கடிதம்

திலீப்குமார

'தியம் மூன்று மணிக்குச் சரியாக வந்துவிடு' என்று நேற்றே சொல்லியிருந்தார் மிட்டு மாமா. வழக்கம் போல் கண்ஷியாம் மாமாவுக்குப் பணம் கேட்டு உருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். மிட்டு மாமா என் பாட்டியின் சகோதரர், பரம ஏழை. கண்ஷியாம் மாமா மிட்டு மாமாவின் ஷட்டகர், பெரிய பணக்காரர்.

பொதுவாக மிட்டு மாமா எழுதும் கடிதங் கள் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால், வயது காரணமாக மிட்டு மாமாவின் கைவிரல்கள் நடுக்கம் கண்டுவிட்டதால் அவருக்கு மாதம் ஓரிரு கடிதங்கள் எழுதித்தர நான் ஒப்புக்கொண்டிருந்தேன். தவிர, இந்தக் கடிதங்கள் மிக அந்தரங்க மான தஸ்தாவேஜுகள் என்பதாலும் அவற்றை நான் மட்டுமே கையாள நியமிக்கப் பட்டேன். விளைவாக, மிட்டு மாமாவுக்கும் எனக்கும் இடையே ஒரு கனவானுக்கும் அவனது ஆசைநாயகிக்கும் இடையே ஏற்படக்கூடியதைப் போன்ற சின்னச்சின்ன ரகசியங்கள் இழைந்த ஒரு அந்நியோன் னியம் உருவாகியிருந்தது.

நான் சென்ற போது மிட்டு மாமா பெரிய திண்டில் தலை சாய்த்துப் படுத்திருந்தார். கால்கள் பாலித்தீன் பைகளில் உறைந்து இரு சிறு மூட்டைகளாக ஒரு சிறிய தலையணைமேல் கிடந்தன. என்னைப் பார்த்ததும், 'வாடா, பயில்வான்' என்று அன்புடன் அழைத்தார். மிட்டு மாமாவுக்கு வயது 70 இருக்கும். பெரிய கண்கள், ஒட்டிய கன்னங்கள், அடர்த்தியான புருவம், நீண்ட மூக்கு, மெலிந்த தேகம், கதர் முண்டு, கதர் பனியன், நைந்து போன பூணூல், மிட்டு மாமாவின் மனைவி ஜமுனா மாமி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கட்டடத்தின் பின்புறம் இருந்த மகன்கள் மற்றும் மருமகள் களோடு அவருக்கு ஒத்துவரவில்லை. தெருவைப் பார்த்த மாதிரி இருந்த இந்த முன் அறைக்கு அவரை ஒதுக்கிவிட்டிருந் தார்கள்.

'எழுதிக்கொள்' – மாமா வழக்கமான பீடிகையுடன் ஆரம்பித்தார்.

'குறுக்கே எதுவும் பேசாதே' என்றும் எச்சரித்தார்.

'மதிப்புக்குரிய கண்ஷியாம்ஜி அவர்களுக்கு,

சென்னை சவுக்கார்பேட்டைவாசி மற்றும் தங்களின் ஷட்டகர் மிட்டுவின் வணக்கங் களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இங்கு நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறோம். அதேபோல், உங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள் என்பது குறித்த சமாச்சாரத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தற்போது எழுத நேர்ந்த விஷயம் என்ன வென்றால் கொஞ்சநாட்களாகவே எனக்கு மனசே சரியில்லை. சரியாகச் சொல்வ தானால் கடந்த ஒரு வாரமாக. நான் செத்துப் போக வேண்டும் என்று இங்கு எல்லோரும் விரும்புகிறார்கள். நானும், செத்துப் போக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், சாவதும் வாழ்வதும் நம் கையிலா இருக்கிறது! நான் தற்கொலைகூடச் செய்து கொள்வேன். ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கும் எனக்கு ஓரிரு இடையூறுகள் இருக்கின்றன. முதலாவதாக, என் 73 வயதில் ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டால் யாரும் அவனுக்காக வருத்தப் படப்போவதில்லை. ஒழிந்தது சனியன் என்று இருந்துவிடுவார்கள். இரண்டாவதாக, என் கால்கள், என் பாதங்களில் வெடிப்பும் முழங்கால்களில் சிரங்கும் உள்ளது பற்றித் தாங்கள் அறிவீர்கள். இந்தக் கால்களை வைத்துக் கொண்டு நான் எப்படி எங்கே போய்த் தற்கொலை செய்து கொள்ள முடியும்? மேலும், சீழும் நீரும் வடியும் நாற்றமடிக்கும் கால்களோடு நான் செத்தால் அது நன்றாக இருக்காது. இதையும் தாங்கள் அறிவீர்கள். எப்படியும், என் பந்துக்கள் விரும்புவது போல் நான் சாகவே விரும்பு கிறேன்.

