அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 12

சென்ற தடவையில் மனிதர்களிடம் எவ்விதமாக எழுத்துகள் தோன்றின, அல்லது தோன்றியிருக்கலாம் என்பது பற்றிய அலசல் ஒன்றினைப் பார்த்தோம். இன்று சுமேரியரின் களிமண் தகடுகள் கூறும் வான் கதையினைப் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் முதலிற் தெரிந்து கொள்ள வேண்டியது கோள் நிருபு பற்றிய செய்திகளைத்தான். அதிலிருந்துதான் சுமேரியர்களின், அசீரியர்களின் குறிப்புகளில்; வாசிக்கப்பட்ட, மனிதர்களின் கதையொன்று புதிதாகத் தொடங்குகின்றது. சிறுவயதிற் படித்த, விக்கிரமாதித்தன் கதைகள் போன்று கதைக்குள் கதைகளாகப் பல கதைகளைக் கொண்ட இதுவும் அறிவியல் விடயங்களைப் பலகோணங்களிற் சுவையாகத் தருகின்றது.

கோள் நிருபு

சுமேரியர்களின் வானில் பத்துக் கோள்கள் இருந்தது பற்றி முன்னர் கூறியது உங்களுக்கு ஞாபகம் வரலாம். அங்கிருந்துதான் மனிதரின் கதை ஆரம்பிக்கிறது. சுமேரியர்கள் காட்டிய, அந்தப் பத்தாவது கோள்; உருவிற் பெரியதாக இருந்தது. அதற்கு நிருபு
(NIBIRU) எனப் பெயரிட்டும் இருந்தார்கள், சுமேரியர்கள். இந்நாட்களில், இந்த நிருபுவைப் பற்றி ஏராளமான கதைகளைக் கூறுகின்றார்கள், ஆய்வாளர்கள். அவற்றை எல்லாம் பார்க்காது, எங்களின் விடயங்களைக் கூறுபவையை மட்டும் பார்ப்போம். அதற்கு முன்னதாக, சுமேரியரின் நிருபு பற்றிய கருத்தினை ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கான, எங்களது அறிவியற் பின்புலமொன்றினைக் கவனிப்போம்.

உலகினரின் பார்வையில், ஆரம்பக் காலங்களில் புவியினைச் சுற்றியிருந்த வானிலே தெரிந்த கோள்கள் கதிரவன் (சூரியன்), சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என்பவை மட்டுமே. கேது, இராகுச் சமாச்சாரங்கள் எல்லாம் இல்லாத கோள்களாக, நிழற் கோள்களாக உள்ளன, எங்களிடம் மட்டும். கோள்களின் வரைவுக்குள் இல்லாத கதிரவனும் கோள் எனத்தான் பொதுமையாகக் கூறப்பட்டான்.

17ம் நூற்றாண்டில், கலிலியோ கலிலியின் தொலைகாட்டிக் கண்டுபிடிப்பு, 18ம் நூற்றாண்டில் நியூட்டனின் புவியீர்ப்புவிசைக் கண்டுபிடிப்பு, இயக்கவிதிகளின் அறிமுகம் என்பவை விஞ்ஞானிகளை வானை நன்கு அலச வைத்தது. விளைவாக சனிக்கு அப்பால் யுரனஸ் என்ற கோள் முதலிற் கண்டு பிடிக்கப்படுகிறது. இந்த யுரனஸ் என்ற கோளினை அவதானித்தால், இயற்பியல் விதிகளுக்கு ஒவ்வாத அதன் இயக்கம், அதற்கு அப்பால் இன்னொரு கோள் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தைக் கொடுக்க, நெப்ரியூன் அகப்பட்டுக் கொள்கிறார். இவ்வண்ணமே, சிறிது காலத்தின் பின்னர் புளூட்டோவையும் நாம் கண்டுபிடித்து விட்டோம். குள்ளக் கோளான புளூட்டோவின் புரிபடாத, குள்ளத் தனமான இயக்கம், புளூட்டோவிற்கும் அப்பால் இன்னொரு பெரிய கோள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வானவியலாளர்களுக்குக் கொடுத்தது. அப்படியொரு கோள் உள்ளதுதான் எனக் கூறிய அவர்கள், அதன் பருமனையும் கூடக் கணித்தார்கள். ஏறத்தாழ எங்களின் புவியின் பருமனைப் போல் ஐந்து மடங்கிலாவது (பத்து மடங்கு என்று சில ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள) அது இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு. மேலும், அந்தக் கோளிற்கு, கோள்'எக்ஸ்'
(Planet X) எனப் பெயருமிட்டுத் தேடிக் கொண்டும் வருகிறார்கள்.

