நல்வாழ்வுக்குப் பாரதியாரின் பத்துக் கட்டளைகள்

பேராசிரியர் இரா.மோகன்


ருபதாம் நூற்றாண்டின் விடியலில் தமிழ்க் கவிதை வானில் ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்’ என்னும் எழுச்சிமிகு கொள்கை முழக்கத்துடன் வலம் வந்தவர் பாரதியார். சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இடைவெளியின்றி வாழ்ந்த மாமானிதர் அவர். மனிதன் சுடர்மிகு அறிவு கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் உயர்வாழ்வு – வைத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வ வாழ்வு – வாழ்வதற்கு வேண்டிய நெறிமுறைகளாகப் பாரதியார் தம் கவிதைகளில் வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளைக் குறித்துக் காண்போம்.

1. ‘கவலையற்றிருத்தலே முக்தி!’

‘வஞ்சகக் கவலை’ என்றும், ‘கொன்றழிக்கும் கவலை’ என்றும், ‘சின்னக் கவலை’ என்றும், ‘கவலைப் பிணி’ என்றும் கவலையின் கடுமையையும் கொடுமையையும் குறித்துச் சுட்டியுள்ளார் பாரதியார். எதையாவது எண்ணி-யெண்ணிக் கவலைப்படுவதையே தன் இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே மூழ்கிக் கிடப்பவனைப் ‘பாவி’ எனச் சாடுகின்றார் பாரதியார்.

“கவலைப் படுதலே கருநரகு அம்மா
கவலையற்று இருத்தலே முக்தி”
(ப.14)

என்று தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார் அவர்.

2. ‘அச்சம் தவிர்!’

‘அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ எனப் பாரத மக்களின் தற்கால நிலைமையைப் பற்றி நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடியவர் பாரதியார். ‘புலைஅச்சத்தைக் கொன்று பொசுக்-கிடுவோம்’ என உணர்ச்சிமிக்க குரலில் முழங்கியவர் அவர். ‘அறம் செய விரும்பு!’ எனத் தமது ஆத்திசூடியைத் தொடங்கிய ஔவைக்கு மாறாக, ‘அச்சம் தவிர்!’ எனத் தம் ஆத்திசூடியைத் தொடங்கிப் புதுமை படைத்தவர் அவர்.

“யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்”


என்பதே பாரதியார் போற்றும் தாரக மந்திரம் ஆகும்.

3. ‘சஞ்சலமின்றி இரு!’

மகிழ்ச்சியான – நிறைவான – வாழ்வுக்கு, மனம் சஞ்சலம் இல்லாமல் – சலனம் இல்லாமல் – இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

“மனத்தில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திட நீ செயல்வேண்டும்”

என ‘விநாயகர் நான்மணி மாலை’யில் கணபதியிடம் வரம் வேண்டுகின்றார் பாரதியார். மேலும் அவர் பிறிதோர் இடத்தில், ‘தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு, பராசக்தி உளத்தின் படி உலகம் நிகழும்’ எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துகின்றார்.

4. ‘இன்று புதிதாய்ப் பிறப்போம்!’


நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற உணர்வோடு – நம்பிக்கையோடு – வாழ்க்கையைத் தொடங்கி மகிழ்வோடு நடத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கருத்து.

“இன்று புதிதாய் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்”
(ப.248)

என்பது கவியரசர் மனித குலத்திற்கு அறிவுறுத்தும் ஓர் அடிப்படையான வாழ்க்கைப் பாடம் ஆகும்.

5. ‘கோபத்தை வென்றிடு!’


‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது வள்ளுவம். ‘சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக் கோனே, சித்தி வாய்ந்தது என்று எண்ணேடா தாண்டவக் கோனே’ என்பது சித்தர் வாக்கு. முன்னோரது இம் மணிமொழிகளை அடியொற்றிப் பாரதியாரும் சினத்தின் கேட்டினைக் குறித்துப் படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் பாடியுள்ளார்.

“சினங் கொள்வார் தமைத்தாமே தீயால்சுட்டுச்
செத்திடுவார் ஒப்பாவார்; சினங்கொள்வார் தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவா ராம்…
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத் தான்
கொல்வதற்கு வழியென நான் குறித்திட்டேனே”

|
என்பது கவியரசர் தம் வாழ்க்கை அனுபவத்தில் கண்ட முடிபாகும்.

6. ‘அன்பே தவம்!’


‘அன்பே சிவம்’ என்பது திருமூலர் மணிமொழி. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது வள்ளுவர் வாய்மொழி. ‘ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என விரும்பியவர் வள்ளலார். ‘அன்பினாலே உண்டாகும் இன்ப-நிலை’ என்பது திரையிசைத் தமிழ். பாரதியாரும் தம் பங்கிற்கு அன்பு நெறியின் அருமை பெருமைகளைக் குறித்துத் தம் கவிதைகளில் ஒல்லும் வகையெல்லாம் பாடியுள்ளார். ‘வையகத்தில், அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார், இன்புற்று வாழ்தல் இயல்பு’ என்பது அவர் உணர்த்தும் வாழ்க்கை நெறி.