சென்ற மாதம் நீங்கள் தயவு செய்து அனுப்பிய பணத்தால் நான் நேற்று முன்தினம் வரை, ராவண ஐயர் தெருவில் உள்ள குஜராத் சகாய ஆஸ்பத்திரிக்குப் போய் என் கால்களுக்கு மருந்தும் கட்டும் போட்டு வந்து கொண்டிருந்தேன். பிரதி மாதமும் 3ஆம் தேதி வரும் சரும நோய் நிபுணர் டாக்டர் தாமரைக்கண்ணன் அவர்களுக்குப் பதிலாக இந்த மாதம் புதிதாக ஒரு டாக்டர் வந்திருந்தான். அவன் பெயர் சனத்குமார் ஜெயின். மார்வாடி.

இவனது தந்தை சுகன்மல் ஜெயினுக்குத் தங்கசாலைத் தெருவில் எவர்சில்வர் ஹோல்சேல் பாத்திர வியாபாரம் உள்ளது. NSC போஸ் ரோட்டின் திருப்பத்தில் நியூ ஆனந்த பவன் ஓட்டல் அருகேதான் இவரது கடை உள்ளது.

ஆளைப் பார்த்தால் நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். உங்க ளுக்குத் தெரியாதவராய் இருக்க முடியாது. டாக்டர் சனத்குமார் வயதில் சின்னவன் தான். மற்றபடி, கெட்டிக்காரன். பிரபல சரும நோய் நிபுணர் டாக்டர் தம்பையாவிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றவன். என் கால்களைப் பரிசோதித்து மருந்து மாற்றிக் கொடுத்திருக்கிறான். பூசிக்கொள்ள ஆயின்மென்ட்டும், சாப்பிடுவதற்குச் சில மாத்திரைகளும் கொடுத்திருக்கிறான்.

கட்டுக்கூட ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றினால் போதும் என்று சொல்லி விட்டான். அரிப்பையும் நீர் வடிவதையும் இன்னும் ஆறு மாதத்தில் நிச்சயம் குணப் படுத்திவிட முடியும் என்று கூறியிருக்கிறான். உங்களுக்குத் தெரியும். சிகிச்சை என்ன வோ இலவசம்தான். ஆனால், ரிக்ஷாவில் தானே போக வேண்டியிருக்கிறது. ரிக்ஷாக் காரன் காத்தவராயன்தான் என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்துச் செல்கிறான். போய் வருவதற்கு இரண்டு ரூபாய் என்று பேசிவைத்திருக்கிறேன். சென்ற வாரத்தோடு பணம் தீர்ந்து விட்டதால் அவன் என்னை இப்போது கடனுக்குத்தான் அழைத்துச் செல்கிறான். அவனுக்கு நான் 6ரூ. பாக்கி, காத்தவ ராயனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று காலையில்தான் தகவல் வந்தது. எனவே காத்தவராயன் செங்கல்பட்டுக்குப் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பிவருவான் என்பது சொல்வதற் கில்லை. மாற்று ஏற்பாடு செய்துகொண்டு விடலாம்தான். ஆனால் காத்தவராயன் போல வருமா? தவிர, புதிய ரிக்ஷாக் காரனுக்குக் கொடுக்கப் பணம்?

அதனால்தான் கூறுகிறேன், எனக்கு எல்லாம் வெறுத்துப் போய்விட்டது. நான் சாவதுதான் எல்லோருக்கும் நல்லது. உங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்பும் சுமையும் குறையும்.