இந்த விடயங்கள் எல்லாம் சுமேரியரின் களிமண் தகடுகள் வாசிக்கப்படும் முன்னராக, எங்கள் அறிவியற் பெருக்கத்தால் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள். எங்களது விஞ்ஞானிகள் இன்று தேடிக் கொண்டிருக்கும் கோள்'எக்ஸ்'தான் சுமேரியரின் நிருபுவோ? என்றொரு கேள்வியும் எழ, சுமேரியரின் நிருபுதான் நாங்கள் தேடுகின்ற கோள்'எக்ஸ்' என்று சில ஆய்வாளர்களால் கருதப்பட்டது. குறிப்பாக 'அந்நாள் அந்நியர்கள்' பற்றிய ஆய்வாளர்கள் சுமேரியரின் நிருபுவை உண்மை என்றே ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

நிருபுவைப் பற்றிய சுவாரசியமான ஊகங்கள் சிலவற்றையும் தருகின்றேன். எமது கதிரவக் குடும்பத்தின் கடைசிக் கோளாகவே இது கருதப்படுகிறது. இன்னமும் இனம் காணப்படாத நிருபுவை ஆய்வாளர்கள் தேடிக் கொண்டிருந்தாலும், கதிரவனை ஒருமுறை சுற்றிவர அதற்கு எடுக்கும் காலம் 3600 வருடங்கள் என்கிறார்கள். (இது சுமேரியர்களின் களிமண் தகடுகளில் இருந்து அறியப்பட்ட விடயம் என்கிறார்கள்) அதனது பாதையின் தளமும் மற்ற 9 கோள்களின் (புளூட்டோவையும் சேர்த்து) தளத்திலும் இல்லாது வேறாக இருக்கிறது.

சில ஆய்வாளர்கள் இன்னமும் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள். உண்மையில் நிருபு எங்கள் கதிரவனின் கோள் அல்ல என்பது அவர்களது கருத்து. விபரத்தைப் பாருங்கள். கதிரவனுடன் சேர்ந்து தோன்றிய இன்னொரு விண்மீன் இருந்திருக்கின்றது. இவையிரண்டுமே ஒன்றையொன்று சுற்றி வருகின்ற 'இரட்டை விண்மீன்கள்' வகையைச் சேர்ந்தவை. பேரண்டவெளியில் இப்படியான சோடி விண்மீன் தொகுதிகள் பலவுண்டு. எங்கள் கதிரவனின் சோடி விண்மீனான அந்த மற்ற விண்மீனின், அதாவது நட்சத்திரத்தின் கோள்தான் நிருபு. கதிரவனின் சோடி விண்மீன் கதிரவனைச் சுற்றி வருகையில் அதன் கோளான நிருபு கதிரவனின் (சூரியனின்) ஈர்ப்பு எல்லைக்குள் வந்து விட, அது கதிரவனாற் கவரப்பட, கதிரவனைச் சுற்றத் தொடங்கி விட்டது. அதனால்தான் நிருபுவின் பாதை கூட, மற்றக் கோள்களின் பொதுத் தளத்திலிருந்து விலகியுள்ளது என்கிறார்கள்.

அருகில் நிருபுவுடனான கதிரவத் தொகுதியைக் காண்க.

எல்லாம் சரி, அறியப்படாத நிருபுவுக்கான கதை வந்து விட்டது. அப்படியானால், நிருபுவின் உண்மையான விண்மீன் எது? அது எங்கே? ஏன்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் கூடப் பொருத்தமான பதிலைத் தருகிறார்கள். எங்கள் கதிரவனின் சோடி விண்மீன், கதிரவனை விடப் பல மடங்கு பெரியதாக இருந்தது. அப்படியான பெரிய விண்மீன்கள் விரைவில் இறந்துவிடும் என்பது விண்மீன்களின் இயல்பு. அப்படித்தான் அந்த விண்மீன் இறந்து விட்டது. இறந்து விட்ட அவ்விண்மீன் இப்போது கருந்துளையாகவோ, அல்லது கருங் குள்ளனாகவோ விண்வெளியில் இருப்பதால் எங்களால் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எதிர்காலத்தில் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டு இக்கொள்கை உறுதிப்படுத்தப்படலாம் என்கிறார்கள், அவ்வாய்வாளர்கள். இப்படியாகச் சுமேரியக் களிமண் தகடுகள் அறிமுகப்படுத்திய நிருபுவின் புதிர்க்கதை அனுமானங்களின் அடிப்படையில் போய்க் கொண்டு இருக்கின்றது. இந்தப் பின்புலத்தோடு சுமேரியக் களிமண் தகடுகள் கூறும் கதையைத் தொடருவோம்.

கதிரவனின் பத்தாவது கிரகமான நிருபுவில் மனிதர்கள் அல்லது மனிதரை ஒத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். புவியில் மனிதவினம் தோன்றுவதற்கு பலகாலம் முன்னரே நிருபுவில் தோன்றியிருந்த அம்மனிதர்கள், அறிவியல் நிலையில் மிகவும் உயர்ந்தவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் தமது உயர்ந்த அறிவியல் நிலையினால் வானில் வெகு தொலைவுகளுக்கும் விண்கலங்களில் பறப்பற்கு வல்லமை படைத்திருக்கிறார்கள். எப்படியோ புவியின் நிலையினை அறிந்த அவர்கள், புவியிற்குத் தங்களின் விண்கலங்களிற் சில காரணங்களுக்காக வந்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று புவியில் உள்ள தங்கத்தைக் (களவாக) எடுத்துச் செல்வது ஆகும். புவியிற்கான நிருபுவினரின் வருதை பற்றிய விபரத்தை இனிப் பார்ப்போம்.

