திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 2)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


திரையிசைப் பாடல்களில் இலக்கியம் இருக்கிறதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.போகிற போக்கில் கேட்டுவிட்டு,அப்படியே விட்டுவிட்டுப் போகும் திரைப்பாடல்களில் இலக்கியமா?என்று திகைப்போரும் உண்டு.

பாபநாசம் சிவன்,உடுமலை நாராயண கவி,தஞ்சை இராமையாதாஸ் போன்ற பாடலாசிரியர்களெல்லாம் தாம் வாழ்ந்த காலத்தில் எப்படி,என்னமாதிரி மொழிநடையைக் கையாளுவது என்பதையெல்லாம் நன்கு அறிந்திருந்ததனால் தான் வடமொழியையும் கலந்து பாடல் எழுதினார்கள்.சான்றாக, சிவகவி என்னும் படத்தில் “வதனமே சந்திர பிம்பமோ”என்ற பாடலில் பயின்று வரும் வதனம்,சந்திரன்,பிம்பமோ இவையெல்லாம் வடமொழிச் சொற்கள் தான். தஞ்சை ராமமையாதாஸ் ராஜா தேசிங்கு படத்துல சரச ராணி கல்யாணி சங்கீத வாணி ன்னு ஒரு பாடலை எழுதினார்.பாடல் முழுதும் வடமொழி தான். அப்போது அந்த திரைக் கவிஞர்கள் இப்படி எழுதினால் தான் வருமானம் கிடைக்கும் என்ற நிலையில் அவர்களுக்கு தமிழின் மீது பற்றிருந்தாலும் கூட அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய சூழலுக்கு ஏற்றாற்போல் பாடல் புனைந்தார்கள் என்பது வெள்ளிடை மலை.

இது இப்படியிருக்க, நம் சமகாலக் கவிஞர்கள் மெல்ல மெல்ல தமிழிலக்கியத்தை அடியொற்றி வரும் பாடல்களைப் புகுத்தினர்.பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியக் களம் அமைக்க ஏதுவாகிற்று. அதில், கவியரசரின் பாடல்களே இலக்கியத்தை, அது சொல்லும் இன்ப ரசனையை நம் போன்ற பாமரனும் திரைப்பாடல்கள் வழியாக அனுபவிக்கத் தந்தார் என்றால் அது மிகையல்ல; இலக்கியங்கள் அத்தனையையும் படித்து, அதனை உளமார மாந்திக் களித்து தான் சுவைத்தவற்றை நாமும் அனுபவிக்கத் தந்தவர்.

சோழ மன்னர்களது ஆட்சிச் சிறப்பையும், இசைப் புலமையையும், இறை மாட்சியையும் பொருநராற்றுப்படை என்ற சங்க இலக்கிய நூல் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது.

குறிஞ்சி பரதவர் பாட,நெய்தல் நறும் பூங்கண்ணி குறவர் சூட,
கானவர் மருதம் பாட. அகவர் நீல் நில முல்லைப் பல்தினை நுவல,
கானக் கோழி கதிர் குத்த, மனைக் கோழி தினைக் கவர, வரை மந்தி
கழி மூழ்க, கழி நாரை வரை இறுப்ப, தண் வைப்பின் நால்நாடு குழீஇய
மண் மருங்கினான் மறு இன்றி, ஒரு குடையான் ஒன்று கூற
பெரிது ஆண்ட பெருங்கேண்மை, அறனொடு புணர்ந்த திறன் அறி
செங்கோல், அன்னோன் வாழி,வென் வேற் குருசில்!
(பொரு: 218-231)

ஐந்திணை மக்கள் தத்தம் இயல்பு மாறி மயங்கித் திளைத்த செய்தியை மேற்காணும் இலக்கியம் விளக்குகிறது.

இதனை கண்ணதாசன், திருமால் பெருமை என்ற படத்தில் பாடலாகத் தந்தார்.

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு-எங்கள்
உறையூரின் காவலனே நீ வாழிய நீடு,
கொடியேறி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட
மடியேறி மழலையராடும் மன்னவன் வாழ்க-பொன்னை
வரையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க.


