ஆறாவது பாங்கு

எஸ்.நளீம 

ரவில் விழிப்பதாகவும் பகலில் தூங்குவதாகவும் ஊரே மாறிக்கிடந்தது. அந்த இரவின் அபாயத்தை ஆகாயத்தில் வரைந்துகாட்டி அந்திச் சூரியன் முக்காட்டை எடுத்து மூட அந்த எல்லைக் கிராமம் பீதியால் நடுங்கிற்று.

என்ன நடக்கப்போகிறதோ?

நிஸார் தூக்குக் கம்பிகளை கழட்டி, எஞ்சிய எலும்புகளையும் புதைத்து, மேசை நிலமெல்லாம் கழுவி முடித்து தட்டியை அடைத்து விட்டு நேரத்தை நினைத்து வானத்தைப் பார்த்தான் அவன் இறைச்சிக் கடை கழவி வடிய விட்டிருந்த இரத்தக்கறை வானத்திலும் பரவிக்கிடந்தது. ஆறரையைத் தாண்டியிருக்கும் என ஊகித்து அவசர அவசரமாகக் குளித்து முடித்தான்.

எத்தனை தடவை சோப் போட்டாலும் அகலாத இறைச்சி நெடியை அத்தர் பூசி மறைத்து போன பெருநாளுக்கு எடுத்த ''றொன்ஸன்'' சேட்டை உடுத்து அந்த மெல்லிய துணியால் வெளித் தெரிய ஆயிரம் ரூபாய்த் தாளை மடித்து பாக்கட்டில் வைத்தான். கண்ணாடியை எடுத்து முன்பாகவும் இரு பக்கமாகவும் பிடித்துப் பார்த்துக்கொண்டான். அவன் உடம்பெல்லாம் லைலா ஊர்ந்து கொண்டிருந்தாள். அண்மைக் காலமாக நிஸாருக்கு ஆமினாவின் மகள் லைலாமீது ஒரு கண்தான்.

நிஸார் ஒல்லி என்றாலும் தசைகள் முறுக்கேறி விறைத்த உடம்பு. பொது நிறம். ஆறடியை அண்மித்த உயரம். ஒரு கைக் குட்டையை மூலைவாட்டாக மடித்து தலையில் கட்டியிருப்பான்.

சரண் உடுத்து மடித்துக் கட்டினால் உள்ளே அணிந்த கட்டைக் கால்ச் சட்டையின் கால்கள் வெளியே தெரியும். ஒரு சிறு பிள்ளையையும் ''என்ன மச்சான்'' என்று பழகும் பண்பு.

ஊர் பயத்தால் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தாலும் நிஸாரின் கால்கள் லைலாவை நினைத்தே நடந்து கொண்டிருக்கின்றன.

வாழ்வே வெறுத்துவிட்ட சோகத்தில் நடைப்பிணங்களாக இரை தூக்கிச் செல்லும் எறும்புகள்போல் கிராமத்தின் ஓரத்தில் இருந்தவர்களெல்லாம் மூட்டை முடிச்சிகளோடு ஆமினாவின் வீடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.

ஆமினா தைரியமானவள். எந்த ஆண்களோடும் கூச்சமின்றிப் பேசுவாள். கணவர் கலந்தர் காக்கா அவளது பேச்சில் கட்டுண்ட நாயாய் வாலாட்டித் திரிவார். என்றாலும் கணவனுக்குத் துரோகம் நினைக்கமாட்டாள். ஆமினாவுக்கு மார்க்க ஈடுபாடு அதிகம். நோன்பு வந்து விட்டால் ''தராவீஹ்'' தொழுகை, ''தஸ்பீஹ்'' தொழுகை, பெருநாள் தொழுகை எல்லாம் அவள் வீட்டிலேதான். ஊரின் நடுவில் சந்தை,  பள்ளிவாயல், பாடசாலை என்பனவற்றுக்குச் செல்லும் வீதியில்தான் ஆமினாவின் வீடும் இருந்தது. ''அஸர்'' தொழுது ''ஸலாம்'' கொடுத்த கையோடு எதிர் வீட்டு சல்மாவோடு பேசுவது போல்தான் வீதிக்கு வருவாள். ''மஃரிப்'' ''பாங்கு'' சொல்லும் வரைக்கும் அந்த வீதியில் வருவோர் போவோரோடெல்லாம் பேசிப் பேசியே பொழுதைக் கழிப்பாள். இதனால் ஊரின் பிரச்சினை எல்லாம் ஆமினாவுக்குத் தெரிந்து விடுவதுபோல அவளது வீட்டுப் பிரச்சினைகளும் ஊருக்கே தெரிந்துவிடும்.