உங்களுக்குத் தெரியும், என் மகன்கள் யாரும் சரியில்லை என்பது. பெரியவன் புல்புல்தாரா வாசித்துக் கொண்டும், தன் மனைவி பின்னால் அலைந்து கொண்டு மிருக்கிறான்.

அவன் மனைவிஅந்தக் குள்ள ராணிஎப்பேர்ப்பட்டவள் என்பதும் உங்களுக்குத் தெரியும். பூனை மாதிரி இருந்து கொண்டு என்ன அட்டகாசம் செய்கிறாள்! சென்ற வாரம் ஒரு நாள் (சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளக் கொடுத்த மோரிதாலில்) 'குழம்பில் உப்பு கொஞ்சம் குறைகிறது. எடுத்து வா' என்றேன். இது ஒரு தவறா? முகத்தை லலிதா பவார் பாணியில் ஒரு வெட்டு வெட்டித் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். வயசுக் காலத்தில் உப்பைக் குறைத்தால் என்ன என்று அவளுக்கு சப்போர்ட்டாகப் பேசவந்து விட்டான் இந்த லாயக்கற்ற நாய் (என் மூத்த மகன்). சின்னவன் கதையும் உங்களுக்குத் தெரிந் ததுதான். பாங்க்கில் வேலைசெய்கிறான் என்று பெயர்தானே தவிர, கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாத பயல். யார் இவன்? நீங்கள் போட்ட பிச்சையில்தானே டீ.ஊழஅ. படித்து முடித்தான். இப்போது பெரிய பக்தனாகி விட்டான். சனிக்கிழமை இரவுதோறும் கூட்டு பஜனைக்கு ஏற்பாடு செய்து வீட்டையே துவம்சம் பண்ணுகிறான். தபேலாவும், சப்ளாக் கட்டையும் வைத்துக் கொண்டு அவன் நண்பர்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சமில்லை. இப்படி பஜனை முடிந்ததும் நள்ளிரவுக்கு மேல் இந்த நாய்கள் எல்லோரும் மகேஸ்வரி பவனில் பூரியும் லஸ்ஸியும் பீடாவும் சாப்பிடக் கிளம்பி விடுவார்கள். மகேஸ்வரி பவனில் நான் சாப்பிடாத பூரியா, போடாத பீடாவா, இவனுக்கு நன்றாகத் தெரியும் மகேஸ்வரி பவன் பூரி என்றால் எனக்கு இஷ்டம் என்று. ஆனால், ஒருநாள்கூட வாங்கி வந்ததில்லை. இந்த ராஸ்கல். பெரிய கவர்னர் என்று நினைப்பு. கவர்னர் என்றதும் ஞாபகம் வருகிறது. பிரபுதாஸ் பட்வாரி நம் ஸ்ரீநாத்ஜியின் கோவிலுக்கு வந்திருந்தார். என்ன எளிமை! என்ன எளிமை! நம் நாத்தியின் முன் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்துவிட்டுப் போனார். அவர் சொன்னார்: எங்களுக்கு இந்திராகாந்தி மேல் எந்தக் கோபமும் இல்லை. அந்தம் மாவுக்கு எப்பவுமே கொஞ்சம் வீம்பு ஜாஸ்திதான்.

என் இரண்டாம் நம்பர் பையன் ரஜினி தான் பாவம், நல்லவன்...'

இந்த இடத்தில் நான் குறுக்கிட்டுக் கேட்டேன் – 'மாமா, இரண்டாம் நம்பர் என்று எழுத வேண்டுமா? கண்ஷியாம் மாமாவுக்கு ரஜினி என்றாலே புரியுமே!'

'பேசாமல் நான் சொல்வதை எழுது. அவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குச் செய்தே மீள முடிவதில்லை. நேற்று முன்தினம் நடந்தது. இதை எழுதும் போது என் கண்களில் கண்ணீர் தளும்புகிறது.'

நான் மிட்டு மாமாவின் கண்களைப் பார்த்தேன்.

'என்னடா பார்க்கிறாய்? எழுது.'

