தேசபிதா மகாத்மா காந்தி.

புலவர் முருகேசு மயில்வாகனன்
 


அல்லலுற்ற மக்களின் அமுத சுரபி
         ஐயத் தெளிவுடனே ஆற்ற லோங்க
சொல்லும் செய்திகளைச் சீராய்ச் சொல்லிச்
         சேர்ந்தோரிடம் நல்வழியில் சேவை பெற்றே
அல்லும் பகலும் அயராது ழைப்பால்
         அரும்பணி ஆற்றிய அண்ணல் காந்தி
எல்லோர்க்கும் ஏற்பான சுதந்தி ரத்தை
         எடுத்தளித்தே ஏகிவிட்டார் எம்மை விட்டே.

உண்ணாமல் நோன்பிருந்தே ஊருக் குழைத்த
         உத்தமனார் காந்தியாரின் ஊக்கத் தாலே
கண்ணியமாய்ப் பெற்றதந்தச் சுதந்தி ரத்தை
        காக்கத்தான் யாருமில்லை காலத்தின் கோலம்
எண்ணியே பார்க்கத்தான் எவரு மில்லை
         ஏளனஞ் செய்கின்றார் ஏற்பில் லாதார்
கண்ணனான காந்தியாரைக் காலன் கவர
         காலநேரம் அறியாத கார ணந்தான்.

சத்தியத்தை ஆயுதமாய்க் கொண்ட போரில்
        சாதனைகள் பலசெய்த சான்றோன் அன்று
வித்தைகள் பலசெய்த வீர புருடன்
        விடுதலைப் போரிலே வெற்றி கண்டார்
குத்துவெட்டுக் கொள்ளைகுடி கூடி இன்று
        குற்றங்கள் மேலோங்க காரண காரியம்
சொத்துக்கள் சேர்க்கின்ற சூழ்ச்சி தானோ!
        சுதந்திரத்தால் ஏதுபயன் என்றேங்கும் மக்கள்.

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்