இதயத்தில் இனிக்கின்ற மொழி

கவிஞர் புகாரி
 


தயத்தில் இனிக்கின்ற மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற இதயம்

கவிதைக்குள் விளைகின்ற வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற கவிதை

விரலுக்குள் ஊறிவரும் எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற விரல்
ஓசைக்குள் கூடுகட்டும் சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும் வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும் காற்று
பார்வைக்குள் விரிகின்ற வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற பார்வை

மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற மண்
இயற்கைக்குள் முத்தாடும் மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற இயற்கை

மனசுக்குள் எழுகின்ற உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற மனசு
மூச்சுக்குள் உள்ளாடும் தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும் மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற மோகம்
முயற்சிக்குள் முளைவிடும் சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும் கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும் மனிதம்
உயிருக்குள் குடிகொண்ட மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற உயிர்

தீபத்துள் வாழ்கின்ற புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற தீபம்
 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்