செருக்கோடு செந்தமிழைச் செப்பு

கவிஞர்  கே.பி.பத்மநாபன்

நூற்றுக் கணக்கில் நுவல்மொழிகள் தாமிருக்கப்
போற்றும் தமிழே புகழ்மொழியாம் - மாற்றுக்
கருத்தேதும் உண்டோஇம் மாநிலத்தில்? யாண்டும்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.

முல்லை மலர்போல முத்துத் தமிழ்மணம்தான்
எல்லை கடந்தெங்கும் எட்டிடுமே;- சொல்லைத்
திருத்தமுறச் சொல்கையிலே தேனொழுகும்; யாண்டும்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.

மூத்த மொழியான முத்தமிழை முன்னாளில்
காத்த தமிழர்தம் காலமெல்லாம் - பூத்திங்(கு)
உருப்பெற்று மீண்டும் உயிர்த்திடவே யாண்டும்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.

ன்று பிறந்ததாம் ஆயிரம் நன்மொழியுள்
இன்றும் தமிழே இளங்கன்னி;- என்றும்
விருப்பமுடன் இஃதை விழைவோர் உயர்வர்;
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.

ண்ணில் மனிதர்க்கு மாண்பினையே ஈவதெலாம்
ஒண்ணும் தமிழ்க்கல்வி ஒன்றேயாம்;- எண்ணிக்
கருத்துடனே கற்றிந்தக் காசினியில் ஓங்கிச்
செருக்கோடு செந்தமிழைச் செப்பு.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்