கவியரசர் கண்ணதாசன்

புலவர் முருகேசு மயில்வாகனன்

முத்திக்கு வித்திட்ட மூத்த கவிஞரவர்
முத்தையா என்றோர் முருகபக்தர் – தித்திக்கப்
பாவெழுதி மக்களின் பாவலராய்ப் பார்போற்றத்
தேவனடி சேர்ந்த செம்மல்.

இயலிசை நாடகம் எல்லாத் துறையும்
தயங்கா தவரடி சேர்ந்து – நயப்புறும்
அண்ணா பெரியார் அரவணைப்பும் பெற்றதனால்
வண்ணத் தமிழ்வளர்ர்க்க வாய்ப்பு.

கண்ணனின் தாசன் கலைகளின் பெட்டகம்
வண்ணத் தமிழை வலிந்துபெற்றாய் – அண்ணாவின்
ஆசி அரசியல் ஈடுபாடு ஆற்றலுள்ள
பேச்சின் சிகரமாம் பேறு.

வள்ளுவரின் செம்மொழியை வாழ்வாக ஏற்றதனை
உள்ளம் மகிழவைத்த உத்தமனார் – வள்ளலாய்
வாழ்விலே வெற்றிகண்ட வண்ணத் தமிழரவர்
ஏழ்மையைக் கண்டஞ்சா ஏறு.

ஆன்மிகம் ஆட்கொள்ள ஐயன் நெறிமாறி
வான்புகழ் யேசுபிரான் வாழ்வியலை – ஊனமின்றி
நற்றமிழில் தந்துசென்ற நாயகனார் கண்ணதாசன்
வற்றாத ஊற்றென்றே வாழ்த்து.

வாழ்வியல் – யேசுகாவியம்.

(யூன்24  கவியரசு  கண்ணதாசன்   பிறந்தநாள்)


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்