கற்றலின் புதுமைகளும் மதிப்புக் கல்வியின் சவால்களும்

முனைவர் பூ.மு.அன்புசிவா



பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கற்பித்தலில் புதிய முறைகள் தோன்றின. கற்பித்தலைச் சிறப்பாக்குவதற்கும் வெற்றிகரமாக முடிப்பதற்கும் முக்கியக் காரணியாக இருப்பது பாடங்களை முறையாகத் திட்டமிடுதலாகும். எவற்றைக் கற்பிப்பது எவ்வாறு கற்பிப்பது என்பதையும் ஆசிரியர் முன்கூட்டியே தெளிவுபெற்றிருக்கவேண்டும். கால மாற்றத்தால் கற்பித்தல் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மொழிக்கு எற்றவாறும் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறும் மொழிக் கற்பித்தலின் போக்கு மாற்றம்பெற்றுவருகிறது. புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு முறை, நடிப்பு முறை, செயல்திட்ட முறை, தனிப்பயிற்சி முறை போன்றவற்றைக் கல்வியாளர்கள் குறிப்பிடுவர். இவ்வகையில் புதிய கற்பித்தல் முறைகளைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதையும் பார்ப்போம்.

கற்பித்தலும் கற்றலும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும். இக்காரணிகள் கற்பவர் தன் இலக்கு நோக்கி செல்லும் போதும், விஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போதும், பழக்கவழக்கங்கள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் முதலியவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்துள்ளது.

கடந்த நூற்றாண்டுகளில் கல்வி பற்றி பல்வேறு வித பார்வைகள் இருந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது (கற்றல் மூளையின் செயல்திறனால் நிகழ்கிறது) அல்லது வளர்ச்சி சார்ந்தது (கற்கும் அனுபவத்தால் அறிவு ஏற்படுகிறது) என்ற இருவேறுவித பார்வைகள் இருந்தது. இவ்விரு கொள்கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து பார்த்தோமானால் கற்றல் முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை உணரலாம். இவற்றை ஒருங்கிணைக்கும் போது பல்வேறு பிற காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சில - அறிவுத்திறன், கற்கும் முறை, பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை உள்ளவர்கள் மற்றும் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களின் கல்வி கற்கும் முறை.

கண்ணோட்டம்


ப்ரூனரின் கோட்பாடுகளின்படி கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. மாணவர்கள் தான் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர் என்பது தான் இக்கொள்கையின் சாராம்சம். கொடுக்கப்பட்ட தகவலை அலசி, ஆராய்ந்து, கோட்பாடுகளை உருவாக்கி அறிவுசார் முடிவுகளை மாணவர்கள் எடுக்கின்றனர். தகவலின் அர்த்தம் புரிந்து அதை வகைப்படுத்துகின்றனர். இது கொடுக்கப்பட்ட தகவலுக்கு அடுத்த நிலையை சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.

பயிற்று முறையைப் பொறுத்தவரையில் மாணவர்கள் அவர்களாகவே கொள்கைகளைக் கண்டுபிடிக்கும்படி பயிற்சியாளர் ஊக்கப்படுத்த வேண்டும். இருவரும் ஆக்கப்பூர்வ உரையாடல்களில் அதிகம் ஈடுபடவேண்டும்.

இங்கு ஆசிரியரின் பணி என்பது பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி மாற்றம் செய்வதுதான். பாடத்திட்டம் ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்டவைகளிலிருந்து புதியவற்றை அறிவார்கள்.

பயிற்று முறை கீழ்கண்ட நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

  • கற்றல் முறை பற்றிய பார்வை.

  • பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

  • எந்த வரிசையில் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் என்பதை அறிதல்.

  • பாராட்டுதல்கள் மற்றும் தண்டனைகளின் தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான கால இடைவெளி. எளிமை, புதிய கோணத்தில் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளடக்குதல்.

