வெல்லத் தமிழினி தாகும்

மன்னார் அமுதன் - இலங்கை

தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே

சொல்வதற் கரிய கனிமை - மொழியில்
கொல்வதற் கரிய உயிர்மை - போரால்
வெல்வதற் கரிய வாய்மையின் கூர்மை
கொண்டதே தமிழ்த் தாயின் பழமை

இலக்கிய நகைகளை அணிவாள் - படைப்பில்
இலக்கணப் புன்னகை மலர்ப்பாள் -ஆக்கச்
சிறப்பினை ஓசையால் உரைப்பாள் -கேட்போர்
உள்ளத்தை மெதுவாய்க் கரைப்பாள்

நல்லோர் நாவில் சரசம் புரிவாள்
நல்மனத் தோர்க்கெலாம் கலசம் அருள்வாள்
வன்மங்கள் கண்டு பொங்கியே எழுவாள்
வாடிடும் உயிர்க்கெலாம் அன்பினைப் பொழிவாள்

கயல்விழி மாதர் அழகெலாம் அழகா
கண்டவர் மேற்கொளும் காதல் நிலையா
இயலிசை,  நாடகம் மூன்றையும் உயிராய்க்
கொண்டவர் சிறப்பே என்றும் அழியா

தமிழினி அழிந்தே போகும் - எனும்
தறுதலைத் தலைமைகள் வேகும் தீயில்
மடமைக் கருத்துக்கள் மாண்டே போகும்
மாரித் தவளைகள் கத்தியே ஓயும்

தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் - கற்றால்
தளரவே மாட்டாய் மூப்பால் - சிறிதாய்
நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் - நாளை
நீயும் சுரப்பாய் கவிப்பால்

குழலிசை தனிலும் இனிமை - எங்கோ
குழந்தையின் நாவில் உயிர்மெய் -சில
மடந்தையர் கொஞ்சும் மொழிபொய்-இந்த
மடமையை அழித்தே தமிழ்செய்

மெல்லத் தமிழினிச் சாகும் – என்னும்
வீணர்கள் வெறும் வார்த்தை மாளும்
உலகையே செம்மொழி ஆளும்
உவப்புநாள் விரைவிலே கூடும்

வெல்லத் தமிழினி தாகும் – இன்னும்
வெகுவான கலைச் சொற்கள் கூடும்
சுவையான தொன்மொழியைப் பேசக் கூசும்
சுந்தரப் பெண்நாவும் தமிழைப் பாடும்

செல்லத் தமிழினம் வேகும் -மண்ணோடு
எருவாக மாண்டே தான் போகும்- எனும்
கள்ளத் தலைவர் தம்மெண்ணங்கள் மாறும்
தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும்

சுட்டாலும் தமிழெமக்குத் தெரியாதென்றோர்
சுடு பட்ட புழுவாக துடித்தே வாழ்வீர்
நட்டாலும் நேரான மரமாய் வழர்வீர்
நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனைத் தாரீர்

சோதர மொழிகள் கலவை யின்றி -நாளும்
சோற்றிற் காய்த் தமிழைப் பேசும் காலம்
நரம்பில்லா நாவிற்கு வந்தே தீரும் -மூடா
நம்செவிகளிலே தேனாறாய்ப் பாயும்

வீட்டிற்கு ஒருவர்க்குத் தறிகள் தந்து
பாட்டிற்கு அத்தறியில் கவிதை நெய்வோம்
மாட்டிற்கே தமிழுணர்வு வந்த நாட்டில் -தமிழறியா
மாடென்று உமையேச மனசே வெட்கும்


amujo1984@gmail.com