திமிர்ந்த ஞானச் செருக்கு

அறச்செல்வி , கோவை


(நீலவிழிகள் காலாண்டிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதலாம் பரிசு பெற்ற சிறுகதை.)

"நாடகம் இன்னும் சற்று நேரத்தில் அரங்கேறும் என்றார்கள். நாடகத்தை எழுதி இயக்குபவன் பல்கலைக்கழகம் ஒன்றின் புகழ்ப்பெற்ற பேராசிரியரான தனசேகரன். அந்தக் கலை இலக்கிய விழாவில் நடத்தப்படும் இந்த நாடகத்திற்குப் பார்வையாளர்களாக வியங்கியவர்கள் முற்போக்குக் கலை இலக்கிய வாதிகள்.அவர்களில் ஒருவராக அவள் அமர்ந்திருப்பது கண்டு  தனசேகரன் திடுக்கிட்டான்.  

கல்லூரி மாணவியாக இருந்தவள் இன்று முனைவர் பட்டம் பெற்ற கல்லூரிப்பேராசிரியராக இந்த நாடக கலை இலைக்கிய விழாவிற்கு வந்திருக்கிறாள்.இவள்

இப்படிப் படித்து முன்னேறுவாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. 

அவனுக்கு வேலை கிடைத்து முதன்முதலாய்ப் பணியாற்றிய ஊர் அவளது ஊர். அவன் பணியாற்றிய பல்கலைக்கழகத்திற்கு அருகில்தான் அவள் படித்த கல்லூரி இருந்தது. அப்போது அவள் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். 

ஒரு முறை அவன் அவள் படித்த கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினனாகக் கலந்து கொண்டு புரட்சிகரமான கருத்துகளை முன்வைத்திருந்தான் இரண்டு நாள் கழித்து இரு கடிதம் வந்திருந்தது. ஒன்று அவளிடம் இருந்து. இன்னொன்று அவளது தோழியிடம் இருந்து. நேரம் வாய்ப்பின் இருவரையும் பல்கலைக்கழகம் வரச்சொல்லிக் கடிதம் இட்டான். இரண்டு பெண்களும் இரண்டுநாள் கழித்துவந்தார்கள். அவள் பெயர் கலைவள்ளி. தோழி பெயர் அகல்யா. 

"என் உரை உங்க இரண்டு பேரையும் சிந்திக்க வச்சிருக்குன்னு உங்க கடிதம் மூலம் தெரிஞ்சுட்டேன். இன்னும் நீங்க நிறைய வாசிக்கணும் சிந்திக்கணும் 

பேசிய ஒரு மணிநேரத்தில் அகல்யா புரட்சிகரமாகப் பேசுவதையும் கலைவள்ளி மரபுரீதியாகப் பேசுவதையும் எடைபோட்டான். தனசேகரன் இருவருக்கும் படிக்க நூல்கள் தந்தான். 

"அகல்யா மார்க்ஸ் ஏங்கல்ஸ் பற்றி எல்லாம் தெரிந்து வச்சிருக்கா. நீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாதேவி வள்ளலார்ன்னு பேசிட்டு இருக்கே உன்னை மாற்றணும். நான் தந்த புத்தகங்களை அவசியம் வாசி என்றான் கலைவள்ளியிடம்.  அவளும் படித்துவிட்டு ஒருவாரம் கழித்துவந்தாள் 

'உன் தோழி வரல 

"அவ லீவ் நான் புக்ஸ திருப்பிக்கொடுக்கவந்தேன்…” 

ஓகே புக் படிச்சியா? காரல்மார்க்ஸ் தம்பதிகள் பத்தி என்ன நினைக்கிறே 

"மார்க்ஸின் வரலாறு என்னை வியக்கவச்சது மார்க்சியம் கத்துக்கும் ஆசைவந்திருக்கு 

"ஜென்னி வாழ்வு பிடிச்சிருக்கா.” 

"ஐயோ எவ்வளவு இன்னல்கள். மார்க்ஸ்க்கு எப்படி எல்லாம் ஆதரவா இருந்திருக்காங்க 

"நீயும் எனக்கு அப்படி உறுதுணையா இருப்பியா?” 

