கிறிஸ்மஸ் மரத்தின் தத்துவம்

புலவர் முருகேசு மயில்வாகனன்

கிறிஸ்மஸ் காலம் கிளர்ந் தெழவே
நத்தார் மரத்தை நாட்டுவோம் வீட்டில்
உத்தம மரத்தின் உண்மை பெரிதே
சிறிது சிறிதாய்ச் சிந்தனை செய்வோம்
அறிவாம் தத்துவம் அதற்குள் உண்டே
எல்லா மதமும் ஏற்கும் இதனை
மரமென நோக்கின் மரத்தைக் காண்பர்
மரத்தின் உச்சி மாதேவன் உறைவிடம்
அடிமரம் ஆன்ம உறைவிடம் ஆகும்
அழகிய மரத்தின் அழகியற் கலைகள்
உளவியல் சார்ந்த உண்மை விளம்பிகள்
மரத்தின் கிளைகளில் மாயையாம் மலர்கள்
மரத்தின் கீழே மக்கள் நயக்கும்
தரமாம் பரிசைத் தக்க வைப்பர்
அடியில் காணும் அரும்பெரும் பொருட்கள்
ஆண்டவன் படைத்த அன்பும் அறமுடன்
தீண்டாக் குணத்தின் தீங்கு மாமே
ஆணவம் கோபம் அகங்கார முடனே
கொலை களவு கொடிய நோய்கள்
இன்ப துன்பம் இவைதான் பொதிகள்
யேசு நாதர் செப்பிய வேதம்
மலைப்பிர சங்க மாண்பின் பொதிகளை
அன்புப் பரிசாய் அனைவரும் தரவே
அன்பாய்ப் பெற்று அடிமரம் வைப்போம்
பரிசுப் பொருளின் தத்துவம் இதுவே
நல்ல குருவை நாடியே சென்று
நல்ல கருத்தை நாளும் பெற்றே
மக்கள் சேவை மகேசன் சேவையாய்
பொதுப்பணி ஆற்ற பொய்கள் அகற்றி
நல்லன செய்தே நாளும்
மனிதராய் வாழ மாற்றுவோம் மனதை.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்