இது கலந்தர்க் காக்காவுக்குப் பிடிக்காதுதான் என்றாலும் அவர் கண்டு கொள்வதில்லை. இவளைத் திருத்த முடியாது என விட்டு விட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. என்றாலும் அவளது கள்ளம் கபடமற்ற பேச்சை மனதுக்குள் இரசிப்பார்.

ஆமினாவின் மூத்த மகள் லைலா உம்மாவுக்குத் தப்பாமலே பிறந்திருக்கிறாள். அவள் வயதை ஒத்த குமரிப் பிள்ளைகளையெல்லாம் வளைத்துப் போடும் வசீகரம் அவளுக்கு. விளையாடுவதில் அப்படியொரு அலாதிப் பிரியம். கண்ணுக்கு அருகே குண்டை வைத்து இலக்குக்கு எறிவதில் கெட்டிக்காரி. அவளோடு விளையாடவரும் ஆண் பிள்ளைகளையே தோற்கடித்து விடுவாள். தாவணி மடிப்பில் குண்டுகளை வைத்துச் செருகுவாள். அவள் இடுப்பைப் பார்க்கவே ஒரு கும்பல் நிற்கும்.

இவ்வாறு ஆமினாவோடும் அவளது குடும்பத்தோடும். அதிக அறிமுகம் இருந்ததனால்தானோ என்னவோ ''மௌத்தாவதானாலும் எல்லாரும் ஒண்டா இருந்து மௌத்தாகுவம்'' எனக் கூறி இரவானால் ஊரவர்கள் ஆமினாவின் வீடே கதியென்று கிடந்தனர். ஆமினாவுக்கு ஊரின் நிலைவரம் குறித்த கவலை இருந்தாலும் மனிதரோடு மனிதராக கூடி இருப்பதில்தான் அவளுக்குக் கொண்டாட்டம். அரிக்கன் சட்டியில் இஞ்சி உரைத்து தேநீரூற்றி அனைவருக்கும் பரிமாறுவாள். கலந்தர் காக்கா சற்று கிண்டலான பேர்வழி. தனது வீட்டுத் திண்ணையை நிறைத்துக் கிடந்தவர்களை சிரிக்க வைக்க நினைத்து ''பாருங்க நம்மட வாழ்கைய பகலைக்குப் பட்டினி ராவைக்குப் பொட்டணி'' என்றார்.

''
சும்மா இருங்க மனுசன் பர்ர பாட்டுக்கு உங்களுக்கு பகுடியும் வருகுதா? '' ஆமினா சிடு சிடுத்தாள். அங்கே குவிந்திருந்த பொட்டலங்களுக்குள்ளிருந்து மணிக் கூடொன்று பத்து மணியைப் பறைந்தது.

நேரம் சொல்லிவைத்துத் தொடங்கினாற்போல் தூரத்தே சில துப்பாக்கி வேட்டுக்கள் கூடவே சில கூக்குரல்களும். ஆமினா முற்றத்துக்கு ஓடி வந்தாள். கிழக்கு வானம் தீப்பிடித்து எரிந்தது. எங்கும் புகை மண்டலம். காதைக் கிழிக்கும் அழுகுரல்களோடே

''
அல்லாஹு  அக்பர் அல்லாஹு  அக்பர்''

ஐந்து நேரத் தொழுகைக்கான பாங்கையே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு ஆறாவது பாங்காய் அபாயத்தை அறிவிக்கும் பாங்கு அன்றுதான் அறிமுகமானது. அது இன்னும் அச்சத்தை ஊட்டிற்று.

வீதியால் ஒரு குரல் ''மாணிக்க ராசா சுட்டு வாரான் எல்லோரும் ஒடித் தப்புங்க'' கூவிக் கொண்டே அக்குரல் காற்றில் கரைந்தது. நிஸாரும் அவனது சகாக்களும் கத்தி கோடரியோடு ஊரின் எல்லையை நோக்கி ஓடினர்.