பயன்பாடு

ப்ரூனரின் இந்த பயிற்று முறைக்கான கோட்பாடு தனிமனித அறிவுத்திறனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியுடன் இக்கொள்கை தொடர்புடையது. ப்ரூனரின் இக்கருத்துகள் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் முறை தொடர்பான கருத்தரங்கு மூலம் பெறப்பட்டது. சிறு குழந்தைகளுக்கான கணித, சமூக அறிவியல் பாடங்கள் வாயிலாக ப்ரூனர் தன் கொள்கைகளை விளக்குகிறார். ப்ரூனர், குட்நவ், ஆஸ்டின் (1951) ஆகியோர் எழுதிய புத்தகத்தில் பகுத்தறியும் திறன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் மொழியைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் ப்ரூனர் குறிப்பிடுகிறார்.

அறிவார்ந்த கண்ணோட்டம்

எதையும் கற்றுக் கொள்ளதாவரை அதைக் கற்பிக்க முடியாது என சொல்லப்பட்டது. ஆகையால் அறிவியல் விஞ்ஞானிகள், கற்பித்தல் என்பது எப்படி நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தினார்கள். நடைமுறையில் பாரம்பரியமான சொற்பொழிவு முறை கற்பித்தலுக்கு பயனற்றது எனபதுடன், செய்துகாட்டுதல், கலந்துரையாடல் மற்றும் 'செய்தல்' போன்றவைகள் தான் சிறப்பாக கற்றுக் கொள்வதற்கு சக்தி வாய்ந்த சாதனமாகும் என்பதைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள 'கற்றல் பிரமிடு' (Learning Pyramid)  தெளிவாகக் காண்பிக்கிறது.

பண்புகளைக் கற்பிப்பதற்கு நான் கலந்துரையாடலைக் காட்டிலும் செய்து காட்டுதலைத்தான் (ஒரு கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது) தேர்வு செய்வேன். இருப்பினும், அடுத்தவர்களுக்குக் கற்பிப்பதுதான் சிறந்த கற்றலாகக் கருதவேண்டும் என்பதையும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். இது பண்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பாலனோர் பயன் பெற வழிவகுக்கும். ஆகையால் முறைப்படி விருப்பம் மற்றும் திறமை உள்ள ஆசிரியர்களை குறிப்பாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகு, அவர்கள் மூலம் பண்புகளை சிறந்த வழிமுறையில் கற்பித்தால், அது நிரந்தரமான நன்மைகளை ஏற்படுத்தும். மாணவர்கள் கற்றுக் கொள்வதுடன் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் இதனால் பயன் பெறுவார்கள். இதனால் கூடுதலான தொடர் விளைவு (domino effect) ஏற்படக்கூடும்.

கீழ்க்கண்ட நிலைகளில் கல்வி கற்றலிற்கு ஏற்ற சூழல் அமையும்:

  • மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்கிறார்கள் மற்றும் அதன் போக்கிலும் அமைப்பிலும் அவர்களின் பங்களிப்பு உண்டு.

  • செயல்முறை, சமூக, தனிமனித மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பிரச்சனைகளுக்கு இடையே நேரடி முரண்பாட்டின் அடிப்படையில் இம்முறை அமைந்துள்ளது.

  •  சுய-மதிப்பீடு தான் இங்கு பிரதான மதிப்பிட்டு முறை. கற்றலின் முக்கியத்துவத்தையும் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ரோஜெர் குறிப்பிடுகிறார்.

பகுத்துணர்ந்து கற்றல்

கவனித்தல், குறிப்பெடுத்தல் மற்றும் பிறர் போலச் செய்வது மூலமாக மனிதர்கள் சிறப்பாக கல்வி பெற இயலும். பகுத்துணர்ந்து கற்றல் என்பது கேட்டல், கவனித்தல், தொடுதல் அல்லது சோதனை வழி அறிதல் மூலம் நிகழ்கிறது. இம்முறையில் பிறர் செய்வது போல தானும் செய்வது மட்டுமல்லாமல் பல வழிகளில் அறிவு பெற வாய்ப்புள்ளது. இதைப்பற்றி இணையதளங்களில் படிப்பதால் மட்டும் இதன் முக்கியத்துவத்தை உணரமுடியாது. பகுத்துணர்ந்து கற்றல் என்பது மூளை அல்லது புலன் உறுப்புகள் வாயிலாக கல்வி அறிவு பெறுவதைக் குறிக்கிறது. ஒருபொருளைப் பற்றிய மனக் கண்ணோட்டமும் தகவல் பரிமாற்றமும் பகுத்துணர்ந்து கற்றல் முறையின் அங்கங்களாகும்.

