சண்பகப்பூ

தி.ஜானகிராமன்

 

குடியிருக்கிற கிழவர் தந்தியை வாசித்துச் சொல்லிவிட்டு

வெலவெலவென்று துவண்டு உட்கார்ந்துவிட்டார்.

 

கோசலையம்மாள், விழுந்த இடியை விழவேண்டிய இடத்தில்

தள்ளுவதற்காகக் கிணற்றங்கரைப் பக்கம் ஓடினாள். அங்கே

அந்தப் பெண் குளித்துக் கொண்டிருந்தது. நெருப்புக்கு வடிவு

கொடுத்தாற்போல் இருந்த உடலின் தகதகப்பின் மீது

ஒட்டியும் ஒட்டாமலும் செம்பினின்றும் ஒழுகிய நீர் வழிந்து

ஓடிற்று. பந்தாகச் சுருட்டிப் பின்னந்தலையில்

செருகப்பட்டிருந்த பின்னலின் வெல்வெட்டுச் சிவப்பு ரிப்பன்

எழுந்து வளைந்து தொங்கிற்று.

 

குஞ்சலமே, மஞ்சளை அப்பிக்கிண்டு முழுகறையே, மகமாயி

மாதிரி! கரியைப் பூசிப்பிட்டுப் போய்விட்டானேடி பாவி!

முடிச்சை முழுங்கிப்பிட்டுப் போயிட்டானேடி பாவி, பாவி!”

 

பெற்ற வயிற்றிலிருந்து பீறின அலறல் தொண்டைக் கட்டியை

அறுத்து எழுந்தது.

 

அம்மா , அம்மா !”

 

கூடத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த கிழவர்,

ரத்தப்பூவடி அது, ரத்தப் பூ. சண்பகப் பூ மூந்தால் மூக்கில்

ரத்தம் கொட்டும். அதான் மண்ணாய்ப் போயிட்டான்.” என்று

மனைவியைப் பார்த்துச் சொன்னார். இந்த வார்த்தையைச்

சொன்ன பிறகுதான், பிரமிப்பில் ஏறிநின்ற சோகத்தின்

அதிர்ச்சி கண்ணீராகக் கரைந்தது. விசிக்க ஆரம்பித்து, வாயை

மூடமுடியாமல், விட்டுக் கதறினார்

 

ஈரம் சொட்டச் சொட்ட, பெண்ணைக் கூடத்திற்கு

அழைத்துவந்தார்கள். அடுத்த வீடுகள் அமங்கலியும்

சுமங்கலியுமாகத் திரண்டுவிட்டன. பெண்ணை நடுவில்

போட்டுச் சுற்றி உட்கார்ந்து விட்டார்கள்.

 

கிழவர் தலைதூக்கிப் பார்த்தார். பெண்ணின் பின்னல்

அவிழ்த்து அலங்கோலமாகக் கண்ணையும் மூக்கையும்

மறைத்து விழுந்திருந்தது. அதிர்ந்தவர்களும் அநுபவஸ்களும்

கலந்து எழுப்பிய குரல்களுக்கும் ஆலிங்கனங்களுக்கும்

நடுவில் பெண்ணின் குரலும் முகமும் புதைந்து

போயிருந்தன.

 

சம்பகப் பூவோடி , நீ

கம்முன்னு மணத்தை யோடி,

மூந்து பாக்கிறேன்னு மூக்கிலே வச்சு

மண்ணில் புதைந்தானே, உன்னை

மண்ணில் புதைச்சானே….’

 

என்று கிழவரின் மனைவி, அதிர்ச்சி நிலையைக்கடந்து

சம்பிரதாயத்துடன் அழுதாள்.

 

கிழவர் மெதுவாக வாசல் திண்ணைக்குப் போய்ச்

சாய்ந்துவிட்டார்.