கண்ணுக்கு எட்டிய தொலைவில் மரணம் வந்துவிட்டதை உணர்ந்து ''யா அல்லாஹ் யா அல்லாஹ்…'' குரல்கள் கம்மின.

பாரூக் நானாவின் வீடு பத்துவதாகவும் மஹ்மூதுக் காக்காவை அடித்து நெருப்பில் வீசியதாகவும் செய்தி வந்தது. பெண்களையெல்லாம் ஆமினாவின் வீட்டுக்குள் அமர்த்தி ஆண்கள் கத்தி கோடரியோடு வீட்டைச் சுற்றிப் பாதுகாத்து நின்றனர்.

உச்சக்கட்ட சப்தங்கள் முடிந்தன. ஒருவாறாக துப்பாக்கி வேட்டுக்களும் அடங்கி கூக்குரல் குறைந்து கொண்டிருந்தது மாணிக்கராசாவும் அவனது சஹாக்களும் பின்வாங்கி ஓடிவிட்டதாக யாரோ ஒருவன் சொல்லிச் சென்றான்.

நிஸார் தனது சகாக்களுடன் கம்பீரமாய் வந்தான். தனது நீளக்கத்தியில் உறைந்திருந்த இரத்தத்தை ஆமினாவின் வீட்டுக் கிணற்றில் கழுவினான். மாணிக்கராசாவின் துப்பாக்கியை பறித்ததாகவும் அவனது சகாக்கள் ஐவரை வெட்டிக் கொன்றதாகவும் மாணிக்க ராசா அதிஷ்ட வசமாக தப்பித்து ஓடிவிட்டதாகவும் வீராவேசமாய் முழங்கினான்.

ஆமினாவின் தாயார் தனது பொக்கை வாயால் ''என்ட ராசா செரியான நேரத்துல நீ போகலண்டா காபீர்கள் ஊரையே அழித்திருப்பானுகள்''

அவனைப் புகழ்ந்து கரம்பிடித்து முத்தமிட்டாள். நிஸார் கர்வத்துடன் கையைத் துடைத்துக் கொண்டான். அங்கிருந்த குமரிப் பெண்கள் நிஸாரின் வீரம் பற்றி புகழ்ந்து பேசினர். அவனது காலில் பட்டிருந்த காயம் ஒன்றிற்கு அந்த இரவிலும் குப்பி விளக்கின் ஒளியில் கையாந் தவரை பிடுங்கி மருதோன்றி அணிந்த கைகள் மருந்து கட்டின.

நிஸாரைக் கண்டு கொள்ளாத லைலா முதன் முறையாக அவனைப் பார்த்து வெட்கப்பட்டாள் தலை குனிந்து கால் விரலால் வட்டம் வரைந்தாள். முந்தானையை சரிசெய்தவாறு கடைக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள். நிஸாரின் உடலில் இருந்த உரோமங்கள் கத்தியாய் குத்திக் கொண்டு நின்றன. நிஸார் சுதாகரித்துக்கொண்டான்.

விடிந்தது எரிந்த சாம்பலுக்குள் உடைந்த முன் பல்லை வைத்தே அப்பாவி மஹ்மூதுக் காக்காவின் உடல் இனம் காணப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அன்று ஊரே கண்ணீராகிக் கிடந்தது.

என்றாலும் நிஸாரின் பெருமை ஊரெல்லாம் பரவிட்டு. நிஸாரின் வீரதீரச் செயலை ஊரே மெச்சின. குமரிப் பெண்கள் நிஸாரை மணமுடிக்க ஏங்கினர். பலரின் தொழுகைக்குப் பிந்திய பிரார்த்தனையில் நிஸார் இருந்தான். நிஸார் ஊரின் பாதுகாவலனாகவும் தலைவனாகவும் மதிக்கப் பட்டான்.

பலரும் வாயில் விரல்வைத்து வியக்க நிஸார் தொடர்ந்தும் தனது நீளக் கத்தியை ஆமினாவின் கிணற்று நீரில் கழுவிச் செல்லச் செல்ல ஊரிலிருந்த மாடாடுகளும் குறைந்து கொண்டு சென்றதை அங்கே யாரும் கண்டு கொள்ளவேயில்லை.


naleemart@gmail.com