விலை கொடுத்து விற்பனை

கவிஞர் அன்பழகன்ஜி

முகங்களை காட்டி எல்லாரும்
முகமூடியைத் தான் விற்கிறார்கள்.
நல்ல விலையில்.
சிலர் இலவசமாகவும்.

விளம்பரத் தந்திரம்
கிஞ்சித்தும் இல்லாததால்
என்னிடம் இருக்கும்
ஏகப்பட்ட முகமூடிகளை
விலை கொடுத்து
விற்றுக்கொண்டிருக்கிறேன்.

அறிமுக ஆசை
இற்றுப் போய்
விளம்பர வெளிச்சத்தில்
விழிகளை இழந்ததால்
சந்தைக்கு வந்த சரக்கை
விற்றாக வேண்டும்.

சமூகம்தான் பாவம்
அறிவு விழித்துக் கொண்டால்
மனம் பிழைத்துக் கொள்ளும்.
இல்லையேல்
உரிக்க முடியாமல்
எல்லா முகமூடியும்
முகமாகப் போய்விடும்.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்