 

அரைமணிக்கு முன்னால்தானே அது பதினைந்தாம் புலி

ஆடிக்கொண்டிருந்தது! “தாத்தாவை (புலியை)க்

கட்டிவிட்டேன்! கட்டிவிட்டேன்!” என்று கிடந்து கூத்தாடிற்றே!

 

அரை மணிகூட ஆகவில்லையே! அதற்குள் இந்த விபரீதமா!

பதினெட்டு வயசு முடியவில்லை. குங்குக் கிழவிகள் கட்டிப்

புலம்பல் ஆகிவிட்டதே! பச்சைப் பெண்.

 

பெண்ணா அது! மண்ணில் பிறந்த பெண்ணும் ஆணும்

முயங்கி வடித்த மனுஷப் படைப்பா அது?

 

கிழவர் வெகுநாளாக இந்தக் கேள்வியைக் கேட்டுக்

கொண்டது உண்டு. பதில் என்ன சொல்லிக் கொண்டோம்

என்று அவர் நினைத்துப் பார்த்தார். குழப்பந்தான் மிஞ்சிற்று.

 

இந்த இனிமைப் புதையலை எடுத்த தாயும் தந்தையும்

விண்ணவள் மேனகையும் மன்னவன் விசுவாமித்திரனுமா?

 

அதெல்லாம் ஒன்றுமில்லை. கோசலையம்மாள் எல்லாக்

குடும்பத்திலும் காணுகிற நடுத்தர ஸ்திரீதான். பங்கரையாக

இருக்கமாட்டாள்; சப்பை மூக்கில்லை; சோழி முழியில்லை;

நவக்கிரகப் பல்லில்லை; புஸு புஸுவென்று ஜாடி

இடுப்பில்லை; தட்டு மூஞ்சி இல்லை; எண்ணை வழியும்

மூஞ்சியில்லை; அவ்வளவுதான். அவலட்சணம் கிடையாது.

அழகு என்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. மாநிறம்.

 

அவள் புருஷன் ராமையா இருந்தாரே, அவரும் அப்படித்தான்.

குட்டையில்லை; கரளையில்லை; இரட்டை மண்டையோ,

பேரிக்காய் மண்டையோ இல்லை; கோட்டுக் கண்ணோ, ரத்த

முழியோ இல்லை; இவ்வளவெல்லாம் எதற்கு? ஓகோ என்று

மாய்ந்து போகும்படியான அழகன் இல்லை. சற்று நின்று

பார்க்கத் தேவையில்லாத எத்தனையோ ஆண்களில் ஒருவர்.

 

அவர்களுக்குத்தான் இந்தப் பெண் பிறந்திருந்தது.

 

தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்து

விளக்கைப் போல , படைப்பின் எட்டாத மாற்றத்தைக் கண்டு

வியந்து கொள்ளும் கிழம். காவியத்தில் அழகுக்கு

பஞ்சமில்லை. ரம்பையும் அபரஞ்சியும் மலிந்து கிடக்கிற

அந்தக் கும்பலில் சாமனியர்களே தென்படுவதில்லை.

 

சாமுத்திரிகைச் சின்னங்களை அறுபத்தி நான்காகக் கூட

விரிக்க முற்பட்டுவிட்டார்கள் போல் இருக்கிறது காவ்ய

நாயகிகள். ஆனால் மன்னார்குடி ஒற்றைத் தெருவில், ஒரு

தாழ்ந்த வீட்டில், சாமான்யக் கோசலைக்கும் சாமான்ய

ராமையாவுக்கும் ஒரு புதையல்! – கிழவர் ஆச்சரியப்பட்டதில்

வியப்பில்லை.

 

தெம்புள்ள வீடுகளில் ஊட்டம் உண்டு. நடுத்தரங்கூட

ஊட்டத்தில் பொழிவும் மெருகும் பெற்று எடுப்பாக நிற்கிறது.

 

இங்கே அதுவும் இல்லை. ராமையா பள்ளிக்கூட வாத்தியார்.

