எத்திக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் வாழ்த்து

கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
 


கொச்சகக் கலிப்பா


குயில்கூவத் துயிலெழுந்து, மயிலாட மனமகிழ்ந்து
வயற்காட்டை உழுகின்றார், வறியோற்குப் பசிதீற்க
முகிலங்கே மழைதூவும், முப்போகம் நெல்விளையும்
அகிலத்தை அழகுசெய்யும் ஆதவனை வாழ்த்திடுவோம்!

வேறு


பொங்கட்டும் பொங்கட்டும் தங்கத்தைப் பொங்கல்
தங்கட்டும் தங்கட்டும் திக்கெட்டும் தர்மங்கள்
மங்களம் பொங்கட்டும் மானிடம் மகிழட்டும்
செங்கரும்பு செவ்வாழை செவ்விழநீர் தேனுடனே!

வானத்துச் சோதியை வையத்து நீதியை
கானங்கள் பாடியே கவின்மலர் சூடியே
பானங்கள் பட்சணம் பலகாரம் தேடியே
தேனும் தினைமாவும் தேவாரம் பாடியே

சூரிய தேவனை வீரிய நாதனை
வாரி அணைத்து மகிழ்ந்திடும் நாள்  -  மழை
மாரியைத் தந்த மங்கல ரூபனைக்
கோரி அழைத்துக் கும்பிடும் நாள்

பட்டிப் பசுவங்கு பாலைச் சுரந்திடும் -  மலர்
திட்டி திடலெங்கும் தேனைச் சொரிந்திடும்
குட்டித் தலையிலே கும்பிடடு;க் கும்பிட்டுக்  -  குங்குமப்
போட்டிட்டு பூச்சூடிப் பட்டாடை கட்டுவரே
எங்கள் தமிழரின் தங்கத் திருநாள்  -  வயலில்
பொங்கிப் படைக்கும் நன்றித் திருநாள்
பொங்கற் பெருநாளே இன்பம் தங்கும்-- திருநாளே
சங்கெடுத் தூதிடுவோம் சந்தோச வானத்திலே!

வானத்துச் சோதிக்கு வாழ்த்து வழங்கிடுவோம்
கானங்கள் இசைத்துக் கவிதைகள் பாடிடுவோம்
தேனொத்த பொங்கலைத் தேவரும் சுவைத்திடவே
மானொத்த மங்கையர் மங்கலம் பாடுவரே!
 


 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்