'வீட்டில் தேங்காய் எண்ணெய் தீர்ந்து விட்டது. இவன் தண்ணீரை விட்டுத் தலையைச் சீவிக்கொண்டு போகிறான். மூத்தவனும் சின்னவனும் சிகரெட்டுக்கும் பீடாவுக்கும் செலவழிக்கிறார்களே ஒழிய எண்ணெய் வாங்கித்தர மாட்டேனென் கிறார்கள். வீட்டில் இப்போது எல்லோரும் தினமும் தலைகுளித்து, எண்ணெய் போடுவதை மாலைவரை ஒத்திப் போட்டு விட்டுச் சமாளித்துவிடுகிறார்கள். எண் ணெய் போடாமல் என் முன்வழுக்கை காய்ந்து தலையே எரிகிற மாதிரி இருக் கிறது. என் கொஞ்சநஞ்ச முடியும் தேங்காய் நார் மாதிரி சிலுப்பிக்கொண்டு நிற்கிறது. முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே பயமாக இருக்கிறது...'

நான் மாமாவின் தலையைப் பார்த்து அவர் எழுதச் சொன்னதை உறுதி செய்த கொண்டேன்.

'நான் சாவதற்கு முன் சில விஷயங்களை ஒழுங்குசெய்துவிட விரும்புகிறேன்.

உங்களுக்குத் தெரியும், என்னிடம் சொத்து ஒன்றும் கிடையாது. நான் வெறும் 'டண்-டண் கோபால் (செல்லாக்காசு, ஓட்டாண்டி) தான். உங்கள் சகோதரி, அதாவது என் மனைவி, இறந்தபோது அவளுடைய டாகுர்ஜிக்களின் சேவையைத் தொடர்ந்து செய்ய நான் ஏற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் இறப்புக்கு முன்பாக, இந்த விக்கிரகங்களை நான் உங்களிடம் தந்துவிட விரும்புகிறேன். இந்த விக்கிரகங்கள் எங்கள் குடும்பத்தில் வழிவழியாக இருந்து வருபவை. என் அம்மா (அதற்கு முன் என் பாட்டி) அதிகாலையில் எழுந்து குளித்து முழுகிவிட்டு, வெறும் வயிற்றில் இந்த விக்கிரகங்களுக்குப் பூஜை செய்துவிட்டுத்தான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள். அவளுக்குப் பிறகு உங்கள் சகோதரியும் அப்படியே செய்து வந்தாள். உங்கள் சகோதரி போனபின் நான்தான் ஏதோ முடிந்தவரை செய்துவருகிறேன். நான் தினம் குளிக்க முடிவதில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். கால்கட்டு மாற்றும் அன்றுதான் குளிக்க முடிகிறது. அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் பூஜை செய்கிறேன். எனக்கு வருத்தமெல்லாம், சுப தினங்களில்கூட இந்த விக்கிரகங்களுக்குச் சரியான நைவேத்தியம் படைக்க முடிவ தில்லை என்பதுதான். தினம் பதினோரு மணிக்கு எனக்கு வரும் உணவைதான் (மூன்று சப்பாத்திகளும் கொஞ்சம் சாதமும்) சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மாலையில் அம்பிஸ் கபேயிலிருந்து வரும் இரண்டு இட்டிலியும் ஒரு வடையும்தான். கடவுள் இதை ஏற்றுக்கொள்வார் என்றுதான் நம்புகிறேன். எல்லாவற்றுற்கும் சிரத்தைதான் முக்கியம்.

என் மருமகள்களை நம்ப முடியாது.