பகுத்துணர்ந்து கற்றல் எவ்வாறு நிகழ்கிறது?


புலன் வழி கற்றல் முறையில் மாணவர்கள் கேட்டல், கவனித்தல், தொடுதல், வாசித்தல் அல்லது சோதனை மூலம் அறிதல், பின்னர் அவற்றை நினைவுபடுத்தி பார்த்தல் முதலியவை வாயிலாக கல்வி பெறுகிறார்கள். பெற்ற தகவலை பகுத்தறிதல், புதியவற்றை நினைவு படுத்துதல் என கற்பவர் புலன் அளவில் சுறுசுறுப்பாக உள்ளார்.

புலன் வழிக் கல்வி குறியீடுகள், எண் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட கலாச்சாரக் கூறுகளை உருவாக்கி அவற்றை மாணவர்களுக்கு அளிக்கிறது. இவ்வகை பகுத்துணர்ந்து கற்றல் மனிதர்களிடம் மட்டுமே நிகழ்வதல்ல. பிற விலங்கினங்களும் காட்சி வழியே இவற்றைப் பெறுகின்றன. விலங்குகள் காப்பகத்தில் ஒரு குரங்கு மனிதனைப் போலவோ பிற குரங்கைப் போலவோ செய்வதை நாம் காணலாம்.

கற்பித்தல் மற்றும் கற்றல் வழிமுறைகள்

ஈடுபாடு, ஆராய்ந்து அறிதல், விளக்கமளித்தல், விவரித்தல், மதிப்பிடல், விரிவாக்குதல் மற்றும் தரம்) அமைப்பு சார்ந்த கல்விமுறை அடிப்படையில் கல்வியியல் பேராசியர்களின் ஆலோசனைகளைப் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சார்ந்த முறையில் கல்விக்கான பாடத்திட்டமும் செயல் முறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தாம் ஏற்கனவே பெற்ற கல்வியுடன் மேலும் பல புதிய தகவல்களை மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர்.

இந்த ஒவ்வொன்றும் கற்றலின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவரும் ஈடுபடும் பொதுவான செயலைக் குறிக்கிறது. முன்பு பெற்ற அறிவை பயன்படுத்தவும், அதை மேம்படுத்தவும், புதியவற்றைக் கற்றுகொள்ளவும் அதனை தொடர்ந்து மதிப்பீட்டுக்கு உட்படுத்துதலும் இங்கு நிகழ்கிறது.

 'ஈடுபடும்' செயல் முன்பு கற்றவைக்கும், இன்று கற்கப்போவதற்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்; புதிய செயல்களை உருவாக்க வேண்டும்; மாணவர்களின் சிந்தனைகள் செயல்முடிவுகளை குறித்து இருக்குமாறு செய்ய வேண்டும். மனதளவில் அவர்கள் பாடத்திலும், செயல்முறையிலும் அல்லது பயிற்றுவிக்கப்படும் திறனில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பர். ஒவ்வொரு பாடமும் சிந்தனையைத் தூண்டும் ஒரு முக்கியமான கேள்வியைக் கொண்டிருக்கும். ஆராய்ந்து அறிதல் பகுதியில் உள்ளவற்றை அறியும் வண்ணம் சில கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.

ஆராய்ந்து அறிதல்


இந்த கட்டத்தில் மாணவர்கள் பாடத்தை ஆழமாகப் படிக்கின்றனர். இங்கு அதிக வழிகாட்டுதல்களின்றி பாட புத்தகங்களை அவர்களாகவே படித்தறியும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் தேவைப்படும். ஆசிரியர்கள் சுழற்சி முறையில் சில முக்கியமான கேள்விகளைக் கேட்டு அவர்களின் உரையாடல்களை கவனித்து அவர்கள் எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

விளக்கமளித்தல்


இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றவற்றை விளக்கிக் கூற உதவுகிறது. தாம் புரிந்துகொண்டதை வார்த்தைகளில் விளக்கிக் கூறவோ அல்லது தங்களின் திறமைகளை வெளிக்காட்டவோ வாய்ப்பு அமைகிறது. இக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் புதிய கலைச்சொற்கள், வரையறைகளைக் குறிப்பிடவும் திறன்களையும் பண்புகளையும் விளக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது.

