அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 20

டந்த சில வாரங்களாகச் சுவாரசியமான வரலாற்றுடனான அறிவியல் கலந்த விடயங்களை மிகச் சுருக்கமாகக் கவனித்தோம். அதனால் உலகிலே ஏராளமான அறிந்திரா வானவூர்திகள் பற்றிய பதிவுகள் இருந்த போதிலும் அவற்றை விட்டு விட்டு சுமேரியர்களுடன் தொடர்பான விடயங்களைப் பார்க்க வேண்டி வந்தது. சுமேரியர்களையும் குமரிக்கண்டத்தையும் அவ்வளவோடு நிறுத்திக் கொண்டு இனிப் புதிதான ஒரு விடயத்துள் வருவோம். அதற்கு முன்னதாக, ஒரு பதிவினைப் பார்ப்போம்.

1953ம் ஆண்டின் குளிர் காலத்தின் கதிரவ வெளிச்சம் நிறைந்த ஒருநாள். ஆர்னோல்டின் சம்பவமும் சலசலப்புகளும் அதைத் தொடர்ந்து ஏலியன்கள், கறக்கும் தட்டுகள் என்ற பதங்கள் பரபரப்பாக உலகெங்கிலும் பரவிக் கொண்டிருந்த காலம். அன்று 'கன்பொரா' என்ற விமானம் வானத்திற் பறந்து கொண்டிருந்தது. அதில் சிறில் ஜோர்ஜ் ரவுன்சன் வித்தேர் எனும் விமானி, இன்னொரு விமானியுடன் பறந்து கொண்டிருந்தார். அண்மையில்தான் அவ்விமானத்திற்குப் புதிதாக வடிவமைக்கப்பட்ட ராடர் ஒன்றைப் பொருத்தியிருந்தார்கள். இந்த ராடரைச் சோதித்துப் பார்ப்பதற்கான பறத்தலையே கன்பரா நடத்திக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 55 ஆயிரம் அடி உயரத்தில் கான்பரா பறந்து கொண்டிருக்கையில் அவர்களது விமானம் இவ்வுலகத்திம் அறிந்திரா வானவூர்தி ஒன்றினைக் கண்டது எனச் சிறில், ஜோனி என்பவருக்கும் பீற்றர் என்பவருக்கும் கூறினார். யார் இந்த ஜோனியும் பீற்றரும்? இவர்களிடம் எப்போது சிறில் இது பற்றி அவர்களிடம்; கூறினார்? என்லெல்லாம் கேட்கிறீர்களா? முதலில் விபரங்களை அறிந்து கொண்டு பின்னர் அவற்றினைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

(Salsbury Plains)  சல்ஸ்பெரி பிலென்ஸ் என்ற இடத்திற்கு மேலாகக் கிட்டத்தட்ட 55ஆயிரம் அடி உயரத்தில் இவர்களது விமானம் பறந்து கொண்டு இருக்கையில் திடீரென இவர்களது விமானத்தின் ராடரில் 'பீப்' என்ற சத்தம் கேட்கத் தொடங்கியது. அது இன்னொரு விமானம் அண்மையில் வந்து கொண்டு இருக்கின்றது என்பதனைக் குறித்த எச்சரிக்கைச் சத்தமாகும். ராடரின் கணிப்புகளின்படி, அந்த விமானம் இவர்களது விமானத்தின் பின்னால் 5 மைல் தூரத்துள்ளாகப் பறந்து வந்து கொண்டிருக்க வேண்டும் என்பதனை சிறில் தெரிந்து கொண்டார். ஆனாலும் இவர்களது பார்வைக்கு அவ்விமானம் தென்படவில்லை. இவர்கள் தங்களது விமானத்தைச் சடுயில் மேல்நோக்கிப் பறக்கவிட்டு, தங்களின் பின்னாக வந்த விமானத்தைப் பார்க்க முயற்சித்தார்கள். இப்பொழுது அவ்விமானத்தை அவர்களாற் ஓரளவுக்குப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு ஒளிரும் கோளம் போல அது பறந்து வந்து கொண்டிருந்தது. அவ்விமானத்தின் ஒளிர்வாலோ அல்லது கதிரவ ஒளியின் தெறிப்பாலோ அப்படித் தேன்றியிருக்கலாம் என இவர்கள் நினைத்தார்கள்.

அந்த மர்ம விமானமும் தனது பறப்பு உயரத்தை உயர்த்தி இன்னமும் இவர்களது விமானத்தைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. சிறில் சக விமானிக்கு அப்பொருளை விலத்திப் போவோம் எனக் கூற, அவரும் விமானத்தின் பாதையை மாற்றினார். ஆனால் அந்த இன்னதென்று இனம் காண முடியாது இருந்த பறக்கும் பொருள் இவர்களது விமானத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏன் இது எங்களைப் பின் தொடர்கிறது எனப் புரியாத இவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இருவரும் அப்பொருளில் இருந்து தப்புவதற்கு முயற்சித்த வண்ணமே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இன்னதுதான் செய்கிறேன் எனப் புரியாத நிலையில், சகவிமானி இவர்களது விமானத்தை வெகு விரைவாக U வடிவில் திருப்பிய போது, இவர்களது விமானம் அப்பொருளுக்கு நேராக, மோதுவது போன்ற நிலையில் வந்தது. எங்கே இரண்டும் மோதிவிடப் போகின்றனவோ என்ற இக்கட்டான நிலையில் இவர்கள் இருவரும் இருந்தாலும் அந்தப் பறக்கும் பொருளை தெளிவாகப் பார்பதற்கான சந்தர்ப்பம் அப்பொழுது அவர்களுக்குக் கிடைத்தது.

