மூட நம்பிக்கையா? பகுத்தறிவா? அறிவியலா?!

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A


'இனியாவது விழிப்போம் நம் முன்னோர்களின் அறிவியலைத் தோண்டி எடுப்போம்'


ல்லாயிரம ஆண்டுகளுக்கு முன்னே நம் முன்னோர்கள் சீரும் சிறப்போடும் வாழ்ந்தார்கள். அறிவு பூர்வமாகப் பல செயற்பாடுகளைச் செய்துவந்தார்கள். எமது சந்ததியினர் அதனைப் பின்பற்றி நடந்து வந்தார்கள். காலப்போக்கில் அவையெல்லாம் விளக்கம் தெரியாது நடைமுறையிலிருந்தன. சில செயலற்றும் போயின. பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போயும் விட்டனர். ஆனால் இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை. அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சனைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கும். பாட்டியின் 'அஞ்சறைப் பெட்டி' இருக்கவே இருக்கிறதே! நிறையப் பேருக்கு இது தெரியாது ஆனால் தெரிந்தவர்கள் சிலர் 'பாட்டி சொல்லுவார்' என்று பலரிடமும் அறிமுகப்படுத்துவர். சிலர் கேட்பார்கள். பலர் கேட்க மாட்டார்கள். ஏனெனில் தற்கால மருத்துவ முறைக்குப் பழக்கப் பட்டு விட்டார்கள். மேலும் இவையெல்லாம் பழைய காலத்து மூடநம்பிக்கைகள் என்றும் ஒதுக்கி விடுவார்கள். அது போன்ற ஒன்றுதான் இந்த 'ஸ்ரெம் செல் தெறப்பி'. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 'பாட்டி' வைத்திய முறையில் ஒன்றாக நம் முன்னோர்கள் இந்த 'ஸ்ரெம் செல் தெறப்பி' வைத்திய முறையைச் செய்து வந்தார்கள், ஒரு தாயத்து மூலமாக, அந்தக் காலத்தில். குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். அதனைப் பத்திரமாக எடுத்து ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிவிடுவார்கள். வழமையாகப் ஆண் பிள்ளையானால் அரைஞான் கொடியில் பொற்கொல்லரிடம் கொடுத்தே அதனை ஒரு தாயத்தில் அடைத்துக் கட்டுவார்கள். சங்கிலியில் கோர்த்துக் கழுத்தில் தொங்கவும் விடுவார்கள். பெண்பிள்ளையாகில் கழுத்தில் தொங்கவிடுவார்கள். இது வழமை. காலம் காலமாக பாட்டியின் கட்டளைப்படி நடக்கும் ஒரு செயல். யாரும் கேள்வி கேட்டதில்லை. ஆகவே யாருக்கும் பதில் எதுவும் தெரியாது. காலம் போகப் போகப் பிள்ளை வளர்ந்து பள்ளிக்குச் செல்லத் தொடங்க இதற்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது மறந்தும் போய்விடும். இதில் இன்னும் ஒரு முறையுமுண்டு. குழந்தை பிறந்தவுடன் தொப்புள்க் கொடியை அறுத்;து, நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாகக் காய வைத்து, பின்பு அரைத்துப் பொடியாக்கி, அந்தப் பொடியை ஒரு தாயத்தில் அடைத்து இடுப்பிலோ கழுத்திலோ கட்டுவது.

