ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் இரா.இரவி

தீ வையுங்கள்
தீண்டாமை எண்ணத்திற்கு
மாறுங்கள் மனிதனாக !

உண்மையிலும் உண்மை
உலகம் உருண்டை புலனத்தில்
நாம் அனுப்பியது நமக்கே !

அரைத்த மாவையே
அரைத்து வருகின்றனர்
புலனத்தில் !

சலிப்பு வருகின்றது
படித்ததையே படிக்கையில்
புலனம் !

உயிரோடு உள்ளவர்களையும்
சாகடித்து விடுகின்றனர்
புலனம் !

அழிக்கின்றனர்
படிக்காமல் பார்க்காமல்
புலனம் !

பேரிடர் ஒத்திகையில்
பேரிடர்
மாணவி பலி !

வாடா என்று அழைப்பதில்லை
வாங்க என்கிறேன் மகனை
பெயர் பிரபாகரன் !

படித்ததும் சிலர்
கவனமாகின்றனர்
கண்காணிப்பு கருவி உள்ளது !

வாங்கிய விலை
குறைத்துச் சொன்னாலும்
திட்டும் மனைவி !

பின்னோட்டக் கவலையின்றி
பதிந்து கொண்டே இருங்கள்
முகநூலில் படிப்பார்கள் !

வென்றது
பெண்ணுரிமை
சபரிமலை !

வம்பு மறந்து
அன்பு செலுத்துங்கள்
நிகழும் மாற்றம் !

கோபத்தின்
முடிவுரை
இழப்பு !

யாருமில்லை
பிறப்பால்
தீயோர் !

ஏமாற வேண்டாம்
உண்மை இல்லை
ஆடித்தள்ளுபடி !

வேண்டவே வேண்டாம்
சோகத்தில் வீழ்த்தும் வலை
கவலை !

ஆயிரங்களுக்கு கெடுபிடி
கோடிகளுக்கு டாட்டா
வங்கிக்கடன் !

நீண்ட யோசனை
பிடிக்கலாமா ? வேண்டாமா ?
கோடித்திருடர்களை !

சேர்ந்தே இருப்பவை
பிரிக்க முடியாதவை
அரசியல் ஊழல் !

வரிவிலக்கு என்று வாங்கி
வீட்டில் விலக்காகின்றனர்
மது !

வங்கிகளின் கொள்ளை ஏழைகளிடம்
குறைந்தபட்ச இருப்புத் தொகை
அபராதம் !
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்