7. ‘தன்னை வென்று ஆளும் திறம்!’


ஒருவன் வாழ்க்கையில் உயர்வதற்கு மிக முக்கியமானது அவன் தன்னை அறிதல் – தன்னை ஆளல் – தன்னை வெல்லல். ‘தனைத்தான் ஆளுந்தன்மை நான் பெற்றிடில், எல்லாப் பயன்களும் தாமே எய்தும்’ என ‘விநாயகர் நான்மணி மாலை’யில் பொதுப்படப் பாடும் பாரதியார், ‘ஆத்ம ஜயம்’ என்ற வேதாந்தப் பாடலில் ஒருவன் தன்னை வென்றாளும் திறமை பெற்றால், அவன் வயப்படும் மேன்மைகளைக் குறித்துச் சிறப்பு நிலையில் கருத்துரைக்கின்றார்.

“என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ
தன்னை வெற்றால் அவை யாவும் பெறுவது
சத்திய மாகும்…”

என்பது அவரது முடிந்த முடிபு.

8. ‘விமானத்தைப் போல் ஒரு நல்ல மனம் வேண்டும்!’

அறங்களுள் எல்லாம் தலையாய அறம் மனத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகும். அதனால்தான் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம்’ என இரத்தினச் சுருக்கமாய் மொழிந்தார் வான்புகழ் வள்ளுவர். ‘மனமது செம்மையானால் மந்திரம் செபித்தல் வேண்டா’ என்பது சித்தர் வாக்கு. இங்ஙனம் முன்னோர்கள் வலியுறுத்திய மனத் தூய்மையின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்தே கவியரசர் பாரதியாரும் தம் கவிதைகளில் ஆங்காங்கே மனத்திற்குப் பற்பல அறிவுரைகளை – கட்டளைகளை – வழங்கியுள்ளார்.

“முன்றிலில் ஓடும் ஓர் வண்டியைப் போலன்று
மூன்றுலகும் சூழ்ந்தே
நன்று திரியும் விமானத்தைப் போல்ஒரு
நல்ல மனம் படைத்தோம்”


என மனத்தை வாழ்த்திப் பாடுகின்றார் பாரதியார்; மனிதன் ‘பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளும்’ கீழான மனத்தினை வேண்டாது, ‘விமானத்தைப் போல் விண்ணில் பறந்து வாழும்’ உயர்ந்த மனத்தினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது கவியரசரின் அழுத்தமான கருத்து.

9. ‘தெய்வம் காக்கும் என நம்பு!’

நம் வாழ்வில் வரும் சோதனைகள் – நெருக்கடிகள் – துன்பங்கள் – தொல்லைகள் – எல்லாவற்றையும் ‘மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே’ – ‘எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும்’ என்ற நம்பிக்கையாலே – வெற்றி கொள்ளலாம் என ஆழமாக நம்புகின்றார் பாரதியார். இங்ஙனம் தெய்வ நம்பிக்கையோடு இருந்தும் சில சோதனைகளிலே நம்மால் வெற்றி பெற முடியவில்லை என்றால், அதற்கும் தெய்வத்தின் தண்ணருளே காரணம் என்று எண்ணித் தேறுதல் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றார் கவியரசர்.

“சக்தி சில சோதனைகள் செய்தால் - அவள்
தண்ணருள் என்றே மனது தேறு”

“நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்”


என்பது பாரதியாரின் ஆழ்ந்த நம்பிக்கை.

10. ‘மண்ணிலே விண்ணைக் காண்போம்!’


‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி. அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியரசாணை, பொழுதெலாம் இறைவனது பேரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல்’ என்னும் இப் பண்புகளையே அருளுமாறு பரம்பொருளிடம் வேண்டுகோள் விடுக்கின்றார் பாரதியார். அவர் சுட்டும் இப் பண்புகள் எல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் – ஆளுமையில் – படியுமாயின், அவன் மண்ணிலேயே விண்ணைக் காண்பான்; அமரத் தன்மையை அடைவான்.

கவியரசர் பாரதியார் வலியுறுத்திப் பாடியுள்ள இப் பத்துக் கட்டளைகளைக் கசடறக் கற்று, அவற்றின் வழி நிற்கும் மனிதனின் வாழ்வு மாண்புமிகு வாழ்வாக விளங்கும்; இம் மண்ணுலக வாழ்விலேயே வானுறையும் தெய்வநிலை அவனுக்கு வந்து சேரும்!.

 


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்