இதற்குப் பின் நடக்கப் போவது யாருக்கும் தெரியாது, அனுபவப்பட்டால்த் தானே தெரியும்! பிற்காலத்தில் அந்தக்குழந்தை வளர்ந்து பெரியவனானதும் ஏதேனம் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர் அந்தத் தாயத்திலுள்ள தொப்புள்க் கொடிப் பொடியை எடுத்து, நீரிலோ அல்லது பாலிலோ கரைத்து அந்த வளர்ந்து விட்ட, நோய்வாய்ப் பட்ட குழந்தைக்குக் கொடுப்பார். சில நாட்களில் நோயும் பறந்து போகும். இன்றுவரை இந்தத் தாயத்துப் பழக்கம் சில குடும்பங்களில் இருக்கவே செய்கிறது. ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் இல்லை என்றே சொல்லி விடலாம். இதற்குக் காரணம் விபரம் தெரியாமை. பாட்டியும் விபரம் சொன்னதில்லை. மருத்துவரும் சொன்னதில்லை. யாரும் கேட்டதுமில்லை. கேட்கும் பழக்கமும் அந்தக் காலத்தில் யாருக்கும் இருந்ததுமில்லை. யாருக்கும் கொடியநோய் வந்ததுமில்லை. சொல்வதற்குச் சந்தர்ப்பம் வரவுமில்லை. சந்தர்ப்பம் வந்தாலல்லவோ சொல்வதற்கு!

இங்கே சிந்தனையாளர் சாக்ராடீஸ் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரையை உற்று நோக்குவது நல்லது. 'மாணவன் கொக்கைப்போல இருக்கவேண்டும், கோழியைக் போல் இருக்கவேண்டும், உப்பைப் போல் இருக்க வேண்டும், உன்னைப்போல் இருக்கவேண்டும'; என்றார். அதற்கு விளக்கமும் கூறுகிறார். கொக்கு ஒற்றைக்காலில் நீண்ட நேரம் பொறுமையாக நின்று, மீன்கள் வந்தவுடன் விரைந்து செயற்பட்டு மீனையும் பிடித்துவிடும். அதுபோல ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்தி அரிய செயல்களைச் செய்ய வேண்டும். கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால் அந்தக் குப்பையை விட்டுவிட்டுத் தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும். அதுபோல மாணவன் தான் சந்திக்கும் தீமைகளைத் தூரத் தள்ளிவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு எந்த உணவோடு சேர்ந்தாலும் அது இருக்கிறது என்று தெரியும். ஆனால் சேர்ந்த உப்பு கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் சுவையை மட்டும் உணர முடியும். அதுபோல மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி தனது மறைவுக்குப் பின்னும் இதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும். அதெல்லாம் சரி உன்னைப் போல் இருக்க வேண்டும் என்றதன் அர்த்தம் தான் என்ன என்று மாணவன் கேட்டான். அதற்கு அவர், 'மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை எந்தவிதத் தயக்கமுமில்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்' என்றார். அதனை அந்த மாணவன் நிரூபித்துக் காட்டிவிட்டான். இங்கே நாங்கள் பார்க்க வேண்டியது, சாக்ராடீஸ் போல மருத்துவரோ, சாக்ராடீஸின் மாணவர்கள் போல மாணவர்களோ எங்கள் சமூகத்தில் அந்த நாட்களில்; இருந்திருக்கவில்லைப் போலும்! இருந்திருந்தால் இந்த 'ஸ்டெம் செல் தெறப்பி' பாதுகாக்கப்பட்டிருக்கும்!

 இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதிய வைத்து, தாயத்து எல்லாம் கர்நாடகம், அசிங்கம், பத்தாம்பசலித் தனம் என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இதனைக்; கட்டுவது வீண் என்று நம்மை எல்லாம் முட்டாள்களாக்கி விட்டனர். இதில் நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் எம்மிடையே சாக்ரடிஸ் போலவோ அல்லது அவருடைய மாணவன் போலவோ யாரும் இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. சமீப காலத்தில் மருத்துவ மனைகளில் ஒருவருக்குக் குழந்தை பிறந்துவிட்டால் உங்கள் குழந்தையின் 'ஸ்டெம்செல்லை' அதுதான் தொப்பிள் கொடியைச் சேமிக்கலாமா என்று ஒரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப் படுகிறது. அப்படி அவர்கள் சேமிக்க வசூலிக்கும் தொகை பெரும் தொகையாக இருக்கும். பாட்டியின் மருத்துவத்தின்படி எந்தச் செலவுமில்லாது செய்த வேலைக்கு இத்தனை செலவா? தொப்புள்கொடியை இத்தனை செலவு செய்து ஏன் சேமிக்க வேண்டும் என்று கேட்டால், குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனபின் அவனுக்குக் கான்சர் போன்ற குணப்படுத்த முடியாத ஏதாவது பெரிய நோய் வந்த விட்டால் (?) இந்தத் தொப்புள்க் கொடியிலுள்ள செல்களை வைத்து அந்த நோயைக் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு 'ஸ்டெம் செல் தெறப்பி' என்று பெயர் சூட்டி பெரிய வியாபாரமே நடக்கிறது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையின் தொப்புள்கொடி அதேதாயின் இன்னொரு பிள்ளைக்கும் உபயோகமாகும். இந்தத் தெறப்பி நம் முன்னோர்களின் நாளாந்தச் செயற்பாட்டில் ஒன்று. இன்னும் சொல்லப் போனால் பாட்டி வைத்தியம். ஆகவே நாம் ஒன்றும் முட்டாள்களில்லை. நம் முன்னோர்கள் அறிவாளிகளே. அவர்கள் கூறி வைத்தவற்றை நாம் தெளிவுபடுத்தித் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நமது முன்னோர்களின் அறிவியலை நாம் அழியவிடாது பேணிக் காக்க வேண்டும். இங்கே இன்னொரு உண்மையுமுள்ளது. நாம் நம்மில் நம்பி;க்கை வைக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தெறப்பியை கைவிட்டது போல இன்னும் பல விடயங்கள் விளங்காமலும் புரியாமலும் கருத்து வேறுபாட்டுடன் பழக்கத்தில் உள்ளன அவற்றையும் நாம் தேடிக் கண்டுபிடித்து நம்மை விரிவுபடுத்த வேண்டும்.

படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசாக் நியூட்டனின் புவியீர்ப்பு விசையைப் பற்றித் தெரியும். கண்டறிந்த கதையும் தெரியும். ஆப்பிள்ப் பழம் கீழே வழுந்தது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால்ச் செடியாக இருந்த ஆப்பிள் மரத்தை மேல் நோக்கி வளரச் செய்த சக்தி பற்றி எவரும் பேசுவது மில்லைச் சிந்திப்பதுமில்லை. இப்போது ஆய்வுகளின் மூலம் மனிதனுக்கு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன்மூலம் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்றும் தெரியவருகிறது. இந்த மூன்றாவது கண் தான் 'பினியல் சுரப்பி'
(Pineal Gland).  பினியல் சுரப்பி என்பது 'ஆனந்த சுரப்பி, இதனை பிரெஞ்சு அறிவியல் நிபுணர் 'ஆன்மாவின் இருக்கை' என்று குறிப்பிடுகிறார். இது இந்துக்களின் நெற்றிச் சக்கரத்துடன் தொடர்புடையது. இது சிவனின் மூன்றாவது கண்ணைக்குறிக்கும். மற்ற இரண்டுகண்களும் புறக்கண்கள். இந்த இரண்டு கண்களும் உண்மையைப் பார்ப்பதில்லை. எனவே அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண் திறக்கிறது. அதுவே ஞானக்கண். எங்கள் மரபுப்படி அறிதல் என்பது படிப்பால் பெறுவதில்லை. ஆழ்ந்த புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த மூன்றாவது கண் திறக்கும்போது தான் சிவனை உணர்கிறோம். இது இந்துக்களின் நெற்றிச் சக்கரத்துடன் தொடர்புடையது. சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில்க் காணப்படுகிறதோ அதே மாதிரி இதுவும் அமைந்துள்ளது. இந்தப் 'பினியல் சுரப்பி' ஒளியின் மூலம் தூண்டப்படுகிறது. இது மெலன்டொனில் எனும் திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நமது மதம் இந்தச் சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் பேரின்பம் அடையலாம் என்று கூறுகிறது. இந்த மூனறாவது கண்ணைத் தூண்டுவதன் மூலம் முக்காலங்களையும் அறியும் தன்மை அடையலாம் என்று நம்புகிறது. மேலும் விழிப்புணர்வு போன்ற பல நல்ல சக்திகளையும் பெறமுடியும் என நம்புகிறது. தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச் செய்து அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும் பெறலாம். இதைத் தகுந்த பயிற்சியுடன் எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம் திறமைசாலிகளாக வாழலாம்.