அரைப்பட்டினி ஆரம்ப வாத்தியாராயில்லாமல் , எல்.டி.

வாத்தியாராயிருந்தாலும் பத்தாம் தேதிக்குப் பிறகு கடன்

இல்லாமல் வாழ்ந்ததில்லை. செத்தும் போய்விட்டார்.

 

வைத்துவிட்டுப் போனது குழம்பு ரசத்திற்குக் காணும்.

இருந்தும், பெண்ஜட்சு வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறதே!’

என்று கிழவரின் மனைவி திகைப்பாள்.

 

கிழவருக்கு வேலை ஒன்றும் இல்லை. பிள்ளைகள்

சம்பாதித்துப் பணம் அனுப்புகிறார்கள். இங்கிலீஷ் நாவல்,

ராமாயணம், கீதை, குறள், வடுவூர் என்று அறிவை அவியல்

உருவில் சேர்த்துக்கொண்டும் வெற்றிலையும் பொடியும்

போட்டுக் கொண்டும் வேடிக்கைப் பேச்சிலும்

எண்ணங்களிலும் காலம் கழிகிறது. கூட புதையலைக் கண்டு

வியப்பது அவருக்கு முக்கியமான வேலை. பலனை நோக்கிச்

செய்யாத நித்தியக் கடமைபோல அவருக்கு ஆச்சரியப்படுவது

தினசரி கடமை. மனத்திற்கு வேலை வேண்டுமே.

 

மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப்போல

வெண்ணையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில்

மிதந்த கரு விழியையும் வயசான துணிச்சலுடன் கண்ணாரப்

பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தார். ‘அது என்ன பெண்ணா?

 

முகம் நிறையக் கண்; கண் நிறைய விழி; விழி நிறைய

மர்மங்கள்! உடல் நிறைய இளமை; இளமை நிறையக்

கூச்சம்; கூச்சம் நிறைய இளமுறுவல் நெளிவு; நெளிவு

நிறைய இது பெண்ணா? மனிதனாகப் பிறந்த ஒருவன்

தன்னது என்று அநுபவிக்கப் போகிற பொருளா?’

 

கிழவருக்கு இந்த எண்ணம் தான் சகிக்க முடியவில்லை.

 

லட்ஷ ரூபாய் லாட்டரி விழுந்த செய்தி கேட்டானாம்

தோட்டி. ‘ஹா!’ என்று மாரடைத்துக் கீழேவிழுந்து

செத்தானாம். இந்த முழுமையைத் தனது என்று

சொல்லிக்கொள்ளக் கொடுத்து வைத்தவன் இருக்கிறானா?

 

அப்படிதான் புருஷன் என்று சொல்லிக்கொண்டு

வருகிறவனுக்கு இதைத் தொட்டு ஆள மனசு வருமா?

 

தொட்டுவிட்டால்…?

 

கல்யாணம் செய்யத்தான் போகிறார்கள். ரோஜாப்பூவை

அரைத்து குல்கந்து தின்கிற நாசகார உலகத்தில் ஒருவன்

இவளை வந்து தொட்டு ஆண்டு, தாயாக்கி, பாட்டியாக்கி

எல்லோரையும் போல மனுஷியாக்கத்தான் போகிறான். தேயா

இளமையும் தெவிட்டாக் கேளியும் கந்தர்வலோகத்தில்தான்.

