ஏழையின் ஆசை...!!!

அரசி

அலங்காரக்கந்தனவனின்..
அழகு வீதி தனில்,
அலை அலையாய் மோதி வரும் கூட்டத்தில்
அப்பாவின் கை பற்றியபடி நான்..!!
அரோகரா ஓசையிலும்
அரைகுறையாய்...,
'அம்முக்குட்டி கையை விடாதே..'
அடிக்கடி முணு முணுத்தது..
அப்பாவின் குரல்...!!!

அசைந்தாடிடும்
அலங்காரப்பொம்மைகள்...!
அதிசயமான விளையாட்டு கார்கள்..!
அலங்காரமாய் அங்காடிகள்..!
அங்கலாய்த்தபடி நான்..!!!

அப்பாவின் கரங்களை
அசைத்து...
அப்பாவியாய் நடித்து,
அள்ளி வீசினேன்..!!
அவரை நோக்கி ஏக்கப்பார்வை ஒன்றை...

என் முயற்சி பலனளிக்க...
அடுத்த நிமிடம்
அங்காடி முன்னால்..

ஆவலோடு பொம்மை ஒன்றை..
ஆட்காட்டி விரல் காட்ட...
ஆயிரம் ரூபாய்கள் என ஒரு பதில்..!!
ஆசையோடு நான் கேட்டதால்...
இல்லாத பணத்தினை
இருக்கின்ற சட்டைப்பையில்..
தந்தையவர்...
தட்டுத்தடுமாறி...தேட...

தலை குனிய வைக்குமோ
தந்தையினை...????
????

'பிடிக்கவில்லை'
உரைத்த என்னை...
கண்ணீரோடும்...,,
கருணையோடும்,
நோக்கின இரு விழிகள்..!!!
அரவணைத்தன கரங்கள்..!!
காணாமல் போய் விட்டது..!!
பொம்மை மேல் உண்டான ஆசை..!!!


arasikavithaikal@gmail.com