விவரித்தல்


இங்குதான் மாணவர்கள் ஒரு பயிற்சியில் நேரடியாக ஈடுபடுகிறார்கள். தாம் புதிதாக கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்தவும் அதில் தான் பெற்ற அனுபவங்களையும் சோதனை முடிவுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் தங்களின் பரிசோதனை முடிவுகளை மதிப்பீட்டுக்கு வைக்கவும், முடிவுகளை சமர்ப்பிக்கவும் செய்கிறார்கள்.

மதிப்பிடுதல்


மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் மதிப்பிடுகிறார். இக்கட்டத்தில் மாணவர்கள் சுய மதிப்பீடு, குழு மதிப்பீடு செய்யவும் மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளையும் சாதனங்களையும் உருவாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விரிவாக்குதல்


இப்பகுதியில் பாடதிட்டத்திற்கு வெளியே உள்ளவற்றை அறிந்து கொள்ள சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாம் கற்றுக்கொண்டவற்றை பல புதிய விசயங்களுக்கும் புதிய சூழலுக்கும் பயன்படுத்த உதவுகிறது. எனினும் இச்செயல் மாணவர்களின் உற்சாகத்தால் விளைவதாகும். இது முழுக்க முழுக்க மாணவர்கள் தாங்களாகவே செய்யும் செயல். எனினும் ஆசிரியர்கள் சில ஆலோசனைகள் வழங்கலாம்.

தரங்கள்


ஒவ்வொரு பாடத்திட்டம் வாரியாக தரம் நிர்ணயிக்கப்பட்டு வரப்படுகிறது. தரம் நிர்ணயம் தேசிய, மாநில அல்லது பகுதிவாரியான தரத்திற்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. இது பள்ளி அல்லது வட்டார அளவில் பாடத்திட்டதில் என்னென்ன பாடங்கள் சேர்க்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது மற்றும் ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான வழிமுறைகளை அளிக்கிறது.

மற்றவர்களைப்போல் உருவகப்படுத்தி நடித்தல்

கலந்துரையாடல்

கற்பித்தல் முறையின் ஒரு பகுதியான உருவகப்படுத்தி நடித்தல் மூலம் மாணவர்களுக்கு அதிக பலன் கிட்டும் (உதாரணமாக பகத்சிங் போல பாவனை செய்து கருத்துக்களை விளக்குதல்). இந்த முறையை சிறப்பாக செயல் படுத்த முழுமையான தயாரிப்பு திட்ட வரையறை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் பயிற்சிக்குப் பின் விளக்கிக் கூற கால அவகாசம் ஆகிய அனைத்தும் மிக அவசியம். இதன் மூலம் மாணவர்களின் சமயோஜித அறிவு மற்றும் குழு வழிகற்றல் ஊக்குவிக்கப்படுகிறது. இப்பயிற்சி மாணவர்கள் பலவித தகவல்களில் தெளிவு பெறவும் தான் படித்தவற்றிலிருந்து அன்றாட வாழ்வில் நடப்பவற்றை ஒப்பிட்டு பார்க்கவும் வழி செய்கிறது.

பல்வேறு வயது உடைய மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல்

பல வயது மாணவர்கள் கொண்ட வகுப்பில் கற்பித்தல் கற்போரின் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கிறது. பாடங்கள் ஒவ்வொரு தலைப்பு வாரியாக பல்வேறு தரத்தில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு தரத்திற்கு தனித்தனி பயிற்சி வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் தங்களுக்குள் உதவி செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் வயதிற்கேற்ப உள்ள திறன்களை அறிந்து கொள்ள முடிகிறது இந்த கூட்டு முயற்சியில் மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு ரோல்-மாடல்களாகவும் (முன் மாதிரி) வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள்.

இவ்வகை வகுப்புகளில் பல்வகையான கற்பித்தல் முறைகளையும் மதிப்பீட்டு முறைகளையும் கையாளலாம். குழு அமைப்பதில் கடுமையான விதிமுறைகளில் தளர்வு, தனிப்பட்ட கற்றல் முறைகள், அனைவரின் பங்களிப்பு, பிறரை மதித்து நடத்தல் எனப் பல்வேறு வகையில் பயனுள்ளதாக உள்ளது.