 

கிழவருக்கு வருத்தந்தான். அந்தப் பெண், உலகம் தவறிப்

பிறந்துவிட்டதே என்று,

 

கடைசியில் அதற்கும் கல்யாணம் ஆகத்தான் ஆயிற்று. பெண்

பார்க்க வந்தான் பையன், கூடத் தாயும் தகப்பனும்

தமையனும் வந்தார்கள். ‘தேவலை என்று தாயாரிடம்

அடக்கமாகச் சொல்லி முகத்தில் நிறம்பி வழிந்த ஆவலைத்

தேக்கிக்கொண்டான் பையன். ‘ஒரு பிடி குட்டையாக

இருக்கலாம், பரவாயில்லை என்று வழக்கத்தையும் மீறாமல்

நொட்டைச் சொல் சொல்லிச் சம்பந்தியம்மாள் தன்மையைக்

காட்டிக்கொண்டாள் தாயார். தகப்பனார், தாயார் பேச்சை

ரசிக்காமல், அதற்காகக் கோபித்தும் கொள்ளாமல்

முகூர்த்தத்திற்கு நாள் பார்க்கச் சொன்னார். தமையன்

கல்யாணமானவன் தம்பியைக்கண்டு

பொறாமைப்படாதவாறு மனசைக் கடித்துகொண்டான்.

 

இரட்டை நாடியாயிருந்த பெண்டாட்டி, கெட்டிக்காரி;

இங்கிதம் தெரிந்தவள் என்ற ஆறுதலில் குறையை அமுக்கிச்

சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டான்.

 

கிழவர் ஓடுகிற பாம்புக்குக் கால் எண்ணுகிறவர். இந்த

விசித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்தார். அதானே அவருக்கு

வேலை. பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொண்டார்கள்.

 

பந்தற்கால் முகூர்த்தம் செய்தார்கள். காவிப்பட்டை

அடித்தார்கள். மேளம் கொட்டிக் தாலி கட்டியாகிவிட்டது.

 

பையன் சுமார்தான்! ஒல்லி, ஒடிந்துவிழும் உடல்; கூனல்;

சராசரிக்குக் குறைந்த புஷ்டி. நீள வகை, கால், மூஞ்சி, விரல்,

மூக்கு எல்லாம் நீளம்.

 

சதைப் பற்று இல்லாதது, நீளத்தை இன்னும் நீட்டிக்

காட்டிற்று. பாங்கில் குமாஸ்தா வேலையாம் அவனுக்கு.

 

பொருத்தம் சுமார்தான். எப்படி இருந்தால் என்ன?

அதிஷ்டக்காரன்! கிழம் வயிற்றெரிச்சல் பட்டது. ‘தன்னது

என்று சொல்லிக்கொள்ளக் கொடுத்து வைத்தவன்

இருக்கிறானா? இருக்கிறானே! கையைப் பிடித்துத்

தனதாக்கிக்கொண்டு விட்டானே!”

 

பெண் புக்ககம் கிளம்பிற்று. கிழவரின் திருட்டுத்தனத்திற்கும்

சாமார்த்தியத்திற்கும் ஈடு கொடுத்துக்கொண்டு பதினைந்தாம்

புலியும் சதுரங்கமும் ஆட இனி ஆள் கிடையாது. கிழவருக்கு

வலது கை ஒடிந்துவிட்டது.

 

இதைப் பாரு, அவருக்கும் பதினைந்தாம் புலி கற்றுக்

கொடுக்கிறேன்னு சொல்லு. உங்கிட்டக் கத்துக்கச் சங்கோசப்

பட்டார்னா எனக்கு ஒரு கார்டு எழுது. நான் வந்து நாலுநாள்

இருந்து சொல்லித்தரேன். காசு, பணம் வேண்டாம்மா. உன்

கையாலே அந்த நாலு நாளைக்கு ரவா சொஜ்ஜியும்

வாழைக்காய்ப் பஜ்ஜியும் உருண்டைக் கொட்டைக் காப்பியும்

போட்டுக்கொடு, போதும் என்று தெரிவித்துக்கொண்டார்

கிழவர்.

 

இப்பவே வாங்கோ தாத்தா என்று தழதழப்புடன் வேடிக்கை

பண்ணிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டது பெண்.