சேர,சோழ, பாண்டிய நாட்டின் வளத்தையும்,மன்னவர்களின் பண்பையும் பாடலில் அமைத்துள்ளார்.சோழ நாட்டில் ஆற்றுவளம் நிரம்பி, மீன்களெல்லாம் கரையேறி விளையாடும் அழகையும் பாடுகிறார். சேர நாடு மலை நாடு அல்லவா? அதனால் அவன் புகழ் குன்றேறி நின்று நிலைக்கிறதாம். வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் பாண்டி நாட்டிலோ, மன்னவன் தென்னவன் பொன்னை, இன்னார் இனியார் என்றும்,வலியர் எளியர் என்றும் பாராமல் வாரி வழங்குகிறானாம்.

புதிய பூமி ங்கிற படத்துல வளை, வளை என்றொரு பாடல் எழுதினார்.

சின்னவளை முகம் சிவந்தவளை –நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை –நான்
ஏற்றுக் கொள்வேன் வளை இட்டு.


வளை என்றால் வளையல், வளைத்தல், பொந்து என்பது பொருள். இப்பாடலில் காதலியை எப்படி வளைத்தேன், அதுவும் வளையல் போட்டு வளைத்தேன் என்கிறார் கவிஞர். இவருக்கு எப்படி இப்படி எழுதணும்னு தோணிச்சு?

கம்பரின் தனிப்பாடலொன்றை உள்வாங்கிய கவிஞர் இதை எழுதியிருப்பார் என்பது என் ஊகம்.
கம்பரின் தனிப்பாடல்.

இருந்தவளை போனவளை என்னை அவளை
போருந்தவளைபறித்துப் போனாள்-பெருந்தவளை
பூத்தத் தேன் சொரியும் பொன்னி வள நாட்டில்
மாத் தத்தன் வீதியினில் வந்து.


தூதுவளை நெஞ்சைத் தொட்டவளை –மெல்லத்
தொட்டால் தொட்டால் துவளும்.
பால்மழலை மொழி படித்தவளை –சுகம்
பட்டால் பட்டால் படியும்.

இப்படி பாடல் முழுமையும் வளை,வளையென்று நம்மை பாடலில் வளைத்துப் போட்டுவிட்டார்.
அடுத்து, திருவள்ளுவ நாயனார் இயற்றிய தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்;

எந்த ஊர் என்றீர்; இருந்த ஊர் நீர் கேளீர்,
அந்த வூர்ச் செய்தி அறியீரோ!-அந்த ஊர்
முப்பாலும் பாழாய் முடிவி லொரு சூனியமாய்
அப்பாலும் பாழென்று அறி!


இதனைப் பார்த்த கவிஞர் காட்டுரோஜா ங்கிற படத்துல ஒரு பாடலை அதுவும் ஒரு தத்துவப் பாடலை எழுதினர்.

எந்த ஊர் என்றவளே, இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா?


இப்படி ஊர் ஊர்ன்னு பாடல் முழுவது எழுதியிருந்தார்.

என் காதலியே என்னைப் பார்த்து,எந்த ஊர் என்று கேட்டுவிட்டாய்; அந்த ஊரும் கூட நீ அறிந்த ஊர் தான்; அது தான் காதல் ஊர்;

உடலூரில் வாழ்ந்திருந்தேன்,
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்.
மண்ணூரில் விழுந்து விட்டேன்,
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்.

பேரறிஞர் அண்ணாதுரை ஒரு பாடலைச் சொல்லுவார்:

சூலூரிலிருந்து புறப்பட்டு
பாலூரில் அன்னையின் அன்புப்
பாலூட்டப் பெற்று வேலையூர்செல்கிறோம்.
அங்கிருந்து பக்குவம் பெற்று
சேலையூர் சென்று இன்புறுகிறோம்; பிறகு
வசதியூர் தேடுவதிலே ஈடுபட்டு கடைசியாக
சுடலையூர் சென்று அமைதி பெறுகிறோம்.


ஆடி அடங்கும் வாழ்க்கையில் தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்.அத்தனையையும் கவிஞர் பட்டியலிட்டுள்ளார்.இன்னும் சொல்கிறார்,

கையூரில் வளர்ந்திருந்தேன்,
காலூரில் நடந்து வந்தேன்,
காளையூர் வந்துவிட்டேன்,
வேலூரைப் பார்த்துவிட்டேன்.


காதலித்துப் பிரியும் வேதனையை ஆண் பேசியதாக அவ்வளவாக இலக்கியங்கள் சொல்லவில்லை; எனினும், தலைவன் மடலேறி தன் பிரிவாற்றாமையை ஊருக்கு உணர்த்துவான்; கவியரசர் தன் அனுபவத்தின் பால் பல பாடல்களில் இந்த வேதனையைப் பகிர்ந்துள்ளார்;
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்,
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்,
பள்ளத்தூர் தன்னில் என்னைப் பரிதவிக்க விட்டுவிட்டு,
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்றுகொண்டாள்,
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா,
மேலூருபோவதற்கும் வேலை வரவில்லையடா.