நம்முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால் போலி என்று கேலி செய்து இழந்துவிட்டோம். இனியாவது விழிப்போம். 'இந்துமதம் அர்த்தமுள்ளது, பொருள் பொதிந்தது.' இந்து மதம் பகுத்தறிவுள்ள விஞ்ஞானத்துடன் இணைந்த மதம். இதன் சிறப்பை இப்போதுதான் கடந்த நூற்றாண்டளவில்த்தான் மெல்ல மெல்ல மேற்கத்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவு ஜீவிகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்தையும் வழிபடுபவர்க்கும் அடுத்தவர் மதம் சற்று ஆச்சரியமாக இருக்கும். ஒவ்வொரு மதத்தின் சம்பிரதாயங்களும் மற்ற மதத்திலிருந்து வேறுபடும் ஆனால் ஒவ்வொரு மதமும் சென்று சேருமிடம் நிச்சயமாக ஒன்று தான். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ்மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழர்களின் அறிவியலாளர்கள், சித்தர்கள். சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வண்ணமும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சித்தர் தின விழா கொண்டாடப்படுகிறது.

பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று இளையோரை வழிநடத்துதல். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் அனுகூலங்களை அடையவைக்கலாம், நன்மைகள் பெற ஏதுவாக இருக்கும் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவாக்கப் பட்டவையே பழமொழிகள். அவை எளிய முறையில்க் கூறப்பட்டிருந்தாலும் பாமர மக்களிடையே வித்தியாசமான முறையில் கையாளப் பட்டு வருவது வருத்தத்திற் குரியது. தங்களின் அறிவுக்கு எட்டியபடி வாய்க்கு வந்தபடி இதமாக இருக்கக் கூடியதாக, சொல்லி வருகிறார்கள். அதனால் நாளாவட்டத்தில் அதுவே நிலைத்து நின்றுவிடுகிறது. அதனாலே அவைபோன்ற சிலவற்றை ஆராய்வது இங்கே பொருத்தமாக இருக்கும். தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.

'சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்' இதனைத் திருத்திப்; 'பானையில் இருந்தால் அகப்பையில் வரும்' என்றும் மாற்றிவிட்டிருக்கிறார்கள். தங்களுக்கு நாளாந்தம் பரிச்சயமான மாதிரி மாற்றியுள்ளனர். இதற்கு விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. உண்மையில் 'சட்டியிருந்தால் அகப்பையில் வரும்' என்பதுதான் பழமொழி. சட்டி என்பது 'சஷ;டி' அதுதான் 'கந்த சஷ;டி'. சஷ;டி திதியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது விளக்கம். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பை. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் முக்கியத் திருவிழா கந்த சஷ;டி. . இந்த நன்நாளில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் விரதமிருந்து முருகனை வேண்டக் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்ற அடிப்படையில் இப்பழமொழி உருவானது. சஷ;டியில் விரதமிருந்தால் அகப்பையாகிய கர்ப்பப் பையில் குழந்தை உருவாகும்.

விஞ்ஞான ரீதியாக நிறுவப்பட்ட உண்மை. 'அரசமரத்துக் காற்றைச் சுவாசித்தால் கர்ப்பப் பைச் சுரப்பிகள் சீரடைந்து மாதச்சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகும்' என்பது. இதனை வைத்தே 'அரசினை நம்பிப் புருசனைக் கைவிட்டாள.;' என்ற பழமொழி வந்தது. 'அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்' என்ற பழமொழியும் உண்டு. அரசினை என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரசமரத்தினைச் சுற்றி வந்தவுடன் குழந்தை உற்பத்தியாகி விடுமா என்ன?! அப்படியென்றால் எல்லாரும் பிள்ளை பிள்ளையாய் பெற்றுத்தள்ளிவிடலாமே! பின் புருசன் என்ன தேவைக்கு?! திருமணமான பெண்கள் கட்டிய கணவனைக் கவனிக்காது வெறுமனே அரச மரத்தைச் சுற்றி வந்தால் எந்த விதப் பிரயோசனமும் இல்லை. எதுவாக இருந்தாலும் புருசன் துணையின்றி பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாதென்பது உண்மை. அதனைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்த் தனத்தைக் கூறுகிறது. அதே போல'அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டாள்' என்று மாற்றியும் ஒரு பழமொழி உருவாக்கப் பட்டுள்ளது. எல்லாமே புத்தி பேதலித்த பெண்களுக்காகக் உருவாக்கப் பட்டவை. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டால் நடுத் தெருவில் நிற்கவேண்டியது தான். மறு பேச்சுக்கு இடமில்லை.