 

கிழவர் இந்த வாழ்க்கை ரெயில் சிநேகத்தை நினைத்து

வேதனைப்பட்டுக்கொண்டே கலகலப்பை நாடிக் கடைத்

தெருப் பந்தலடியைப் பார்க்க நடந்தார்.

 

இதெல்லாம் நடந்து ஒரு வருஷந்தான் ஆகியிருக்கும்,

 

நடுவில் இரண்டு முறை பெண் வந்துவிட்டுப்போயிற்று. அது

வந்தபோதெல்லாம் தவிட்டுப் பீப்பாயில் கிடந்த பனைந்தாம்

புலிப் பலகையை எடுத்து ஈரத்துணியால் துடைத்து

சாக்கட்டிக்கோடு கிழித்துத் தயார் செய்துவிடுவார் கிழவர்.

 

காலைக் காப்பியைச் சாப்பிட்டுவிட்டு இரண்டு பேரும் ஆட

உட்காருவார்கள். நாலு ஆட்டமாவது புலியைக் கட்டினால்

தான் அவளுக்கு எழுந்திருக்கக் கால் வரும். பத்து மணிக்குப்

பின்னலைத் தூக்கிச் சுருட்டிப் பின்னந்தலையில்

செருகிக்கொண்டு சோப்புப் பெட்டியும் துண்டுமாகக்

கிணற்றடிக்குப் போவாள். சாப்பாடு ஆனதும் ஒரு பத்து

ஆட்டம். இரண்டு பேரையும் கிளப்ப எங்காவது பட்டணம்

கொள்ளை போனால்தான் உண்டு. இது பத்து பதினைந்து

நாளைக்கு சிரிப்பும் கூத்துமா நாடகம் ஆடிவிட்டுக்

கடைசியில் கிழவரைப் பறக்கவிட்டுவிட்டுச் சென்றுவிடுவாள்

அவள். பந்தலடியில் நாலுநாள் வாசம் செய்யும் கிழம்.

 

இப்போது மூன்றாந் தடவையாகப் புக்ககம் வந்திருக்கிறது

பெண். வந்து நாலு நாள் ஆயிற்று.

 

அரை மணிக்கு முன்னால் அவரோடுகர்வம் கட்டிக்கொண்டு

பதினைந்தாம் புலி ஆடிக்கொண்டிருந்தது. ஆட்டம் முடிந்து

அது குளிக்கப்போனதும் அவர் சாப்பிட்டுக் கையலம்பிவிட்டு

வெற்றிலைப் போட்டுக்கொண்டு, ‘அப்பாடா என்று துண்டை

விரித்தார். இரண்டு நிமிஷம் ஆகியிராது, வந்துவிட்டான்

சிகப்புச் சைக்கிள்காரன். தலையில் ஓங்கி அடித்துவிட்டுப்

போய்விட்டான்.

 

அடுத்த வண்டியில் ஏறிப் பட்டணத்திற்குப் போனார்கள்.

தாயும் பெண்ணும் சவத்தைப்பார்க்க. யாரோ அடுத்த

தெருவில் இருந்து சொந்தக்காரர் அழைத்துப் போனார்.

 

கிழம் அழுதது. “இது ஏன் பிறந்தது? இவ்வளவு அழகாக ஏன்

பிறந்தது? எதற்காக இத்தனை அழகு? நாசமாய்ப் போகவா?

கல்யாணம் ஏன் செய்து கொண்டது? சந்தியில் நிற்கவா?

 

புருஷனை முழுங்கிவிட்டது என்று தோசிப்பட்டம்

கட்டிக்கொள்ளவா?” என்று கேள்விக்குமேல் கேள்வியாகக்

கேட்டுக்கொண்டது.

 

எனக்கு அப்பொழுதே தெரியும், சண்பகப்பூவை மூந்து

பார்த்தால் மூக்கில் ரத்தம் கொட்டும். வாசனையா அது? நெடி.

அதை யார் தாங்க முடியும்? சாதாரணமாயிருந்தால் சரி,

மோகினியைக் கட்டிக்கொண்டால் கபால மோட்சம்தான்.

