விருந்தாளி

கவிஞர் கமலாபிரியா



நீ இல்லாமலேயே கூட
நான் அழகாய்த்தான்
இருந்திருக்கிறேன்!

நீ வந்ததிலிருந்து
காலையில் எழுந்தவுடன்
உன்னைக் கவனிக்கத்தான்
சரியாக இருக்கிறது!

கோபம் வந்தால்
யாரையாவது கடித்துத் தொலைத்து
வம்பில் மாட்டிவிடுகிறாய்!

கிடைக்கும் பொருள்களையெல்லாம்
தூள் தூளாக்கிறாய்!
ஆனாலும் உன்னைப் புகழ்கிறார்கள்!

நீ வந்ததிலிருந்துதான்
நான் இன்னும்
அழகாய் இருக்கிறேனென்று
அம்மா ஆசையோடு சொல்லிக் கொள்கிறாள்!

அடக்கமாய் இருந்தாய் உள்ளே!
ஆசையை வளரவிட்டேன் உன்மீது!

மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது
முந்திரிக் கொட்டையாய்
ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்தாய்!

ஒருநாள்.....
தோழிகளெல்லாம் கிண்டல் செய்ய
என் வருத்தத்தையும் பாராமல்
ஏமாற்றிவிட்டு ஓடிப்போனாய்!

முதன் முதலாய் வந்த
என் 'பால் பல்லே
இப்போது திருப்தியா உனக்கு?


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்