சர்வதேச தாய்மொழித் தினம்

புலவர் முருகேசு மயில்வாகனன்
 


தாய்மொழிக்கோர் அங்கிகாரம் தந்ததுவே சர்வதேசம்
தாயின் மொழியெதுவோ அம்மொழிதான்  -  சேய்மொழியாம்
தப்பின்றிக் கற்பித்துத் தம்மினத்தைக் காப்பதுவே
இப்பிறப்பின் நோக்கமின்று ணர்.

அன்னை மொழிக்காய் ஆற்றலுடன் போராடி
இன்னலுற்ற எம்மினமே எங்கொற்றாய்  -  தன்மானம்
காக்கும் தமிழினமே காலத்தின் கோலமிது
ஊக்கந்தான் என்றும் உயர்வு.

மொழியாய்வு செய்வோரின் மேலான கூற்று
அழிவில்லாச் செம்மொழிகள் ஆறு  -  விளிப்புடை
எம்மொழியும் ஒன்றேகாண் என்றறிந்தே கூறிவிட்டார்
அம்மொழியைக் கற்றிடுவோம் ஆய்ந்து.

மேல்நாட் டறிஞர்கள் மேன்மைகண் டாய்கிறார்கள்
ஆல்போல் வளர்ந்த அருந்தமிழை  -  தொல்பொருள்
ஆய்வாளர் ஆய்வினால் அற்புதங்கள் ஓங்குவதால்
தேய்மானம் ஏதுமில்லைத் தேர்.

பொன்வாத்து முட்டைகளாய்ப் போற்றுபல நூல்களுடைக்
கன்னித் தமிழாள் கவினொளிர்  -  பொன்மகளாய்ப்
பாரெங்கும் கோலோச்சும் பாவையின் கண்ணோட்டம்
பேரின்பம் தந்திடுமே பேறு.

இயல்இசை நாடகம் ஈர்க்கும் கலைகள்
அயல்நாட்டார் கண்டுகளி கொண்டே – வியந்திடுவர்
பட்டிமன்றப் பேச்சாளர் பார்ப்போர் மனங்கவரப்
பட்டறிவைக் காட்டிடுவர் பார்.

புலம்பெயர்ந்து வந்தோர் புதுமையென் றெண்ணிப்
பலமாம் தமிழ்மறந்து பற்றாய்  -  அலமரல்
காரணமாய் வேற்றுமொழி கற்பிக்கும் காலமிது
கூரறிவு தாய்மொழியால் தான்.
அலமரல் - அச்சம்

மொழியாளம் உள்ளவரே மேலா சிரியர்
வழியறிந்து கற்பிக்கும் வாய்ப்பு  -  களிப்புடனே
மாணவர்கள் கற்று மகிழ்ந்தால் மொழிவளரும்
மேன்மையுறும் செந்தமிழின் மாண்பு.

தாய்மொழியாம் எம்மொழியை ஏற்றமுற வைப்பதற்கு
வாய்ப்புப் பலவுண்டே வாழ்விடத்தில்  -  காய்வின்றி
வீட்டுமொழி யாய்ஏஎ விருப்புடன் பிள்ளைகட்கு
ஊட்டியே கற்பித்தல் நன்று.

 






 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்