தொலைந்தான் என்று பதிலும் சொல்லிக்கொண்டது.

 

மனைவியைக் கூப்பிட்டுச் சொல்லிற்று, “என்னடி, மனுஷ்யப்

பிறவியாய் இருந்தால் மனுஷனுக்கு மாலை போட்டுச்

சந்தோசமா வாழலாம். இதுதான் அக்னி மாதிரி இருக்கே,

தகதகன்னு. இப்படி ஒண்ணைச் சிருஷ்டிச்சிப்பிட்டு,

மனுஷக்காக்காய் கொத்திண்டு போறதைப் பார்த்துண்டு

பேசாமல் இருக்குமா தெய்வம்?”

 

பின்னே பிறந்து தொலைப்பானேன்?”

 

நம்மையெல்லாம் அசடா அடிக்க வாண்டாமா? தெய்வத்துக்கு

அதைவிட வேலை கிழிக்கிறதோ?”

 

என்னமோ, மலையிலிருந்து உருட்டறாப்போல

உருட்டிப்பிட்டு நிக்கிறது அகமுடையானை, துடைகாலி என்று

கிழவி சொன்னாள்.

 

நான் சொல்றதுதாண்டி தத்துவம்.”

 

அப்படியே இருக்கட்டும் என்று அலுத்துக்கொண்டாள் கிழவி.

 

*

 

மறுநாளைக்கு மறுநாள் பெண்ணும் தாயும் திரும்பி

வந்தார்கள். பையனுக்கு ஒருநாள் ஜுரம் அடித்ததாம்,

பிரக்ஞை இழந்து கிடந்தானாம், மறுநாள் காலையில்

முடிந்துவிட்டதாம். பெண்ணை வாத்தியாரம்மா வேலைக்கு

வாசிக்க வைக்கலாமா என்று கோசலையம்மாள் யோசித்துக்

கொண்டிருந்தாள். மாப்பிள்ளையின் தமையன் ஏற்பாடு

செய்வதாகச் சொல்லியிருக்கிறானாம்.

 

*

 

ஏழாம் நாள் காலையில் பத்து மணி இருக்கும், கிழவர்

எங்கேயோ வெளியில் போய்விட்டுக் கால் அலம்புவதற்காகக்

கிணற்றங்கரைக்குப் போனார்.

 

அந்தப் பெண் தலையை இழையச் சீவிப் பிடியில் அடங்கா

பின்னலைப் பின்னந்தலையில் எடுத்துச் செருகிச் சிவப்பு

வெல்வெட் ரிப்பன் வளைந்து தொங்க, மூஞ்சியில் சந்தன

சோப்பைத் தேய்த்துக் குளித்துக்கொண்டிருந்தது. கல்

மோதிரம் பூரித்த இடது கை ஆள்காட்டியும் கட்டைவிரலும்

கண் கரிச்சலை வழித்துக்கொண்டிருந்தன.

 

கிழவருக்குத்திக்கென்றது. தலை நிமிராமல் காலை

அலம்பிவிட்டு உள்ளே வந்தார். நெஞ்சு அடித்துக்கொண்டது.

சாப்பாடு கொள்ளவில்லை. சாதத்தைப் பிசைந்து கொண்டு

கிழவியிடம் சொன்னார் மெதுவாக; “துக்கம் பாராட்டக்கூட

வயதாகவில்லை. குறைப்பட்டுப் போயிடுத்துப் பாரு என்று.

 

என்ன செய்யறது? தலையெழுத்து.”

 

கொல்லையில பார்த்தியோ, இல்லியோ?”

 

என்ன

 

என்னவா?”

 

என்ன? சொல்லட்டுமே.”

 

தெரிஞ்சுண்டு பதில் சொல்றயாக்கும்னு நெனைச்சேன். போய்

எட்டிப் பார்த்துட்டு வா.”