அவனின் அந்தக்கேள்விக்குத் திக்குமுக்காடிப்போனாள் கலைவள்ளி 

ஒருபுறம் அவன் பல்கலைக்கழகப்பேராசிரியன் இன்னொருபுறம் நாடறிந்த கலை இலக்கியவாதி இத்தகையவன் என்னை மணக்க விரும்புகிறானே என்று பதில் சொல்லமுடியாமல் தவித்தாள் 

"நான் ஏழைபெண்.  என் அக்காவிற்கு இன்னும் கல்யாணம் ஆகல வரதட்சிணைப்பிரச்சினை அவளுக்குக் கல்யாணம் ஆகாம நான் எப்படி உங்களைக் கலயாணம் பண்ணமுடியும்? 

"இவள் நம்மை எளிதில் நம்புகிறாள். இவளை மயக்குவது எளிது இரண்டொரு மாதத்தில் மாற்றல் வந்துவிடும் அதுவரைக்கும் இவளைப் பயன்படுத்திவிட்டுப் போனால் யாருக்குத் தெரியும்?. இவள்தான் எதிர்த்துப்போராடப்போறாளா? 

தனசேகரன் இதமாகப்பேச்சுக்கொடுத்தான். 

"உன் அக்காவிற்குத் திருமணம் ஆகட்டும் அதுவரை காத்திருப்பேன் அதற்குள் நீ மாறணும் 

"நான் மாறணுமா?” 

"ஆமாம். நாம்ப புரட்சிகர தம்பதிகளா வாழணும் இல்லையா?…. அதற்காக நீ உன்னை மாத்திக்கணும் 

"……………” 

என்ன புரியலியா? எனக்கு  ஊரை அழைக்கறது, கெட்டி மேளம் கொட்டறது? தாலிகட்டறது எதிலும் நம்பிக்கை இல்லை. நாம்ப மனம் ஒத்து சேர்ந்து வாழலாம். இது ஊருக்குத் தெரியனுங்கற அவசியம் இல்ல. 

அவள் என்ன நினைத்தாளோ யோசித்தாளோ தெரியவில்லை.அவகாசம் வேண்டும் என்று கிளம்பியவள் அந்தக்கடிதத்தில் இப்படி எழுதியிருந்தாள். 

என் அக்காவிற்குக் கல்யாணம் ஆகும்வரை காத்திருப்பேன். ஆனதும் முறைப்படிவந்து என் அம்மா அப்பாகிட்ட பேசுங்க. தாலிகட்டாவிட்டாலும் பரவாயில்லை.  நம் இருவீட்டார் முன்னிலையில் என்னை மனைவின்னு ஏத்துக்கங்க. உங்களுக்குச் சகலமும் துணையிருப்பேன் 

பழமைவாதியாக இருந்தாலும் கராராகத்தான் இருக்கிறாள். இவள் விரும்பிவந்தால் அனுபவிப்பது இல்லாட்டிப்போகிறது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டான் 

முப்பதிரண்டு வயாதாகிறது. எம்ஏ படிக்கும்போது படிக்காத அத்தைமகளை மணப்பதாக ஆசைவார்த்தைக்காட்டி மோசடி செய்த உண்மையும் இருக்கிறது அப்புறம் இரண்டு மூன்று தோழியர்களோடு நெருங்கி உறவாடினான்.…தன் சாதுயர்த்தால் கழற்றிவிட்டுவிட்டான் இவர்கள்யாரும் தன்னோடு வாழ்வு கேட்டு நியாயம் கேட்டுப் போராடவில்லை. அத்தைமகள் போராடிப்பார்த்தாள். இவள் யாரிடம்சென்று கெட்டுப்போனாளோ யாருக்குத்தெரியும் என்று கைவிரித்துவிட்டான். 

கலைவள்ளி கடிதம்போட்டதோடு சரி பல்கலைக்கழகம் பக்கம்வரவில்லை. அவன் பணியிடம் மாற்றலாகிச்சென்றபிறகு அவள் மனநிலையை அறிய கடிதம் போட்டிருந்தான் 

"நான் படிப்பை நிறுத்திவிட்டேன். உங்களுக்கேற்ற புரட்சிப்பெண்ணா மாறிட்டு இருக்கேன் நீங்க சொல்வீர்களே முற்போக்கு மகளிர் சங்கம்னு அதில் சேர்ந்துட்டேன். சமூக அநீதிகள எதிர்த்துத் தெருவில் இறங்கிப்போராடறேன். இதை அறிந்து தாங்கள் மகிழ்வீர்கள் என நம்புகிறேன். 