'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.' இதன் பொருள், மற்றவர்கள் பிள்ளையைப் பேணிக் காப்பாற்றினால், தன் பிள்ளை தானகவே வளர்ந்துவிடும். இதுதான் பொருள். ஆனால் உண்மையான பொருள், அந்தக் காலத்திலே என்றாலும் இந்தக்காலம் என்றாலும் மருமகள் என்றால்க் கொஞ்சம் இளக்காரம். அதுவே ஊரான் பிள்ளையாகிறது. கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ஊரான் பிள்ளை, அவளைக் கவனமாகப் பார்த்தால் அவள் வயிற்றிலுள்ள உன் குழந்தை தானாகவே ஆரோக்கியமாக வளரும் என்பதுதான் பொருள். இதிலும் ஒரு நியாயமிருக்கிறது. எங்களுக்கு ஒரு பாட்டி இருந்தார். மகனின்வழிப் பேரனும் மகள் வயிற்றுப் பேரனும் இருந்து விளையாடும் போது, மகனின் மகனின் தலையில் நல்லபடி எண்ணெய் தேய்க்கப்பட்டிருந்தது. அவர் என்ன செய்தார் என்றால் அதனைத் தன் கையால் தடவி எடுத்து மகளின் வயிற்றுப் பேரன் தலையில் பூசிவிட்டார். மகள் பெற்ற பிள்ளைக்கும், மருமகள் பெற்ற பிள்ளைக்கும் அவருக்கு வித்தியாசம் தெரிகிறது. இரண்டும் பேரப் பிள்ளைகள் தான்! இது தான் உலகம். சொல்லித் திருத்த முடியாது. தாமாகத் திருந்தினால்த்தான் உண்டு.

'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.' இது திரிந்து ;ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்' என்றாயிற்று. ஐந்து பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்தால் அவர்களை பக்குவமாக வளர்த்தெடுத்து பொறுப்பான இன்னொருவன் கையிலே கொடுப்கும்வரை பெற்றவர்களுக்கு எத்தனை சிரமம். ஆனால் அவர்கள் அதனைப் பெருமையாகவும் சிறப்பாகவுமே செய்கிறார்கள். ஆனால் அதனை வைத்துத்தான் இந்த ஆண்டிக்கதை உருவாகியது. ஆனால் உண்மையான பழமொழி அதுவல்ல. 'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.' என்பது தான் உண்மையானது. அதன் அர்த்தமே வேறு. ஒருவனின் குடும்பம் சிறந்து இருக்க வேண்டுமாயின், 1. அவனுடைய தாய் ஆடம்பரமின்றி ஒழுக்கமாகக் குடும்பத்தைக் காக்க வேண்டும். 2. தகப்பன் பொறுப்பாக இருந்து சிறப்பாகக் குடும்பத்தைக் காக்க வேண்டம். 3. மனைவி ஒழுக்கமாக இருந்து குடும்பத்தைக் காக்க வேண்டும். 4. உடன்பிறப்புக்கள் அன்பாகவும் பண்பாகவும் இருந்து குடும்பத்தைக் காக்க வேண்டும். 5. பிள்ளைகள் சொல் பேச்சுக் கேட்டு ஒழுக்கமாக இருந்;து குடும்பத்தைக் காக்க வேண்டும். இந்த ஐந்தும் ஒரு குடும்பத்தில் இருந்துவிட்டால்ச் சொல்லவா வேண்டும்! உண்மையிலே அந்தக் குடும்பத் தலைவன் தான் அரசன்! ஆனால் இந்த ஐந்தும் ஒரு குடும்பத்தில் அமைவது துர்லபம். ஆகவே இதனை மனதில்க் கொண்டே, இவை அமையாவிட்டால் 'ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.' என்ற பழமொழி வந்துள்ளது. ஆனால் மொட்டந் தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போட்டது போல ஆகிவிட்டது.