 

கிழவி எட்டிப் பார்த்துவிட்டு வந்தாள்.

 

என்ன வாரல், என்ன சீவல்! என்ன சோப்பு நலங்குக்குப்

போகப் போறாப்போல்னா நடக்கிறது?” என்று மலைத்துப்

போய் முகவாயில கை வைத்துக் கொண்டாள்.

 

விவரம் தெரியாத வயசுடீ. தெய்வம் இருக்கே, அந்த

முட்டாளைன்னா சொல்லணும். துக்கத்தை நெனைக்கக்கூடத்

தெரியாத நெஞ்சிலேருந்து தாலியை இழுத்துப் பிடுங்கிடுத்தே

அதைச் சொல்லு.”

 

ரொம்ப அதிசயமாயிருக்கு, பேசறது. ஒரே அப்பாவியான்னா

அடிச்சாறது. விவரம் தெரியாத வயசாம்; இப்பப் போன

கார்த்திகைக்குப் பத்தொன்பது முடிஞ்சுடுத்து. நான்

சுந்தரத்தையும் கமலியையும் பெத்தெடுத்த வயசு! விவரம்

தெரியாத வயசாம்!”

 

கிழவியின் முதல் இரண்டு குழந்தைகள் சுந்தரமும் கமலியும்.

கமலியைப் பிரசவிக்கும்போது பத்தொன்பது கூட

ஆகவில்லை என்று கிழவி புள்ளிவிவரம் கொடுத்தாள்.

 

தெரிஞ்சுண்டே செய்யறதூன்னு நினைக்கிறாயா?”

 

அது என்னமோ? ஒரே அப்பாவியாக ஆக்கிறது எனக்கு

வேண்டியிருக்கலெ. உலகம் தலைகீழே நிற்கிறது

இப்பல்லாம்.”

 

சீ, இந்தப் பீடையோடு பேச வந்தோமே; நல்லது என்னைக்கி

இது வாயிலே வந்தது?” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு

மேலே பேசாமல் மோர் வரையில் சாப்பிட்டு எழுந்தார்

கிழவர்.

 

குளித்துவிட்டுப் பனாரஸ் பச்சைப் பட்டுப் புடவை

கட்டிக்கொண்டு, ஒன்றுமே நடக்காததுபோல் பேசிச் செய்து

செய்து கொண்டிருந்தது பெண். வாசனை தேங்காயெண்ணெய்

தடவி இழைய வாரின தலை. சந்தன சோப்புத் தேய்த்த

உடல். குங்குமம் இல்லாவிட்டால் என்ன? சுமங்கலிகளுக்கே

குங்குமப் பொட்டு கர்னாடகம் ஆகிவிட்டதே. வெண்தாழை

மாதிரி பளிச் சென்று கூடத்திற்கும் சமையல் உள்ளுக்கும்

நடந்து காரியம் செய்துகொண்டிருந்தது அது. காரியம்

ஓய்ந்தபோது ஓட்டையும் சூன்யத்தையும் வெறித்துப் பார்த்து

உட்கார்ந்திருக்கவில்லை. புஸ்த்தகத்தை எடுத்து எழுத்தில்

லயித்திருந்தது. கிழவர் பார்த்தார். கிழவியைபீடை பீடை

என்று மனத்திற்குள் வைதார்.

 

எட்டாம் நாள் போயிற்று. ஒன்பதாம் நாள் போயிற்று. கூந்தல்

சீவிப் பளபளத்தது. நுரையில் முழுகி முகம் ஒளிர்ந்தது.

 

பத்தாம் நாள் பின்னலை அவிழ்த்துக் கூந்தல் ஆக்கி,

அடித்துக்கொண்டு அழுதுவிட்டுப் போனார்கள்.

 

அன்று சாயங்காலமே பின்னல் கருநாகம்போல நீண்டு

தொங்கி ஆடிற்று. அழுக்கைச் சோப்பு நுரை கழுவிவிட்டது.

