பாரதி

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

பாரதி என்றொரு பாவலன் தோன்றினன்
         பாரினிற் செந்தமிழ் பரந்தம்மா – அவன்
தேரினிற் பற்றிய தீந்தமிழ் இருக்கையில்
         சிந்தெனப் புதுக்கவி சிரித்ததம்மா – ஒரு
தூரனைப் போலொரு தீட்டிய பாட்டினில்
         சொல்லறம் நிலத்தினிற் சிலிர்த்ததம்மா-கொடும்
நேரத்துக் காற்றினில் நீட்டிய வாளென
         நின்றது மாகவி நீதியம்மா!

அக்கினிக் குஞ்சது பற்றியெ ரிகையில்
         அவனியின் விடியலும் ஆனதம்மா – நிதம்
துக்கிக் கிடந்தவர் துயிலினைக் கோதிய
         தீந்தமிழ்ப் பாக்களாய் ஆனதம்மா-வன்மைச்
செக்கில் உழன்றவர் செத்துக் கடந்தவர்
         தேசத்தில் முரசமாய் ஆனதம்மா!-அறம்
விற்கத் துணிந்தவர் விரதமும் விடியலின்
         வேரிற் பழுத்தது வேதமம்மா!

நற்றமிழ் சிந்தையின் நாதம் பிறந்தது
         நானிலம் பாரதி நாற்றாச்சு-வெந்து
முற்றுங் கொடியவர் மூழ்கிய போதிலும்
         மூச்சு விடியலின் ஊற்றாச்சாம் - தமிழ்
பற்றிப் படர்ந்திடும் பந்தலின் கால்களில்
         பைந்தமிழ்க் கப்புகள் படர்ந்தாச்சாம்!
இற்றை வரைக்குமே எட்டய பாரதி
         ஏட்டிலும் பாட்டிலும் எழுந்தானே!

(பாரதியார் பிறந்த தினம்: 11-12-1882)



 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்