குழுவழிக் கற்றல்

குழுவழிக் கற்றல் முறைதான் பிற முறைகளைக் காட்டிலும் அதிக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுவாக செயல்படும் வாய்ப்பு, வேகமாகவும் செம்மையாகவும் கற்றுக்கொள்ளல், அதிகம் தக்கவைத்துக்கொள்ளும் திறன், கல்வி பயில்தல் பற்றி நேர்மறையான எண்ணம் கொண்டுள்ளார்கள் என முடிவுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களை குழுக்களாக அமைத்து ஒரு செயலை முடிக்குமாறு பணித்தல் மட்டுமே இம்முறையில் நிகழ்வதில்லை. இம்முறையில் வெற்றி அடைய குறிப்பிட்ட வழிமுறைகள் பல உள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் அவற்றை அறிந்திருத்தல் அவசியம். சமீபத்தில் இம்முறை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பல புகார்கள் வந்துள்ளன. மாணவர்கள் குழுவாக செயல்படும்போது ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட பிற வேலைகளில் ஈடுபடுதல் கூடாது. நன்கு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து குழுத்தலைவனாக நியமித்து அவற்றை கவனிக்க பணிக்கப்படுவதால் அவர்களுக்கு இத்திட்டம் ஏற்றதல்ல. இன்று பணியிடங்களில் அதிக எதிர்பார்க்கப்படும் பிறருடன் இணைந்து செயல்படுதல், கூட்டாக செயல்படுதல் முதலிய குணங்களை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ரிப்போர்ட்டர், பதிவுசெய்பவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளார் முதலிய பல்வேறு பாத்திரங்களில் பணி செய்ய குழுவழிக் கற்றல் வாய்ப்பளிக்கிறது. குழுவில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும்; அவர்களுக்குத் தனித்தனி பணிகள் உள்ளன. யாரும் இதில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. ஒரு குழுவின் வெற்றி ஒவ்வொரு தனிநபரின் உழைப்பில்தான் உள்ளது

மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் சிறுசிறு குழுக்களாக செயல்படுவது அவர்களுக்கும் தங்கள் குழு நண்பர்களுக்கும் உதவியாக இருக்கிறது. குழுவழிக் கற்றல் முறை கீழ்க்கண்ட ஐந்து பண்புகளைக் கொண்டுள்ளது.

  • குழுவாக செயல்படுவதன் மூலம் சிறப்பாக செய்யக்கூடிய செயல்களை மாணவர்கள் குழுக்களாக இணைந்து செய்து முடிக்கிறார்கள்.

  • இரண்டு முதல் ஐந்து நபர்கள் கொண்ட குழுவாக செயல்படுகிறார்கள்.

  • பொதுவான பணிகளை செய்து முடிக்க தங்களின் கூட்டுறவு மற்றும் சமுதாய குணங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

  • ஒவ்வொருவரும் குழுவின் மற்ற உறுப்பினர்களை சார்ந்திருக்கின்றனர். செயல்திட்டம் அதற்கு ஏற்றது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

  • ஒவ்வொரு மாணவனுக்கும் தன் செயலில் முழு பொறுப்பு உண்டு.

கற்கும் முறைகள்

 கற்கும் முறைகள் என்பது கல்வி கற்க பயன்படுத்தும் வௌ;வேறு வகையான உத்திகள் மற்றும் செயல்முறைகள் ஆகும்

காட்சி வழி கற்போர் : காட்சி வழி கற்றல்

இவ்வகை கற்போர் ஆசிரியரின் உடலசைவு மொழிகள் மற்றும் முகபாவனைகளைக் காணும்போதுதான் பாடத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கவனிக்கும்போது எதுவும் கண்ணை மறைக்காமல் இருக்க இவர்கள் வகுப்பறையில் முன் வரிசையில் அமர விரும்புவர். இவ்வகை கற்போர்கள் காட்சி வழியாகவே சிந்திக்கிறார்கள். படங்கள், சார்ட்டுகள், படங்களுடன் கூடிய பாடப்புத்தகங்கள், வீடியோ மற்றும் கையடக்க குறிப்புகள் மூலம் நன்றாக புரிந்துகொள்வர். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ ஆசிரியர் கலந்துரையாடும்போதோ இவ்வகை கற்போர் முழுதும் குறிப்பு எடுக்க விரும்புவர்.