அவர்களுக்கு இவற்றின் அருமை தெரியாது. வீசி எறிந்துவிடுவார்கள். அல்லது குழந்தை களுக்கு விளையாடக் கொடுத்து விடுவார்கள். இந்த விக்கிரகங் களில் குறிப்பாக ஒன்று முக்கியமானது. புல்லாங்குழல் சகிதம் தவழ்ந்து வரும் பாலகிருஷ்ணனின் ஐந்து அங்குலம் உயர விக்கிரகம்தான் அது. பார்க்க மிக அழகாக இருக்கும். பட்டு வஸ்திரமும் ஜரிகைக் குல்லாயும் போட்டுப் பொட்டும் இட்டுவிட்டால் சாட்சாத் கிருஷ்ணனே நம் முற்றத்தில் வந்து தவழ்ந்து கொண்டிருப் பது போல் இருக்கும். நான் இறந்து விடுவதற்கு முன் இந்த டாகுர்ஜிக்களை உங்களிடம் ஒப்படைத்து விட விரும்புகிறேன். என் சகோதரியிடம், அதாவது உங்கள் மனைவியிடம் கூறுங்கள். இது என் கடைசி ஆசையென்று. நம் காலம் முடிந்த பின் குழந்தைகள் இதை ஒழுங்காகச் செய்வார் கள் என்று சொல்ல முடியாது. என் சகோதரிககு முடிகிறவரை டாகுர் ஜிக்களின் சேவையைச் செய்யட்டும். அதற்குப் பிறகு கிணற்றிலோ அல்லது நதியிலோ அவற்றைச் சமர்ப்பணம் செய்து விடுங்கள். இதுதவிர என்னிடம் சில தெய்வீகப் புத்தககங்களும் ஒரு குட்டிக் குடத்தில் கொஞ்சம் கங்கா ஜலமும் இருக்கிறது. இதையெல்லாம்கூட நான் உங்களுக்கே கொடுத்துவிட விரும்பு கிறேன். புத்தகங்களில் குறிப்பாக, 'ஹனு மான் சாலிசாவும்' (ஆஞ்சயே கவசம்) டோங்கரே மஹ்ராஜின் ஆசிபெற்ற பாக வதமும் நீங்கள் அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால், வீட்டில் பேய் பிசாசுகளின் நடமாட்டம் இருக்காது என்பதோடு சுபிட்ச மும் ஏற்படும்.

நான் செத்துப்போகத் தயாராக இருக்கி றேன் என்பது தங்களுக்குப் புரிந்து போயிருக்கும். ஆனால், சாவு எப்படி, எங்கிருந்து வரும் என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை. நாம் வலியப் போய் நின்றாலும் இந்தப் ப்ருத்வியில் நம் பிரயாணம் முடியும் வரை, சாவு நம்மை அரவணைத்துக் கொள்ளாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். சென்ற வாரம், பட்டம் விட்டுக் கொண்டிருந்த ஜீவன்லாலின் எட்டு வயது மகன் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டான். அவன் அதிர்ஷ்டம், அந்த நேரம் பார்த்து, அழுக்குத் துணி களடங்கிய பொதியோடு போய்கொண் டிருந்த 'ஏகாம்பரேஸ்வரர் பின்மென்' காரனின் கழுதைமேல் சொல்லி வைத்தாற் போல் குறி தவறாமல் விழுந்து தப்பித்தான். ஒரு கீறல் இல்லை, ஒரு காயம் இல்லை. இடறி விழுந்ததில் கழுதைக்குத்தான் பாவம், பின்னங்கால் முறிந்துவிட்டது. ஜீவன்லாலை உங்களுக்குத் தெரியும். மகாக் கஞ்சன். கழுதையின் சிகிச்சைக்கு ஒரு பைசாக்கூடத் தரமாட்டேன என்று கூறிவிட்டான். கழுதையை ரிக்ஷாவில் வைத்து மாட்டாஸ் பத்திரிக்குக் கொண்டு போவதற்கு அவனிட மிருந்து மூன்று ரூபாயை வாங்குவதற்குள், போதும் போதுமென்றாகிவிட்டது.

அந்த டோபி மிக அசிங்கமான, ஆனால் ஒரே சொற்றொடரைப் பயன்படுத்தி குஜராத்திகள் வம்சத்தையே ஏசிவிட்டுப் போய்விட்டான்.

இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஆனாலும், நான் நினைக்கிறேன், நான் சாகத்தான் வேண்டும் என்று. நான் சாவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தும், நான் சாகாமல் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வருகிறது.

