சொல்லாத சொல்லொன்றைச் சொல்

பாவலர் கருமலைத்தமிழாழன்

பூத்தமுகத் தாமரையில் பூசும் மதியெழிலில்
கோத்த அனிச்சயிதழ்ப் புன்னகையில் – மாத்தமிழே
கொல்லாமல் கொல்கின்றாய் ! கொண்டேன்நான் காதலென்று
சொல்லாத சொல்லொன்றைச் சொல் !

பாரென்னும் பூம்பருவம் பக்கம்வா வென்னுமிதழ்
தேரென்னும் மேனிதழு வென்றுரைக்கச் – சீரென்னும்
பொல்நாணச் செம்மை முகம்மலரக் காதலென்று
சொல்லாத சொல்லொன்றைச் சொல் !

நாதம் இயற்றும்உன் நாமொழி சொல்கேட்டால்
ஓதமுறு தென்றலுக்கே போதைவரும் – சீதள
நல்மதியும் சொக்கிவிழும் நான்வாழச் சம்மதமாய்ச்
சொல்லாத சொல்லொன்றைச் சொல் !

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்