கேட்டல் வழி கற்போர் : செவி வழி கற்றல்

இவ்வகைக் கற்போர் லெக்ச்சர்கள், கலந்துரையாடல்கள், பாடத்தில் உள்ளவற்றைப் பற்றி பிறரிடம் விவாதித்தல் மற்றும் அவர்களின் கருத்துகளைக் கேட்டல் மூலம் சிறப்பாகப் பயில்வர். சொற்களில் பொதிந்திருக்கும் பொருளை ஆசிரியர் குரலின் பேச்சு சுருதி, வேகம் முதலியவற்றைக் கொண்டு அறிய முற்படுவர். இவர்களைப் பொறுத்தவரையில் எழுத்து வடிவில் உள்ளதைக் காட்டிலும் பேச்சு வடிவில் உள்ளது அதிக பயன்தரும். பாடத்தை சத்தமாகப் படிப்பதும் டேப் ரெக்கார்டர் மூலம் பாடத்தினை கேட்பதும் அதிக பயன்தரும்.

உடல் அசைவு / தொடுதல் வழி: அசைவுகள், தொடுதல் வழி கற்றல்.

இவ்வகை கற்போர் சுற்றுப்புற உலகில் உள்ளதை தாங்கள் நேரில் அறிந்து, ஆராய்ந்து கற்க விரும்புவர். ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். ஆராய்ச்சி செய்யும் எண்ணம் அவர்களின் கவனத்தை அடிக்கடி சிதைக்கும்.

தத்துவக் கண்ணோட்டம்–கற்பிப்பது பற்றி பெரிய விஞ்ஞானிகளும், தத்துவஞானிகளும் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்ப்போம்.


ஸ்ரீஅரவிந்தர்

  • 'கற்பித்தலின் முதல் கொள்கை என்னவெனில் எதையும் கற்பிக்க முடியாது'

சுவாமி விவேகானந்தர்

  •  'ஒருவருக்கு மற்றவர் உண்மையிலேயே கற்றுக் கொடுக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்களாகவே கற்றுக் கொள்ள வேண்டும். வெளியிலுள்ள ஆசிரியர் ஆலோசனையை மட்டும் தான் தருவார். அது உள்ளுக்குள் இருக்கக்கூடிய ஆசிரியரை வேலை செய்யத் தூண்டி விஷயங்களைப் புரிந்து கொள்ளச் செய்யும்'

சாக்ரடீஸ்

  • 'நான் யாருக்கும் எதுவும் கற்றுக் கொடுக்க முடியாது. நான் அவர்களை சிந்திக்க வைக்கத்தான் முடியும்'

கலிலியோ

  • 'நீங்கள் மக்களுக்கு எதையும் கற்பிக்க முடியாது. அதை அவர்கள் அவர்களாகவே கண்டுபிடித்துக் கொள்ள மட்டும் தான் உங்களால் உதவி செய்ய முடியும்

ஐன்ஸ்டீன்

  • 'நான் என் மாணவர்களுக்கு ஒருபோதும் கற்றுக் கொடுத்தது இல்லை. நான் நிலைமைகளை மட்டும் தான் அவர்களுக்கு அளிக்க முயல்கிறேன். அவர்கள் அதிலிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.'

ஆக, இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தத்துவஞானிகள் போன்ற பெரியவர்கள், 'எதையும் கற்றுக் கொடுக்க முடியாது கற்றுக் கொள்ளத்தான் முடியும்' என்கிறார்கள். என்றாலும், கற்றுக் கொள்வதற்கான செயல்முறைகளை ஆசிரியர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். கணக்கு, அறிவியல், ஆங்கிலம், இசை அல்லது பண்புகள் எதுவாக இருந்தாலும் வகைமுறைகள் ஒன்றுதான். ஆசிரியகளுடைய பொறுப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் நல்ல முன்மாதிரியான ஆசிரியர்களின் தேவை மிகவும் அவசியமான ஒன்றாகிறது.
 

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்