என்னோடு படித்த ரஞ்சித் ப்ரோக்கர் பத்து நாட்களுக்கு முன்பு எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் ஒரே மூச்சில் போய்விட்டான். இப்படி எனக்குத் தெரிந்து, இந்த ஒரு மாதத்திற்குள்ளேயே, இந்தத் தெருவிலேயே மூன்று பெரிய உயிர்கள் போய்விட்டன.

எல்லோரையும் டியபடீசும் மாரடைப்பும் புருஷன் பெண்டாட்டி போல் ஜோடி சேர்ந்து கொண்டு வந்து இழுத்துப் போய் விட்டன. என் மருமகள் சுபத்திராவுக்கும்கூட இந்த இரண்டு வியாதியும் இருக்கிறது. எனக்குத் தான் ஒன்றும் இல்லை. சிரங்கு, வெடிப்பு என்று சில்லறை வியாதிகள் தவிர. சென்ற வாரம் என் பெரிய மருமகள் சொன்னது போல் நான் நிஜமாகவே நொண்டி நாயைப் போல் உணர்கிறேன்.

இந்த ஏகாம்பரேஸ்வர் அக்ரகாரத்தில் எனக்காக அழப்போகிறவர்கள் இனி யாரும் இல்லை. இந்த அக்ரகாரமே களை இழந்துபோய்விட்டது. தெப்பக்குளம் வற்றிவிட்டது. பெயருக்கென்று கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் பிளாஸ்டிக் தாமரைகளை மிதக்கவிட்டிருக்கிறார்கள். தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த காவிப் பட்டை அடித்த சுவரை இடித்துவிட்டு மாடிக் கட்டிடம் கட்டி எவர்சில்வர் பாத்திரக் கடைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டார்கள். ராவண ஐயர் தெருவிலுள்ள பள்ளிக்கூட மணிக்கூண்டு இப்போது தெரிவதில்லை. கோவில் பிரகாரத் தூண்களில் மைக்குகளைப் பொருத்தி மெல்லிசை பஜனைகள் செய்கிறார்கள். அப்பழுக்கற்ற குஜராத்திகள் புழங்கிய தெருக்களில் இப்போது பாத்திரக் கடை மார்வாடிகள் நிரம்பி வழிகிறார்கள். அக்ரகாரத்தின் பழைய அமைப்பை நினைவுபடுத்தும் வகையில் கோயில் அரச மரம் மட்டும்தான் இருக்கிறது. இன்னும் நிழல் தருகிறது. அந்த நிழலை உணர்ந்து அனுபவிக்கும் மனிதர்கள் மறைந்து விட்டார்கள். அந்த அரச மரம் முன்பு தந்த ஆசுவாசம் இப்போது காணாமல் போய் விட்டது. கிழக்குக் கோடியில் என் தங்கை நாத்தி பெஹ்ன் இருக்கும் கட்டடத்தையும் விலை பேசிவிட்டார்கள் அறுபது லட்சத் துக்கு. இதனால், முப்பது குடும்பங்கள் தெருவில் நிற்கப்போகின்றன. கூடு கலைத்து விரட்டப்பட்ட பறவைகள்போல அவர்கள் பிரியக் காத்திருக்கிறார்கள். சூழல் மாறிவிடப் போகிறது. வாழ்க்கைக்கு அர்த்தமே சூழலில்தான் இருக்கிறது. சூழல் போனால் வாழ்க்கையே போய்விடும்.

நான் தினமும், கடவுளை அல்ல, யம ராஜனை வேண்டிக் கொள்கிறேன், 'இந்தக் கிழவனை இழுத்துக் கொள், உன் பாசக் கயிற்றுக்கு மோசம் வந்துவிடாது' என்று. கடைசியாக, இன்னொரு வேண்டுகோள். நான் இறந்துபோனால், என் ஆன்ம முக்திக்காக என் வீட்டில் அல்லது உங்கள் வீட்டில் என்றாலும் பரவாயில்லை, பாகவத பாராயணம் அவசியம் செய்துவிடுங்கள்.

மற்றபடி விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறொன்றும் இல்லை.