3600 வருடங்களுக்கு ஒரு தடவையில் நிருபு புவிக்கு அண்மையில் வருகிறது என் கூறியிருந்தேன் அல்லவா. அப்படியாக நிருபு புவியிற்கு அண்மையாக வருகின்ற காலங்களிற்றான் நிருபுவினர் புவிக்கு வந்தார்கள், தங்கத்தை எடுத்துச் செல்வதற்கு.

எவ்வளவுதான் அறிவியலில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், வான் பயணத்தில் உள்ள இடர்கள் புவியிற்கு வந்த, வருகிற அவர்களது (நிருபுவினரது) எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருந்தது. நிருபுவில் இருந்து நிருபுவினர் அதிக எண்ணிக்கையிற் புவிக்கு வர முடியவில்லை. அதனால், புவியில் தங்கத்தை தோண்டி எடுப்பதற்கான உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. இவர்கள் வந்திறங்கிய இடம் ஆபிரிக்கப் பகுதியாகும். புவியிற்கு நிருபுவினர் வருகையில் மனிதக் கூர்ப்பில், கோமோ சேபியன்களான எங்களின் மூதாதையர்கள் தோன்றியிருக்கவில்லை. பரிணாம மாற்றப் பாதையிற் கோமோ சேபியன்களின் முன்னவர்களாகிய கோமோ இரெக்ஸ்சுகளில், புலம்பெயர்ந்து சென்றவர்கள் தவிர மீதியினர் ஆபிரிக்கக் காடுகளிற் சிறிய சிறிய குழுக்களாகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வேளையில்தான், நிருபுவில் இருந்து வந்தவர்கள், புவியின் மற்ற உயிரினங்களையும் விடச் சற்றுப் புத்திக் கூர்மையாக இருந்த இந்த கோமோ இரெக்ஸ்சுகளைக் காண்கிறார்கள். தமது தேவை கருதியும், இன்னமும் தங்களின் அறிவியற் பாதையின் வளர்ச்சியின் ஆய்வாகவும் கோமோ இரெக்ஸ்சுகளில் 'மரபணு மாற்றும்' பரிசோதனையைச்
(genetic engineering) செய்கிறார்கள். மரபணு மாற்றப் பரிசோதனை என்பது, இரெக்ஸ்சுக்களின் மரபணுவில் உள்ள பரம்பரை அலகுகளில் சில மாற்றங்களைச் செய்து கோமோ இரெக்ஸ்சுகளை இன்னமும் புத்திக் கூர்மையான உயிரினமாக மாற்றுவது. இதை எப்படி விளங்கிக் கொள்ளலாமெனில், கிட்டத்தட்ட சிறிய பழங்களைத் தரும் மரங்களைப் பெரிய பருமனான பழங்களைத் தரப்;பண்ணுவது போன்ற எங்களின் நடவடிக்கைக்கு ஒப்பானது. (அந்நியர்களும் அறிந்திரா வானவூர்த்திகளும் என்ற இந்த அறிவியற் தொடரில், மரபணு, பரம்பih அலகுகள் என்பவை பற்றும் பின்னர் ஒரு பகுதிற் தெரிந்து கொள்வோம்.)

நிருபுவினர் கோமோ இரெக்ஸ்சுகளிற் செய்த மரபணு மாற்றப் பரிசோதனை, இயல்பாக அமையாத, ஒரு வலிந்த பரிணாம மாற்றத்திற்கான முயற்சி. ஆரம்பத்தில் அவர்களின் பரிசோதனைகள் வெற்றியளிக்கவில்லை. ஆனால், தொடர்ச்சியான அவர்களின் முயற்சி, வெற்றி பெற, கோமோ சேபியன்களான மனிதர்கள் தோன்றினார்கள், நிருபுவினரின் தங்கச் சுரங்க வேலைகளுக்கான அடிமைகளாக. இவ்வண்ணமாகத் தோன்றிய மனிதர்களில் நிருபுவினர், முதலில் இந்நாட்களில் அதியுயர் உயிரியல் விஞ்ஞானமாக இருக்கும் மனிதப் பிரதியாக்கமும் (குளோனிங்) செய்திருந்தார்கள்.

என்ன! எங்களின் சங்கதிகள் சுவரசியமாக இருக்கின்றதா! இன்னமும் சுவரசியங்கள் இருக்கிறன. தொடரும் நாட்களில் இந்நாட்களின் ஏலியன் பதிவுகளை மறந்து விட்டு இவற்றைச் சுவைப்போம்.




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்