உன்னிடத்தில் இருக்கலாமா?

கவிஞர் இனியன், கரூர்.

சோகத்தைத் தந்திடும் சோம்பல்
சோம்பலால் வந்திடும் தூக்கம்
அறிவை மயக்கிடும் பேராசை
அதற்காக கூசாது பொய்பேசல்
உன்னிடத்தில் இருக்கலாமா?- இவை
உன்னிடத்தில் இருக்கலாமா?

நட்பை முறித்திடும் கோபம்
வெட்கம் அறியாத காமம்
கேலி பெண்சீண்டல் செய்தல்
கேளாமல் பிறர்பொருளை எடுத்தல்
உன்னிடத்தில் இருக்கலாமா?- இவை
உன்னிடத்தில் இருக்கலாமா?

கெட்ட சொற்களைப் பேசல்
கெடுக்க அவதூறு வீசல்
பிறரிடம் காட்டும் பொறாமை
திறனிருந்தும் செயல்பட முயலாமை
உன்னிடத்தில் இருக்கலாமா?- இவை
உன்னிடத்தில் இருக்கலாமா?

தாமதம் என்கின்ற தீக்குணம்
தகராறு செய்கின்ற போர்க்குணம்
பெரியோரை மதிக்காத போக்கு
பெற்றோரை குறைசொல்லும் நாக்கு
உன்னிடத்தில் இருக்கலாமா?- இவை
உன்னிடத்தில் இருக்கலாமா?
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்