மகிழ்ச்சியும் சந்தோஷமும் பற்றிய சமாச் சாரத்தை எழுத வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

மன்மோகன் தாஸ் துவாரகா தாஸ்

(மிட்டு)

பி.கு: உங்களுக்கு வசதிப்படுமென்றால், ஒரு 100 ரூபாய் .ழு. மூலம் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்மிட்டு.'

தாள்களை ஒழுங்குபடுத்தி அந்த நீண்ட கடிதத்தை மடித்துக் கொண்டேன். வழக்கம் போல் மிட்டு மாமா தனது பூணூலில் தொங்கிய சின்னச் சாவியைக் கொண்டு தன் தகர கஜானாவைத் திறந்து ஒரு பெரிய உறையையும் தபால் தலைகளையும் கொடுத்தார். முகவரி எழுதி எடுத்துக் கொண்டதும் கூறினார் 'சோம்பல்பட்டுக் கடிதத்தைக் கண்ட தபால் பெட்டியில் போட்டுவிடாதே. நேராக பார்க் டவுன் போஸ்ட் ஆபீசுக்கே போய்விடு. போட்ட பின் எனக்கு வந்து சமாச்சாரமும் சொல்லிவிடு.' பிறகு 'இதை நீ வைத்துக் கொள்' என்று ஒரு 50 காசு நாணயத்தைக் கொடுத்தார். நான் கிளம்பினேன்.

மூன்று நான்கு நாட்கள் கழித்து இரவு எட்டு மணிக்குத் தந்தி மூலம் செய்தி வந்தது. நான் மிட்டு மாமாவுக்குத் தாக்கல் சொல்ல ஓடினேன்.

மிட்டு மாமா அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்தார். நான் அவரது தோளை உலுக்கி எழுப்பினேன்.

'என்னடா விஷயம்?'

'நாம் மோசம் போய்விட்டோம் மாமா.'

'என்ன ஆயிற்று?'

'உடுமலைப்பேட்டையிலிருந்து தந்தி வந்திருக்கிறது. கண்ஷியாம் மாமா போய் விட்டார்.'

மிட்டு மாமா பதறி எழுந்தார், 'என்ன சொல்கிறாய் நீ?'

'ஆமாம் மாமா, நிஜமாகத்தான். இன்று மதியம் ஆபீஸிலிருந்து வந்திருக்கிறார். எல்லோருடனும் நன்றாகச் சிரித்துப் பேசியபடி சாப்பிட்டிருக்கிறார். உங்கள் கடிதத்தைக்கூட இரண்டு மூன்று முறை படித்தாராம். சிறிது தூங்கப்போனவர் பிறகு எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது. ஹார்ட் அட்டாக்தான்.'

மிட்டு மாமா தன் கால்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நீண்ட மெளனத்திற்குப் பின் தத்துவார்த்தமாகக் கூறினார்: 'போகிறவர்கள் போய்ச்சேர்ந்து விடுவார்கள். ஆனால், இருக்கிறவர்களுக்கு வேறு வழி இல்லை. அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்.'

கண்ஷியாம் மாமாவின் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளப் போன எங்கள் உறவினர் கள் எல்லோரும் கூடவே மிட்டு மாமாவின் கடிதத்தையும் படித்துவிட்டு வந்திருந் தார்கள். கண்ஷியாம் மாமாவுக்குப் பதிலாக மிட்டு மாமாவே செத்துப்போயிருக்கலாம் என்று வெளிப்படையாகவே அபிப்பிரயாம் தெரிவித்தார்கள். மிட்டு மாமாவின் மகன்களுக்கும் மருமகள்களுக்கும் பெருத்த தலைகுனிவு ஏற்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, மிட்டு மாமாவின் மூத்த மருமகள் ஆவேசமாகக் கொந்தளித்தாள். கிழவனின் நாக்கை இழுத்து அறுத்துவிட வேண்டும் என்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கடிதத்தை எழுதிக்கொடுத்த என்னுடைய கைகளையும் வெட்டிப்போட வேண்டும் என்றும் விரும்பினாள் அவள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த மாதிரி விபரீதம் ஏதும் நடக்கவில்லை. எப்படியும், நான் மிட்டு மாமாவுக்குக் கடிதம் எழுதித் தருவதை நிறுத்தும்படி ஆனது.