தமிழ் வாழும் காலம் வாழ்வான் கண்ணதாசன்

பாவலர் கருமலைத்தமிழாழன்

பூத்திட்ட புதுநிலவாய் வந்து
      பூரிக்கும் கவிதைகளைத் தந்து
மாத்தமிழின் மணமாக நின்றான் – எல்லா
      மக்கள்தம் மனமெல்லாம் வென்றான் !

சங்கத்துப் பாக்களினைப் படித்துச்
      சாறெல்லாம் எளிமையாக வடித்துப்
பொங்குகவி சிந்துகளாய் ஆக்கினான் – கல்லாப்
       பாமரர்க்கும் புரியுமாறு தேக்கினான் !

திரைப்படத்துத் துறையினிலே நுழைந்து
       தித்திக்கும் இசையினிலே குழைந்து
புரைநீக்கும் கருத்துகளைக் குவித்தான் – பழம்
       மூடத்தை அகற்றும்பா விரித்தான் !

தென்றலெனும் ஏடுதனைத் துவக்கிச்
       செந்தமிழின் பாத்துறையைப் புதுக்கிக்
கன்னலெனும் கவிவாணர் பெருக்கினான் – நெஞ்சுள்
        கனல்கின்ற கவிசொட்ட முடுக்கினான் !

நாளுமொரு அரசியலைப் பேசி
       நாட்டிலுள்ள கட்சிகளை ஏசி
கூடிநிற்கும் கவித்துவத்தால் தோழனானான் - எல்லாக்
        கூட்டத்தார் மதிக்கின்ற கவிஞனானான் !

பிறமொழியின் கவிதைகளைத் தமிழாக்கித்
      திறனாய்வுத் துறைதன்னைச் செயலாக்கிச்
சிறுகதையைப் புதுப்பார்வை தனிலளித்தான் – கண்ண
      தாசனெனும் இதழ்தன்னை அகற்களித்தான் !

பகுத்றிவில் தன்கருத்தைத் தொடங்கிப்
       பக்குவத்தில் ஆத்திகனாய் அடங்கிப்
பாட்டாலே பாரதிக்கு நேசனானான் - பக்திப்
       பரவசத்தால் கண்ணனுக்குத் தாசனானான் !

கல்லக்குடி சிறைதனிலே படுத்துக்
       கற்கண்டு மாங்கனியைப் பறித்துப்
பொங்கலிலே தைப்பாவை கையளித்தான் - தமிழ்ப்
       பொறையனுக்குக் காதலியை வாழ்த்தளித்தான் !

நூற்றுக்கும் மேலாக நூலெழுதி
       நுவல்கின்ற தமிழுக்குச் சீரெழுதி
போற்றும்பல் லாயிரமாய்ப் பாதந்தான் – காலம்
       போனாலும் நிலைக்கின்ற படிவேய்ந்தான் !

வாழ்கின்ற போதேநல் பாராட்டு
       வளம்பெற்ற கவிஞரெனச் சீராட்டு
வாழ்வெல்லாம் தமிழென்றே வாழ்ந்தான் - தமிழ்
       வாழ்கின்ற காலமெலலாம் வாழ்வான் !

(யூன்24  கவியரசு  கண்ணதாசன்   பிறந்தநாள்)


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்