அவளது அக்காவிற்குத் திருமணம் கைகூடி நின்றுபோன செய்தியை இன்னொரு கடிதத்தில் எழுதியிருந்தாள் 

"எனக்காக காத்திருக்கவேண்டாம். உங்கள் வீட்டில் பார்க்கும் பெண்ணை மணந்துக்கங்க. நான் இப்படிப் போராளியா வாழ்ந்துட்டுப்போறேன். ” 

தனசேகரன் தனக்கு ஏற்ற படித்த பெண்ணை ஊர் அறிய மணந்துகொண்டபின்னும் அவளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான் 

"நான் உனது ஊர் பக்கத்தில் நாடகம்போட வர்றேன் …. நீ அவசியம் வரணும். எனக்குத்தோள் கொடுக்கணும்.  உனக்காக காத்திருப்பேன் 

அந்தக்கடிதத்திற்கு அவளிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. அவள் விசியத்தில் அவன் திட்டம் பழிக்கவில்லை. இன்று ஒரு கல்லூரிப்பேராசிரியராக வந்து இந்த நாடகத்தைப் பார்க்கிறாள். 

"புராண அருச்சுனன் செல்லும் இடம் எல்லாம் ஒரு பெண்ணை மணந்தானாம் அப்படி நடைமுறையிலும் பெண்களை வஞ்சிக்கும் கயவர்கள் இருக்கிறார்கள். இத்தகையோரைப் பெண்கள் அடையாளம் கண்டுபிடித்து விளக்குமாற்றில் அடிப்பதுதான் கதை 

நாடகத்தைப் பார்வையாளர்களாய் இருந்த முற்போக்குக் கலை இலக்கியவாதிகள் யாவரும் பெண்ணிய நாடகம் என்று போற்றிப்புகழ்ந்தார்கள். எல்லோரும் பாராட்டியபிறகு கலைந்து சென்றபிறகு கலைவைள்ளி அவன் அருகே வந்தாள். 

"நான் ஒரு நிமிடம் உன்னிடம் பேசணும் 

அவள் ஒருமையில் அழைக்க அவன் அதிர்ந்தான். 

"நாடகம் என்னவோ நல்ல நாடகம்தான் நீ உத்தமனா வெளியுலகில் நடித்துக்கொண்டு யார் யாரையோ அர்ச்சுனன்னு சொல்றபாரு. அதுதான் பெரும் காமடி உன்னைப்பற்றி ஊருக்குத் தெரியாதுன்னு நீ நினைச்சுட்டு இருக்க.  உன்னால பாதிக்கப்பட்ட பொணணுங்க நியாயம் கேட்கமுடியாம யார்யார்கிட்டயோ சொல்லி அழுதுட்டு இருக்காங்க.. உன்னால வஞ்சிக்கப்பட்ட சுபா என்னிடம் சொல்லி அழுதிருக்கா. …ஒருவிதத்தில நீ கூட அர்ச்சுனன்தான். நீ  போய் அர்ச்சுனன் மோசம்னு நாடகம் போடற உன்னால பாதிக்கப்பட்ட பொண்ணுங்க  உன்ன விளக்குமாத்துல அடிச்சமாதிரிதான் எனக்குத்தோணுச்சு அத சொல்லத்தான் உன்கிட்டபேச வந்தேன் 

அவளது கையில்பாரதியின் கவிதை நூல் அக்னிக்குஞ்சென அவள் வார்த்தைகள் அவனைச்சுட்டன. அவளது நடையில் திமிர்ந்த ஞானச் செருக்குத் தெரிந்தது.. 

நாடறிந்த முற்போக்குக் கலை இலக்கியவாதி என்று புகழ் ஓங்கியிருக்கும் நேரம் இது. இந்த அவமானத்துடன் அவன் மேடையை நோக்கினான். மேடை இருள்மண்டிக்கிடந்தது.



                                            
அறச்செல்வி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்