இந்தக் குழந்தையை இப்படி அடித்துவிட்டதே விதி என்று

கிழத்தின் கண் அழுதது.

 

கிழவிக்குக் கிழத்தின் பார்வையும் பரிவும் வயிற்றெரிச்சலைக்

கிளப்பிவிட்டன.

 

*

 

நாள் ஓடிற்று, பதினைந்தாம் புலிப் புலியும் ஆடுகளும்

அழியாத பகையை மீண்டும் துவங்கிவிட்டன.

 

நாலாந்தேதி அவன் செத்துப்போன தேதி. ஒரு மாதம்

முடிந்திருந்தது. அன்று மாப்பிள்ளையின் தமையன், கோசலை

அம்மாளுக்குக் கடிதம் எழுதியிருந்தான். பள்ளிக் கூடத்தில்

சேர்க்க ஏற்பாடு ஆய்விட்டதாம். எட்டாந்தேதி வந்து

அழைத்துப் போவதாக எழுதியிருந்தான்.

 

சமுத்திரத்தில் பாய்கிற நதி பயிருக்குப் பாயட்டுமே என்று

சின்னஞ்சிறு முகங்கள் நிறைந்த பள்ளிக்கூடத்து அறையைக்

கிழவர் மனக் கண்முன் கண்டார்.

 

முதல் இரவே பயணத்துக்கு ஏற்பாடெல்லாம் ஆய்விட்டது.

காலையில் மாப்பிள்ளையின் தமையன் வந்தான்.

 

ஐயா, நான் நினைக்கவே இல்லை இப்படி வரும்னு என்ற

கிழம் மேலே பேச முடியாமல் கதறிற்று.

 

சாப்பாடானதும் அவனிடம் சொல்லிற்று: “வீட்டில் சாணி

அள்ளிண்டு உட்காரணுமா? உங்க யோஜனை சஞ்சீவி மாதிரி

இருக்கிறது எனக்கு. குழந்தைக்கு நல்ல வழியா வகுத்து

விடுங்கோ, சந்தோஷமாயிருக்கட்டும்.”

 

அது என் கடமை தாத்தா என்றான் அவன்.

 

பொழுது சாய்ந்ததும் ஒற்றை மாட்டு வண்டி வாசலில் வந்து

நின்றது.

 

கம்சலே, சந்தோஷமாயிருக்கட்டும்டீ பொண்ணு என்று

விடை கொடுத்தாள் கிழவரின் மனைவி.

 

பெண் வண்டியில் ஏறிற்று. முன்னால் இருந்த மூட்டையை

நகர்த்தி ஏற இடம் பண்ணினான் அவன்.

 

நாணம் புன்னகை பூக்க, பெண் வண்டியில் ஏறிற்று. தாயார்

ஏறினாள். அவனும் ஏறி ஓரத்தில் ஒட்டி உட்கார்ந்து

கொண்டான்.

 

போய்ட்டு வரேன் தாத்தா

 

ஆஹா,”

 

வண்டி மறைந்தது. கிழவர் திண்ணையில் உட்கார்ந்து

கொண்டார். கிழவி ஆளோடியில் நின்று சொன்னாள்:

 

ரத்தப்பூவாம். எல்லா மூக்கும் ரத்தம் கொட்டாது,

சண்பகப்பூவை மூந்து பார்த்தா! என்ன சிரிப்பு, என்ன

நெளிசல்; அவள் அகமுடையான் உயிரோடுதான் இருக்கான்.

 

அதான் நெளியுறது. குழந்தையைப் பார்க்கலே!”

 

தோசி, உள்ளே போறயா இல்லையா?” என்று கிழவர்

கபோதிக் கோபத்தில் அதட்டினார்.

 

கிழவியின் குறி தப்பாது என்பது அவர் அநுபவம்.                                           


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்