நாம் கடவுள் எங்கும் இருப்பதாக நம்புகிறவர்கள். அது தூணாகட்டும் துரும்பாகட்டும். அதனால்த்தான் ஒரு கல்லைக் கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்த அதனைக் கடவுள் என்று கும்பிடுகிறோம். வழிபாடு என்பது பிரார்த்தனை. பிரார்த்தனைக்கு ஒரு பொருள் அவசியம். அதனால்த்தான் கல்லைக் கடவுளாகப் பார்க்கிறோம். இந்த மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு நமக்கு பகுத்தறிவு அவசியம். இந்தப் பகுத்தறிவைக் கொடுப்பது கல்வி. இந்தப் பகுத்தறிவை நமக்குத் தந்தை பெரியார் கொடுத்தார். சிறிது சிந்தித்தால் பெரியார் என்று ஒருவர் நம் வாழ்வில் குறுக்கிடாவிட்டால் நாம் இன்னும் மூடர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். எமக்கு இப்போ சிந்திக்கத் தெரிகிறது. நல்லது கெட்டது தெரிகிறது. ஆகவே இந்தப் பகுத்தறிவைக் கொடுக்கும் கல்வியை நாம் நமது குழந்தைகளுக்குக் கொடுப்போம். 'விதைக்கிற விதைதான் முளைக்கும். இதுதான் இயற்கை நியதி' எனவே நாம் நல்லதை விதைத்து நல்லதை அறுவடை செய்வோம்.

நாகரீகம் வளர வளர பண்டைய நமது நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வருகிறது. சில நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகள் என்று வரையறுக்கப் பட்டு வருகிறது. ஆனால் பலர் இன்றும் தொடர்ந்தும் இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றியே வருகிறார்கள். இதற்கு அளவு கோல் கிடையாது. எனினும் விஞ்ஞான விளக்கம் ஒன்று உண்டல்லவா?! பகுத்தறிவுக்கு ஒவ்வாததை எற்கமுடியாது தான். ஆனாலும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் பாதகத்தன்மை சாதகத்தனமை எனபதற்கும் அப்பால் அவற்றால் ஏற்படும் உளத்தாக்கம் பற்றியும் சிந்திக்க வேண்டும். அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம், கலாச்சாரம் சார்ந்து தான் எந்த ஒரு முடிவுக்கும் வரலாம். ஒரு சமூகத்திற்கு மூடநம்பிக்கையாகத் தோன:றுவது இன்னொரு சமூகத்திற்கு அசைக்க முடியாததாகவும் இருக்கலாம். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களாகப்புரிந்து கலாச்சார மறுமலர்ச்சியாக மீண்டுவந்தால் ஒழிய புரிய வைத்தல் என்பது முடியாத காரியம். இரத்தத்தில் ஊறிவிட்டதை எப்படி மாற்ற முடியும்?! நம்பிக்கை மூடநம்பிக்கை எதுவாகிலும் ஒவ்வொருத்துரும் தம்மிடத்திலே வைத்துக் கொள்வது நலம்தரும். ஆனால் ஒவ்வொருவரும் தம் தம் அறிவுக்கு எட்டியபடி சிந்திக்க வேண்டும். சிந்தனை சீர்பெற நல்ல காலம் பிறக்கும். யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம், சிறிதும் மன உழைச்சலின்றி நம் முன்னோர்களின் அறிவியலைத்; தோண்டி எடுக்க முடியும். தோண்டி எடுப்போம்! வெல்லுவோம்!.

வெற்றி நம் கையில்!
 



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்