உலோகத் தன்மையது போன்ற உடலினை அப்பொருள் கொண்டிருந்தது. ஒரு தட்டு வடிவில் அமைந்திருந்த அந்த அறிந்திரா வானூர்திக்கு
Gaat இறக்கைகளும் இரண்டு வால்களும் இருந்தன. கிட்டத்தட்ட புயயவ வகைப் போர் விமானங்களில் பருமனில் அது இருந்தது. இந்தா இரண்டும் மோதுப்படப் போகின்றன என்ற கட்டத்தில் இவர்கள் முன்னர் அறிந்திரா அவ்வானவூர்தி சடுதியில் தனது பறப்பினை மோல் நோக்கிச் செங்குத்தாக உயர்த்தி 60 ஆயிரம் அடி, 70 ஆயிரம் அடி என உயரத்தை மாற்றிக் கொண்டு போய், விரைவிலே காணமற் போய்விட்டது. இதிலே இன்னொரு ஆச்சரியமான விடயத்தினை சிறிலும் மற்ற விமானியும் அவதானித்தார்கள். அந்த யூஎவ்ஓ தான் மேல் நோக்கிப் பறந்து மறைந்ததற்கான எந்தத் தடயத்தையும் விட்டு விடவில்லை. ஆவியான எரிபொருட் தடயங்களோ, வாயுக்களோ அல்லது வேறு பொருட்களே அது சென்ற பாதையில் காணப்படவில்லை.

தரைக்கு வந்த சிறிலும் மற்ற விமானியும் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை உத்தியோகபூர்வமாக உயரதிகாரிகளுக்குக் கொடுத்திருந்தாலும் அவ்வறிக்கையையிட்டு எவருமே அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. சிறிலின் வற்புறுத்தலினால் அவ்வறிக்கை பின்னர் வான்துறைக்கு அனுப்பப்பட்டது. அவர்களும் அதுபற்றி உருப்படியான தகவல் எதனையும் தரவில்லை. அவர்கள், சிறிலும் சகவிமானியும் 'இயற்கையின் விளைவுகளைத்தான் தவறாக இனம் கண்டுவிட்டார்கள்' என மழுப்பும் வகையில் விளக்கத்தைக் கூறினார்கள். அல்லாமலும் இவ்விடயத்தையிட்டு அதிக கரிசனை எடுக்காது விட்டுவிடும்படியும் இவர்கள் இருவரும் அறிவுறுத்தப்பட்டார்கள். சிறிலினால் அதனை மறக்க முடியவில்லை. ஆனாலும் வெளியில் ஒருவரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை.

இது இவ்வண்ணம் இருக்க, ஜோனி ரண்டல் என்பவர் ஒரு பிரபலமான ஏலியன், யூஎவ்ஓ ஆய்வாளர். பீற்றர் குஜ் என்பவரும் வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றித் தீவிரமாக ஆய்வு செய்து வருபவர்களில் ஒருவர். பீற்றர் குஜ்தான் பிரபலமான 'விசிரேசன்' என்ற ஏலியன்கள் பற்றிய நூலின் ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் 1986ம் ஆண்டு சிறில் ஜோர்ஜ் ரவுன்சன் வித்தேர்; 33 வருடங்களுக்கு முன்னராகத் தனக்கு ஏற்பட்ட பறக்கும் தட்டுப் பற்றிய அனுபவத்தினைக் கூறியிருந்தார். நரை திரை விழுந்த, ஓய்வு பெற்ற லெவ்ரினன் கேர்னலான சிறில், தனது உயிருக்குப் பயந்து, 30 வருடங்களுக்கும் மேலாகத் தன்னுள் மறைத்து வைத்திருந்த அவ்விரகசியத்தை அவ்விரு யூஎவ்ஓலோயிஸ்ருகளுக்கும் கூறினார். தான் கூறுவதையிட்டு எவ்வித ஐயமும் இல்லாது இருந்தாலும், இவ்விபரத்தைக் கூறுகையிலும் 'இதனை நான் இப்பபோது வெளியில் கூறலாமோ' என்ற கிலேசம் அவருக்குள் இருந்ததாம். அவர் கூறிய விடயத்தைத்தான் இப்போது நாங்கள் பார்த்தோம்.

இவ்விதம் எண்ணற்றவர்கள் தங்களின் அனுபவங்களைப் பயந்து பயந்து பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களை, வேற்றுக்கிரகவாசிகளுடன்தான் முடிச்சுப் போடுகிறார்கள். உறுதியான ஆதாரங்கள் ஏதுமில்லாத இந்த வேற்றுக்கிரக மனிதர்கள் என்பது சாத்தியமான ஒன்றுதான் என்பதனை இனிச் சற்று விபரமாகப் பார்க்கப் போகிறோம்.

வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா?

இந்நாட்களில் அநேகரினாற் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. இக்கேள்விக்கான பதில் சற்றுக் கடினமானதுதான். இருப்பினும் இக்கேள்விக்கான பதிலைச் சற்று விபரமாகத் தேடலுடன் பார்ப்போம். இத்தேடலின் பின்னால் பல அறிவியற் தெளிவுகள் இருப்பதனால் இதனை நாம் அறிந்து கொள்வது பொருத்தமான ஒன்றுதான்.

எமது புவியினைப் போன்ற சூழலில் இருக்கக் கூடிய, எங்களது புவியல்லாத வேற்றுக்கிரகம் ஒன்றிலும் உயிரினங்களின் தோற்றத்திற்கான வாய்ப்புக்கள் இருந்திருப்பின், கால மாற்றத்துடன் அங்கேயும் உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளால் பொதுமைப்படுத்தப்பட்ட கூற்று. அப்படியாகத் தோன்றிய உயிரினம் ஒன்று, புவியில் மனிதரைப் போன்ற அறிவியல் நிலைக்கு அல்லது அதற்கும் மேலாகவே மேம்பட்டிருக்கலாம். அப்படியான உயிரினம் ஒன்று இருக்குமாயின் அதனை வேற்றுக்கிரக உயிரினம் என்று கூறலாம். அது எம்மைப் போலலே இருக்குமாயின், அவ்வுயிரினங்களை வேற்றுக்கிரக வாசிகள்; எனவும் கூறலாம். அப்படி ஏதாவது உள்ளதா என்பதைப் அலசிப் பார்ப்போம்.

(படம் புளூட்டோ உட்பட்ட கதிரவனின் கோள்கள் ஒன்பதையும் காட்டுகிறது.)

முதலில் எமது சூரியக் குடும்பத்தில் அந்நியர்களைத்; தேடுவோம். ஏனெனில் மனிதவினம் கிரகங்களை இனம் கண்ட நாளில் இருந்தே வெளி உலகுகளில் உயிரினங்கள் அதிலும் மனிதரை ஒத்த உயிரினங்கள் இருக்கலாம் எனச் சந்தேகப்படத் தொடங்கிவிட்டது. அதனால் கதிரவனின் கோள் எல்லாவற்றின் மீதும் ஒரு கண்வைக்கத் தொடங்கியது. அவை பற்றிய விபரங்களைச் சேகரிக்கச் சேகரிக்கச் சோதிடம் என்ற அறிவியற் பகுதியை விடவும் பல விடயங்கள் வெளிவரத் தொடங்கின. எங்களின் அறிவியல் நிலையின் உயர்ச்சியானது கதிரவனின் கோள்கள் எல்லாமே, கிட்டத்தட்ட ஒரே காலத்தில் தோன்றிவிட்டன என்பதைக் கூறுகின்றது. எனவே, புவியினைப் போன்ற தன்மையுடைய கோள் ஏதாவது கதிரவக் குடும்பத்தில் இருந்தால் அங்கு வேற்றுக்கிர மனிதர்கள் இருப்பதற்கான சாத்திய் கூறுகள் உண்டு. ஆனால், புவியினை ஒத்ததான னோள் ஏதாவது கதிரவக் குடும்பத்தில் உள்ளதாவெனப் பார்த்தால் அப்படியாக ஒன்றுமேயில்லை எனத்தான் தெரிகிறது. எனவே கதிரவக் குடும்பத்தில் வேற்றுக்கிரக மனிதர்கள் இருக்க முடியாது என்றே கூற வேண்டும். ஆனால் கதிரவக் குடும்பத்தில் வேறு ஏதாவது கோளில் உயிரினங்கள் இருக்க முடியுமா என்றொரு தேடலையும் பார்க்கலாம், பார்ப்போம்.

ஒருகாலத்தில் கதிரவனின் புவி தவிர்ந்த மற்றக் கோள்கள் ஏதாவதில் உயிரினங்கள் இருக்கலாம் என்ற ஐயம் மனிதர்களிடையே இருந்தது. எனவே ஒவ்வொரு கோளாக, உயிரினம் இருக்கக் கூடியதான சாத்தியத்தைப் பற்றிப் பார்ப்போம். அதன் வழியிற் பார்த்த போது, கதிரவனுக்கு அருகில் இருக்கும் புதன் கிரகத்தில் உயிரினம் எதுவும் இருக்க முடியாது என்பதனைத் உய்த்தறிந்து கொண்டார்கள். கதிரவனுக்கு மிக அண்மையில் சுற்றிக் கொண்டிருக்கும் குட்டிக் கோளான புதனின் மேற்பரப்பின் உயர் வெப்பநிலை 430ºc. இந்த வெப்பநிலையில் எவ்வுயிரினம்தான் இருக்க முடியும்?

மீதியை மறுமுறை சந்திக்கையிற் கூறுகின்றேன்.
அன்புடன்,
கனி.
 




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்