இதற்குப் பொழிப்புரையும் தேவையோ?

இன்பத்தின் உறைவிடமான காதலை ,இனிமையின் உறைவிடமான தமிழால் கண்ணதாசன் “கர்ணன்” திரைப்படத்திற்காக இயற்றிய பாடலிது:

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
கண்டபோதே சென்றன அங்கே;
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவல் இன்றி வந்தன இங்கே!


தலைவிக்கு தலைவனைக் கண்டபோதே கண்கள் போன வழியே நெஞ்சமும் கூடவே சென்றதாம்; நெஞ்சம் காட்டிய வழியில் கால்களும்,மேனியும் நடைபோட்டதாம். அத்தகைய ஈர்ப்புடையதல்லவா காதல்.

ஈர்ப்பு சக்தியால் மிதப்பது கோளங்களின்காதல்;
வருடிச் சுகமூட்டுவது காற்றின் காதல்;
அலைகளால் அணைப்பது கடலின் காதல்;
கொழுந்து விட்டெரிவது தீயின் காதல்;
எல்லைகளில்லாமல் விரிவது வானத்தின் காதல்;
இமைத்துக் கொண்டேயிருக்கும் நட்சத்திரங்களின் காதல்;
அப்பப்பா! காதலின் தான் எத்தனை வகைகள்?


தலைவன் துனையில்லாததால் விரகதாபம் மேலிட ,கழுத்தில் அணிந்துள்ள முத்துச்சரம் மேனி அனலால் வெடிக்கிறதாம். மலரைப்போன்ற தலைவியின் மெல்லிதழ்கள் குளிர்ச்சியால் துடிக்கிறதாம். ஒருபக்கம் அனலையும் மறுபக்கம் குளிரையும் தாங்க முடியாமல், துயில் கொள்ள முடியாமல் தவிக்கிறாளாம் தலைவி.

மணிகொண்ட சரமொன்று அனல்கொண்டு வெடிக்கும்,
மலர்போன்ற இதழ் இன்று பனிகண்டு துடிக்கும்
துணைகொள்ள அவனின்றி தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்?


அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் என்னை இழந்துவிட்டேன்; அவன் யாரென்று கூட அறியவில்லை; எங்கிருந்து வந்தான்,என்னகுலம், என்ன இனம்,குணம் எப்படி? என்பதையெல்லாம் கூட நான் கேட்கவில்லை,என்னே எனது அறியாமை? என்று வியக்கிறாள்.

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர்கொண்டு நடந்தான்
குறைகொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்.

இதற்கான இலக்கிய ஒப்புமை,பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “நூறாசிரிய”த்தில் காணக் கிடைக்கிறது.

மலர்மிசை நாற்றம்போல் மதிமிசை யொளிபோல்
நலங்கிளர் கல்லுள் இளவெறி நசைபோல்
தழலினுள் தெறல் போல் தணிப்பரிதாம் விறல் வேட்கை
எழுந்தது மறிகிலேன்; படர்ந்தது உணர்கிலேன்;
மடுத்தலை கொணர்நீர் வேண்டி
எடுத்தோட் கள்வன் எதிர்ந்த ஞான்றே!


மலர்ந்த மலரின் மணத்தைப் போலவும், நிலவின் பால் நிறைந்து விளங்கும் ஒளியைப் போலவும்,உடல் கிளர்ச்சியை ஊட்டவல்ல கள்ளின் மெல்லிய வெறியைப் போலவும், தணலுள் தோன்றும் சூட்டைப் போலவும், அடங்காத இந்தக் காதல் விருப்பம் என்னுள் திடுமென்று எழுந்ததையும் அறிந்திலேன்; என் உடலிலும் உள்ளத்திலும் பற்றிப் பரவி நிற்பதையும் உணர்ந்திலேன்;

எப்பொழுது தெரியுமா?

எடுப்பான தோள்களையுடைய என் தலைவன் என் முன் நின்ற அப்பொழுது! இலக்கியம் கவியரசர் பாடலோடு எப்படிப் பொருந்துகிறது பார்த்தீர்களா? அவர் ஒரு ஆணாக இருந்துகொண்டு, பெண்களின் விரக வேதனையைப் பட்டியலிட எப்படி அவருக்குக் கைவந்தது என்பது தான் வியத்தகு ஒன்று.

