில் உடல் நிலையும் மன நிலையும் வாழ்நாளில் ஒரு நாளும் புகைக்காதவர்களின் மனநிலைக்கு மாறிவிடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகப் புகைத்தல் எதிர்ப்பு நாள் மே 31 ஆம் நாளன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகச் சுகாதார நிறுவனத்தின்
(World Health Organization) 168 உறுப்பு நாடுகள் சேர்ந்து இதனை முடிவெடுத்தன. உலகில் மனித இறப்புக்களைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் பகையிலையை இறப்பிற்கு எளிய வழி என்று சாடுகிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதை வலியுறுத்துகிறது. ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான இறப்புக்களைக் குறைக்க முடியும் என நம்புகிறது. எதிர்பார்க்கிறது.

ஒருவர் புகைபிடிப்பதனால் அவருக்கு ஏற்படும் கெடுதலைவிட அவர் வெளியிடும் புகையைச் சுவாசிப்பவர் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார். புகையைச் சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக 'நாட்டிங்காம்' பல்கலைக்கழக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி நுரையீரல்ப் புற்றுநோய் 16 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிப்பவர்களிடத்திலன்றி பக்கத்திலிருந்து அவர்கள் விட்ட புகையைச் சுவாசித்தவர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இதே வேளை புகைப் பிடிப்போர் வெளியிடுகின்ற புகையை புகைப்பிடியாதோர் தொடர்ச்சியாகச் சுவாசிப்பதால் ஆஸ்த்மா, இருதய நோய்கள், காசநோய், காதுகளில்த் தொற்று, சவாசத்தொகுதி நோய்கள், திடீர் சிசு மரணம் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளாக நேரிடும். புகையிலை பாவனையால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றுள் கண்களுள் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்றுப் புற்ற நோய், சதையீ புற்று நோய், சிறுநீரகப் புற்று நோய், கழுத்துப் புற்று நோய், மூத்திரப்பையில் கட்டி, நுரையீரல் புற்று நோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக்குழாயில் புற்று நோய், வாய்ப் புற்று நோய், குரல்வளை பாதிப்பு, வாயிலும் தொண்டையிலும் பாதிப்பு, இருமல், சளி, பாரிச வாதம், இரத்த அழுத்தம், இதய சம்பந்தமான நோய்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு புகையிலை காரணமாக இனவிருத்தி ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாகப் புகையிலை பாவிக்கும் ஆண்கள் மத்தியில் பாலியல் பலவீனம் அதிகரிப்பதாக உள்ளது. அதேநேரம் நிறை குறைந்த குழந்தை பிறப்பதும், குறைமாதக் குழந்தை பிறப்பதும், குழந்தை இறந்து பிறப்பதும் புகையிலை பாவனையாளர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகிறது.

அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும் போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. சிலருடைய பார்வை குறைந்துவிடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையைச் சுவாசிக்கும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கிறது. அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது. ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த நோய் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாக்ககிறது என்று இந்த ஆய்வினை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன் கவலையுடன் குறிப்பிடுகிறார்.

உலகில் மெல்லக் கொல்லும் நச்சுத்தன்மை மிக்க தாவரங்களில் புகையிலையும் ஒன்றாகும். இத்தாவரத்தின் தண்டுப்பகுதியைவிட இலைப் பகுதியிலேயே அதிக அளவு இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுகின்றன. இது மருத்துவ விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இற்றைவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்த்தங்கள் உள்ளடங்கி இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவற்:றுள் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத்தன்மையானவை. குறிப்பாக ஐதரசன் சயனைட், அமோனியம், ஆசனிக், டி.டி..ரி, மெதனோல், காபன் மொனொக்சைட், பென்சின், தார், நிக்கட்டின், போன்றன சுட்டிக்காட்டத் தக்கவை.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் புகையிலையை வௌ;வேறு விதமாகப் பாவிக்கின்றனர். சொல்லப்போனால், இந்த நச்சுத்தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார்கள். தூள் புகையிலையை, மூக்குப்பொடியாக மூக்கில் போட்டு இழுத்துக் கொள்கிறார்கள். மற்றும் குழாய்களைப்பாவித்து 'சுங்கான்' புகையை உறிஞ்சுகிறார்கள். சுங்கான் கையிலே வைத்திருப்பது கௌரவமாகக் கருதுகிறார்கள். மேலும் பீடி, சிகரட், சுருட்டு என்று பலவகையான முறையில் புகையிலையைப் பாவிக்கிறார்கள்.

தனிமனித பொருளாதார அபிவிருத்திக்கும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய தடையாக புகையிலை பாவனை அமைகின்றது. இதனால் சுகாதாரச் சீர்கேடு, பொருளாதார வளர்ச்சி இன்மை, தனி மனித வறுமை,குடும்ப உறவுகளின் சிதைவு எனப் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றது. நாட்டின் ஏனைய அபிவிருத்திகளை மேற்கோள்ளக் கூடிய பெருந்தொகையை குடும்ப ரீதியிலும், நாடளாவிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகைத்தல் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களினின்றும் விடுபட அரசாங்கம் அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது.
‘Prevention is better than Cure’ என்ற வகையில் வருமுன் காத்தலே சிறந்த மருந்து. சிகரட் பாவனையை பழகுவதற்கு முன்னரே அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தித் தடுத்தலானது மிகப் பயன் தரக்கூடியதும் இலகுவானதுமாகும். சிகரட் பாவனையினால் ஏற்படும் தாக்கங்களை சிறுவர் இளைஞர்களுக்குப் புரிய வைத்தல் அவசியம். மக்களை ஏமாற்றுவதற்குக் கம்பனிகளால் கையாளப் படுகின்ற தந்திரோபாயங்கள் பற்றித் தெரியப்படுத்தி அவ்வாறான விளம்பரங்களால் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு உரிய வழி வாய்க்கால்களைக் காட்டி உத்திகளைத் தெளிவு படுத்தல் வேண்டும். உண்மைகளை அறிவுறுத்தல் அவசியமாகிறது.

புகைத்தலுக்கு எதிரான அறிவுறுத்தலும் பிரச்சாருமும் நீண்டகாலமாகச் செய்யப்பட்டு வந்த போதிலும் ஆக்க பூர்வமான பலன் பெரியளவில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். உலக சகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலுக்கமைய அநேக நாடுகள் புகைபிடிப்பவர்களை எச்சரிப்பதர்க்காக சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிட்டு வருகின்றன. சிறுவர்களுக்குச் சிகரட் விற்பனையும் செய்ய முடியாது, பொது இடங்களில் புகைத்தல் முடியாது என்றெல்லாம் வலியுறுத்தல்கள் உள்ளன. புகைப்பதை நிறுத்துவதற்குப் புகைப்பவர் ஒவ்வொருத்தரும் விருப்பமும் உறுதியும் கொள்ள வேண்டும். ஆகவே மனதில் உறுதியுடன் ஒருவர் தானே நினைத்து புகைப்பதை நிறுத்துவதே வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையுடன் செயற்படுவோம். வெற்றி நம் கையில்!

'திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.'

வாழ்க வையகம்! வாழ்க வாழ்கவே!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்