கலிங்கத்துப்பரணியும் திரைப்பாடலும்:


சோணாட்டுத்தளபதி கருணாகரத் தொண்டைமானின் வெற்றியைப் புகழ்ந்து செயங்கொண்டார் பாடியதே கலிங்கத்துப்பரணி.

வெற்றிக்களிப்போடு வீடு திரும்பும் சோழ வீரர்கள், கதவுகளைத்தட்டித் தத்தம் மனைவியரை விளித்துச் சொன்னதாக வரையப்பெற்ற பாடல்களே “கடைதிறப்புப்பாடல்கள்”! சற்றுவிரசத்தைத்தருவதாக அமைந்திருந்தாலும், காமரசம் பருகிய கவிஞர், ஞான ரசம் பெறுவதற்கு இவை அடிப்படையாக அமைந்தன வென்றால் அது மிகையாகாது.

கலவிக் களியின் மயக்கத்தே
       கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகில்என்று எடுத்துடுப்பீர்,
       நீள்பொற் கபாடம் திறமினோ!
(கலிங்க-கடைதிறப்பு -34-14)

கலவி தந்த இன்ப மயக்கத்தில் நிலை இழந்து தன் ஆடை இதுதான் என்று நிலவைத் துழாவி எடுத்து உடுத்த முற்படுவாளாம்;

இந்த இலக்கியத்தின் சாரத்தை உள்வாங்கி,எழுதினர் ஒரு திரைப்பாடலை இப்படி:

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்


                                                               (படம்–எங்கள் தங்க ராசா.)

செயங்கொண்டார் பாடியது கலிங்கத்துப்பரணி,கவியரசர் பாடியதோ காதல் பரணி!

அந்த நால்வர் யார்?


நாலு பேர் என்ன சொல்வார்களோ? நாலு பேருக்குத் தெரிந்தால் என்னாகும்? என்றெல்லாம் நாம் கேட்டதுண்டு.சரி, அந்த நாலு பேர் யார் யார்? பாவேந்தர் பாரதிதாசன் சொல்வதாக இருந்தால், தொழிற் பங்காளிகள், தோழர், சேவகர் என்றிருப்பார்; தெய்வச் சேக்கிழார் என்றால்,சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பார் ஆனால், நம் கவிஞரோ தன், கவிதையொன்றில்,

இருபதிலோயோ இருமி இளைத்து
அறுபதிலோயோ ஆடி முடித்து
சூடு தணிந்து சுதியும் முடிந்து
கேடுறு கேண்மை நாடு துறந்து
சொல்ல நினைத்ததும் சொல்லாதொழிந்து
மெய்யே பொய்யாய் பொய்யே மெய்யாய்
கையொரு கட்டும் காலொரு கட்டும்
போடா,இறந்தவன் நாடக உடலைத்
தந்தோள் கொடுத்து தாங்கி எடுத்து
இடுகாட் டவ்வரை ஏந்தி நடந்து
கடைக்கரு மஞ்செயக் கடைக் காலூன்றும்
நால்வர்! நால்வர்! நன்றிக்குரியவர்!
அவரே உலகம் அறிவுரை கூறும்
நால்வர்! நால்வர்! நாளை நம்மவரே!!
3 (கண்ணதாசன் கவிதைகள்)

என்பதை கவியரசர் கவிதை நயமும்,நகைச்சுவையும், அவலச்சுவையும் கலந்து கொடுத்திருக்கிறார்;

நாலு பேருக்கு நன்றி –அந்த
நாலுபேருக்கு நன்றி.
தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும்
நாலு பேருக்கு நன்றி.

நாம் உயிருடன் உள்ள போது அனைவருக்கும் நன்றி கூறுகிறோம் ஆனால் நாம் இறந்துவிட்டால். நம்மை தூக்கிச் செல்லப் போவது யார்? என்பது நமக்கு தெரியாதுஂ. ஆகவே, அரசவைக்கவிஞர் கண்ணதாசன் நம் அனைவர் சார்பாக நம்மை தோள் கொடுத்து தூக்கி செல்வோருக்கு. முன்கூட்டியே நன்றியை காணிக்கை யாக்கி யுள்ளார்!.
 

                                                                                                                                  தொடரும்............
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்